ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட வேண்டும்?

ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட வேண்டும்?

கேள்வி :

ல்லாஹ்வுக்கும் வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும்,  ஜிப்ரீலுக்கும், மீகாயிலுக்கும் யார் எதிரியாக இருக்கின்றார்களோ அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கின்றான் என்று அல்குர்ஆன் 2:98 வசனத்தில்,வானவர்கள் என்று கூறி விட்டு பின்பு ஜிப்ரீல், மீகாயீல் என்று அல்லாஹ் தனியாகக் குறிப்பிடுகின்றான். ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட வேண்டும்? ஜிப்ரீலைப் பற்றி தெரியும். மீகாயீலைப் பற்றி விளக்கவும்.

எம். திவான் பஜிரா, பெரியகுளம்

பதில் :

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களுக்கு (அவர்கள் யூதராயிருந்த போது) எட்டியது. உடனே அவர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “தங்களிடம் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகின்றேன். அவற்றை ஓர் இறைத் தூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார். பிறகு, “1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2.சொர்க்கவாசி முலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை ஒத்திருப்பது எதனால்? அது தாயின் சகோதரர்களின் (சாயலை) ஒத்திருப்பது எதனால்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சற்று முன்பு தான் இது குறித்து ஜிப்ரீல் எனக்குத் தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள், “வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அவர் அல்லாஹ்வுக்கு எதிரியே.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார்” என்ற (2:97) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்…….

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புகாரி 3329, 4480

ஜிப்ரீலும் மீகாயீலும் வானவர்கள் தாம் என்றாலும் அவர்களைக் குறித்து யூதர்களிடம் இருந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பதற்காக இந்த வசனத்தை அல்லாஹ் அருளியிருக்கலாம். ஜிப்ரீலை யூதர்கள் பகைவராகக் கருதியிருந்தார்கள் என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக் காட்டுகின்றது. இதே போன்று மீகாயீலைப் பற்றியும் யூதர்கள் குறிப்பிட்ட கருத்து எதையேனும் கொண்டிருக்கலாம். ஆனால் அதைப் பற்றி ஹதீஸ்களில் எந்தக் குறிப்பும் இல்லை.

நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் தூதுச் செய்தியைக் கொண்டு வருவதால் நாங்கள் ஏற்கவில்லை, மீகாயீல் கொண்டு வந்திருந்தால் நாங்கள் ஏற்றிருப்போம் என்று மதீனாவிலிருந்த யூதர்கள் கூறியதாகவும் அதனால் இந்த வசனம் அருளப்பட்டதாகவும் தப்ஸீர்களில் கூறப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு அவர்கள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.

கேள்வி-பதில்- ஏகத்துவம்,ஜனவரி 2005