ஏகத்துவம் – செப்டம்பர் 2010

தலையங்கம்

இன்னொரு மகிழ்ச்சி இறைவனின் காட்சியே!

அதிகாலை கிழக்கு வெளுத்ததிலிருந்து வாய்க்கும் வயிற்றுக்கும் பூட்டு! உணர்ச்சிகளுக்குக் கடிவாளம்! அந்தி சாய்ந்து சூரியன் அஸ்தமனமாகும் அந்தப் பொன்னிற மாலை நேரத்தை ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பிறந்த குழந்தை முகம் பார்த்ததும் பிரசவித்த தாய்க்கு அத்தனை வேதனைகளும் பறந்து விடுவது போல், பட்ட வலிகள் அத்தனையும் அவள் மறந்திடுவது போல், ஒரு நோன்பாளி தான் பட்ட தாகம், பசி அனைத்தையும் நோன்பு துறந்ததும் மறந்து விடுகின்றார்.

சூடேறிய உடலில் சுவையான நீர் வாயில் நுழைந்ததும் எவ்வளவு மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கின்றது என்பதை வர்ணிக்க வார்த்தை இல்லை என்றே சொல்ல வேண்டும். இதைத் தான் நபி (ஸல்) அவர்களின் கூற்று அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும் பானத்தையும் எனக்காகவே விட்டு விடுகின்றார்என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு ஒரு கேடயமாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் வேளையில் கிடைக்கின்ற ஒரு மகிழ்ச்சியும், மறுமையில் தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கின்ற ஒரு மகிழ்ச்சியும் தான் அவை. நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையை விட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7492

இது நோன்பு துறக்கும் போது நாம் காண்கின்ற, கண்டு ரசிக்கின்ற மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஆகும். இந்த ஹதீஸ் கூறுகின்ற மற்றொரு சந்தோஷத்தைப் பார்ப்போம்.

இதே கருத்தைக் கொண்ட ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள் வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன; அல்லாஹ் கூறுகின்றான்: நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன். அவன் எனக்காகவே தனது உணர்வையும் உணவையும் கைவிடுகிறான் (என அல்லாஹ் கூறுகின்றான்). நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. அவர் நோன்பைத் துறக்கும் போது ஒரு மகிழ்ச்சியும், தம் இறைவனைச் சந்திக்கும் போது மற்றொரு மகிழ்ச்சியும் (அடைகிறார்). நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தை விட நறுமணமிக்கதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1945

இந்த ஹதீஸ், ஒவ்வொரு வணக்கத்திற்கும் கிடைக்கக்கூடிய நன்மையின் அளவீட்டைக் குறிப்பிடுகின்றது.

அடியான் செய்கின்ற ஒவ்வொரு வணக்கத்திற்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்கு என்ற அளவீட்டிற்கு அல்லாஹ் நன்மை அளிப்பதைத் தெரிவிக்கின்றது. ஆனால் நோன்புக்கு மாண்புமிகு நாயன், தானே தன்னுடைய அடியானைச் சந்திக்கும் போது கணக்கற்ற காணிக்கையாக, கண்ணியமிக்க கைம்மாறு தரப் போவதாகத் தெரிவிக்கின்றான்.

எல்லா வணக்கங்களுக்கும் உரிய கூலி இவ்வளவு தான் என்ற வரையறையும் வரம்பும் தெரிந்து விட்டது. ஆனால் நோன்பின் கூலி எவ்வளவு? எப்படி? நோன்பிற்கு ரஹ்மான் தரப் போகும் வெகுமானம் என்ன? அவனை நேரில் சந்திக்கும் போது தான் அது தெரியும் என்று இறைவன் தெரிவிக்கின்றான்.

அல்லாஹ்வின் சந்திப்பே ஒரு தித்திப்பு! ஒரு மகிழ்ச்சியின் திளைப்பு! இதை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

அல்குர்ஆன் 75:22, 23

இதில் அவன் பொத்தி வைத்திருக்கும் சன்மானம் எவ்வளவு என்று உடைக்கின்ற போது நமக்குப் பெருக்கெடுக்கின்ற மகிழ்ச்சி வெள்ளம், அல்லாஹ் தருகின்ற கூலியைப் போன்று அளவிட முடியாததும் அணை போட முடியாததுமாகும். அந்த ஆனந்தத்தையும் அளப்பரிய கருணையையும் அடைவதை ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். அருள்மிகு ரமளான் இதற்கான வழித்தடத்தையும் வரித் தடயத்தையும் பதிவதற்காகவே வந்துள்ளது.

அல்லாஹ் தன்னுடைய சந்திப்பிற்கு இரு நிபந்தனைகளைக் கூறுகின்றான்.

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

அல்லாஹ் கூறும் நிபந்தனைகளில் ஒன்று, நல்லமல்கள் செய்ய வேண்டும்.

இனிய ரமளானில் தொழுகைகளை ஜமாஅத்துடன் பேணித் தொழுதோம். இதர காலங்களில் சுபுஹ் தொழுகைக்கு எழுந்திருக்கவே சிரமப்பட்ட நாம், இரவில் தாமதமாகப் படுத்தும் ஸஹர் நேரத்தில் எழுந்தோம். குர்ஆனை ஓதினோம். தான தர்மங்களைச் செய்தோம். அது போன்று ரமளான் காட்டிய வழித்தடத்தில் பாக்கியமிகு ரமளானைப் பாடமாகக் கொண்டு, ரமளான் அல்லாத காலங்களிலும் பயணத்தைத் தொடர்வோம்.

இரண்டாவது நிபந்தனை, இணை வைக்காமல் இருத்தல்.

வாய் கொப்பளிக்கும் போது தொண்டைக் குழியில் தண்ணீர் நிற்கின்றது. துளியளவு தொண்டைக்குள் போனால் யாரும் பார்க்கப் போவதில்லை. இருப்பினும் வெளியே கொப்பளித்து விடுகிறோம். ஏன்? எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அருகில் இருக்கிறான் என்பதால் தான். இவ்வளவு அருகில் இருக்கும் அல்லாஹ்வை விட்டு விட்டு, உயிருடன் இருக்கின்ற அல்லது இறந்து போன அடியார்களை அழைக்கலாமா? இவர்களை அழைக்காமல் வல்ல அல்லாஹ்வை மட்டும் அழைப்பவர்களுக்கே அவனைச் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று இந்த வசனம் நிபந்தனை விதிக்கின்றது.

இந்நிபந்தனைகளைப் பேணாதவர்களுக்கு இறைவனைச் சந்திக்கும் பாக்கியம் இல்லை. குறிப்பாக அப்துல்லாஹ் ஜமாலி கூட்டத்தினர் போன்ற முஷ்ரிக்குகளுக்கு இல்லை. காரணம், இவர்கள் அருகில் இருக்கின்ற அல்லாஹ்வை விட்டு விட்டு, என்றோ இறந்து விட்ட அடியார்களை அழைத்து உதவி தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இறை மறுப்பின் எடுத்துக்காட்டுகளாகத் திகழும் இந்தப் பேர்வழிகள், அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று கூறி வருகின்றனர். இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர்கள் இந்த வாதத்தை ஒரு போதும் முன்வைக்க மாட்டார்கள். சந்திப்பு என்றாலே அதற்கு ஒரு வடிவம் இருந்தாக வேண்டும். ஒன்றுமில்லாத சூனியத்தைச் சந்திக்க முடியாது. எனவே இறைவனுக்கு உருவமில்லை என்று கூறி, அவனது சந்திப்பையும் சேர்த்து நிராகரிக்கின்றார்கள்.

இவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விவாதக் களத்தில் எதிர்கொண்டு இவர்களது முகத்திரையைக் கிழித்தெறிந்தது. அந்த விவாதத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நூல் வடிவில் தருவதில் ஏகத்துவம் மகிழ்ச்சியடைகின்றது.

————————————————————————————————————————————————

அல்லாஹ் உருவமற்றவனா? ஓர் ஆய்வு

உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்;

உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்.

இது நாகூர் ஹனீபாவின் பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகள் தமிழக முஸ்லிம்களின் கடவுள் கொள்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது. தமிழகத்திலுள்ள முஸ்லிம்கள், “அல்லாஹ்வுக்கு உருவமில்லை’ என்ற நம்பிக்கையில் ஆழ்ந்த பிடிமானம் கொண்டிருக்கிறார்கள்.

அரபி மதரஸாக்களில் படிக்கின்ற ஆலிம்களிடமும் இந்தச் சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை. அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று இந்த ஆலிம்களும் முடிவெடுத்து அதில் தீர்மானமாக இருப்பதால், “அல்லாஹ்வுக்கு உருவமிருக்கின்றது’ என்பதற்குக் குர்ஆன் ஹதீஸில் இருக்கும் தெளிவான ஆதாரங்கள் இந்த ஆலிம்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் எண்பதுகளின் துவக்கத்திலிருந்து, தவ்ஹீது பிரச்சாரம் தலைகாட்டத் துவங்கிய மாத்திரத்தில் மக்கள் திருக்குர்ஆனின் தமிழாக்கங்களை அதிகமதிகம் படிக்கத் துவங்கினர். இந்தத் தமிழாக்கங்கள் மக்களிடம் மாபெரும் தாக்கத்தையும் தூய இஸ்லாத்தை அறிய வேண்டும் என்ற தாகத்தையும் அதிகரித்தது.

உண்மையான கடவுள் கொள்கையை அவர்கள் அறியத் தலைப்பட்டனர். அல்லாஹ்வுக்கு உருவமிருக்கின்றது என்ற விளக்கம் அந்த உண்மையான கடவுள் கொள்கையில் உள்ளது தான் என்பதை அவர்கள் நன்கு விளங்கிக் கொண்டனர். அல்லாஹ் அரூபி, உருவமற்றவன் என்ற அசத்திய நம்பிக்கையிலிருந்து அவர்கள் விடுபட்டனர்; வெளியேறினர்.

ஆனால் இந்த பரேலவிஸ ஆலிம்கள் மட்டும் இந்தச் சிந்தனைக்கு வரவில்லை. இது வரை வர மறுத்துக் கொண்டிருக்கின்றனர். அசைந்து கொடுப்பதாக இல்லை.

அண்மையில் சென்னையில் இந்த பரேலவிஸக் கொள்கைவாதியான அப்துல்லாஹ் ஜமாலி என்பவருடன் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் இது தொடர்பாக விவாதம் நடந்தது.

இதில் தவ்ஹீத் அணி சார்பில் “இறைவனுக்கு உருவமுண்டு’ என்ற தலைப்பில் வாதம் புரிந்து. அல்குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரங்களை அள்ளி, அள்ளி வழங்கப்பட்டது.

அல்லாஹ் உருவமற்றவன் என்ற தலைப்பில் பேசிய அப்துல்லாஹ் சமாளி, நாம் எடுத்து வைத்த குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுக்குக் கண்ட கண்ட, கழிவு கெட்ட வியாக்கியானங்களைக் கொடுத்து கடைசி வரைக்கும் மறுத்துக் கொண்டிருந்தார். அல்லாஹ்வின் வசனங்களையும் ஹதீஸ்களையும் கேலியும் கிண்டலும் செய்தார்.

இதற்குக் காரணம் இந்தப் பரேலவிகள், அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று ஏற்கனவே முடிவில் இருந்தது தான். அதனால் தான் அந்தக் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் கடைசி வரை மறுத்தனர்; கேலி செய்தனர்.

அவர்கள் மறுத்த குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் என்னென்ன? என்பதை நாம் பார்க்கின்ற அதே வேளையில், இந்த ஆதாரங்கள் இஸ்லாமியக் கடவுள் கொள்கையின் உயிர் நாடிகள் என்பதைக் கருத்தில் கொண்டு அவற்றை ஒரு தொகுப்பாகவும் ஆக்கமாகவும் இங்கே தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். இப்போது அந்தத் தொகுப்பிற்குள் செல்வோம்.

————————————————————————————————————————————————

இறைவனின் திருவுருவம்

பொதுவாக எல்லா மொழிகளிலும் உறுப்புக்களைப் பற்றி பேசும் போது அது நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டாலும் சில இடங்களில் நேரடியான பொருள் அல்லாத வேறு கருத்திலும் பயன்படுத்தப்படுவதுண்டு.

“தலை வலிக்கிறது’ என்று கூறினால் “தலை’ என்ற வார்த்தை தலை என்ற நேரடி அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்கிறோம். ஆனால் தலைக்கனம் பிடித்தவன் என்று கூறும் போது கர்வம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்கிறோம்.

பயன்படுத்தப்படும் இடத்தையும், அதனுடன் இணைத்துக் கூறப்படும் சொற்களையும் கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருள் கொள்வது தான் சரியான முறையாகும்.

இறைவனின் உறுப்பு பற்றிக் கூறப்படும் வசனங்களிலும் இது போன்ற நிலை உள்ளது. சில இடங்கள் இறைவனின் உறுப்பைக் கூறும் வகையிலும் சில இடங்கள் வேறு கருத்தைக் கூறும் வகையிலும் அமைந்துள்ளன.

இந்த நுணுக்கமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாதது தான் இதில் ஏற்பட்ட குழப்பங்களுக்குக் காரணம்.

இறைவனுக்கு உருவம் உண்டு என்ற கொள்கையில் உறுதியாக உள்ள நல்லறிஞர்கள் கொள்கையில் தெளிவாக இருந்தாலும் அதை நிறுவுவதில் தோல்வி அடைந்துள்ளனர். இவர்கள், இறைவனுக்கு உருவம் உண்டு என்று வாதிடும் போது இறைவனின் உருவம் பற்றிப் பேசும் வசனங்களை மட்டும் ஆதாரமாகக் காட்டாமல் வேறு கருத்தைக் கூறும் வசனங்களையும் ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

பொருத்தமில்லாமல் நம்மவர்கள் எடுத்துக் காட்டும் ஆதாரங்களில் எதிர்க் கேள்வி கேட்டு இறைவனுக்கு உருவம் உண்டு என்ற தவறான கொள்கை உடையவர்கள் தங்கள் நிலையை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:115

இந்த வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே திரும்பினாலும் அல்லாஹ்வின் முகம் உண்டு என்ற சொற்றொடருக்கு நேரடிப் பொருள் கொண்டால் அல்லாஹ் பல திசையில் இருக்கிறான் என்ற கருத்து வந்து விடும். அவன் அர்ஷில் இருக்கிறான் என்ற கருத்துக்கு எதிராகவும் அத்வைதத்தை நிலை நாட்டும் வகையிலும் அமைந்து விடும்.

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

அல்குர்ஆன் 28:88

இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்

அல்குர்ஆன் 55:26, 27

இந்த வசனங்களை எடுத்துக் கொள்ளுங்கள்! உம் இறைவனின் முகம் மட்டுமே மிஞ்சும் என்ற சொற்றொடருக்கு இறைவனின் பண்பு மட்டும் மிஞ்சும் என்று கருத்து கொள்ள முடியாது. இறைவனின் முகம் மட்டும் மிஞ்சும் என்று பொருள் கொண்டு, அந்த முகம் என்பது இந்த இடத்தில் முழு உருவத்தையும் குறிக்கும் என்று புரிந்து கொள்கிறோம்.

சென்னை விவாதத்தில் கூட, இறைவனின் உறுப்புகளைப் பற்றிப் பேசும் எல்லா வசனங்களுக்கும் நேரடிப் பொருள் கொடுத்துத் தான் நாமும் வாதிடுவோம் என்று எதிர்பார்த்து, அப்படி வாதிட்டால் எளிதில் முறியடித்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு ஜமாலி விவாதிக்க வந்தார். ஆனால் சமாளிக்க முடியாத ஆதாரங்களை மட்டுமே எடுத்துக் காட்டுவது என்று நாம் தெளிவாக இருந்ததால் அவரால் தனது தீய கொள்கயைத் தூக்கி நிறுத்த முடியவில்லை.

இறைவனின் முகம் தொடர்பாகத் திருக்குர்ஆன் வசனங்களில் கூறப்பட்டுள்ள ஆதாரங்களைப் பார்த்தோம். இப்போது ஹதீஸ்களில் வரும் ஆதாரங்களைப் பார்ப்போம்.

ஒளிமயமான திருமுகம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச் சொன்னார்கள். (அவை:)

1) வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது.

2) அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.

3) (மனிதன்) இரவில் புரிந்த செயல், பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது.

4) (மனிதன்) பகலில் புரிந்த செயல், இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது.

5) ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். -மற்றோர் அறிவிப்பில் “நெருப்பே அவனது திரையாகும்என்று காணப்படுகிறது.- அத்திரையை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)

நூல்: முஸ்லிம் 263

அவனது முகத் தோற்றம்

உங்களில் ஒருவர் சண்டையிடும் போது முகத்தைத் (தாக்குவதை விட்டும்) தவிர்ந்து கொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹுத் தஆலா ஆதமைத் தன்னுடைய முகத்தோற்றத்திலேயே படைத்திருக்கின்றான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4731, அஸ்ஸுன்னத் லிஅபீ ஆஸிம் 228, தப்ரானி 478

இந்த ஹதீஸ்கள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமில்லாமல், அல்லாஹ்வுக்கு முகம் இருப்பதை உறுதி செய்து கொண்டிருக்கின்றன.

இறைவனின் இரு கண்கள்

தூய்மையான அல்லாஹ்வுக்குக் கண்கள் இருக்கின்றன. அதற்குரிய ஆதாரங்களை திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பார்ப்போம்.

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:58

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படையுங்கள் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்என்ற அல்லாஹ்வின் சொல்லிலிருந்து “செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான்என்ற வசனத்தை அபூஹுரைரா (ரலி) ஓதிக் கொண்டே, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கட்டை விரலை தமது காதின் மீது, அடுத்த விரலை தமது கண் மீது வைத்துக் காட்டியதைக் கண்டேன்என்று தெரிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைராவின் அடிமை அபூயூனுஸ்

நூல்: அபூதாவூத் 4103

அல்லாஹ், தன்னைப் பற்றி திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது, பார்ப்பவன், செவியுறுபவன் என்று அதிகமான இடங்களில் குறிப்பிடுகின்றான். இருப்பினும் இந்த வசனத்தை மட்டும் இங்கு நாம் எடுத்துக் காட்டுவதற்குக் காரணம், நபி (ஸல்) அவர்கள் தமது காதையும், கண்ணையும் கை விரல்களால் காட்டி விளக்கம் கொடுப்பதன் மூலம் அல்லாஹ்வுக்குக் கண்கள், காதுகள் உண்டு என்பதை உணர்த்துகிறார்கள்.

எல்லை இல்லாத இறைப் பார்வை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒளியே அவனது திரையாகும். அத்திரையை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும்.

நூல்: முஸ்லிம் 263

ஒற்றைக் கண் குருடன் அல்லன்

நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள்:

நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 3057

இந்த ஹதீஸ்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குக் கண்கள் இருக்கின்றன; அவை குறைவற்றவை என்பதைத் தெரிவிக்கின்றன.

இறைவனுக்கு இரு கைகள்

எல்லாம் வல்ல அல்லாஹ் தனக்கு இரு கைகள் இருப்பதைத் திருக்குர்ஆனில் தெரிவிக்கிறான்.

எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?” என்று (இறைவன்) கேட்டான்.

அல்குர்ஆன் 38:75

அல்லாஹ்வுக்குக் கைகள் இருப்பதைத் தெரிவிக்கும் வசனமாகும். இப்போது இது குறித்த ஹதீஸ்களைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களைப் பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), “நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்) பார்க்க மாட்டீர்களா?” என்று கேட்பார்கள். மக்கள் சிலர், “உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)என்று கூறுவார்கள்.

ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும் படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களைச் சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்பார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3340

இது ஆதம் நபியிடம் மக்கள் கூறுகின்ற கருத்தாகும். இதில், அல்லாஹ் தன் கையால் உங்களைப் படைத்தான் என்று மக்கள் கூறுவதிலிருந்து இறைவனுக்குக் கைகள் இருப்பதை அறிய முடியும்.

மூஸாவை வென்ற ஆதம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தம் இறைவன் அருகில் தர்க்கம் செய்தார்கள். அப்போது மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள். மூசா (அலை) அவர்கள், “அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்து, உங்களுக்குள் தனது உயிரை ஊதி, தன் வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்து, உங்களைச் சொர்க்கத்தில் குடியிருக்கச் செய்த ஆதம் நீங்கள் தானே! பிறகு நீங்கள் உங்களது பாவத்தின் மூலம் (உங்கள் வழித் தோன்றல்களான) மனிதர்களை பூமிக்கு இறங்கச் செய்து விட்டீர்கள்என்று கூறினார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “அல்லாஹ் தன் தூதுத்துவச் செய்திகளைத் தெரிவிக்கவும் தன்னிடம் உரையாடவும் உம்மைத் தேர்ந்தெடுத்து, அனைத்துப் பொருட்களைப் பற்றிய விளக்கமும் உள்ள பலகைகளை உமக்கு வழங்கி, தன் அருகில் வரச்செய்து இரகசியமாக உரையாடிய மூசா நீர் தானே! நான் படைக்கப்படுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் தவ்ராத்தை எழுதியதாக நீர் கண்டீர்?” என்று கேட்டார்கள்.

அதற்கு மூசா (அலை) அவர்கள், “நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால்என்று பதிலளித்தார்கள். “அதில், ஆதம் தம் இறைவனுக்கு மாறு செய்தார். எனவே, அவர் வழி தவறினார் என்று எழுதப்பட்டிருந்ததா?” என்று கேட்டார்.

அதற்கு மூசா (அலை) அவர்கள், “ஆம்என்றார்கள். “அவ்வாறாயின், என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எதை நான் செய்வேன் என்று இறைவன் என்மீது விதியாக்கி விட்டடானோ அதைச் செய்ததற்காக என்னை நீங்கள் பழிக்கிறீரா?” என்று ஆதம் (அலை) அவர்கள் கேட்டார்கள்.

(இந்தக் கேள்வியின் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4795

இந்த ஹதீஸில் மூஸா (அலை) அவர்கள், ஆதம் நபியைப் பார்த்து, அல்லாஹ் தன் கையினால் உங்களைப் படைத்தான் என்று சிறப்பித்துக் கூறுவதைப் பார்க்கிறோம்.

பாக்கியமிக்க இரு கைகள்

அல்லாஹ், ஆதமைப் படைத்து அவரிடம் உயிரை ஊதினான். அவர் உடனே தும்மி, “அல்ஹம்துலில்லாஹ்என்று கூறி, அவனது அனுமதியுடன் அல்லாஹ்வைப் புகழ்ந்தார். அவரிடம் அவரது இறைவன், “ஆதமே! யர்ஹமுக்கல்லாஹ் – அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக! இதோ அமர்ந்திருக்கின்ற இந்த மலக்குகளின் கூட்டத்திடம் சென்று அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வீராக!என்று கூறினான். (அவ்வாறு அவர் கூறியதும் அம்மலக்குகள்) பதிலளித்தனர். பின்னர் அவர் தன்னுடைய இறைவனிடம் திரும்பியதும், “இது உம்முடைய முகமனும், உமது பிள்ளைகள் தங்களுக்கிடையில் (பரிமாறுகின்ற) முகமனும் ஆகும்என்று இறைவன் கூறினான்.

பிறகு தன்னுடைய இரு கைகளும் பொத்தப்பட்டிருக்கும் நிலையில், “இவ்விரண்டில் நீர் விரும்பிய எதை வேண்டுமானாலும் தேர்வு செய்கஎன்று கூறினான். “நான் என்னுடைய இறைவனின் வலது கையைத் தேர்வு செய்தேன். எனினும் என்னுடைய இறைவனின் இரு கைகளுமே பாக்கியமாக்கப்பட்ட வலது கை தான்என்று ஆதம் கூறினார். பிறகு அதை அல்லாஹ் விரித்தான். அதில் ஆதமும் அவரது சந்ததியினரும் இருந்தனர். “என்னுடைய இறைவா! இவர்கள் யார்?” என்று ஆதம் கேட்டார். “இவர் உன்னுடைய மகன் தாவூத்! அவருக்கு வயது நாற்பதாக எழுதியிருக்கிறேன்என்று பதிலளித்தான். “இறைவா! அவருக்கு வயதை அதிகமாக்கு!என்று கேட்டார். “நான் அவருக்கு எழுதியது அது தான்என்று பதில் சொன்னான். “என்னுடைய இறைவா! அவருக்கு என்னுடைய வயதிலிருந்து அறுபதை வழங்குகிறேன்என்றார். “அது நீ கேட்டது போல் தான்என்று அவன் கூறினான்.

பிறகு அல்லாஹ் நாடியவரை அவர் சுவனத்தில் குடியமர்த்தப்பட்டு, பின்னர் அங்கிருந்து இறக்கப்படுகின்றார். ஆதம் தனக்குள் இதைக் கணக்கிட்டுக் கொண்டே இருந்தார். அவரிடம் மலக்குல் மவ்த் வந்தார். ஆதம் அவரிடம், “நீர் அவசரப்பட்டு வந்து விட்டீர். எனக்கு ஆயிரம் வருடங்கள் எழுதப்பட்டிருக்கின்றதுஎன்று கூறினார். அதற்கு மலக்குல் மவ்த், “சரிதான். ஆனால் உம்முடைய மகன் தாவூதுக்கு நீர் அறுபது வயதைக் கொடுத்து விட்டீர்என்றார். ஆதம் மறுத்தார். அவருடைய சந்ததியும் மறுத்தது. ஆதமும் மறந்தார். அவருடைய சந்ததியும் மறந்தது. அன்றிலிருந்து தான், எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டு விட்டது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 3290

இந்த ஹதீஸிலிருந்து, அல்லாஹ்வுக்கு இரு கைகள் இருக்கின்றன; அவ்விரண்டும் பாக்கியமிக்கவை என்பதை அறிந்து கொள்கிறோம்.

பிடிக்கும் புனிதக் கை

பூமி முழுவதிலிருந்தும் தான் அள்ளிய கைப்பிடி மண்ணிலிருந்து அல்லாஹுத் தஆலா ஆதமைப் படைத்தான். அதனால் தான் மண்ணின் தரத்திற்கு ஏற்ப ஆதமின் மக்கள் வந்து விட்டனர். சிவப்பர், வெள்ளையர், கருப்பர், இந்நிறங்களுக்கு இடைப்பட்டவர்கள், மென்மையானவர், கடினமானவர், கெட்ட குணமிக்கவர், நல்ல குணமிக்கவர் போன்றோர் அவர்களிலிருந்து வந்து விட்டனர்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி (ரலி)

நூல்: திர்மிதீ 2879

கண்ணிய நாயனின் கை விரல்கள்

அல்லாஹ்வுக்குக் கை இருக்கின்றது என்று சொல்லும் போது அதற்கு, அதிகாரம், ஆற்றல், ஆட்சி, ஆதிக்கம் என்று சிலர் மாற்று விளக்கம் கொடுக்கின்றனர். அவர்களது கருத்தை முறியடிக்கும் விதமாகப் பின்வரும் ஹதீஸ்கள் அமைகின்றனர்.

யூத மத அறிஞர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே!அல்லது “அபுல் காசிமே!என்றழைத்து, “அல்லாஹ் மறுமை நாளில் வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், மலைகள் மற்றும் மரங்களை ஒரு விரல் மீதும், தண்ணீர் மற்றும் ஈர மண்ணை ஒரு விரல் மீதும், இதர படைப்பினங்கள் அனைத்தையும் ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு அவற்றை அசைத்தவாறே, “நானே அரசன்; நானே அரசன்என்று சொல்வான்என்றார்.

அவர் கூறியதைக் கேட்டு வியப்படைந்து அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

பிறகு “அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்” (39:67) எனும் வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 4992

இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் கையில் ஐந்து விரல்கள் என்று தெளிவுபடுத்துகின்றன.

வான்மறை கூறும் வலது கை

அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்.

அல்குர்ஆன் 39:67

இது அர்ரஹ்மானின் வலது கை குறித்து திருக்குர்ஆனில் இடம் பெறும் ஆதாரமாகும். இது குறித்து ஹதீஸில் இடம் பெறுவதைப் பார்ப்போம்.

வலது கையில் வானத்தைச் சுருட்டுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வுமிக்க அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தனது வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு “நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?” என்று கேட்பான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6519, முஸ்லிம் 4994

இடது கையால் பூமியைச் சுருட்டுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் வானங்களைச் சுருட்டுவான். பிறகு அவற்றைத் தனது வலக் கரத்தில் எடுத்துக் கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான். பிறகு பூமிகளைத் தனது இடக் கரத்தில் சுருட்டிக் கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4995

விரல்களைப் பொத்தி விரித்தல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தன் வானங்களையும் பூமிகளையும் தன்னுடைய இரு கரங்களிலும் எடுத்துக்கொண்டு, “நானே அல்லாஹ். நானே அரசன்என்று கூறுவான் என்றார்கள். இதைக் கூறிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விரல்களை மடக்கிவிட்டு, பிறகு அவற்றை விரித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4996

மேற்கண்ட ஹதீஸில், “கைகளால் பிடிப்பான்’ என்பதற்கு மக்கள் வேறு அர்த்தம் கொள்ள முடியாத வகையில் நபி (ஸல்) அவர்கள் தமது கைகளால் மூடித் திறந்து காட்டி நேரடிப் பொருள் கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அர்ரஹ்மானின் வலது புறம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேர்மையான ஆட்சியாளர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப் பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக் கரமே (வளமிக்கதே). அவர்கள் தமது நிர்வாகத்திலும், குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக் கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்து கொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்).

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: முஸ்லிம் 3406

ஆதிக்கம் செலுத்துபவன் தன்னுடைய வானங்களையும் தன்னுடைய பூமியையும் தனது கையில் எடுத்து, அதைத் தனது கையில் பிடித்துக் கொண்டு அதைப் பொத்தி விரிப்பான். பிறகு, “நான் ஆதிக்கம் செலுத்துபவன்; ஆதிக்கம் செலுத்துபவர்கள் எங்கே? பெருமையடிப்பவர்கள் எங்கே?” என்று கேட்பான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹ் எவ்வாறு கேட்பான் என்பதை விளக்கும் விதமாகத்) தமது வலப்பக்கமும் இடப் பக்கமும் சாய்பவர்களாக இருந்தனர். நான் மிம்பரைப் பார்த்தேன். அது நபி (ஸல்) அவர்களுடன் சாய்ந்து கீழே சரிந்து விழுந்து விடுமோ என்று நான் கூறுமளவுக்கு அதன் அடிப்பாகத்திலிருந்து அது அசைந்து கொண்டிருந்தது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: இப்னுமாஜா 194

புரோட்டா போல் புரளும் பூமி

நபி (ஸல்) அவர்கள் “மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தமது ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த(இறை)வன் பூமியைத் தனது கரத்தால் புரட்டிப் போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்குத் தங்குமிடமாக்குவான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 6520

இவை அனைத்தும் அல்லாஹ்வுக்குக் கைகள் இருப்பதையும் அவற்றை அவன் பொத்தி விரிப்பதையும் விளக்கமாகக் குறிப்பிடுகின்றன.

இறைவன் எழுதிய இனிய வேதம்

மூஸாவே! எனது தூதுச் செய்திகள் மூலமும், நான் பேசியதன் மூலமும் மக்களை விட உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே நான் உமக்குக் கொடுத்ததைப் பிடித்துக் கொள்வீராக! நன்றி செலுத்துபவராக ஆவீராக!என்று (இறைவன்) கூறினான்.

பலகைகளில் அவருக்காக ஒவ்வொரு விஷயத்தையும் எழுதினோம். அறிவுரையாகவும், அனைத்து விஷயங்களுக்கும் விளக்கமாகவும் அது இருந்தது. “இதைப் பலமாகப் பிடிப்பீராக! இதை மிக அழகிய முறையில் பிடிக்குமாறு உமது சமுதாயத்திற்கும் கட்டளையிடுவீராக! குற்றம் புரிந்தோரின் இல்லத்தை உங்களுக்குக் காட்டுவேன்” (என்று இறைவன் கூறினான்.)

நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழி கேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும், அவற்றை அலட்சியப் படுத்தியதும் இதற்குக் காரணம்.

அல்குர்ஆன் 7:144-146

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்து கொண்டார்கள்.  மூசா (அலை) அவர்கள், “ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள்என்று சொன்னார்கள்.

அதற்கு மூசாவிடம் ஆதம் (அலை) அவர்கள், “நீர் தான் மூசாவா? அல்லாஹ், தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தனது கையால் உமக்காக (வேதத்தை) எழுதினான். (இத்தகைய) நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?” என்று கேட்டார்கள்.

(இந்த பதில் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்; தோற்கடித்து விட்டார்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4793

அள்ளுகின்ற அல்லாஹ்வின் கை

கேள்வி கணக்கில்லாமல் எனது உம்மத்தினரில் எழுபதாயிரம் பேர்களை சுவனத்தில் நுழைவிப்பதை கண்ணியமும் மகத்துவமும் நிறைந்த அல்லாஹ் எனக்கு வாக்களித்துள்ளான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக, உங்களுடைய உம்மத்தில் அந்த எண்ணிக்கையினர் ஈக்களில் ஒரு செம்மஞ்சள் நிற ஈயைப் போல் தானே இருப்பார்கள்?” என்று யஸீத் பின் அல்அக்னஸ் அஸ்ஸலமீ கேட்டதற்கு, “ஒவ்வொரு ஆயிரத்துடனும் எழுபதாயிரம் சேர்த்து, ஓர் எழுபதாயிரத்தை எனக்கு வாக்களித்துள்ளான். மேலும் மூன்று கை அள்ளல்களை அதிகப்படுத்தினான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

நூல்: முஸ்னத் அஹ்மத் 22210

உயர்ந்தவனின் உள்ளங்கை

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (நல்ல மற்றும் கெட்ட) காரியங்கள் (இப்போது தான்) துவங்கப்படுகின்றனவா? அல்லது (ஏற்கனவே) விதி விதிக்கப்பட்டு விட்டதா?” என்று கேட்டார்.

அல்லாஹுத் தஆலா ஆதமுடைய மக்களின் சந்ததியினரை அவர்களுடைய முதுகளிலிருந்து எடுத்து அவர்களையே அவர்கள் மீது சாட்சியாக்கினான். பிறகு தன் இரு உள்ளங்கைகளில் கொட்டி, “இவர்கள் சுவர்க்கத்திற்குரியவர்கள், இவர்கள் நரகத்திற்குரியவர்கள்என்று கூறினான். எனவே சுவனத்திற்குரியவர், சுவனத்திற்குரிய காரியத்திற்கு ஏற்ப எளிதாக இழுத்துச் செல்லப்படுகிறார். நரகத்திற்குரியவர்கள் நரகத்திற்குரிய காரியத்திற்கு ஏற்ப எளிதாக இழுத்துச் செல்லப்படுகிறார்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

நூல்: பைஹகீயின் அஸ்மா வஸ்ஸிபாத் 2/148

கண்ணியத்திற்குரியவனின் கால்கள்

எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்குக் கைகள் இருப்பது போன்றே கால்களும் இருக்கின்றன. அதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

கெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தாச் செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.

அல்குர்ஆன் 68:42

இது மறுமை நாளில் மஹ்ஷரில் நடக்கும் ஓர் அற்புதக் காட்சியாகும். இறைவனின் கால்கள் மறுமையில் வெளிப்பட்டு அதில் நல்லோர் ஸஜ்தா செய்வார்கள் என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.

கால் மிதி வாங்கும் நரகம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்து கொண்டன. அப்போது நரகம், “பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன்என்று சொன்னது. சொர்க்கம், “எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்என்று கூறியது.

அல்லாஹ் சொர்க்கத்திடம், “நீ எனது அருள். உன் மூலமே என் அடியர்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகின்றேன்என்று கூறினான். நரகத்திடம் “நீ வேதனை(க்காகத்) தான். உன் மூலமே என் அடியர்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றுக்கும் வயிறு நிரம்பத் தரப்படும்.

ஆனால், நரகமோ இறைவன் தனது காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும் போது நரகம் “போதும்! போதும்!என்று கூறும். அப்போது தான் அதற்கு வயிறு நிரம்பும்.

மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை; மாறாக,) அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ், சொர்க்கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4850, 2480

இந்த ஹதீஸ்களெல்லாம் அல்லாஹ்வுக்கு முகம், கண்கள், காதுகள், கைகள், கால்கள் இருக்கின்றன என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. அல்லாஹ் உருவமுள்ளவன் என்பதற்கு இவை தெளிவான ஆதாரங்களாக உள்ளன.

அல்லாஹ் ஓர் அழகன்

இவ்வளவு உறுப்புகளும் கொண்ட அல்லாஹ் உருவமுள்ளவன் தான் என்பதற்கு இதை விடச் சான்றுகள் வேறு தேவையில்லை. இத்தனைக்குப் பிறகும் அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்றால் அது, குர்ஆன் ஹதீஸை மறுக்கும் இறை மறுப்பாகும். அல்லாஹ் காப்பானாக!

இத்தனை உறுப்புக்களும் உள்ள அல்லாஹ் அழகானவனா? அவனது உருவம் எப்படிப்பட்டது என்பதற்கும் ஹதீஸ்களில் ஆதாரங்கள் உள்ளன. அல்லாஹ் மாபெரும் அழகானவன் என்பதைக் கீழ்க்காணும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 131

புனித உறுப்புக்களும் மனித உறுப்புக்களும் ஒன்றல்ல

அல்லாஹ்வுக்கு உறுப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அவை நம்முடைய உறுப்புக்களைப் போன்றவை என்று சொன்னால், அல்லது ஒப்பாக்கினால் அல்லாஹ்வுக்கு உவமை கற்பித்த, இணை கற்பித்த பாவத்திற்கு ஆளாக நேரிடும்.

அதே சமயம், அல்லாஹ்வுக்கு உறுப்புக்கள் இல்லை, உருவம் இல்லை என்று சொன்னால் அது இறை மறுப்பாகி விடும். அதனால் இரண்டிற்கும் இடமில்லாத, சரியான வகையில் அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறுவதை அப்படியே நம்ப வேண்டும்.

உண்மையில் அல்லாஹ்வின் உறுப்புக்களின் ஆற்றல் அளவிடவே முடியாதவை. மனித உள்ளத்தில் அறவே எண்ணிப் பார்க்க முடியாதவையாகும். அந்த உறுப்புக்களின் ஆற்றலை இப்போது பார்ப்போம்.

ஒளி வீசும் உயர் முகம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒளியே அவனது திரையாகும். அத்திரையை அவன் விலக்கி விட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும்.

நூல்: முஸ்லிம் 263

வானம், பூமியை வாரும் வலிமை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வுமிக்க அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தனது வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு “நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?” என்று கேட்பான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4994

விரலின் வலிமை

யூத மத அறிஞர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே!அல்லது “அபுல் காசிமே!என்றழைத்து, “அல்லாஹ் மறுமை நாளில் வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், மலைகள் மற்றும் மரங்களை ஒரு விரல் மீதும், தண்ணீர் மற்றும் ஈர மண்ணை ஒரு விரல் மீதும், இதர படைப்பினங்கள் அனைத்தையும் ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு அவற்றை அசைத்தவாறே, “நானே அரசன்; நானே அரசன்என்று சொல்வான்என்றார். அவர் கூறியதைக் கேட்டு வியப்படைந்து அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 4992

காலின் வலிமை

நரகத்திடம் “உனக்கு வயிறு நிரம்பி விட்டதா?” என்று கேட்கப்படும். அது, “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும். அப்போது அருள் வளமிக்கவனும், உயர்ந்தோனுமான அல்லாஹ் தனது பாதத்தை அதன் மீது வைப்பான். உடனே அது “போதும்! போதும்!என்று கூறும்.

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 4849

————————————————————————————————————————————————

வல்லவன் வானத்தில் இருக்கிறான்

இப்படி ஓர் அழகிய உருவமிக்க அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும். அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதைப் அறிந்து கொள்வீர்கள்.

அல்குர்ஆன் 67:16, 17

(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! “இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மைஎன்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

அல்குர்ஆன் 2:144

வானத்திலிருந்து பூமி வரை காரியங்களை அவனே நிர்வகிக்கிறான். அது ஒரு நாளில் அவனிடம் மேலேறிச் செல்லும். அது நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் வருடங்கள் அளவுடையது.

அல்குர்ஆன் 32:5

இவ்வசனங்கள் அல்லாஹ் வானத்தில் இருப்பதாகக் கூறுகின்றன. இது தொடர்பான ஹதீஸ்களையும் பார்ப்போம்.

என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள) உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்து வந்தாள்.

ஒரு நாள் நான் சென்று பார்த்த போது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்று விட்டது. (சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்பட்டேன். ஆயினும், அவளை நான் அறைந்து விட்டேன்.  நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற போது அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்து வாருங்கள்!என்று சொன்னார்கள்.

நான் அவளை அழைத்துச் சென்ற போது அவளிடம், “அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அவள், “வானத்தில்என்று பதிலளித்தாள். அவர்கள், “நான் யார்?” என்று கேட்டார்கள். அவள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர்என்றாள். அவர்கள் (என்னிடம்), “அவளை விடுதலை செய்து விடுங்கள்! ஏனெனில், அவள் இறை நம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்என்றார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி)

நூல்: முஸ்லிம் 836

வானத்தை நோக்கி ஏறும் மலக்குகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக உங்களிடையே வருகின்றனர். ஃபஜ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் ஒன்று கூடுகின்றார்கள். பிறகு, உங்களிடையே இரவு தங்கியவர்கள் மேலேறி (இறைவனிடம்) செல்கின்றனர். அப்போது மக்களைப் பற்றி மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அ(வ்வான)வர்களிடம், “(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்?” என்று கேட்பான். அதற்கு அ(வ்வான)வர்கள், “அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டு வந்தோம்; அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்என்று பதிலளிப்பார்கள்.

நூல்: புகாரி 555

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ்விடம் கூடுதல் வானவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் பூமியில் சுற்றிவருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றும் சபைகளைத் தேடி வருகின்றனர். அல்லாஹ்வைப் போற்றும் சபை ஒன்றை அவர்கள் கண்டால், அவர்களுடன் அவ்வானவர்களும் அமர்ந்து கொள்கின்றனர். அவர்களில் சிலர் வேறு சிலரைத் தம் இறக்கைகளால் சூழ்ந்து, தமக்கும் முதல் வானத்துக்கும் இடையே உள்ள பகுதியை நிரப்புகின்றனர். (இறைவனை நினைவு கூரும்) அம்மக்கள் கலைந்து சென்றதும் அ(ந்த வான)வர்கள் வானுலகிற்கு ஏறிச் செல்கின்றனர்.

அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவர்களிடம் – அவர்களை நன்கறிந்திருந்தும் – “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்கிறான். அதற்கு வானவர்கள், “பூமியிலுள்ள உன் அடியார்கள் சிலரிடமிருந்து நாங்கள் வருகிறோம். அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர்; உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னை ஏகன் என்று கூறிக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து போற்றிக் கொண்டும், உன்னிடத்தில் வேண்டிக் கொண்டும் இருக்கின்றனர்என்று கூறுகின்றனர். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4854

இதே கருத்தில் முஸ்னத் அஹ்மதில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. அதில், “அவர்களில் (மலக்குகளில்) ஒருவர் மற்றறொருவருக்கு மேலாகச் சென்று அர்ஷை அடைந்து விடுகின்றனர்” என்று இடம் பெறுகின்றது. அதாவது வானத்தை நோக்கி ஏறிச் செல்கின்றனர் எனக் கூறப்படுகின்றது. (ஹதீஸ் எண்: 8350)

வானத்து நாயனின் நம்பிக்கையாளர்

அலீ (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமனிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டு விட்டார்கள். (அந்த நால்வர்) உயைனா பின் பத்ர் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), ஸைத் அல் கைல் (ரலி), நான்காமவர் அல்கமா (ரலி) அல்லது ஆமிர் பின் துஃபைல் (ரலி) ஆகியோராவர்.

அப்போது நபித் தோழர்களில் ஒருவர், “இதைப் பெறுவதற்கு இவர்களை விடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம் தாம்என்று கூறினார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க மாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ணமுள்ளனஎன்று சொன்னார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 4351

வேண்டாம் வானத்திலிருப்பவனின் கோபம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள் மீது கணவன் திருப்தி கொள்ளும் வரை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 2595

வானவனை நோக்கிப் பறக்கும் உயிர்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மரணிப்பவரிடம் மலக்குகள் வருகின்றனர். அவர் நல்லடியாராக இருந்தால், “நல்ல உடலில் இருந்த நல்ல ஆத்மாவே! வெளியேறுக! புகழப்பட்டதாக வெளியேறுக! நல்லருள், நறுமணம், கோபமடையாத நாயனைக் கொண்டு நீ நற்செய்தி பெறுக!என்று மலக்குகள் கூறுகின்றனர். ஆத்மா வெளியேறுகின்ற வரை இவ்வாழ்த்து சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும். பிறகு அது வானத்திற்கு ஏற்றப்பட்டு, அதற்காக வானம் திறக்கப்பட்டு, இவர் யார் என விசாரிக்கப்படும். அப்போது அவர்கள், இன்னார் என்று சொல்வார்கள். “நல்ல உடலில் இருந்த நல்ல ஆத்மாவே! வருக! புகழப்பட்டதாக நுழைக! நல்லருள், நறுமணம், கோபமடையாத நாயனைக் கொண்டு நற்செய்தி பெறுக!என்று சொல்லப்படும். மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் இருக்கின்ற வானத்திற்கு இறுதியாக அது கொண்டு செல்லப்படுகின்ற வரை இவ்வாழ்த்து சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இறந்தவர் கெட்ட மனிதராக இருந்தால், “கெட்ட உடலில் இருந்த கெட்ட ஆத்மாவே! வெளியேறுக! இழிவுபடுத்தப்பட்டதாக வெளியேறுக! கொதிநீர், சீழ் சலத்தையும் அதன் ரகத்தில் அமைந்திருக்கும் பல்வேறு வேதனைகளைக் கொண்டும் நீ நற்செய்தி பெறுக!என்று மலக்கு கூறுவார். ஆத்மா வெளியேறுகின்ற வரை இந்த இழியுரை சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கும். பிறகு அது வானத்திற்கு ஏற்றப்படும். ஆனால் அதற்கு வானம் திறக்கப்படாது. “இது யார்?” என்று விசாரிக்கப்படும். இன்னார் என்று சொல்லப்படும். அப்போது, “கெட்ட உடலில் இருந்த கெட்ட ஆத்மாவுக்கு எந்த வரவேற்பும் இல்லை. நீ இழிவுபடுத்தப்பட்டதாகத் திரும்பு! ஏனெனில் உனக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படாதுஎன்று சொல்லப்படும். வானத்திலிருந்து அது திரும்ப அனுப்பப்பட்டு பிறகு கப்ருக்குள் சென்று விடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: இப்னுமாஜா 4252

மனித உயிர் கைப்பற்றப்பட்டதும் வானத்திற்கு மேல் இருக்கும் அல்லாஹ்விடம் செல்கின்றது என்பதை இந்த ஹதீஸ் மிகத் தெளிவாக விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்து விட்டால், வானவர்கள் இறைக் கட்டளைக்குப் பணிந்தவர்களாகத் தம் சிறகுகளை அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறை மேல் சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள். அப்போது வானவர்கள் பீதிக்குள்ளாகிறார்கள்.) பின்னர், அவர்களின் இதயங்களிலிருந்து பீதி அகற்றப்படும் போது (அல்லாஹ்விற்கு நெருக்கமான வானவர்களிடம்) “நம் இறைவன் என்ன சொன்னான்?” என்று வினவுகின்றார்கள்.

அதற்கு அவர்கள் வினவியோரிடம், “(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான் -அவன் உயர்ந்தவன்; பெரியவன்”- என்று கூறுவர். ஷைத்தான்கள் ஒருவர், மற்றொருவருக்கு மேல் இருந்து (ஒட்டுக் கேட்டுக்) கொள்கின்றனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 4800, திர்மிதி 3147

வானுலக் செய்திகள்

அன்சாரி நபித்தோழர்களில் ஒருவர் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்:

ஒரு நாள் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (வானிலிருந்து) ஒரு நட்சத்திரம் எறியப்பட்டு ஒளிர்ந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் “இதைப் போன்று (வானிலிருந்து) நட்சத்திரம் எறியப்பட்டால், நீங்கள் அறியாமைக் காலத்தில் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள். (அறியாமைக் காலத்தில் இவ்வாறு நட்சத்திரம் எறியப்பட்டால்) இன்றிரவு ஒரு மாமனிதர் பிறந்திருக்கிறார்; ஒரு மாமனிதர் இறந்திருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்என்று பதிலளித்தனர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய பிறப்புக்காகவோ யாருடைய இறப்புக்காகவோ அது எறியப்படுவதில்லை. மாறாக, வளமும் புகழும் கொண்ட நம் இறைவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்து விட்டால், அரியணையை (அர்ஷ்) சுமக்கும் வானவர்கள் இறைவனை(ப் போற்றி)த் துதிக்கின்றனர். பிறகு (அதைக் கேட்டு) அதற்கடுத்த வானிலுள்ள (வான)வர்களும் (இறைவனைப் போற்றித்) துதிக்கின்றனர். (இவ்வாறே ஒவ்வொரு வானிலுள்ள வானவர்கள் துதிக்கின்றனர்.) இறுதியில் அத்துதி பூமிக்கு அருகிலுள்ள வானவர்களை வந்தடைகிறது.

பின்னர் அரியணையைச் சுமக்கும் வானவர்களுக்கு அருகிலிருப்பவர்கள், அரியணையைச் சுமக்கும் வானவர்களிடம், “உங்கள் இறைவன் என்ன சொன்னான்?” என்று வினவுகின்றனர். அதற்கு அரியணையைச் சுமக்கும் வானவர்கள் இறைவன் என்ன சொன்னான் என்பதை அவர்களிடம் தெரிவிக்கின்றனர். உடனே வானிலிருப்போரில் சிலர் வேறு சிலரிடம் அது குறித்து விசாரித்துக் கொள்கின்றனர்.

முடிவில் அச்செய்தி பூமிக்கு அருகிலுள்ள வானத்தை வந்தடைகிறது. உடனே அதை ஜின்கள் ஒட்டுக்கேட்டு, அதைத் தம் (சோதிட) நண்பர்களிடம் போடுகின்றனர். (அப்போது) அவர்கள் மீது நட்சத்திரங்கள் எறியப்படுகின்றன. உள்ளது உள்ளபடி சோதிடர்கள் தெரிவிப்பது உண்மையாகும். ஆயினும், அவர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக (மக்களிடம்) கூறுகின்றனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4136

குறிப்பு: இது ஆரம்பத்தில் இருந்த நிலையாகும். பின்னர் ஒட்டுக் கேட்பதில் இருந்து தடுக்கப்பட்டு விட்டனர். இப்போது சோதிடர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு பொய்யாகும். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

(ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார். (அல்குர்ஆன் 72:9)

வானை நோக்கி ஏறும் வார்த்தைகள்

யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.

அல்குர்ஆன் 35:10

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவில் சில வானவர்களும், பகலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து (இறங்கி) வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்றுசேருகின்றார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் (வானத்திற்கு) ஏறிச் செல்கின்றார்கள். அவர்களிடம் அல்லாஹ் “என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவிட்டு வந்தீர்கள்?” என்று -உங்களைப் பற்றி அவன் நன்கறிந்த நிலையிலேயே- கேட்கின்றான். “அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் நிலையில் அவர்களை விட்டுவிட்டு வந்தோம்; அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7429

இவை அனைத்தும் நம்மைப் படைத்த ரட்சகன் வானில் இருக்கிறான் என்று எடுத்துக் கூறுகின்றன.

————————————————————————————————————————————————

அர்ஷில் அமர்ந்திருக்கும் அல்லாஹ்

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.

அல்குர்ஆன் 7:54

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். காரியங்களை நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?

அல்குர்ஆன் 10:3

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் 20:5

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அளவற்ற அருளாளனைப் பற்றி, அறிந்தவரிடம் கேட்பீராக!

அல்குர்ஆன் 25:59

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

அல்குர்ஆன் 32:4

வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

அல்குர்ஆன் 57:4

அர்ஷைச் சுமக்கும் அருள் மலக்குகள்

எல்லாம் வல்ல அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. அவனுடைய இந்த அர்ஷை எட்டு மலக்குகள் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த வசனங்கள் விளக்குகின்றன.

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கின்றான் என்று சொல்லும் போது, “அமர்தல்’ என்ற இந்தத் தன்மை அல்லாஹ்வின் தகுதிக்கு உகந்ததல்ல என்று தாங்களாக ஒரு சிந்தனையைக் கற்பனை செய்து கொண்டு, இதற்குத் தங்கள் மனோ இச்சைக்கேற்ப சுய விளக்கம் கொடுக்கின்றனர். அர்ஷில் இருக்கிறான் என்றால் அல்லாஹ் ஆட்சி செலுத்துகிறான், ஆதிக்கம் செலுத்துகிறான் என்பது தான் அந்த சுய விளக்கமாகும்.

அர்ஷ் என்பது ஒரு திடப்பொருளாக இல்லாமல் ஆட்சி, அதிகாரம் என்ற பொருளைக் கொண்டதாக இருந்தால் வேறு பொருள் கொடுக்க முடியும். அர்ஷ் என்பது ஒரு இருக்கை என்று தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

அதை வானவர்கள் சுமப்பார்கள், அதற்கு நிழல் இருக்கும் என்பது போல் இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. ஒரு திடப் பொருளைக் குறிப்பிட்டு விட்டு அதனுடன் “இஸ்தவா’ என்ற சொல் சேர்ந்தால் “அமர்தல்’ என்பதைத் தவிர வேறு அர்த்தம் அதற்கு வராது.

அதனால் “இஸ்தவா அலல் அர்ஷ்’ என்பதற்கு அல்லாஹ் அர்ஷில் அமர்ந்தான் என்று பொருள் கொடுப்பதே பொருத்தமான ஒன்றாகும்.

அர்ஷ் என்றால் நாற்காலி, ஆசனம் என்று பொருளாகும்.

நாற்காலியில் ஆட்சி செலுத்துகிறான்; நாற்காலியில் ஆதிக்கம் செலுத்துகிறான் என்றால் அது கேலிக்குரிய வாசகமாகி விடும். எனவே அர்ஷில் அமர்ந்து விட்டான் என்பதை அப்படியே பொருள் கொடுப்பது தான் சரியானதாகும்.

அர்ஷின் மேல் தொங்கும் ஏடு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளைப் படைத்த போது தனது (“லவ்ஹுல் மஹ்ஃபூழ்என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – “என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டதுஎன்று எழுதினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3194, 7404

இந்த ஏடுகள் அர்ஷுக்கு மேல் தொங்குகின்றன எனும் போது, அர்ஷ் என்றால் ஆசனம் / இருக்கை என்ற அர்த்தத்தில் தான் இங்கு இடம் பெறுகின்றதே தவிர இலக்கியமான செயற்கை அர்த்தத்தில் இடம்பெறவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் இந்த இடத்தில் அர்ஷ் என்பதற்கு ஆட்சியதிகாரம் என்று பொருள் கொடுத்தால், அதன் மேல் இந்த ஏடுகள் தொங்குகின்றன என்று கூறப்படுவதற்குப் பொருளில்லாமல் போய் விடும்.

அர்ஷின் கீழ் அடியாரின் ஸஜ்தா

(மறுமை நாளில்) மக்கள் என்னிடம் வந்து “முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். இறைத்தூதர்களில் இறுதியானவர். உங்களது முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அர்ஷுக்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி “இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்என்பேன். அதற்கு “முஹம்மதே! சொர்க்கத்தின். வாசல்களில் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்து கொள்ளலாம்என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்க வாசலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் “மக்காவிற்கும் (யமனிலுள்ள) “ஹிம்யர்எனும் ஊருக்கும் இடையிலுள்ளஅல்லது “மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ளதூரமாகும்என்று கூறினார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4712

அர்ஷ் என்றால் அமரும் ஆசனம் என்பதால் தான் அதன் கீழ் விழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்கின்றார்கள்.

அர்ஷைச் சுமக்கும் ஆற்றல் மிகு மலக்குகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய பிறப்புக்காகவோ யாருடைய இறப்புக்காகவோ அது (நட்சத்திரம்) எறியப்படுவதில்லை. மாறாக, வளமும் புகழும் கொண்ட நம் இறைவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்து விட்டால், அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் இறைவனை(ப் போற்றி)த் துதிக்கின்றனர். பிறகு (அதைக் கேட்டு) அதற்கடுத்த வானிலுள்ள (வான)வர்களும் (இறைவனைப் போற்றித்) துதிக்கின்றனர். (இவ்வாறே ஒவ்வொரு வானிலுள்ள வானவர்கள் துதிக்கின்றனர்.) இறுதியில் அத்துதி பூமிக்கு அருகிலுள்ள வானவர்களை வந்தடைகிறது. (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 4136

எடை மிகுந்த இறை அர்ஷ்

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப் பின் அதிகாலையில்  என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், “நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில் தான் நீ இருந்து கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்என்றேன்.

நபி (ஸல்) அவர்கள், “நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்து விடும். (அவை:) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி (ஆகியவையாகும்)என்றார்கள்.

(பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அர்ஷின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல: முஸ்லிம் 4905

வல்ல இறைவனின் அர்ஷுக்கு ஓர் எடை உள்ளது. அது ஒரு பரிமாணம் கொண்ட திடப்பொருள் என்பது இதிலிருந்து புலனாகின்றது.

நீரில் இருந்த இறையாசனம்

உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்?’ என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவீர்கள் என்று நீர் கூறினால் இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 11:7

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாசற்கதவருகே கட்டிப் போட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், “(நான் அளிக்கும்) நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!என்று கூறினார்கள். அவர்கள், “எங்களுக்கு நற்செய்தி அளித்தீர்கள். அவ்வாறே எங்களுக்கு (தர்மம்) கொடுக்கவும் செய்யுங்கள்என்று (இரு முறை) கூறினார்கள். பிறகு, யமன் நாட்டவர் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்தார்கள். (அவர்களிடமும்) நபி (ஸல்) அவர்கள், “யமன் வாசிகளே! (எனது) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்றுக் கொள்ளவில்லைஎன்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஏற்றுக் கொண்டோம்என்று பதில் கூறினர். பிறகு, “நாங்கள் தங்களிடம் இந்த (உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்னும்) விஷயம் குறித்துக் கேட்பதற்காக வந்தோம்என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனது அர்ஷ் தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்என்று கூறினார்கள். அப்போது ஒருவர்  (என்னை) அழைத்து, “ஹுஸைனின் மகனே! உங்கள் ஒட்டகம் ஓடிப் போய் விட்டதுஎன்று கூற, நான் (அதைத் தேடிப் பார்க்க எழுந்து) சென்று விட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதவாறு கானல் நீர் தடுத்து விட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! “நான் அதை அப்படியே விட்டு விட்டிருந்தால் நன்றாயிருந்திருக்குமே (படைப்பின் ஆரம்பம் குறித்து நபி (ஸல்) அவர்கள் இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள் எனத் தெரிந்து கொண்டிருக்கலாமே)என்று நான் ஆசைப்பட்டேன்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல: புகாரி 3192, 7418

இந்த இறை வசனமும், ஹதீஸ்களும் எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அர்ஷ் என்பது ஒரு திடப் பொருள் என்பதை விளக்குகின்றன.

அர்ஷின் காலைப் பிடிக்கின்ற மூஸா நபி

வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.

அல்குர்ஆன் 69:17

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்த போது யூதர் ஒருவர் வந்து, “அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்து விட்டார்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “(அந்தத் தோழர்) யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அன்சாரிகளில் ஒருவர்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அவரைக் கூப்பிடுங்கள்என்று உத்தரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், “இவரை நீர் அடித்தீரா?” என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, “இவர் “மனிதர்கள் அனைவரையும் விட மூசாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!என்று கடைவீதியில் ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். உடனே நான், “தீயவனே! முஹம்மதை விடவா (மூசா மேன்மை வாய்ந்தவர்)?’ என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரது முகத்தில் அறைந்து விட்டேன்என்று கூறினார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் போசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூசாவை அர்ஷின் கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். “மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்ட போது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு) விட்டதா என்று எனக்குத் தெரியாதுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 2412

இந்த இறை வசனம், ஹதீஸைப் பார்த்த பின்பும் யாரேனும் “அர்ஷில் அமர்ந்தான்’ என்பதற்கு மாற்றுப் பொருள் கொடுக்க முடியுமா? அப்படி மாற்றுப் பொருள் கொடுத்தால் அவர் வழிகேட்டில் இருக்கிறார் என்பதைத் தவிர வேறில்லை.

அர்ஷைச் சுமப்போரின் அற்புத ஆற்றல்

அர்ஷைச் சுமக்கக் கூடிய அல்லாஹ்வின் மலக்குகளில் ஒரு மலக்கைப் பற்றி அறிவிக்குமாறு எனக்கு அனுமதியளிக்கப்பட்டது. அவருடைய காது சோணையிலிருந்து தோள் புஜம் வரை உள்ள அளவு எழுநூறு ஆண்டு தூரமாகும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: அபூதாவூத் 4102

அல்லாஹ்வின் மகிமைக(ளைக் கூறும் வார்த்தைக)ளில், நீங்கள் கூறுகின்ற, “சுப்ஹானல்லாஹி லாயிலாஹ இல்லல்லாஹு அல்ஹம்துலில்லாஹ்ஆகிய திக்ருகள் அர்ஷைச் சுற்றி வலம் வருகின்றன. அவற்றிற்கு தேனீக்களைப் போன்ற ரீங்காரம் இருக்கின்றது. திக்ருகள் கூறியவரின் பெயரை அவை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. தன்னை இவ்வாறு தொடர்ந்து கூறிக் கொண்டிருப்பவர்கள் இருக்க வேண்டும் என்று உங்களில் ஒருவர் விரும்பாமல் இருப்பாரா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: இப்னுமாஜா 3799

வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, அர்ஷைச் சுற்றி வருவதை நீர் காண்பீர். அவர்களுக்கிடையே நியாயத் தீர்ப்பு வழங்கப்படும். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறப்படும்.

அல்குர்ஆன் 39:75

அர்ஷைச் சுமப்போரும், அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர். எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய். எனவே மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையை விட்டுக் காப்பாயாக! என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர்.

அல்குர்ஆன் 40:7

இவை அனைத்தும் அர்ஷ் என்பது மிகப் பெரிய பரிமாணத்தைக் கொண்ட பிரம்மாண்ட ஆசனம் என்பதையும், வானவர்களும் மனிதர்களும் செய்கின்ற திக்ருகள் அதனைச் சுற்றி வலம் வருகின்றன என்பதையும், இத்தகைய மகத்தான அர்ஷின் மீது தான் அல்லாஹ் அமர்ந்திருக்கின்றான் என்பதையும் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன.

தூணிலும் இல்லை, துரும்பிலும் இல்லை

நாம் இது வரை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களிலிருந்து, அல்லாஹ் வானத்திற்கு மேல் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்று தெளிவாக விளங்கிக் கொள்கிறோம். இது தான் ஒரு முஸ்லிமுடைய நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

இன்று தமிழகத்தில் அரபி மதரஸாக்களில் படித்த ஆலிம்கள் கூட, “அல்லாஹ் தூணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்’ என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். பாமர மக்கள் இந்த நம்பிக்கையில் இருந்தால் அது ஆச்சரியமில்லை. ஆனால் ஆலிம்கள் இப்படி இருப்பது தான் ஆச்சரியமாகும். அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற குர்ஆன் வசனங்களை இந்த ஆலிம்கள் படிக்கிறார்கள். ஹதீஸ்களைப் பார்க்கின்றார்கள். அதற்குப் பிறகும் இவர்களிடம் எந்த மாற்றமுமில்லை.

இதற்கு அடிப்படைக் காரணம், அல்லாஹ்வுக்கு உருவமில்லை, அவன் அர்ஷில் இல்லை, தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்ற நம்பிக்கை இவர்களிடம் ஆழமாகப் பதிந்திருப்பது தான். இவர்கள் ஏற்கனவே ஒரு முடிவு எடுத்து வைத்து விட்டனர். இப்படிச் சொன்னால் தான் அவ்லியாக்களிடம் அல்லாஹ் இருக்கிறான்; அதனால் அவ்லியாக்களும் அல்லாஹ்வும் ஒன்று என்ற வழிகேட்டை நிறுவ முடியும். அதனால் குர்ஆன் ஹதீசுக்குத் தக்க தாங்கள் வளைவதற்குப் பதிலாக, தங்களுக்குத் தக்க குர்ஆன், ஹதீஸை இவர்கள் வளைக்கிறார்கள். தாங்களும் வழிகெட்டு, பிறரையும் வழிகெடுக்கிறார்கள். மக்களை நரகப் படுகுழியில் தள்ளுகிறார்கள். அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

எனவே இஸ்லாத்தின் சரியான கடவுள் கொள்கையின்படி அல்லாஹ் வானத்தின் மேலே அர்ஷில் அமர்ந்திருக்கிறான். அல்லாஹ் தூணிலும் இல்லை, துரும்பிலும் இல்லை என்பது தான் சரியான கடவுள் கொள்கையாகும். நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

இங்கே ஒரு கேள்வி எழலாம். அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்றால், அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான், அல்லாஹ் அவர்களுடன் இருக்கிறான் என்றெல்லாம் வருகிறதே! அல்லாஹ் எங்கும் எதிலும் இருக்கிறான் என்பதற்கு இது ஆதாரமாக அமைகின்றதே! என்பது தான் அந்தக் கேள்வியாகும். இதற்கு விடை காண்பதற்கு முன்னால் அந்த வசனங்களைப் பார்ப்போம்.

அவர்கள் மக்களிடம் மறைத்து விடலாம். அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. இறைவனுக்குப் பிடிக்காத பேச்சுக்களை இரவில் பேசி அவர்கள் சதி செய்த போது அவன் அவர்களுடன் இருந்தான். அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:108

வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

அல்குர்ஆன் 57:4

வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? மூவரின் இரகசியத்தில் அவன் நான்காமவனாக இல்லாமல் இல்லை. ஐவரில் அவன் ஆறாமவனாக இல்லாமல் இல்லை. இதை விடக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுடன் அவன் இல்லாமல் இருப்பதில்லை. பின்னர் கியாமத் நாளில் அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 58:7

உங்களுடன், அவர்களுடன் என்ற வார்த்தையில் இடம் பெறுகின்ற, “மஅ’ என்ற அரபிப் பதத்திற்கு இடைச் சொல்லுக்குரிய அர்த்தமாகும். “மஅ’ என்ற இடைச் சொல்லுக்கு, உடன் என்று பொருள் கொள்ளலாம். உதாரணமாக, உங்களுடன், உங்களோடு என்ற பதத்தில் வரும்.

முதலில் தமிழில் இதற்குரிய விளக்கத்தைப் பார்ப்போம்.

ஒரு பேருந்தில் இரண்டு இருக்கைகளில் அடுத்தடுத்து நானும் என் மகனும் இருக்கிறோம் என்றால் அதை, “நான் என் மகனுடன் அமர்ந்திருக்கிறேன்’ என்று சொல்லலாம். இப்போது, உடன் என்பது நேரடி அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

இதே வார்த்தைக்கு கருத்து அர்த்தம், இலக்கிய அர்த்தமும் செய்யப்படும்.

ரபீக் என்பவர் ஒரு பகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். அவருக்கு எதிராக இன்னொருவர் காவல்துறையில் புகார் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். புகார் செய்யச் செல்பவரிடம் பொது மக்கள், “அவருக்கு எதிராகவா புகார் கொடுக்கப் போகிறாய்? காவல்துறை அவரோடு இருக்கிறது. ஆளுங்கட்சியும் அதிகார வர்க்கமும் அவருடன் இருக்கிறது’ என்று சொல்கின்றனர். இப்போது இந்த இடத்தில், அவருடன் – அவரோடு என்பதில் உடன் என்ற இடைச் சொல், இலக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் கருத்து என்ன? ரபீக்குக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ஆளுங்கட்சி அவருக்குத் துணை நிற்கும். காவல்துறை அவருக்கு உதவியாக இருக்கும். அதிகார வர்க்கம் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பது தான் இதன் அர்த்தம்.

“உடன்’ என்ற இடைச் சொல் இங்கு இலக்கியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைப் போன்று தான் அரபியில், “மஅ’ என்ற இடைச் சொல் இரண்டு விதமான அர்த்தங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.

மேலே நாம் பார்த்த இந்த வசனங்களில், அல்லாஹ் உடன் இருக்கிறான் என்றால், அல்லாஹ் அவருக்கு உதவியாக இருக்கிறான்; கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பது தான் அதன் பொருள்.

2:153, 2:249, 8:19, 9:40, 9:123, 16:127 ஆகிய வசனங்களில் “மஅ’ என்ற இடைச் சொல், “அல்லாஹ்வுடைய உதவி இருக்கின்றது’ என்ற கருத்து அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகின்றது.

2:14, 7:71, 18:28, 48:29 ஆகிய வசனங்களில் ‘மஅ –  உடன்’ என்பது நேரடி அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாத குழப்பவாதிகள், இறைவன் எங்கும் இருக்கிறான்; எதிலும் இருக்கிறான் என்ற குஃப்ரான கொள்கைக்குச் சென்று விட்டனர். அத்வைதம் என்ற அமிலக் கருத்தையும் மார்க்கத்தில் திணித்து விட்டனர். இப்படி ஓர் அர்த்தத்தை எல்லா இடத்திலும் கொடுக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள ஹதீஸில் ஒரு உதாரணத்தைக் காணலாம்.

நபித் தோழர்கள் எங்கும் இருக்கிறார்களா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து திரும்பி (வருகையில்) மதீனாவை நெருங்கிய போது, “மதீனாவில் மக்கள் சிலர் இருக்கின்றனர். (அவர்களால் உங்களுடன் புனிதப் போரில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும்) நீங்கள் செல்லும் பாதை, அல்லது நீங்கள் கடந்து செல்லும் பள்ளத்தாக்கு எதுவாயினும் அவர்களும் உங்களுடன் இருக்கின்றார்கள்என்று சொன்னார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் மதீனாவில் தானே இருக்கிறார்கள்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் மதீனாவில் தான் இருக்கின்றார்கள்; அத்தியாவசியக் காரணங்கள் தாம் அவர்களை (இந்தப் புனிதப் போரில் கலந்து கொள்ள விடாமல்) தடுத்து விட்டனஎன்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 4423

“உடன்’ என்பதற்கு எல்லா இடத்திலும் நேரடி அர்த்தம் தான் கொடுக்க வேண்டும் என்றால் இந்த ஹதீஸின்படி நபித்தோழர்கள் எங்கும் இருக்கிறார்கள் என்ற மோசமான கருத்து வந்து விடும்.

நபி (ஸல்) அவர்களுடன் வராத ஸஹாபாக்களும், நபியவர்களுடன் தான் இருந்தார்கள் என்ற கருத்து வந்து விடும். எனவே இந்த இடத்தில் “மஅ’ என்பதற்கு நேரடி அர்த்தம் கொடுக்க முடியாது. இலக்கிய அர்த்தம் தான் கொடுக்க வேண்டும்.

போருக்கு வர வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார்கள்; ஆனால் நோய், வாகனமின்மை போன்ற காரணங்களால் வர முடியாமல் ஆகி விட்டார்கள். அவர்கள் போருக்கு வராமல் இருந்தாலும் அவர்களுக்கும் உங்களைப் போன்ற கூலி உண்டு என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

எனவே, எந்த இடத்தில் இலக்கிய அர்த்தம் கொடுக்க வேண்டுமோ அந்த இடத்தில் இலக்கிய அர்த்தம் தான் கொடுக்க வேண்டும். எந்த இடத்தில் நேரடிப் பொருள் கொடுக்க வேண்டுமோ அந்த இடத்தில் நேரடிப் பொருள் கொடுக்க வேண்டும். இல்லையேல் அது வழிகேட்டில் கொண்டு போய் விட்டு விடும்.

மேற்கண்ட குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் கண்ட விளக்கங்களின் படி, வல்ல ரஹ்மான் அர்ஷில் அமர்ந்திருக்கின்றான்; அவன் அங்கிருந்து வருவதில்லை. அல்லாஹ் மனிதர்களுடன் இருக்கிறான் என்று கூறப்படுவதன் பொருள் அவனுடைய கண்காணிப்பு, உதவி, பாதுகாவல் அவர்களுடன் இருக்கிறது என்பதாகும்.

அத்வைதத்திற்கு ஆப்பு

இங்கே அத்வைதக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாக முன்வைக்கும் ஒரு ஹதீஸையும் பார்ப்பது பொருத்தமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்து விடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6502

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும் போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களை விடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7405

இதை ஓர் உதாரணத்துடன் கூறுவார்கள். நெருப்பில் விழுந்த இரும்பு எப்படி நெருப்பாக மாறி விடுகின்றதோ அது போல் அடியான் அல்லாஹ்விடம் கலந்து விடுகின்றான். எனவே இருவரும் ஒன்றாகி விடுகின்றனர் என்பது இவர்களின் வாதம். இந்த வாதம் அறிவுக்குப் பொருத்தமற்ற வாதமாகும்.

அடியான் ஒரு ஜான் நெருங்கி வந்தால் அல்லாஹ் ஒரு முழம் நெருங்குகிறான் என்பதற்கு நேரடிப் பொருள் கொடுத்தால் அது அர்த்தமில்லாமல் போய் விடும். ஏனென்றால் ஒரு ஜான் நெருங்கினால் அதற்குப் பின்னால் இடைவெளி சுருங்கி விடும். அதற்குப் பின்னால் ஒரு முழம் நெருங்குவது என்பது பொருத்தமாகாது. அப்படியே நெருங்கினாலும் இரண்டும் ஒன்றாகக் கலக்க முடியாது. ஒன்றையொன்று தாண்டித் தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே இது இலக்கியமாகச் சொல்லப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

செவியாக, கண்ணாக, கையாக மாறுவேன் என்று கூறுவதன் மூலம் அல்லாஹ், அடியானாக மாட்டான். அடியான், அல்லாஹ் ஆகவும் மாட்டான். அந்த ஹதீஸின் பொருள் என்ன என்பதை, “அடியான் கேட்டால் தருவேன்’ என்ற வாசகம் தெளிவுபடுத்தி விடுகின்றது.

இரண்டறக் கலந்து விட்டால், அங்கு கேட்க வேண்டியது என்ன இருக்கிறது? கொடுக்க வேண்டியது என்ன இருக்கின்றது?

அப்படியானால் இறைநேசர் இறந்து விட்டால் அல்லாஹ் இறந்து விடுகிறான் என்று பொருளா? அடியானை அடக்கம் செய்தால் அல்லாஹ்வை அடக்கம் செய்வதாக அர்த்தமா? நவூதுபில்லாஹ். இது போன்ற வழிகெட்ட சிந்தனைகளை விட்டும் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

ஒரு அடியான் வணக்க வழிபாடுகளின் மூலம் அல்லாஹ்வை நெருங்கும் போது அந்த அடியான் மீது அல்லாஹ்வின் அன்பு அதிகமாகி விடுகின்றது என்ற அர்த்தத்தைத் தவிர வேறு அர்த்தம் இதற்கு இருக்க முடியாது. அதனால் தான், அவன் கேட்டால் கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே அல்லாஹ்வும் அடியானும் ஒன்றாகிறார்கள் என்ற அத்வைதக் கொள்கை தெளிவான இறை மறுப்பு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் கேடு கெட்ட அத்வைதக் கொள்கையுடையவர்களுக்குப் புரியும் வகையில் மற்றொரு ஹதீஸைப் பார்க்கலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), “ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?” என்று கேட்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்என்று கூறுவான்.

மேலும் அல்லாஹ், “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லைஎன்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்என்று கூறுவான்.

மேலும் “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லைஎன்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4661

அவ்லியாக்கள் மட்டுமல்ல! பிச்சைக்காரன் கூட இப்போது அல்லாஹ்வாகி விடுகிறான். அப்படியானால் பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டுவார்களா?

————————————————————————————————————————————————

இறைவனைக் காண முடியுமா?

இதுவரை, அல்லாஹ்வுக்கு முகம் இருக்கின்றது; கண்கள் இருக்கின்றன; காதுகள் இருக்கின்றன; கைகள் இருக்கின்றன; கால்கள் இருக்கின்றன; அதனால் ஏகனான அவனுக்கென்று திருவுருவம் இருக்கின்றது. அவன் தகுதிக்கேற்ப அர்ஷில் அமர்ந்திருக்கின்றான். அவன் ஒரு போதும் அடியானுடன் ஒன்றாக மாட்டான். அடியானும் அல்லாஹ்வுடன் கலக்க முடியாது போன்ற விபரங்களைப் பார்த்தோம். இத்தகைய தன்மைகளைக் கொண்ட அல்லாஹ்வை நாம் பார்க்க முடியுமா? எங்கு பார்க்கலாம்? நிச்சயமாக மறுமையில் தான் அவனைப் பார்க்க முடியும். இதை நாம் குர்ஆன், ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது, “என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்எனக் கூறினார். அதற்கு (இறைவன்), “என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது, “நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்எனக் கூறினார்.

அல்குர்ஆன் 7:143

இந்த வசனத்தில், மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்க வேண்டும் என்று கேட்ட போது, அவர்களுக்கு அல்லாஹ் மறுப்புத் தெரிவித்து விடுகிறான். “என்னை நீர் பார்க்கவே முடியாது’ என்று கூறி விடுகின்றான். மூஸா (அலை) அவர்களால் அல்லாஹ்வைப் பார்க்க முடியவில்லை என்பதைத் திருக்குர்ஆன் நமக்கு விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், தாம் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தெளிவாக அறிவித்து விட்டார்கள்.

மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் “அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது நேரில்) பார்த்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்லி விட்டார்என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) “கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்எனும் (6:103ஆவது) வசனத்தையும், “எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லைஎனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். மேலும், “எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார்என்று கூறி விட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) “எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லைஎனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள். மேலும், “எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்து விட்டார்கள்என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார்என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) “தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்…எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். “மாறாக, முஹம்மது (ஸல்) அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 4855

இந்த ஹதீஸ் முஸ்லிமில் இன்னும் சற்று விளக்கமாக இடம்பெற்றுள்ளது.

நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) “அபூ ஆயிஷாவே, மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார் என்று கூறினார்கள். அவை எவை? என்று கேட்டேன் அதற்கு அவர்கள், “யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்என்று சொன்னார்கள். உடனே சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே, நிதானித்துக் கொள்ளுங்கள். அவசரப்படாதீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்” (81:23) என்றும் “அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்” (53:13) என்றும் கூறவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.

இந்தச் சமுதாயத்தில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான் தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப் பெற்றுள்ள (உண்மைத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறேப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரம்மாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்ததுஎன்று கூறினார்கள்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள்.

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (6:103)

அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.” (42:51)

(பின்னர் தொடர்ந்து மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்)

அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: முஸ்லிம் 287

இந்த ஹதீஸ்கள் மூலம் நபி (ஸல்) அவர்கள் மிஃராஜின் போதும் மற்ற சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்பது தெளிவாகின்றது.

இறைத்தூதர்களுக்கே இவ்வுலகில் அல்லாஹ்வைப் பார்க்கும் வாய்ப்புக் கிடையாது எனும் போது மற்றவர்களுக்கு நிச்சயமாக அந்த வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகின்றது. இருப்பினும் யாராலும் இவ்வுலகில் இறைவனைக் காண முடியாது என்று முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ் தெளிவுபடுத்தி விடுகின்றது.

உங்களில் எவரும் அவர் இறக்காத வரை தன் இறைவனைப் பார்க்க முடியாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5215

இந்த ஹதீஸ் சந்தேகமில்லாமல் அல்லாஹ்வை இந்தவுலகில் காண முடியாது என்பதைத் தெரிவிக்கின்றது.

மறுமையில் இறைவனைக் காண முடியும் என திருக்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

அல்குர்ஆன் 75:21, 22

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

நபி (ஸல்) அவர்களும் அல்லாஹ்வைக் காண்பது தொடர்பாக விரிவான விளக்கத்தைத் தருகிறார்கள்.

முன்னவன் அல்லாஹ்வின் மூன்று தோற்றங்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர்  “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம் (காண்பீர்கள்); மேகமே இல்லாத தெளிவான நண்பகல் நேரத்தில் சூரியனைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு சிரமப்படுவீர்களா? மேகமே இல்லாத தெளிவான பௌர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதற்கு நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள் “இல்லை, அல்லாஹ்வின் தூதரே!என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே மறுமை நாளில் – சுபிட்சமும் உயர்வும் மிக்க – அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள். மறுமை நாள் ஏற்படும்போது அழைப்பாளர் ஒருவர் “ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகத்தில்) தாம் வழிபட்டு வந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்என்று அழைப்பு விடுப்பார். அப்போது, அல்லாஹ்வை விடுத்து பொய்த் தெய்வங்களையும் சிலைகளையும் வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் கூட எஞ்சாமல் அனைவரும் நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை வழிபட்டுக் கொண்டிருந்த நல்லவர்களும் (அல்லாஹ்வை வழிபட்டுப் பாவங்களும் புரிந்து வந்த) பாவிகளும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்களும் தாம் எஞ்சியிருப்பர்.

அப்போது (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களிடம், “நீங்கள் எதை  வழிபட்டு வந்தீர்கள்?” என்று கேட்கப்படும். அவர்கள், “அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை நாங்கள் வழிபட்டுக் கொண்டிருந்தோம்என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லைஎன்று கூறப்படும். மேலும், “இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையை)ச் சுட்டிக் காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போன்று காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

பிறகு, கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, “நீங்கள் எதை வழிபட்டுக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) வழிபட்டுக் கொண்டிருந்தோம்என்று கூறுவர். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லைஎன்று சொல்லப்படும். மேலும், அவர்களைப் பார்த்து, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!என்று (யூதர்கள் கூறியதைப் போன்றே) கூறுவார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையை)ச் சுட்டிக் காட்டப்படும். பிறகு (அந்தத் திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போன்று காட்சி தரும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

இறுதியில் அல்லாஹ்வை வழிபட்டு(க்கொண்டு நன்மைகளும் புரிந்து) வந்த நல்லோர் மற்றும் (அல்லாஹ்வையும் வழிபட்டுக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். அவர்கள் ஏற்கனவே (அல்லது முதலில்) பார்த்த தோற்றத்திற்கு நெருக்கமான (வேறு) ஒரு தோற்றத்தில் தூயவனும் உயர்ந்தோனுமாகிய அகிலத்தாரின் இரட்சகன் அவர்களிடம் வருவான். அப்போது “நீங்கள் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றார்களே!என்று அவன் கேட்பான். அவர்கள், “எங்கள் இறைவா! உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின் தொடர்வோம்?)” என்று பதிலளிப்பார்கள்.

அப்போது இறைவன், “நானே உங்கள் இறைவன்என்று கூறுவான். (அவர்களால் உறுதிசெய்ய முடியாத தோற்றத்தில் அப்போது அவன் இருப்பதால்) அதற்கு அவர்கள், “உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம்; நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம்என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவார்கள். (அந்தச் சோதனையான கட்டத்தில்) அவர்களில் சிலர் பிறழ்ந்துவிடும் அளவுக்குப் போய் விடுவார்கள். அப்போது இறைவன், “அவனை இனங்கண்டு கொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள் “ஆம் (இறைவனின் கணைக்கால் தான் அடையாளம்)என்று கூறுவார்கள். உடனே (இறைவனின்) கணைக்காலை விட்டும் (திரை) விலக்கப்படும். அப்போது (உலகத்தில்) மனப்பூர்வமமாக அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து கொண்டிருந்தவர் யாரோ அவர் சிரம்பணிய இறைவன் அனுமதிப்பான். தற்காப்புக்காகவோ, பாராட்டுக்காகவோ சிரம் பணிந்து கொண்டிருந்தவருடைய முதுகை (நெடும் பலகையைப் போன்று) ஒரே நீட்டெலும்பாக அல்லாஹ் ஆக்கி விடுவான். அவர் சிரம்பணிய முற்படும் போதெல்லாம் மல்லாந்து விழுந்து விடுவார். (அவரால் சிரம் பணிய முடியாது.)

பின்னர் அவர்கள் தம் தலையை உயர்த்துவார்கள். அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்தில் இறைவன் காட்சியளித்து “நானே உங்கள் இறைவன்என்று கூறுவான். அதற்கு அவர்கள் “நீயே எங்கள் இறைவன்என்று கூறுவார்கள். பிறகு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும்; (பாவம் புரிந்த இறை நம்பிக்கையாளர்களுக்காகப்) பரிந்துரை செய்ய அனுமதி கிடைக்கும். அப்போது மக்கள், “அல்லாஹ்வே! காப்பாற்று; காப்பாற்றுஎன்று பிரார்த்திப்பார்கள்…. (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 269

முதல் தோற்றம்

இந்த ஹதீஸில் “முண்டியடிக்காமல் காண்பீர்கள்’ என்பதிலிருந்து, முதலிலேயே ஒரு தோற்றத்தில் அல்லாஹ் தோன்றி காட்சியளிக்கிறான். அந்தக் காட்சி தான் இறை நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் பதிந்து விடுகின்றது.

இரண்டாவது தோற்றம்

இதற்குப் பிறகு இரண்டாவது தடவையாக, முதல் தடவைக்குச் சற்று வித்தியாசமான வேறொரு தோற்றத்தில் தோன்றுகிறான். இதை நாம், “அவர்கள் ஏற்கனவே (அல்லது முதலில்) பார்த்த தோற்றத்திற்கு நெருக்கமான (வேறு) ஒரு தோற்றத்தில் தூயவனும் உயர்ந்தோனுமாகிய அகிலத்தாரின் இரட்சகன் அவர்களிடம் வருவான்” என்பதிலிருந்து இதை விளங்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு அவன் முதல் தோற்றத்திற்கு சற்று நெருக்கமான வேறு தோற்றத்தில் வருவதால் தான் இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகின்றார்கள்; தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றார்கள். அப்போது தான் அல்லாஹ், அவர்களிடம் அடையாளத்தையும் ஆதாரத்தையும் கேட்கிறான். அவர்களும் பதில் சொல்கின்றார்கள்.

“ஏற்கனவே பார்த்த’ என்று இந்த ஹதீஸின் வாக்கியப் பின்னணி மூலம் அல்லாஹ், இரண்டாவது தடவையாகக் காட்சியளிக்கிறான் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளங்கிக் கொள்ளலாம். இதற்குப் பின்னால் வருகின்ற வாக்கிய அமைப்பு இன்னும் இதைத் தெளிவாக விளக்குகின்றது.

மூன்றாவது தோற்றம்

பின்னர், “அவர்கள் தம் தலையை உயர்த்துவார்கள்; அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்திற்கு இறைவன் திரும்பி, “நானே உங்கள் இறைவன்” என்று கூறுவான். அதற்கு அவர்கள், “நீயே எங்கள் இறைவன்” என்று கூறுவார்கள்.

அதாவது இரண்டாவது தடவையாகத் தோன்றுவதற்கு முன்பாக, முதலில் ஒரு தடவை தோற்றமளித்து விட்டான் என்பதை இந்த வாசகமும் தெளிவாக நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது. மொத்தத்தில் அல்லாஹ் மூன்று முறை தோற்றமளிக்கின்றான் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

மறுமையில் அல்லாஹ் காட்சியளிப்பது தொடர்பான இந்த ஹதீஸ் புகாரியில் 806, 6574, 7438, 4581, 7440 ஆகிய எண்களிலும், முஸ்லிமில் 267, 269 ஆகிய எண்களிலும் பதிவாகியுள்ளது. ஆனால் முஸ்லிமில் பதிவாகியுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் இம்மூன்று காட்சிகள் விளக்கமாக இடம் பெற்றிருப்பதால் இதை நாம் இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

இந்த ஹதீஸ்களில் புகாரி 4851, 7440 ஹதீஸ்களிலும், முஸ்லிம் 269 ஹதீஸிலும், “அல்லதீ ரஅவ்ஹு – முதலில் பார்த்த தோற்றத்தில்’ என்று இடம் பெறுகின்றது. புகாரி, முஸ்லிமின் தமிழாக்கங்களில் (அவனின் தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றத்தில்….” என்று இதற்கு மொழியாக்கம் செய்கின்றனர்.

அதாவது, “பார்த்த’ என்று மொழிபெயர்ப்பதற்குப் பதிலாக, “உள்ளத்தில் நினைத்திருந்த’ என்று மொழிபெயர்த்துள்ளனர். இப்படி இவர்கள் சொல்வதற்குரிய காரணமே இந்த ஹதீஸ்களில் அல்லாஹ்வின் முதல் தோற்றம் பற்றி வெளிப்படையாக இடம் பெறவில்லை என்பது தான். அவ்வாறு இடம்பெறவில்லை என்பது உண்மை தான். ஆனால் அதை முஸ்லிமில் இடம் பெறும் 269வது ஹதீஸ் நன்கு தெளிவாக விளக்கி விடுகின்றது.

“முதல் தோற்றத்திற்குத் திரும்பி” என்ற வாசகத்திலிருந்து, அல்லாஹ் மூன்று முறை தோற்றமளிக்கின்றான் என்பதைத் தெளிவாக்கி விடுகின்றது. எனவே, “உள்ளத்தில் நினைத்திருந்த…” என்று அர்த்தம் செய்வது தேவையற்றதாகி விடுகின்றது.

இங்கு முக்கியமான இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

  1. இந்த ஹதீஸில் “ரஅவ்ஹு’ என்பது இரண்டு இடங்களில் வருகின்றது. முதலில் வருகின்ற இந்த வார்த்தைக்கு, ‘உள்ளத்தில் கற்பனை செய்திருந்த..’ என்று அர்த்தம் கொடுக்கின்றனர். இரண்டாவது இடம் பெறும் “ரஅவ்ஹு’ என்ற வார்த்தைக்கு பார்த்தல் என்று அர்த்தம் செய்கின்றனர். ஒரே வார்த்தைக்கு, முதலில், உள்ளத்தில் கற்பனை செய்திருந்த’ என்றும், “பார்த்த’ என்றும் அர்த்தம் செய்வது ஒன்றுக்கொன்று முரண் என்பதைப் புரியத் தவறி விடடனர். இந்த மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும் போதே இந்த முரண்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.

எனவே, “ரஅவ்ஹு’ என்பதற்கு இரண்டு இடங்களிலும், “பார்த்த’ என்று அர்த்தம் கொடுத்து விட்டால் ஒரு முரண்பாடும் வராது. மாறாக இந்த அர்த்தம் அதற்கு விளக்கமாகவும் அமைந்து விடுகின்றது.

  1. மூன்றாவது தோற்றம் என்ற தலைப்பின் கீழ், “அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்திற்கு இறைவன் திரும்பி…’ என்று மொழிபெயர்த்துள்ளோம். இவ்வாறு மொழிபெயர்ப்பதற்குக் காரணம், இந்த ஹதீஸின் மூலத்தில், “தஹவ்வல’ என்ற அரபி வார்த்தை இடம் பெறுகின்றது. இதற்கு, மாறுதல், திரும்புதல் என்று பொருள்.

முஸ்லிம் தழிழாக்க நூல்களில், “முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்தில்” என்று தான் இடம் பெறுகின்றது. “தஹவ்வல’ என்பதற்குரிய, மாறுதல், திரும்புதல் என்ற அர்த்தம் இதற்குக் கொடுக்கப்படவில்லை என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருமுகம் காணும் அருட்பாக்கியம்

இவ்வாறு அல்லாஹ்வை மூன்று தடவை மக்கள் மஹ்ஷர் மைதானத்தில் காண்பார்கள். அல்லாஹ்வுடைய இந்தக் காட்சி இத்துடன் நின்று விடுவதில்லை. அந்தக் காட்சி சுவனத்திலும் தொடரும். இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வைக் காண்கின்ற அந்த மகிழ்ச்சியில் திளைத்து இருப்பார்கள்.

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன் 75:22, 23)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்து விடும் போது (அவர்களிடம்) அல்லாஹ், “உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள் “(இறைவா!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)?” என்று கேட்பார்கள்.

அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக் காண்பதை விட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.

அறிவிப்பவர்: சுஹைப் (ரலி), நூல்: முஸ்லிம் 266

நபி (ஸல்) அவர்கள், “நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமாகவும் உண்டுஎன்ற (10:26) வசனத்தை ஓதினார்கள். “சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்ததும், “சுவனவாசிகளே! (இதுவரை) உங்களுக்கு அளிக்கப்படாத ஒரு வாக்குறுதி உங்களுக்குக் காத்திருக்கின்றதுஎன்று அழைப்பு விடுக்கப்படுவர். “அவன் எங்களது முகங்களை வெண்மையாக்கி, எங்களை சுவனத்தில் நுழையச் செய்யவில்லையா?” என்று அவர்கள் பதிலளிப்பார்கள். மீண்டும், “(இதுவரை) அளிக்கப்படாத வாக்குறுதி ஒன்று உங்களுக்குக் காத்திருக்கின்றதுஎன்று அவர்களிடம் கூறப்படும். அவர்கள் அதே போன்று பதிலளிப்பார்கள். அப்போது, பாக்கியமிக்கவனும் உயர்ந்தோனுமான அவர்களது இறைவன் அவர்களுக்குத் தோன்றுவான். இது தான், “நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமாகவும் உண்டுஎன்ற (10:26) அல்லாஹ்வின் சொல்லாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “பாக்கியமிக்கவனும், உயர்ந்தோனுமாகிய தங்களின் இறைவனுடைய முகத்தைப் பார்ப்பதற்கு வாக்களிக்கப்படுகின்றதுஎன்று விளக்கமளிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்: சுஹைப் (ரலி), நூல்: முஸ்னத் அல்பஸ்ஸார் 328

சுவனவாசிகள், சுவனத்திற்குள் நுழைந்ததும், “சுவனவாசிகளே! அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு ஒரு வாக்குறுதி காத்திருக்கின்றது. அதை அவன் அவசியம் உங்களுக்கு நிறைவேற்றுவான்என்று ஓர் அழைப்பாளர் அழைப்பு விடுப்பார். “அவன் எங்கள் முகங்களை வெண்மையாக்க வில்லையா? எங்களுடைய எடைகளைக் கனமாக்கி, எங்களை சுவனத்தில் நுழைவித்து நரகத்திலிருந்து காக்கவில்லையா?” என்று அவர்கள் கேட்பார்கள். அப்போது அவன் திரையை விலக்குவான். அவர்கள் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த தங்களுடைய இறைவனின் முகத்தை அவர்கள் பார்ப்பார்கள். அவனைப் பார்ப்பதை விட வேறெதுவும் அவர்களுக்கு விருப்பமானதாகவும் கண்களுக்குக் குளிர்ச்சியானதாகவும் இருக்காது. அதிகம் என்பது இது தான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: சுஹைப் (ரலி), நூல்: அர்ருஃயித்து லித்தாரகுத்னீ 112

இந்த ஹதீஸ்களிலும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் திருமுகத்தை சுவனத்தில் காண்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.

நேரடியாகக் காணுதல்

எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் எந்தவிதமான திரையும் தடையும் இருக்காது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் இறைவனை (மறுமையில்) கண்கூடாகக் காண்பீர்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 7435

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமை நாளில் தனித் தனியாகப்) பேசாமலிருக்க மாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்; தடுக்கின்ற திரையும் இருக்காது.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி 7443

யாருக்கு இந்தப் பாக்கியம்?

அல்லாஹ்வைக் காணும் இந்த மகத்தான பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கவில்லையோ அவர்களுக்குத் தான் இந்த அருட்பாக்கியம் கிடைக்கும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாக அறிவித்து விடுகின்றது.

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 18:110)

இணை வைக்காமல் இருந்தால் மட்டும் போதாது. நல்லமல் செய்பவர்களாகவும் தொழுகைகளைப் பேணித் தொழுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

(முழு நிலவுள்ள ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்து கொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழுநிலவைக் கூர்ந்து பார்த்தபடி, “இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் வெளிவேலைகள் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்என்று கூறிவிட்டு “சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள்எனும் (50:39ஆவது) இறை வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 554, 573, 4851, 7434

இந்த இனிய இறை தரிசனத்தைக் கேட்டுப் பிரார்த்திக்கவும் வேண்டும்.  இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரார்த்தனையையும் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

அம்மார் பின் யாஸிர் எங்களுக்குத் தொழுவித்தார்கள். மக்களில் ஒருவர், “நீங்கள் தொழுகையைச் சுருக்கி விட்டீர்கள்என்று அவரிடம் சொன்னார். “நான் இவ்வாறு சுருக்கித் தொழுதாலும் அல்லாஹ்வின் தூதரிடம் செவியுற்ற துஆக்களைக் கொண்டு அந்தத் தொழுகையில் துஆச் செய்தேன்என்று பதில் சொன்னார். அவர் எழுந்ததும் அவரை ஒருவர் பின்தொடர்ந்து அவரிடம் அந்த துஆ பற்றிக் கேட்டார். பிறகு வந்து அதை மக்களிடம் அறிவித்தார்.

அல்லாஹும்ம பி இல்மிகல் கைப வ குத்ரத்திக அலல் கல்கி, அஹ்யினி மாஅலிம்தல் ஹயாத கைரன்லீ வதவஃப்பனீ இதா அலிம்தல் வஃபாத கைரன்லீ அல்லாஹும்ம வஅஸ்அலுக கஷ்யதக ஃபில் கைபி வஷ்ஷஹாததீ. வஅஸ்அலுக கலிமதல் ஹக்கி ஃபிர்ரிளா வல் களபி வஅஸ்அலுகல் கஸ்த ஃபிஃபக்ரி வல்கினா வஅஸ்அலுக நயீமன் லாயன்ஃபது அ வஅஸ்அலுக குர்ரதி அய்னின் லா தன்கதிவு வ அஸ்அலுகர் ரிளாஅ பஃதல் களாயி அ அஸ்அலுக பர்தல் ஈஷி பஃதல் மவ்தி அ அஸ்அலுக லத்தத்தன் நள்ரி இலா வஜ்ஹிக வஷ்ஷவ்க இலா லிகாயிக ஃபீ கைரி ளர்ராஅ முளிர்ரத்தின் வலா ஃபித்னதின் முளில்லதின் அல்லாஹும்ம ஸ(ழ)ய்யின்னா பி ஸீ(ழ)னதில் ஈமானி வஜ்அல்னா ஹுதாத்தன் முஹ்ததீன்

பொருள்: மறைவானதை அறிகின்ற உன் ஞானத்தைக் கொண்டும், படைப்பின் மீதுள்ள உன் ஆற்றலைக் கொண்டும், (எனது) வாழ்வு நன்மை என்று நீ அறிந்திருக்கின்ற வரை என்னை வாழ வை! மரணம் எனக்கு நன்மை என்று நீ அறிந்தால் என்னை மரணிக்கச் செய்! அல்லாஹ்வே! மறைவிலும் நேரிலும் உன்னை அஞ்சுவதை உன்னிடம் கேட்கிறேன். திருப்தியிலும் கோபத்திலும் நேரிய வார்த்தையை உன்னிடம் நான் கேட்கிறேன். வறுமையிலும் செல்வத்திலும் நடுநிலையை உன்னிடம் நான் கேட்கிறேன். அழியாத அருட்கொடையை உன்னிடம் நான் கேட்கிறேன். அறுந்து விடாத கண் குளிர்ச்சியை உன்னிடம் நான் கேட்கிறேன். விதிக்குப் பின்னால் திருப்தியை உன்னிடம் நான் கேட்கிறேன். இறந்த பின்பு வாழ்க்கையின் இதத்தை உன்னிடம் நான் கேட்கிறேன்.

இடர் அளிக்கக்கூடிய துன்பம் மற்றும் வழிகெடுக்கக் கூடிய குழப்பம் இல்லாத சூழலில் உன் திருமுகத்தைப் பார்க்கின்ற சுவையையும், உன்னைச் சந்திக்கின்ற ஆசையையும் உன்னிடம் நான் கேட்கின்றேன். அல்லாஹ்வே! ஈமானின் அழகைக் கொண்டு எங்களை அழகுபடுத்துவாயாக! எங்களை நேர்வழி பெற்ற வழிகாட்டிகளாக ஆக்கு!

அறிவிப்பவர்: ஸாயிப் பின் மாலிக், நூல்: நஸயீ 1288

“இறைவனுக்கு உருவம் இல்லை; இறைவன் என்றால் சூனியம்” என்று கூறி இறைவன் இல்லை என்பதை வேறு வார்த்தைகளில் யார் கூறுகிறார்களோ அத்தகைய நிராகரிப்பாளர்களுக்கும் இணை கற்பிப்பவர்களுக்கும் இறைவனைக் காணும் பேரின்பம் நிச்சயம் கிடைக்காது.

எனவே இணை வைக்காமல், நல்லமல்கள் செய்து, இந்தப் பிரார்த்தனையைப் புரிந்து அல்லாஹ்வின் திருமுகத்தைக் காண்கின்ற பேறும் பாக்கியமும் பெற்றவர்களாக ஆவோமாக!

அல்லாஹ் உருவமற்றவனா? என்ற இந்தத் தலைப்பில் நீங்கள் பார்த்த ஆதாரங்கள் அனைத்தும் குர்ஆன், ஹதீஸில் உள்ளவையாகும். இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கின்றது என்று நிரூபிக்கும் ஆதாரங்கள். இவை அனைத்திற்கும் எந்தவொரு விளக்கமும், வியாக்கியானமும் கூறாமல், திரிபு வாதம் செய்யாமல், திசை திருப்பாமல் ஒவ்வொரு முஸ்லிமும் நம்பியே ஆக வேண்டும். அவ்வாறு நம்பாதவர் இறை மறுப்பாளர் ஆவார்; நிரந்தர நரகத்தின் விறகாவார். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

————————————————————————————————————————————————

தாயீக்கள் பற்றாக்குறை தீர்வு கிளைகளிடமே!

அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் தவ்ஹீது வளர்ச்சி பன்மடங்கு பரிமாணத்தில் வளர்ந்து வருகின்றது. 1980களில் வேர் பிடித்த தவ்ஹீது மரம் இப்போது ஊர் தோறும் கிளைகளாக கிளைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதனுடைய வளர்ச்சியின் வேகத்திற்கும் வீதத்திற்கும் ஈடு கொடுக்கக் கூடிய வகையில் அழைப்பாளர்கள் இல்லை.

அழைப்பாளர்கள் தேவை என்று பல்வேறு கிளைகளிலிருந்து கோரிக்கைகள் குவிந்த வண்ணமிருக்கின்றன. கைவசத்தில் இருக்கும் அனைத்து அழைப்பாளர்களையும் கோருகின்ற கிளைகளுக்கு விரைந்து வினியோகிக்கத் தலைமை தவறுவதில்லை. இருப்பினும் பற்றாப்படி தீரவில்லை.

எங்களுக்கு அழைப்பாளர் இல்லை என்று பல்வேறு கிளைகளிலிருந்து ஏக்கக் குரல்கள் தலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றன. ரமளானில் தாயீக்களின் தேவை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றது. அமீரகம், கத்தார் போன்ற பகுதிகளுக்கு அவசியத்தை முன்னிட்டு அழைப்பாளர்களை அனுப்பியது போக இப்போது புருணை போன்ற நாடுகளுக்கும் அழைப்பாளர்களை அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் தலைமை உள்ளது.

ஆசியாவையும் தாண்டி ஐரோப்பாவிலும் தமிழ் பேசுகின்ற தவ்ஹீது சகோதரர்களிடமிருந்து அழைப்பாளர்களுக்காக அழைப்பு வந்து கொண்டிருக்கின்றது. தலைமை இப்படி ஒரு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, தலைமை மீது கிளைகள் கோபப்படுவதில் எந்தப் பயனும் இல்லை. தாயீக்கள் தரவில்லை என்று வெந்து, வேதனையை தலைமை மீது கொட்டுவதிலும் அர்த்தமில்லை. இருக்கின்ற தாயீக்களைத் தான் தலைமையினால் பிரித்து அனுப்ப முடியும்.

அவரவர் ஊர்களிலிருந்து நன்கு திறமையுள்ள மாணவர்களை, நான்காண்டு கல்வித் திட்டத்தில் அமைந்துள்ள மேலப்பாளையம் இஸ்லாமியக் கல்லூரிக்கு அல்லது இரண்டாண்டு கல்வித் திட்டத்தில் அமைந்துள்ள சேலம் தவ்ஹீது கல்லூரிக்கு அனுப்பி வைப்பது தான் கிளைகளுக்கு முன்னால் உள்ள ஒரே வழியும் வாய்ப்பும் நிவாரணமும் ஆகும். இதைத் தவிர வேறு வழியே இல்லை.

சொந்த ஊரில் உருவாகின்ற ஓர் அழைப்பாளர் அந்த ஊரில் தவ்ஹீது வளர்ச்சி காண்பதில் அதிகம் அக்கறையும் ஆர்வமும் காட்டுவார். அதற்காக முக்கிய கவனத்தையும் முழுமையான கரிசனத்தையும் செலுத்துவார். அதனால் கிளைகள் இந்த முயற்சியில் இறங்கி அழைப்பாளர் பற்றாக்குறையைத் தீர்க்க முன்வர வேண்டும். இதை விட்டு விட்டு தலைமை மீது பழியையும் பாவத்தையும் போட்டு விட்டு, அழைப்புப் பணி மீதுள்ள கடமையை, அதுவும் தங்கள் ஊர் கிளையின் மீதுள்ள பொறுப்பைத் தட்டிக் கழிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.

நமது ஏகத்துவ இயக்கம் ஓர் இதயம் போன்றது. அதன் உயிர் மூச்சு மார்க்க ஞானம் உள்ள, ஒழுக்கமிக்க அழைப்பாளர்கள் தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ள மாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காத போதே மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கொடுப்பார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்: புகாரி 100

மார்க்க அறிஞர்களின் மரணம், மார்க்கக் கல்வியின் மரணம் என்று இங்கு குறிப்பிடுகின்றார்கள். அல்லாஹ், திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

நம்பிக்கை கொண்டோர் ஒட்டு மொத்தமாகப் புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும் போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் (இதன் மூலம் தவறிலிருந்து) விலகிக் கொள்வார்கள். (அல்குர்ஆன் 9:122)

இதன் அடிப்படையில் நாம் இரத்தமும் வியர்வையும் சிந்தி தியாகத்துடன் வளர்த்த இந்த ஏகத்துவக் கட்டமைப்பு நமது காலத்திலேயே, நம் கண் முன்னாலேயே அழிய நாம் காரணமாக ஆகலாமா? இந்தக் கொள்கை அடுத்த தலைமுறைக்குப் போய்ச் சேர வேண்டாமா?

கவலைப்படுங்கள்! இப்போது களமிறங்குங்கள். உங்கள் ஊர்களிலிருந்து இக்கல்லூரிகளில் கல்வி பயில அழைப்பாளர்களை அனுப்புங்கள்.

ஆனால் அதே சமயம், தலைமை இப்படிக் கூறுகிறது என்பதற்காக படிப்பு ஏறாத மக்குகளையும் மழுங்கல்களையும் அனுப்பி வைத்து விடாதீர்கள். காரணம், பொதுவாக சமுதாயத்தில் மதரஸாவுக்கு அனுப்பப்படுகின்ற மாணவர்கள், “பையனுக்குப் படிப்பே வரவில்லை. அதனால் மதரஸாவுக்கு அனுப்புகிறேன்’ என்று பெற்றோர் கூறுவது வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் ஆகி விட்டது.

இந்த மாணவர்கள் மதரஸா வந்து ஆசிரியர்களின் பிராணனை வாங்குவதுடன் மட்டுமல்லாமல் படிப்பு முடிந்து வெளியே வந்ததும் நரகத்திற்கு அழைக்கும் பிரதான ஏஜெண்டுகளாகவும் மாறி விடுகின்றனர். காரணம் குர்ஆன், ஹதீஸை எப்படி விளங்க வேண்டும் என்று தெரியாத மூடர்களை மதரஸாவுக்கு அனுப்பி வைப்பது தான்.

அதனால் நல்ல புத்திசாலியான, பட்டப்படிப்பு அல்லது +2 அல்லது எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்களை அனுப்புங்கள். அவர்கள் அழைப்பாளர்கள் என்ற பட்டதாரிகளாக மட்டுமில்லாமல் சமுதாயத்தை சத்தியப் பாதைக்குக் கொண்டு செல்லும் படைப்பாளிகளாகவும் உருவாவார்கள்.

பொதுவாக மதரஸாவுக்கு வந்து கல்வி படிப்பவர்கள் பிழைப்புக்கு வழியில்லாதவர்கள், பிறரிடம் கையேந்துபவர்கள் என்ற இழிநிலை இருப்பதால் தான் இக்கல்விக்குப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்புவதில்லை. ஆனால் தவ்ஹீது ஜமாஅத் அந்நிலையை மாற்றி ஓர் அற்புத நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

தன்மானமிக்கவர்களாகவும், தரமிக்கவர்களாகவும் தவ்ஹீது தாயீக்கள் உருவாகியிருக்கின்றார்கள். அதற்கு இஸ்லாமியக் கல்லூரியிலிருந்து வெளிவந்து அழைப்புப் பணியில் செயல்படுகின்ற அழைப்பாளர்கள் சாட்சியங்களாக அமைந்திருக்கின்றார்கள். பொது அறிவு, கணிணி அறிவு, ஆங்கில ஞானம் என பல்வேறு வகைகளிலும் சிறந்து விளங்குவதுடன் சத்தியப் பிரச்சாரப் பணியிலும் விவாதக் களங்களிலும் வெளுத்துக் கட்டி வருகின்றார்கள்.

மிகச் சிலர் அழைப்புப் பணி என்ற வட்டத்திற்கு வெளியே சென்று வருவாயை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்ற தகவலும் வருகின்றது. இப்படிப்பட்டவர்கள் ஏகத்துவத்திற்குத் துரோகம் செய்பவர்கள்; மறுமையிலும் நஷ்டத்திற்குரியவர்கள் என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.

அழைப்பாளர்கள் பற்றாக்குறைக்குத் தன்னாலான பெரும் பொருளாதாரச் செலவீட்டில் இஸ்லாமியக் கல்லூரியையும் தவ்ஹீது கல்லூரியையும் தலைமை தீர்வாகத் தந்திருக்கின்றது. இரு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு ஏழை மாணவர்களைக் கிளைகளிலிருந்து தத்தெடுத்து அனுப்புங்கள். அழைப்புப் பணியே அழகிய பணி என்பதால் செல்வந்தர்களும் தங்கள் பிள்ளைகளை இப்பணியின் மகத்துவம் கருதி இக்கல்விக்காக அனுப்பி வையுங்கள்.

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? (அல்குர்ஆன் 41:33)