கடனை அடைக்கும் அளவுக்கு பொருளாதாரம் இல்லாவிட்டால்?

கேள்வி :

கடனை அடைக்கும் அளவுக்கு பொருளாதாரம் இல்லாவிட்டால் என்ன செய்வது?

பதில் :

வாங்கிய கடனை முழுமையாக அடைக்க முடியாமல் சிறிதளவுதான் கடன்பட்டவரிடம் வசதி இருக்கிறது என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

4064 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ بُكَيْرٍ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ أُصِيبَ رَجُلٌ فِى عَهْدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى ثِمَارٍ ابْتَاعَهَا فَكَثُرَ دَيْنُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-  تَصَدَّقُوا عَلَيْه;. فَتَصَدَّقَ النَّاسُ عَلَيْهِ فَلَمْ يَبْلُغْ ذَلِكَ وَفَاءَ دَيْنِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لِغُرَمَائِهِ خُذُوا مَا وَجَدْتُمْ وَلَيْسَ لَكُمْ إِلاَّ ذَلِكَ

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் பழங்களை விலைக்கு வாங்கிய ஒருவர் (நஷ்டமடைந்து) பாதிக்கப்பட்டார். அவருக்குக் கடன் அதிகமாகி விட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவருக்குத் தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே மக்கள் அவருக்குத் தர்மம் செய்தனர். அது அவரது கடனை அடைக்கப் போதுமான அளவுக்குத் தேறவில்லை. எனவே, அவருக்குக் கடன் கொடுத்தவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (அவரிடம்) இருப்பதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதைத் தவிர உங்களுக்கு வேறெதுவுமில்லை என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

கடன் வாங்கியவரிடம் ஒரு லட்சம் ரூபாய்தான் உள்ளது. ஆனால் கடன் இரண்டு லட்சம் இருக்கிறது. இரண்டு லட்சம் தேறும் வரை அவகாசம் அளிக்க கடன் கொடுத்தவர் உடன்படவில்லை. இப்போதே முடிக்க வேண்டும் என்று வழக்கு கொண்டு வந்தால் இரண்டு லட்சம் கடன் கொடுத்தவர் ஒரு லட்சத்தை மட்டும் பெற்றுக் கொண்டு அதோடு விட்டுவிட வேண்டும்.

அல்லது அவகாசம் அளித்து வசதி வரும்போது வாங்கிக் கொள்ளலாம்.