ஏகத்துவம் – செப்டம்பர் 2009

தலையங்கம்

பைபிள் இறை வேதமா?

அருள்மிகு ரமளான் மாதத்தில் தான் புனிதமிகு அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே இம்மாத ஏகத்துவம், திருக்குர்ஆன் மலராக மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றது.

ஒரு வேதம் என்றால் அதற்கென்று சில அடிப்படை இலக்கணங்கள் இருக்க வேண்டும்; வரையறைகளை அது கொண்டிருக்க வேண்டும். அவை என்ன?

  1. அதில் முரண்பாடு இருக்கக் கூடாது.
  2. அது கூறும் முன்னறிவிப்புக்கள் பொய்க்கக் கூடாது; மெய்க்க வேண்டும்.
  3. தான் ஒரு இறைவேதம் என்பதற்கான சான்றுகளை, அற்புதங்களை அது தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும்.
  4. அந்த வேதம் கூறும் கருத்துக்கள் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரண்படக் கூடாது.

இது போன்ற அடிப்படை இலக்கணங்களுக்கு உட்படவில்லை என்றால் அது புனித வேதமல்ல! மனித வேதம்! அது மனிதக் கைப்பட்டது; கறை பட்டது. மனிதக் கற்பனை; கைச்சரக்கு!

கிறித்தவர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அஹ்மத் தீதாத் அவர்களின் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், சட்டம், சாட்சியம் அடிப்படையில் மனிதன் அமைத்திருக்கும் நீதிமன்றங்களில் இரண்டு நிமிடங்களுக்கு – நூற்று இருபது வினாடிகளுக்குக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாத – தள்ளுபடி செய்யப்பட வேண்டிய குப்பையாகும்.

அல்லாஹ், மனித குலத்திற்கு அருளிய அல்குர்ஆன், மேலே நாம் கண்ட இலக்கணங்களைத் தன்னகமாகக் கொண்டு நிற்கின்ற, நீடிக்கின்ற இறுதி வேதமாகும்.

வேதம் என்றால் அதற்கு மேற்கண்ட அம்சங்கள் இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்ததே திருக்குர்ஆன் தான். இதைத் தான் திருக்குர்ஆன் ரத்தினச் சுருக்கமாகப் பறைசாற்றுகின்றது.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 4:82

அத்துடன் மட்டும் நில்லாமல், தான் ஓர் இறையாண்மை மிக்க வேதம்; தன்னுடன் யார் வேண்டுமானாலும் மோதிப் பார்க்கலாம் என்று சவால் விட்டது.

இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியேஎன்று கூறுவீராக!

அல்குர்ஆன் 17:88

இவர் இதை இட்டுக்கட்டிக் கூறுகிறார்என்று அவர்கள் கூறுகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டி, பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை (துணைக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்!என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 11:13

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:23

இதனை இவர் இட்டுக் கட்டி விட்டார்என்று அவர்கள் கூறுகிறார்களா? “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்!என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 10:38

இந்த வசனங்களில் முதலில், தன்னைப் போல் ஒரு வேதத்தைக் கொண்டு வர முடியுமா? என்று திருக்குர்ஆன் அறைகூவல் விடுக்கின்றது. அதன் பின்னர் பத்து அத்தியாயங்களையாவது கொண்டு வர முடியுமா? என்று கேட்கின்றது. இவ்வாறு படிப்படியாகக் குறைத்துக் கொண்டு வந்து, ஒரேயொரு அத்தியாயத்தையேனும் கொண்டு வர முடியுமா? என்று அறைகூவல் விடுக்கின்றது. இதற்குப் பிறகும் ஒரு கொம்பனும் இந்தக் குர்ஆனுக்குப் பதில் சொல்ல முன்வரவில்லை.

என்னை வீழ்த்த யாரேனும் இந்த மண்ணில் உண்டா? என்று கோட்டை மீது நின்று கொண்டு ஒரு மாவீரன் கர்ஜிப்பது போல் இந்த அல்குர்ஆன் அறைகூவல் விடுக்கின்றது. திருக்குர்ஆன் விடுக்கின்ற இந்த அறைகூவலுக்கு, அது வானிலிருந்து இறங்கிய நாள் முதல் இன்று வரை – சந்திர மண்டலத்தில் கொடியேற்றதுடன் நில்லாமல் அங்கு குடியேற்றம் காணவும் துடிக்கின்ற இந்த அறிவியல் யுக மனிதன் பதில் சொல்ல முடியவில்லை; இறுதி நாள் வரை பதில் சொல்லவும் முடியாது. காரணம் இது இறை வேதம். அத்துடன் அது இறுதி வேதமுமாகும். மனிதக் கை படாத அளவுக்கு அதை அல்லாஹ் பாதுகாத்தும் விட்டான்.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் 15:9

இந்த வேதத்தை அல்லாஹ் எப்படிப் பாதுகாக்கிறான்? அதையும் திருக்குர்ஆன் கூறுகின்றது.

இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கிறது. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் 29:49

இந்த அறிவிப்பையும் மீறி யாராவது கை வைத்தால் என்ன ஆகும்? வேறு யாரும் கை வைக்க வேண்டியதில்லை. இந்த வேதத்தை இறைவனிடமிருந்து பெற்றுத் தந்த அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களே கை வைத்து விட்டால் – அவர் சுயமாக எதையேனும் இட்டுக்கட்டி, புனைந்து இந்த வேதத்துடன் சேர்த்துச் சொல்லி விட்டால் – அதற்குரிய தண்டனை என்ன?

சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம். உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர்.

அல்குர்ஆன் 69:44-47

தனது வேதத்தில் யாரும் கை வைக்க முடியாது என்பதற்கு அல்லாஹ் வழங்கும் பாதுகாப்புக் கவசமாகும்.

இது வரை யாரும் இந்த அறைகூவலை, சவாலைச் சந்திக்க முன்வராதது, இந்த வேதத்தில் மனிதக் கை படாமல் இறைவனின் வாக்குப்படி பாதுகாக்கப்படுவது இவையெல்லாம் நமது ஈமானை மேலும் வலுப்படுத்துகின்றது. நமது இறை நம்பிக்கையை மேலும் மேலும் வளர்க்கின்றது.

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பார்கள். ஒன்றின் அருமையை மற்றொன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். திருக்குர்ஆன் எனும் இந்த இறுதி வேதத்தின் அருமையை, அற்புதத்தை – கிறித்தவர்கள் தங்கள் வேதம் என்று கூறும் பைபிளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது திருக்குர்ஆனின் அருமை நமக்குத் துல்லியமாகத் தெரிகின்றது.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 4:82

இந்த வசனத்தின்படி பைபிளில் மலிந்து கிடக்கும் முரண்பாடுகள், அது இறை வேதமல்ல, மனித வேதம் தான் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன. அதே போன்று திருக்குர்ஆன், முரண்பாடுகள் ஏதுமில்லாத அல்லாஹ்வின் புனித வார்த்தைகள் என்பதை நிரூபித்து நிற்கின்றது.

இது ஒரு வேதத்திற்கு இருக்க வேண்டிய ஓர் அடிப்படையான முக்கிய, முதல் தகுதியாகும். இந்த முக்கியமான அடிப்படைத் தகுதியை இழந்து விட்ட பைபிள் மனிதச் சொல் தான் என்பதை விளக்குவதே இம்மாத ஏகத்துவ இதழின் சத்தும் சாறுமாகும்.

அஹ்மத் தீதாத்

மனிதக் கை படிந்து விட்டால் அது ஒரு மலிவுச் சரக்கு, கேலிக்கூத்து பரிகாசப் பொருள் என்பதை, கிறித்தவர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள்.

அஹ்மத் தீதாத் அவர்கள் கிறித்தவ அழைப்பாளர்களின் அடுக்கடுக்கான தாக்குதலுக்கு உள்ளானவர்; அலைக்கழிப்புக்கு ஆளானவர்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அஹ்மத் தீதாத், 1939ல் தென்னாப்பிரிக்காவில் ஆடம் மிஷன் என்ற பகுதியில் ஒரு கடையில் பணியாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு அருகில் கிறித்தவப் பாதிரிகளின் பயிற்சிக் கல்லூரி அமந்திருந்தது.

இங்கு பயில்கின்ற பாதிரிப் பயிற்சியாளர்கள், அஹ்மத் தீதாதைக் குடைந்து தள்ளினர்; கோட்டமெடுத்தனர். குறிப்பாக, நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் பற்றி தீதாதிடம் குறிவைத்துத் தாக்கினர்.

கூனிக் குறுகிப் போன தீதாத், பல இரவுகளைத் தூக்கமின்றிக் கழித்தார். பதிலளிக்க முடியவில்லையே என்று கண்ணீர் விட்டு அழுதார். இவ்வாறு கண்ணீர் கடலில் தத்தளித்த, இருபது வயது இளைஞரான தீதாதுக்கு ஒரு மரக்கலமாக, கலங்கரை விளக்கமாக “இன்ஹாருல் ஹக்’ என்ற நூல் கிடைக்கின்றது. சத்திய வெளிப்பாடு என்பது இதன் பொருள்.

இந்நூலை எழுதிய அறிஞர் ரஹ்மத்துல்லாஹ் அல்ஹின்தி அவர்கள் பைபிளைக் கரைத்துக் குடித்த ஒரு பண்டிதர்! அதை அக்கு வேறு, ஆணி வேறாக அலசி, கிறித்தவ துதிக் கோட்டைகளை சுக்கு நூறாக உடைத்தெறிந்தவர்.

இந்த அறிஞரின் ஆழ்ந்த, அறிவுமிக்க வாதங்கள், ஒரு சிறந்த கேடயமாக, கவசமாக மட்டுமில்லாமல் வாளாகவும் தீதாதின் கைகளில் கிடைக்கின்றது. இதன் பிறகு கடைப் பணியை விட்டு விட்டு, அழைப்புப் பணியை மேற்கொள்ளத் துவங்கினார். கிறித்தவ உலகின் சிம்ம சொப்பனமாக மாறினார். கிறித்தவ உலகம் தீதாதைக் கண்டு நடுங்கும் அளவுக்கு அவரது வாள் சுழன்றது. அன்னாரது உயிர் பிரிகின்ற வரை அவரது வாதப் போர் எனும் வாட் போர் தொடர்ந்தது. பல்வேறு விவாதக் களங்களில் கிறித்தவ தூதுக் குழுவினரின் வாதங்களைப் பிசுபிசுக்க வைத்தார்.

பைபிளின் மூல மொழி, வழக்கும் வாழ்வும் இழந்த ஹிப்ரு மொழியாக இருந்தாலும், அதன் மூல மொழி ஆங்கிலம் தான் என்று சொல்லும் அளவுக்கு பைபிள் ஆங்கிலத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதனால் ஆங்கிலேய கிறித்தவப் பாதிரிமார்கள் பைபிளின் ஆங்கிலப் பதிப்புகளில் அத்துமீறி விளையாடி உள்ளனர். அவர்களின் திருவிளையாடல்களை அஹ்மத் தீதாத் மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றார். அது ஓர் இறை வேதமல்ல என்பதைச் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்.

இவ்வகையில் அவர் கிறித்தவப் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிரான ஆவணங்களையும் ஆயுதங்களையும் உலக இஸ்லாமிய சமுதாயத்திற்கு அளித்திருக்கின்றார். இதற்கு இஸ்லாமிய சமுதாயம் நன்றிக் கடன் பட்டிருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.

அறிஞர் தீதாதின், ”Is all of the Bible God’s word?” பைபிளிள் உள்ள அனைத்தும் இறை வேதமா? என்ற ஆங்கில நூலாக்கத்தின் மிக மிக முக்கிய அம்சங்களை, நேரடி மொழிபெயர்ப்பாக அல்லாமல், கருத்தாக்கமாக இவ்விதழ் உங்களுக்கு வழங்குகின்றது.

”What was the Sign of Jonah?” ”ஜோனாவின் (யூனுஸ் நபியின்) அற்புதம் என்ன ”Crucifiction or Cruci Fiction?” ஏசு சிலுவையில் அறையப்பட்டது உண்மையா? கற்பனையா?,?” ”Resurrection of Resuscitation?” ஏசு மரித்து வந்தாரா? மறுபடியும் வந்தாரா? என்ற நூல்களின் ஆக்கங்களையும் இன்ஷா அல்லாஹ் வரும் இதழ்களில் தரவுள்ளோம்.

இந்த ஆய்வுகளை நாம் வாசிக்கும் போது, மனித குலத்துக்கு அருளப்பட்ட இறுதி வேதமான அல்குர்ஆன் ஓர் அதி அற்புத வேதம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கிறித்தவ மக்களை சத்தியத்தின் பக்கம் அழைக்கும் ஆவணமாக, நம்மை வேட்டையாட வரும் கிறித்தவ அழைப்பாளர்களுக்கு எதிரான ஆயுதமாக இதை ஆக்கிக் கொள்வோம். உண்மையான வேதமாகிய திருக்குர்ஆன் கூறும் மறுமை வாழ்வுக்காக நம்மை நாம் ஆயத்தப்படுத்திக் கொள்வோமாக!

————————————————————————————————————————————————

முரண்பாடுகளின் மொத்த உருவமே பைபிள்

ஒரு வேதம் மனிதச் சொல்லா? அல்லது புனிதச் சொல்லா என்பதற்குரிய மிகத் துல்லியமான அளவுகோலை அல்குர்ஆன் 4:82 வசனத்தில் அல்லாஹ் குறிப்பிட்டு விட்டான். அந்த அடிப்படையில் பைபிள் இறை வேதமா என்று பரிசீலனைக்கு உட்படுத்திப் பார்ப்போம்.

முரண்பாடு: 1

கணக்கெடுக்கச் சொன்னது யார்? கடவுளா? ஷைத்தானா?

1 மீண்டும் இஸ்ரயேல் மீது ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. அவர்களுக்கு எதிராகச் செயல்பட அவர் தாவீதிடம், “புறப்பட்டுப் போய், இஸ்ரயேல், யூதா மக்களை எண்ணுவாய்” என்று தூண்டிவிட்டார்.

2 அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத் தலைவர்களையும் அழித்து, “மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வேண்டும். நீங்கள் தான் முதல் பெயேர்செபா வரை அனைத்து இஸ்ரயேல் குலங்களிடையே சென்று வீரர்கள் தொகையை கணக்கிடுங்கள்” என்றார்.

3 யோவாபு அரசரை நோக்கி, “ஆண்டவராம் கடவுள் வீரர்களை இப்போது இருப்பதைப் போல் இன்னும் நூறு மடங்கு மிகுதிப்படுத்துவாராக! என் தரைவராம் அரசர் இதைக் காண்பாராக! ஆனால் என் தலைவராம் ஆண்டவர் இதை செய்ய விரும்புவது ஏன்? என்று கேட்டார்.

4 இருப்பினும் யோவாபுக்கும் படைத்தலைவருக்கும் எதிராக அரசரின் வார்த்தையே நிலைத்தது. இஸ்ரயேல் வீரர்களைக் கணக்கிடுவதற்காக யோவாபும் படைத்தலைவர்களும் அரசர் முன்னிலையினின்று புறப்பட்டுச் சென்றனர்.

2 சாமுவேல் 24

1 சாத்தான் இஸ்ரயேலுக்கு எதிராக எழும்பி, இஸ்ரயேலரைக் கணக்கிடுமாறு தாவீதைத் தூண்டினான்.

2 தாவீது யோவாபையும், மற்றப் படைத்தலைவர்களையும் நோக்கி, “நீங்கள் போய் பெயேர்செபா தொடங்கி தாண்வரை வாழும் இஸ்ரயேல் மக்கள் தொகையைக் கணக்கிட்டு என்னிடம் கொண்டுவாருங்கள். நான் அதை அறியவேண்டும்” என்றார்.

3 யோவாபு பதிலுரையாக, “ஆண்டவர் தன் மக்களை இப்போது இருப்பதினும் நூறு மடங்கு மிகுதியாய்ப் பெருகச் செய்வாராக! என் தலைவராகிய அரசரே, அவர்கள் யாவரும் என் தலைவரின் பணியாளர் அன்றோ! என் தலைவர் இதை ஏன் நாட வேண்டும்? இஸ்ரயேலின் மீது பழி விழக் காரணமாக வேண்டும்?” என்றார்.

4 இறுதியில், அரசரின் கட்டளை யோவாபைப் பணிய வைத்தது. எனவே யோவாபு புறப்பட்டுப்போய் இஸ்ரயேல் நாடெங்கும் சென்று எருசலேமுக்குத் திரும்பி வந்தார்.

1 நாளாகமம் 21

முரண்பாடு: 2

மூன்று வருடங்களா? ஏழு வருடங்களா?

காத்து தாவீதிடம் வந்து அவரிடம் பேசி வெளிப்படுத்தியது; “உனது நாட்டில் ஏழு ஆண்டு பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப் பின்தொடர, மூன்று மாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன் நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டும் என்று சிந்தித்து முடிவுசெய்”

  1. சாமுவேல் 24:13

காத்து தாவீதிடம் சென்று “ஆண்டவர் கூறுவது இதுவே; நீயே தேர்ந்துகொள்; மூன்று ஆண்டுப் பஞ்சமா? உன் எதிரிகளின் வாளுக்கு அஞ்சி மூன்று மாதம் அவர்கள் முன் ஓடுவதா? இஸ்ரயேல் நாடெங்கும் சாவுண்டாகும்படி ஆண்டவரின் தூதர் மூன்று நாள்கள் நாட்டில் வருவிக்கும் ஆண்டவரின் வாளான கொள்ளை நோயா? இப்போது, என்னை அனுப்பியவருக்குப் பதிலளிக்குமாறு உம் முடிவைக் கூறும்” என்றார்.

1 நாளாகமம் 21:11,12

பஞ்சம் ஏற்படும் என்று கூறியது மூன்று வருடங்களா? அல்லது ஏழு வருடங்களா? எது உண்மை?

முரண்பாடு: 3

எட்டு வயதா? பதினெட்டு வயதா?

யோயாக்கின் அரசனான போது அவனுக்கு வயது எட்டு; எருசலேமில் அவன் மூன்று மாதம் பத்து நாள்களே ஆட்சி செய்து, ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்.

2 நாளாகமம் 36:9

யோயாக்கின் அரசனான போது அவனுக்கு வயது பதினெட்டு. எருசலேமில் மூன்று மாதமே அவன் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த எல்நாத்தானின் மகள் நெகுஸ்தா என்பவளே அவனுடைய தாய்.

2 ராஜாக்கள் 24:8

யோயாக்கீன் என்பவர் அரசராகும் போது அவருக்கு எட்டு வயதா? பதினெட்டு வயதா?

முரண்பாடு: 4

எழுநூறா? ஏழாயிரமா?

சிரியர் இஸ்ரயேலருக்கு முன்பாக புறமுதுகாட்டி ஓடினர். சிரியருள் எழுநூறு தேர் வீரர்களையும், நாற்பதாயிரம் குதிரை வீரர்களையும் தாவீது கொன்றார். மேலும் படைத் தலைவன் சோபாக்கை அவர் வாளால் தாக்க அவனும் அங்கே மடிந்தான்.

2 சாமுவேல் 10:18

சிரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர். தாவீது சிரியர் படையின் ஏழாயிரம் தேர்ப் படை வீரரையும், நாற்பதாயிரம் காலாள் படையினரையும், வெட்டி வீழ்த்தினார்; படைத் தலைவன் சோபாகையும் கொன்றார்.

1 நாளாகமம் 19:18

தாவீது கொன்றது எழுநூறு தேர் வீரர்களா? அல்லது ஏழாயிரம் தேர் வீரர்களா?

நாற்பதாயிரம் காலாட்படையினரா? நாற்பதாயிரம் குதிரைப் படையினரா?

கடவுள் இங்கு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார். காரணம் அவருக்குக் காலாட்படைக்கும் குதிரைப் படைக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

முரண்பாடு: 5

இரண்டாயிரமா? மூன்றாயிரமா?

வார்ப்புக் கடலின் கன அளவு நான்கு விரற்கடை; அதன் விளிம்பு பானையின் விளிம்பைப் போலவும் அல்லி மலரைப் போலவும் விரிந்து இருந்தது. அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் கொள்ளும்.

1 ராஜாக்கள் 7:26

தொட்டியின் கனம் நான்கு விரல் கடை. அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போன்றும், மலர்ந்த லீலியைப் போன்றும் இருந்தது. அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.

2 நாளாகமம் 4:5

முரண்பாடு: 6

நான்காயிரமா? நாற்பதாயிரமா?

சாலமோன் குதிரைகளுக்கும் தேர்களுக்குமாக நாலாயிரம் கொட்டில்களையும், பன்னீராயிரம் குதிரை வீரர்களையும் கொண்டிருந்தார்; தேர்களைத் தேர்ப்படை நகர்களிலும் தம்முடன் எருசலேமிலும் நிறுத்தி வைத்திருந்தார்.

2 நாளாகமம் 9:25

சாலமோனுக்கு இருந்த தேர்க் குதிரை இலாயங்கள் நாற்பதினாயிரம்; குதிரை வீரர்கள் பன்னீராயிரம்.

1 ராஜாக்கள் 4:26

குதிரை லாயங்கள் நான்காயிரமா? நாற்பதாயிரமா? “4000க்குப் பின்னால் ஒரு பூஜ்யத்தை யாரேனும் சேர்த்திருக்கலாம் அல்லவா?” என்று தங்களைக் கொஞ்சம் புத்திசாலிகள் என்று கருதக் கூடிய கிறித்தவ நற்செய்தியாளர்கள் சப்பைக்கட்டு கட்டலாம். அந்தச் சப்பைக்கட்டும் எடுபடாது. காரணம் என்ன தெரியுமா? யூதர்கள் நான்காயிரம் என்று எழுத்தால் தான் எழுதினார்களே தவிர எண்ணால் எழுதவில்லை. அரபியர்கள் தான் பூஜ்யத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி அதை ஐரோப்பியர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.

கர்த்தரின் ராஜ்யம், இந்த பூஜ்யத்தை சாக்குச் சொல்லி, சப்பைக்கட்டு கட்டி தப்பித்துக் கொள்ள முடியாது.

இங்கே குறிப்பிட்டிருப்பது பைபிளில் இடம்பெற்றுள்ள முரண்பாடுகளில் சில எடுத்துக் காட்டுக்களைத் தான். மொத்த முரண்பாடுகளையும் இங்கே குறிப்பிடவில்லை. மொத்த முரண்பாடுகளையும் எடுத்துச் சொல்வதற்குத் தனி நூல்கள் வேண்டும்.

இப்போது பைபிள் நமக்குத் தெளிவாகச் சொல்கின்றது. நான் மனிதக் கை பட்ட ஒரு சாதாரண புத்தகம் தான்; நான் புனிதமிக்க இறை வேதமல்ல.

இப்படி பைபிள் தெளிவான வாக்குமூலம் கொடுத்த பின்பும் இதை இறைவேதம் என்று நம்பலாமா?

எனவே, தன்னிடம் முரண்பாடே இல்லை என்று ஆண்மை மிகு அறைகூவல் விடுத்து அழைக்கின்ற அல்குர்ஆனைச் சிந்திக்க வாருங்கள். அதை ஆய்வு செய்யுங்கள். ஆய்வு செய்து அது மனிதச் சொல் இல்லை; புனிதச் சொல் தான் என்று தெரிந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

————————————————————————————————————————————————

பைபிளைப் பற்றி முஸ்லிம்களின் நிலைப்பாடு

கத்தோலிக்கராக இருக்கட்டும்! அல்லது புராட்டஸ்டன்ட்டாக இருக்கட்டும். நம்மிடம் வருகின்ற கிறித்தவ அழைப்பாளர் முதலில் முடிவு செய்து விட்டுத் தான் வருவார். அந்த முடிவு என்ன?

நாம் அழைக்கும் இந்த நபர் பைபிளை இறுதி வேதமாகக் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார் என்பது தான் அந்த முடிவு!

வரக் கூடிய அவர்களிடம் நாம் செய்ய வேண்டிய பணி, ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கும் பைபிள் வசனங்களை அவர்களிடம் எடுத்துக் காட்ட வேண்டும். அல்லது பைபிள் வசனங்களுக்கு அவர்கள் கூறும் விளக்கங்களை எதிர்த்து வாதிக்க வேண்டும். இவ்விரண்டு தான் சரியான வழிமுறையாகும்.

கிறித்தவர்களின் குருட்டுத் தனமான கேள்வி

மேற்கண்டவாறு நாம் அவர்களிடம் அணுகும் போது அவர்கள் நம்மை நோக்கிக் கேட்கின்ற முக்கியக் கேள்வி!

நீங்கள் பைபிளை இறை வேதமாக ஏற்கின்றீர்களா? இல்லையா என்பது தான். ஆம் என்று சொன்னாலும் தவறிழைத்து விடுவோம். இல்லை என்று சொன்னாலும் தவறிழைத்து விடுவோம்.

கேள்வி கேட்கும் கிறித்தவ அழைப்பாளர்கள் நம்மை நிதானிக்க விட மாட்டார்கள். அவசரப்படுத்துவார்கள். நாம் அவசரப்படக் கூடாது; ஆத்திரமும் படக்கூடாது.

வெள்ளையா? கருப்பா என்று கேட்டால் வெள்ளை என்றோ, இல்லை என்றோ சொல்வதற்கு முடியாத இரண்டிற்கும் இடைப்பட்ட சாம்பல் நிறமும் இருப்பது போன்று தான் இந்த விவகாரம்.

“ஆம்’ என்று கூறினால் பைபிளின் ஆதியாகாமத்திலிருந்து வெளிப்படுத்தின சுவிஷேசங்கள் வரை அனைத்தையும் ஏற்றுக் கொண்டதாக ஆகும்.

“இல்லை’ என்று சொன்னால் பைபிளை விமர்சிக்க இவருக்கு என்ன தகுதியிருக்கின்றது என்று கூறி விட்டு நழுவி ஓட முயற்சிப்பார்.

இப்போது ஓர் இஸ்லாமிய அழைப்பாளன் முன்னால் உள்ள கடமை என்ன? அந்தக் கிறித்தவரிடம், பைபிளைப் பற்றிய நமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். இதற்காகத் தனிப் பயிற்சி தேவையில்லை. பைபிளைப் பற்றிய சாதாரண ஞானமே போதும். அதன் அடிப்படையில் பைபிளை சற்று பார்ப்போம்.

பெரிய ஆய்வு ஏதுமின்றி பைபிளை வாசித்தால் அதில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. கடவுளின் வார்த்தை
  2. இறைத் தூதரின் வார்த்தை
  3. கண்ணால் கண்டோர், காதால் கேட்டோரின் நேரடி சாட்சியங்கள், அவர்கள் வழியாக வந்த செவி வழிச் செய்திகள், அதாவது வரலாற்றுத் தொகுப்புகள்.

முதல் வகை

உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான்.

உபாகமம் 18:18

நான், ஆம், நானே ஆண்டவர்; என்னையன்றி வேறு மீட்பர் இல்லை.

ஏசாயா 43:11

மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை.

ஏசாயா 45:22

இவற்றில் வரும் “நான்’, “என்னை’ என்ற பிரதிச் சொல் இறைவனைக் குறிக்கிறது என்பதை விளக்கத் தேவையில்லை.

இரண்டாவது வகை

அதற்கு இயேசு, “இஸ்ரவேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்” என்றார்.

மாற்கு 12:29

அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே” என்றார்.

மாற்கு 10:18

இவை ஏசுவின் வார்த்தைகள் என்று சிறு பிள்ளைகளும் விளங்கிக் கொள்வர்.

மூன்றாவது வகை

இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்ற போது இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக் காலம் அல்ல.

மாற்கு 11:13

இவை மூன்றாம் நபர் பேசுவது போல் அமைந்தவை. பைபிளின் அதிகமான பகுதி இந்த வகையைச் சார்ந்தது தான். இவை அல்லாஹ்வுடைய அல்லது அவனது தூதர் ஈஸா (அலை) அவர்களுடைய வார்த்தைகள் அல்ல. வரலாற்று ஆசிரியர்களின் வார்த்தைகளாகும்.

இம்மூன்று வகைகளின் மொத்தத் தொகுப்புகள் தான் பைபிள். அதனால் தான் இவ்வேதத்தில் இந்தக் குழப்பங்கள்; குளறுபடிகள்.

முஸ்லிம்களின் பாக்கியம்

ஆனால் அல்லாஹ் முஸ்லிம்களுக்குப் பெரும் பாக்கியம் செய்திருக்கிறான்.

  1. அல்லாஹ் அருளிய வார்த்தைகள் அல்குர்ஆன் என்ற பெயரில் தனி ஓர் ஆவணமாக,
  2. நபி (ஸல்) அவர்கள் சொன்னது, செய்தது, அனுமதித்தது ஆகியவை அல்ஹதீஸ் என்ற பெயரில் தனி ஆவணமாக,
  3. நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை அறிவிக்கும் நபித்தோழர்கள், அவர்களிடமிருந்து அறிவிக்கும் அடுத்த தலைமுறையினர், அதற்கடுத்த தலைமுறையினர் என ஐந்தாறு தலைமுறையினரின் வாழ்க்கை வரலாறுகள், இன்னபிற இஸ்லாமிய அறிஞர்கள், சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள் ஆகியோரின் வரலாறுகள், கருத்துக்கள் ஆகியவை பல்வேறு பெயர்களில் தனி ஆவணங்களாக இதுவரை முஸ்லிம் சமுதாயத்திடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அல்லாஹ்வின் கிருபையால் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என்ற ஹதீஸ் நூற்களில் கூட ஒரு வார்த்தை மாற்றப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போது அல்லாஹ்வின் வார்த்தையான அல்குர்ஆனில் எந்த ஒரு மாற்றத்தையும் திருத்தத்தையும் கனவில் கூடக் கற்பனை செய்ய முடியாது. அவ்வளவு பெரிய பாதுகாப்பை அல்குர்ஆன் என்ற இறை வேதம் பெற்று, தகர்க்க முடியாத தனிப் பெரும் ஆவணமாகத் திகழ்கின்றது.

இதற்கு நேர் மாற்றமாக பைபிளில் அனைவரது வார்த்தைகளும் ஒன்று சேர்ந்து குவிந்து கிடக்கின்றன.

இங்கு நாம் ஒரு வித்தியாசத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய வரலாற்று நூல்கள் கூட வரலாற்றைச் சொல்லும் போது அதற்கான ஆதாரத்தைச் சங்கிலித் தொடருடன் தெரிவிக்கின்றன.

வரலாற்றுக் காலத்திலிருந்து நூலாசிரியர் வரையுள்ள ஆதாரத் தொடரை அப்படியே சமர்ப்பித்துத் தான் ஒரு வரலாற்றுச் செய்தியை நூலாசிரியர் தெரிவிப்பார்.

இப்படி ஒரு ஆதார வழியை பைபிள் சமர்ப்பிப்பது கிடையாது. அந்த வகையில் பைபிள், நமது வரலாற்று நூற்களுக்குக் கூட நிகரானது அல்ல. இத்தகைய குறைபாடுகளைக் கொண்ட பைபிளை ஓர் இறை வேத நூல் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நிலைப்பாட்டை, கிறித்தவ அழைப்பாளரிடம் நாம் முதலில் பதிய வைத்து விட வேண்டும்.

பைபிள் மீதான நமது நம்பிக்கை

அடுத்ததாக, பைபிள் மீதான நமது நம்பிக்கையைப் பற்றிய தெளிவும் நமக்கு வேண்டும்.

தவ்ராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன் ஆகிய வேதங்களை நம்புகிறோம். இதன் பொருள் என்ன?

எள்ளளவு, எள் முனையளவு கூடப் பிழையில்லாத வார்த்தை தான் அல்லாஹ்வுடைய குர்ஆன் என்றும், அது, வானவர் ஜிப்ரயீல் வழியாக நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது என்றும் நம்புகிறோம். அது மனிதக் கைவரிசையிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஓர் அற்புத வேதம் என்றும் நம்புகிறோம்.

இஸ்லாத்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்வோர் கூட அல்குர்ஆனின் இந்த அதி அற்புதத்தைப் பாராட்டுகின்றனர்.

THERE IS PROBABLY IN THE WORLD NO OTHER BOOK WHICH HAS REMAINED TWELVE CENTURIES WITH SO PURE A TEXT. — (Sir William Muir)

“உலகில் சுமார் 12 நூற்றாண்டுகளாக அவ்வளவு தூய்மையான மூலத்துடன் இந்நூலை (திருக்குர்ஆனை) தவிர வேறு எந்த வேதமும் நிலைத்திருக்கவில்லை” என்று சர் வில்லியம் மூர் தெரிவிக்கின்றார்.

சர். வில்லியம் மூர் என்பார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தெரிவித்த கருத்து இது. தற்போது சொல்வதாக இருந்தால் 14 நூற்றாண்டுகள் என்று கூறியிருப்பார்.

உண்மையில் குர்ஆனின் “மூலம்’ இதுவரை மாறாமல், மாயமாகாமல் அப்படியே நீடித்து நிற்கின்றது. இது தான் குர்ஆன் மீதுள்ள நமது அசைக்க முடியாத நம்பிக்கை என்பது மட்டுமல்ல! உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையும் கூட!

தவ்ராத்தைப் பொறுத்த வரை யூதர்கள் குறிப்பிடுகின்ற, கிறித்தவர்கள் குறிப்பிடுகின்ற தவ்ராத்தை நாம் நம்பவில்லை.

“தவ்ராத் வேதம் தான் பழைய ஏற்பாடு என்ற பெயரில் பைபிளில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பழைய ஏற்பாட்டில் 5 புத்தகங்களை மூஸா நபி இயற்றினார்’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றார்கள். இந்தக் காரணத்தாலும், இதர காரணங்களாலும் நாம் இந்தப் பழைய ஏற்பாட்டை தவ்ராத் வேதம் என்று ஒருக்காலும் நம்ப முடியாது.

நாம் எப்படி நம்புகிறோம்? மூஸா நபிக்கு அல்லாஹ் அருளிய வார்த்தைகள் தான் தவ்ராத்! அதை மூஸா நபி மக்களுக்குப் போதித்தார்கள். தவ்ராத்தை மூஸா நபி இயற்றவில்லை என்று தான் நாம் நம்புகிறோம்.

தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட ஸபூர் வேதத்தையும் இவ்வாறு தான் நாம் நம்புகிறோம்.

சங்கீதம் என்ற பெயரில் பழைய ஏற்பாட்டில் இடம் பெறுவது ஸபூர் வேதமல்ல! இதை நாம் ஸபூர் என்று நம்பவில்லை.

இன்ஜீலை எவ்வாறு நம்புகிறோம்?

இன்ஜீல் என்று அழைக்கப்படும் இவ்வேதம் ஈஸா நபிக்கு இறைவனால் அருளப்பட்டது. அதை நாம் அல்லாஹ்வின் வேதம் என்று நம்புகிறோம். பைபிள் என்ற பெயரில் உள்ள நூலை நாம் இன்ஜீல் என்று நம்பவில்லை.

ஈஸா நபி, தமது கைப்படவோ அல்லது பிறருக்கு அவ்வாறு எழுதும்படியோ கட்டளையிட்டதாக எந்த ஆதாரமும் இல்லை.

இன்ஜீல் என்ற பெயரில் அதாவது பைபிள் என்ற பெயரில் தற்போது உலா வருகின்ற அனைத்துமே அனாமதேய ஆசிரியர்களின் பெயர்களில் தான். மத்தேயு, மாற்கு, ஜான், லூக்கா என்ற பெயர் தாங்கிகளின் பெயர்களில் தான் பைபிள் என்ற வேதம் உலா வருகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் புதிய ஏற்பாட்டில் இடம் பெற்ற 27 நூல்களில் ஏசு என்ற பெயரில் ஒரு புத்தகம் கூட இடம் பெறவில்லை.

ஏசு எதையும் எழுதவில்லை என்று வாதிடும் நாம், ஏசுவின் பெயரால் ஒரு புத்தகம் கூட இல்லையே என்று குறைபடக் காரணம், கண்ட கண்ட நபர்களின் பெயர்களில் பைபளில் நூல்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் ஏசுவின் வார்த்தைகள் என்று சொல்லப்படுகின்ற இந்த வேதத்தில் அவரது பேச்சுக்களுக்குக் கிடைத்த இடம் சொற்பத்திலும் சொற்பம் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான்.

இப்படி, கண்டவர்களின் கைச்சரக்கு கிட்டங்கியான இந்த பைபிளை இறை வேதம் என்று ஒரு முஸ்லிம் நம்ப மாட்டான். நபி (ஸல்) அவர்கள் இதற்கு ஒரு தெளிவான தீர்வைத் தருகின்றார்கள்.

வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரூ மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப் பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்கüன் இறைவனிடமிருந்து வழங்கப் பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்கüல் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்” (2:136) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4485, 7362

இந்த ஹதீஸை கீழ்க்கண்ட வசனத்திற்கேற்ப விளங்கிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 2:111

வேதக்காரர்களிடமிருந்து ஏதேனும் வந்தால் ஆதாரத்துடன் நம்ப வேண்டும். ஆதாரம் இல்லையெனில் தெளிவாக மறுத்து விட வேண்டும்.

அதாவது, வேதக்காரர்களின் கருத்து குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் ஒத்திருந்தால் அதை நாம் நம்ப வேண்டும். குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் முரணாக இருந்தால் அதை மறுத்து விட வேண்டும்.

பைபிள் மீதான நம்பிக்கைக்கு மார்க்கம் இப்படியொரு தெளிவைத் தந்திருக்கின்றது. இந்த அடிப்படையிலேயே நம்முடைய நம்பிக்கை தவ்ராத், ஸபூர், இன்ஜீல் ஆகிய வேதங்களின் மீது அமைந்திருக்கின்றது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது கிறித்தவர்கள் எழுப்புகின்ற கேள்விக்கு வருவோம்.

நீங்கள் பைபிளை இறை வேதம் என்று ஒப்புக் கொள்கிறீர்களா? இது தான் அவர்களது கேள்வி!

பல்வேறு பைபிள்கள்

இந்தக் கேள்வியைக் கேட்கும் கிறித்தவர்களிடம் நாம் திரும்பக் கேட்க வேண்டியது இது தான்.

எந்த பைபிளை ஏற்கச் சொல்கிறீர்கள்?

அஹ்மத் தீதாத், ஒரு பைபிளை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, “இந்த பைபிளை இறை வேதம் என்று நம்புகிறீர்களா?” என்று ஒரு கிறித்தவ அழைப்பாளரை நோக்கி வினவுகின்றார். அந்தக் கிறித்தவர் அதிர்ச்சிக்குள்ளாகி, “அது என்ன பைபிள்?” என்று கேட்கின்றார்.

“ஏன்? இது வரை ஒரேயொரு பைபிள் தான் என்று நீங்கள் நினைத்திருக்கிறீர்கள். அப்படித் தானே?” என்று தீதாத் கேட்க, அவர் தயக்கத்துடன் ஆம் என்று சொல்கிறார்.

ஒரேயொரு இறை வேதம் தான். அது பைபிள் தான் என்று பொய் சொல்லிக் கொண்டு திரியும் நற்செய்தி(?)யாளர்களின் முகங்களை தீதாத் தோலுரித்துக் காட்டுகின்றார்.

கத்தோலிக்க பைபிள்

அஹ்மத் தீதாத் தூக்கிப் பிடித்திருந்தது கத்தோலிக்க பைபிள் (தர்ம்ஹய் ஈஹற்ட்ர்ப்ண்ஸ்ரீ யங்ழ்ள்ண்ர்ய்).

லத்தீன் வல்கேட்டிலிருந்து இது ரோமன் கத்தோலிக்கர்களால் 1582ல் மொழி பெயர்க்கப்பட்டு ரெய்ம் நகரில் வெளியிடப்பட்டது. மீண்டும் டவோ நகரில் மறுபடியும் வெளியிடப்பட்டது. இது மிக மிகப் பழமையான மொழிபெயர்ப்பாகும்.

16ஆம் நூற்றாண்டில் வெளியான ஒரு பழமையான மொழிபெயர்ப்பு என்ற பெயரையும் புகழையும் இந்தக் கத்தோலிக்க பைபிள் பெற்றிருந்தாலும் இது புராட்டஸ்டண்ட் கிறித்தவர்களின் பெரும் அதிருப்தியைச் சம்பாதித்தது. காரணம், அதில் அதிகப்படியாக ஏழு ஏடுகள் இடம் பெற்றிருந்தன. இந்த ஏழு ஏடுகளும் ஐயத்திற்குரியவை! கடவுளுடைய வார்த்தைகள் தாமா என்ற சந்தேகத்திற்குரியவை. இதனால் இந்த ஏழு ஏடுகளும் புராட்டஸ்டண்ட் பைபிளில் சேர்க்கப்படவில்லை; நீக்கப்பட்டுள்ளன.

என்ன வேதம்? கத்தோலிக்கர்கள் ஏழு ஏடுகளை இறை வார்த்தைகள் என்று சொல்கின்றனர். அதை புராட்டஸ்டண்டுகள் இறை வார்த்தைகள் அல்ல என்று சொல்கின்றனர்.

இவ்வாறு கூட்டுவதையும், குறைப்பதையும் கண்டித்து பைபிளின் இறுதி ஏடான வெளிப்படுத்தின விஷேசத்தில் ஓர் எச்சரிக்கையே விடப்பட்டுள்ளது.

திருவேதத்தில் தணிக்கை?

இந்த எச்சரிக்கையை கத்தோலிக்கர்களும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. புராட்டஸ்டுகளும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. சேர்த்தலும் நீக்குதலும் இரு அணியினருக்கும் சர்வ சாதாரணமான விஷயம்.

புராட்டஸ்டுகள் துணிச்சலாகவே இந்த ஏழு ஏடுகளையும் தணிக்கை செய்து விட்டனர்.

அந்த அத்தியாயங்கள் இதோ:

  1. தோபித்து, 2. யூதித்து, 3. எஸ்தர்,
  2. ஸாலமோனின் ஞானம், 5. சீராக்கின் ஞானம்,
  3. பாரூக்கு, 7. தானியேல்

புராட்டஸ்டண்ட் மொழி பெயர்ப்பு

புராட்டஸ்டண்ட் பைபிளின் மொழி பெயர்ப்பை AV (Authorised version) அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு என்று அழைக்கின்றனர். KJV KJV (King James Version)  மன்னர் முதலாம் ஜேம்ஸின் ஆதாரப்பூர்வமான மொழி பெயர்ப்பு என்ற மறு பெயரிலும் இதனைக் குறிப்பிடுகின்றனர்.

இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜேம்ஸின் விருப்பத்திற்கும் ஆலோசனைக்கும் இணங்க இது வெளியிடப்பட்டது. இன்று வரை இம்மொழிபெயர்ப்பு அவரது பெயரையே தாங்கி நிற்கின்றது.

இந்த மொழிபெயர்ப்பு தான் உலகின் வளர்ச்சி குன்றிய நாடுகளில் சுமார் 1500 மொழிகளில் கிடைக்கின்றன. அதனால் கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டண்டுகள் ஆகிய இரு பிரிவினரும் இணைந்து இம்மொழிபெயர்ப்பைத் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இம்மொழிபெயர்ப்பு 1611ல் வெளியிடப்பட்டது. பிறகு 1881ல் திருத்தப்பட்டு, RV (Revised Version)   திருத்தப்பட்ட பதிப்பு என்று அழைக்கப்பட்டது. மீண்டும் 1952ல் மறு திருத்தம் செய்யப்பட்டு, RSV (Revised Standard Version)  மறு திருத்தம் செய்யப்பட்ட தரமிகு பதிப்பு என்றழைக்கப்பட்டது. 1971ல் திரும்பவும் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படாமல் தநய என்றே அழைக்கப்பட்டது.

மீண்டும் மீண்டும் மனிதத் திருத்தத்திற்கு உள்ளாகும் இந்தப் புனித (?) வேதத்திற்கு, 1971ல் வெளியிடப்பட்ட மறு திருத்தம் செய்யப்பட்ட தரமிகு பதிப்பின் முன்னுரையில் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் புகழ் மாலைகளையும் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பாராட்டுக்களைக் கண்டு நாம் மெய் சிலிர்ப்பதற்குள்ளாக, மேனி புல்லரிப்பதற்குள்ளாக, அந்த வெளியீட்டு நிறுவனம் அப்படியே அந்தர் பல்டியடிப்பதைப் பாருங்கள்.

இருந்தும் KJV பெரும் குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றது. காரணம் என்ன?

அப்போதைக்குக் கிடைத்த பைபிளின் மூல கையேட்டுப் பிரதிகளின் அடிப்படையில் தான் KJV உருவாக்கப்பட்டது. KJV உருவாக்கப்பட்ட பின் 19ஆம் நூற்றாண்டில் பைபிள் ஆய்வு வளர்ச்சி கண்டது. KJV காலத்தில் கண்டுபிடிக்கப்படாத பைபிளின் பல மூல கையேட்டுப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தக் கையேட்டுப் பிரதிகளில் காணப்பட்ட பல விஷயங்கள் KJVயில் காணப்படவில்லை. மூலப்பிரதிகளில் உள்ளது போன்று மொழி பெயர்ப்பில் இல்லாதது சாதாரண குறைபாடல்ல! இவை ஒன்றிரண்டு குறைபாடுகளுமல்ல! அசாதாரண, மிகப் பெரிய குறைபாடுகள் ஆங்கில மொழியாக்கத் திருத்தத்தின் அவசியத்தை உணர்த்தின. அதன்படி 1870ல் இங்கிலாந்து திருச்சபை மூலம் அந்தத் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் அம்மொழிபெயர்ப்புக்குக் காப்புரிமை செய்யப்பட்டது.

இவ்வாறு அந்த முன்னுரை முடிகின்றது.

நாம் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், மொழி பெயர்ப்பு வெளியான பின்பும் மூல நூற்கள் கண்டுபிடிக்கப்படும் அநியாயத்தைத் தான்.

அதன் பின்னரும் மாற்றம், மாற்றம் எனத் தொடர் கதையாகும் மாற்றங்கள் தான்.

குறைபாடுகள் உள்ள மொழியாக்கத்தைப் பின்பற்றிச் செயல்பட்ட மக்களின் கதி என்ன? அவர்களுக்குப் பரலோக ராஜ்யத்தில் விமோசனம் கிடைக்குமா? அல்லது அழிவு கிடைக்குமா?

பைபிள் இறைவேதம் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? என்று கேட்கும் கிறித்தவ அழைப்பாளரிடம் மேற்கண்ட கேள்விகளை எழுப்பக் கடமைப்பட்டுள்ளோம்.

அத்துடன் இத்தனை விதமான, ரகமான பைபிள்களில் எந்த பைபிளை நம்பச் சொல்கிறீர்கள்? இவற்றில் எது இறை வேதம்? கத்தோலிக்க பைபிளா? புராட்டஸ்டண்ட் பைபிளா? 1611 பதிப்பா? 1881 பதிப்பா? 1952 பதிப்பா? 1971 பதிப்பா?

குறைபாடுகள் உள்ள இறைவேதமா? குறைபாடுகள் களையப்பட்ட இறைவேதமா? எந்த இறை வேதத்தை ஒப்புக் கொள்ளச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் போதும். கிறித்தவ அழைப்பாளர் மறுபடி எப்படி வாய் திறக்கிறார் என்று பார்க்கலாம்.

————————————————————————————————————————————————

இறை வேதத்தின் நோக்கங்கள்

வேதம் என்று சொல்கின்ற போது அதற்கென்று சில நோக்கங்கள் இருக்க வேண்டும் என்று பைபிள் கூறுகின்றது.

அந்த நோக்கங்கள் என்ன?

மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது.

திமாத்தியூ 3:16

  1. ஒரு கொள்கையைப் போதிக்க வேண்டும்.
  2. தவறுக்காக நம்மைக் கண்டிக்க வேண்டும்.
  3. நம்மைத் திருத்த வேண்டும்.
  4. நமக்கு நேரிய வழியைக் காட்ட வேண்டும்.

இதைத் தாண்டி வேறு நோக்கங்கள் இல்லை என்று சொல்லி விடலாம். பைபிள் கூறும் இந்த நோக்கங்களின் அடிப்படையிலேயே பைபிளை ஆய்வு செய்வோம். பைபிளின் முதல் நூலான ஆதியாகமத்தின் 38வது அதிகாரத்தைப் படியுங்கள்.

1 அக்காலத்தில் யூதா தம் சகோதரர்களை விட்டுப் பிரிந்து ஈரா என்ற பெயருடைய அதுல்லாமியனிடம் சென்றார்.

2 அங்கே சூவா என்ற கானானியன் ஒருவனின் மகளைக் கண்டு, அவளை மணமுடித்து, அவளோடு கூடி வாழ்ந்தார்.

3 அவள் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஏர் என்று பெயரிட்டாள்.

4 அவள் மீண்டும் கருவுற்று, ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஓனான் என்று பெயரிட்டான்.

5 கருவளம் மிகுதியாயிருந்ததால் அவள் மேலும் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சேலா என்று பெயரிட்டாள். அவனைப் பெற்றெடுத்தபோது அவள் கெசீபில் இருந்தாள்.

6 யூதா தம் தலை மகன் ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் ஒரு பெண்ணை மணமுடித்தார்.

7 யூதாவின் தலைமகன் ஏர் ஆண்டவர் முன்னிலையில் கொடியவனாய் இருந்ததால், ஆண்டவர் அவனை சாகடித்தார்.

8 அப்போது யூதா தம் மகன் ஓனானை நோக்கி, “நீ உன் சகோதரன் மனைவியோடு கூடி வாழ். சகோதரனுக்குரிய கடமையைச் செய்து, உன் சகோதரனுக்கு வழிமரபு தோன்றச் செய்” என்றார்.

9 அந்த வழிமரபு தனக்குரியதாய் இராதென்று அறிந்து, ஓனான் அவளோடு உடலுறவு கொள்கையில், தன் சகோதரனுக்கு வழிமரபு தோன்றாதவாறு தன் விந்தைத் தரையில் சிந்தி வந்தான்.

10 அவன் செய்தது தம் பார்வையில் தீயதாய் இருந்ததால், ஆண்டவர் அவனையும் சாகடித்தார்.

11 ஆதலால் யூதா தம் மருமகள் தாமாரை நோக்கி, “என் மகன் சேலா பெரியவனாகும் வரை உன் தந்தை வீட்டில் விதவையாய்த் தங்கியிரு” என்றார். ஏனெனில் அவனும் தன் சகோதரரைப் போல் சாவானோ என்று அஞ்சினர். தாமாரும் அவ்விதமே தம் தந்தை வீட்டிற்குச் சென்று அங்குத் தங்கியிருந்தார்.

12 பல நாள்களுக்குப் பின், சூவாவின் மகளான யூதாவின் மனைவி இறந்தாள். யூதா அவளுக்காகத் துக்கம் கழித்தபின், தம் மந்தைக்கு உரோமம் கத்தரிப்பவர்கள் இருந்த திம்னாவுக்குத் தம் அதுல்லாமிய நண்பன் ஈராவுடன் சென்றார்.

13 அப்போது “உன் மாமனார் தம் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார்” என்று தாமாருக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது.

14 சேலா பெரியவனாகியும் தம்மை அவனுக்கு மனைவியாகக் கொடுக்கவில்லை என்று அவர் கண்டு தமது கைம்மைக் கோலத்தைக் களைந்துவிட்டு, முக்காடிட்டுத் தம்மை மறைத்துக்கொண்டு திம்னாவுக்குச் செல்லும் பாதையில் இருந்த ஏனயிம் நகர்வாயிலில் அமர்ந்து கொண்டார்.

15 யூதா அவரைக் கண்ட போது, அவர் முகம் மூடியிருந்ததால் அவர் ஒரு விலை மாது என்று நினைத்தார்.

16 அவர் திரும்பிப் பாதையோரம் அவரிடம் சென்று, அவர் தம் மருமகளென்று அறியாமல் தம்முடன் உடலுறவு கொள்ளுமாறு அழைத்தார். அதற்கு அவர், “என்னோடு உடலுறவு கொள்வதற்கு என்ன தருவீர்?” என்று கேட்டார்.

17 அவர், “என் மந்தையிலிருந்து உனக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாய் அனுப்புகிறேன்” என்றார். அதற்கு அவர், “நீர் அதை அனுப்புமட்டும் எனக்கு ஓர் அடைமானம் தருவீரா?” என்று கேட்டார்.

18 “அடைமானமாக உனக்கு நான் என்ன தர வேண்டும்?” என்று அவர் கேட்க, அவர் “உம்முடைய முத்திரை மோதிரத்தையும் இடைவாரையும் கைக்கோலையும் தரவேண்டும்” என்றார். அவருக்கு அவற்றைக் கொடுத்த பின் அவருடன் உடலுறவு கொண்டார். அவரும் கருவுற்றார்.

19 பின்பு, அவர் எழுந்துபோய், தம் முக்காட்டை எடுத்துவிட்டு விதவைக்குரிய ஆடைகளை அணிந்து கொண்டார்.

20 அவரிடம் தாம் கொடுத்திருந்த அடைமானத்தைத் திரும்பப் பெறுமாறு, யூதா தம் அதுல்லாமிய நண்பன் மூலம் ஒரு வெள்ளாட்டுக் கிடாயை அனுப்பினார். அவனோ அவரைக் காணவில்லை.

21 அங்கிருந்த ஆள்களை நோக்கி, “ஏனயிம் அருகே வழியில் இருந்த விலைமாது எங்கே?” என்று கேட்க, அவர்கள், “இங்கே விலைமாது எவளுமில்லை” என்றனர்.

22 அவன் யூதாவிடம் திரும்பி வந்து, “நான் அவளைக் காணவில்லை. மேலும் அங்கிருந்த ஆள்கள், “இங்கு விலைமாது எவளுமில்லை” என்றனர்” என்று சொன்னான்.

23 யூதா, “அவளே வைத்துக் கொள்ளட்டும்; இல்லையேல் நம்மைப் பார்த்துப் பிறர் சிரிப்பர். நானும் இந்த ஆட்டுக்கிடாயை அவளுக்கு அனுப்பி வைத்தேன். உன்னாலும், அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார்.

24 மூன்று மாதம் சென்ற பின்னர், “உம் மருமகளாகிய தாமார் வேசித்தனம் பண்ணினாள். வேசித்தனத்தினால் கருவுற்றிருக்கிறாள்” என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவர், “அவளை இழுத்துக் கொண்டு வாருங்கள்; அவள் எரிக்கப்பட வேண்டும்” என்றார்.

25 அவ்வாறே அவரை இழுத்துக் கொண்டு வருகையில், அவர் தம் மானமாருக்கு, “இந்தப் பொருள்கள் எவனுடையவையோ அவனாலேயே நான் கருவுற்றிருக்கிறேன். இந்த முத்திரை மோதிரமும் இடைவாரும் கைக்கோலும் யாருடையவை என்று பாரும்” என்று சொல்லியனுப்பினார்.

26 யூதா அவற்றைப் பார்த்தறிந்து, “அவள் என்னைக் காட்டிலும் நேர்மையானவள். அவளை நான் என் மகன் சேலாவுக்கு மணமுடிக்காமல் போனேனே!” என்றார். ஆயினும், அதற்குப்பின் அவர் அவரோடு உடலுறவு கொள்ளவில்லை.

27 தாமாருக்குப் பேறுகாலம் வந்த போது, அவர் வயிற்றில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன.

28 அவர் பிள்ளை பெறுகிற வேளையில் ஒரு பிள்ளை கையை வெளியே நீட்டியது. மருத்துவப்பெண் அதன் மணிக்கட்டில் கருஞ்சிவப்பு நூலைக் கட்டி “இதுவே முதலில் வந்தது” என்றாள்.

29 ஆனால், அது தன் கையைத் திரும்ப உள்ளே இழுத்துக் கொண்டபின், மற்ற பிள்ளை வெளிப்பட்டது. அப்பொழுது அவள் “நீ கருப்பையைக் கிழித்துக் கொண்டு வந்தவன் அல்லவா!” என்று சொன்னாள். எனவே அவனுக்குப் “பெரேட்சு” என்று பெயரிடப்பட்டது.

30 பின் கருஞ்சிவப்பு நூல் கையில் கட்டப்பெற்ற அவன் சகோதரன் வெளிப்பட அவனுக்கு “செராகு” என்று பெயரிடப்பட்டது.

ஆதியாகமம் 38வது அதிகாரம்

இந்தக் கதை சொல்வதென்ன?

ஜுடா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் யூதா என்பவர் யூத இனத்தின் தந்தை ஆவார். யூதச் சிந்தனைக்கு இவரது பெயரைக் கொண்டு தான் யூதயிஸம் அல்லது ஜுடாயிஸம் என்று குறிப்பிடப்படுகின்றது.

யூதாவுக்கு மூன்று மகன்கள். இதில் மூத்த மகன் ஏர் என்பவன் கொடியவனாக இருந்ததால் கடவுள் அவனைக் கொன்று விடுகின்றார்.

இந்தச் செய்தி, பைபிள் கூறும் வேதத்தின் நோக்கங்களில் இரண்டாவது நோக்கமான கண்டித்தல் என்ற நோக்கத்தின் கீழ் வருகின்றது.

மூத்த சகோதரன் எந்தவித சந்ததியும் இல்லாமல் இறந்து விட்டால், இறந்தவனின் அடுத்த சகோதரன் மூத்தவனின் மனைவியை, அதாவது அண்ணியை மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்பது யூதர்களின் வழக்கம். மறைந்த அண்ணனின் பெயர் நிலைபெற வேண்டும் என்பதற்காக! யூதாவின் உத்தரவுப்படி, ஏரின் அடுத்த சகோதரன் ஓனான் தனது அண்ணியை மணமுடித்துக் கொள்கிறான்.

ஓனானிஸம்

அண்ணியை மணந்த ஓனானின் உள்ளத்தில் பொறாமை ஏற்பட்டது. இவள் மூலம் தனக்குக் குழந்தை பிறந்தால் அது தன் குழந்தையாக இருக்காது. தனது அண்ணனின் வாரிசாகத் தான் இருக்கும் என்று கருதினான். அதனால் ஓனான் உச்சக்கட்ட நேரத்தில் விந்துத் துளியை தரையில் விட்டு விட்டான். அதனால் கோபப்பட்ட கடவுள் அவனையும் சாகடித்து விட்டார்.

இந்த மரண தண்டனையும் வேதத்தின் நோக்கங்களில் ஒன்றான “கண்டித்தல்’ என்ற நோக்கத்தின் கீழ் வருகின்றது.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனையை அனுபவிக்க வேண்டும். அது தான் இங்கும் நடந்திருக்கின்றது. தப்புச் செய்த ஓனான் கடவுள் புத்தகத்திலேயே மறக்கடிக்கப்பட்டு விட்டான். ஆனாலும் கிறித்தவ வேத விற்பன்னர்கள் ஓனானுக்கு வேறு வகையில் உயிர் கொடுத்து நினைவு கூர்கின்றனர்.

ஆங்கிலத்தில் Coitos Interruptus என்று சொல்வார்கள். அதாவது இந்திரியம் பெண்ணுறுப்பில் போய்ச் சேர்வதற்குள்ளாக ஆணுறுப்பை வெளியே எடுத்து விடுவதை இவ்வாறு குறிப்பிடுகின்றனர். அரபியில் அஸ்ல் என்று பெயர். இதற்குக் கிறித்தவ வேத விற்பன்னர்கள், தங்களுடைய நூற்களில் ஓனானிஸம் என்று சொல்லிக் கொள்கின்றனர்.

யூதாவின் இரண்டாவது மகனான ஓனானும் கடவுளால் கொல்லப்பட்டு விட்டான். இப்படி இரண்டாவது ஒரு சோக நிகழ்ச்சி நடந்தது. மாமனார் யூதா, தனது மருமகள் தாமாரை அழைத்து, “நீ உன் தந்தை வீட்டிற்குச் செல்! மூன்றாம் மகன் சேலா திருமணப் பருவத்தை அடைந்ததும் உனக்கு மணமுடித்து வைக்கின்றேன்” என்று வாக்குக் கொடுக்கின்றார்.

பழிவாங்கும் படலம்

யூதா தனது வாக்கைக் காப்பாற்றவில்லை. காரணம் அவருக்கு உள்ளுக்குள் பயம். மூத்த மகனிடமும், அடுத்த மகனிடமும் விளையாடிய கடவுளின் சாபம் எனும் பிடி இளைய மகன் சேலாவிடமும் விளையாடி விடக்கூடாது என்று வெலவெலத்துப் போயிருந்தார்.

சேலாவுக்குத் திருமண வயதாகியும் தாமாரைக் கட்டிக் கொடுக்கவில்லை.  தன் வாக்குறுதியை யூதா வசதியாக மறந்து விட்டார்.

தனக்கு வர வேண்டிய சந்ததி வித்தைப் பெறுகின்ற உரிமையை யூதா பறித்து விட்டாரா? என்று தாமார் கடுமையான ஆத்திரம் கொண்டாள். அதற்காக யூதாவைப் பழிவாங்கத் துடித்தார். இந்த சமயத்தில், தமது ஆட்டு மந்தைக்கு முடி வெட்டுவதற்காக திம்னா என்ற இடத்திற்கு யூதா வரப் போவதாக தாமாருக்குத் தகவல் கிடைக்கின்றது.

விலை மாது வேடத்தில்…

திம்னாவுக்கு வருகின்ற தனது மாமனாரை முகமூடி போட்டுக் கொண்டு மடக்கிப் பிடிக்கின்றார். தாமாரை தமது மருமகள் என்று அடையாளம் கண்டு கொள்ளாமல் அவளை விலைமாது என்றெண்ணி, யூதா அவளை விபச்சாரத்திற்கு அழைக்கிறார்.

“என்னுடன் உடலுறவு கொள்வதற்கு என்ன தருவாய்?” என்று தாமார் கேட்கிறாள். “ஓர் ஆட்டுக்குட்டி தருவேன்” என்று யூதா வாக்களிக்கின்றார். “வெள்ளாட்டுக் கிடாயை என்னிடம் அனுப்பும் வரை அதற்கு அடைமானமாக என்ன தருவீர்?” என்று தாமார் கேட்டாள். அதற்கு யூதா, “என்ன வேண்டும்?” என்று கேட்டார். “உம்முடைய முத்திரை மோதிரத்தையும், இடை வாரையும், கைக்கோலையும் தர வேண்டும்” என்றாள் தாமார். அவளிடம் அவற்றைக் கொடுத்த பின் யூதா அவளுடன் உடலுறவு கொண்டு, அதன் மூலம் தாமார் கருவுற்றாள்.

இது தான் பைபிள் ஆதியாகமத்தின் 38வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒழுக்கப் படிப்பினை

இப்போது நமது கேள்விக்கு வருவோம்.

வேதத்தின் நோக்கங்கள் என்று பைபிள் கூறிய நான்கு நோக்கங்களில் இது எந்த நோக்கத்தின் கீழ் வருகின்றது? கடவுளின் வேதம் என்று கிறித்தவர்கள் நம்புகின்ற பைபிளில் இடம் பெறுகின்ற ஆபாசமான, அசிங்கமான, சரச சல்லாபமான சம்பவத்தின் மூலம் நம்முடைய பிள்ளைகளுக்கு என்ன பாடமும் படிப்பினையும் கிடைக்கப் போகின்றது?

குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைப் போதிக்கின்ற சம்பவங்களை, சரித்திரங்களை நாம் அவர்களிடம் சொல்லலாம். இதைச் சொல்ல முடியுமா?

டாக்டர் வெர்னான் ஜோன்ஸ் என்ற புகழ்மிக்க உளவியல் மருத்துவர் பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சோதனை நடத்தினார். வகுப்பறையில் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லப்பட்டன. கதைகளின் கதாநாயகன் ஒருவர் தான். ஆனால் ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு கதாபாத்திரத்தில் வந்தனர்.

குழந்தைகளில் ஒரு சாராரிடம், டிராகன் எனப்படும் கொடிய மிருகத்தை வெட்டி வீழ்த்திய ஜார்ஜ் என்ற கதாநாயகன் வெற்றி வீரராகத் தெரிந்தார். குழந்தைகளில் மற்றொரு சாராரோ பயத்தில் கிடுகிடுத்து தாயின் மடியில் அடைக்கலம் தேடினர். இத்தனைக்கும் மிக மென்மையான போக்கில் இந்தக் கதைகள் படைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அது குழந்தைகளில் மனநிலையை நிரந்தரமாகப் பாதிக்கச் செய்து விட்டது. மிகச் சிறிய வகுப்பறை சூழலில் கூட இதன் பிரதிபலிப்பைக் காண முடிந்தது

இவ்வாறு தனது ஆய்வில் டாக்டர் ஜோன்ஸ் தெரிவிக்கின்றார்.

புனித (?) பைபிள், கிறித்தவக் குழந்தைகளிடம் கொலை, கற்பழிப்புகளை, நெருங்கிய உறவுகளிடம் விபச்சாரம் செய்வதை, மிருகத்தனங்களை உருவாக்கியுள்ளது என்பதைப் பத்திரிகைகளில் வரும் செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

தங்களது கடவுள் இல்லத்தில் வைத்தே ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மத்தியில் திருமணத்தை இவர்கள் நடத்தி வைப்பதும் இதன் எதிரொலியாகத் தான்.

இப்போது யூதாவின் விபச்சார சம்பவத்திற்கு வருவோம்.

தாமார், விலை மாது விளையாட்டில் இறங்கி அதற்கு விலையாகக் கருவில் ஒரு குழந்தையையும் சுமந்திருக்கின்றாள் என்ற செய்தி மூன்று மாதங்களுக்குப் பிறகு யூதாவுக்குத் தெரிய வருகின்றது. உடனே யூதா கொதித்தெழுந்து, “இழுத்து வாருங்கள் அந்த விபச்சாரியை! கொளுத்துங்கள் அவளை தீயில்!” என்று கர்ஜிக்கின்றார்.

தீப்பிழம்பாய் தெறிக்கும் தனது மாமனாரின் உத்தரவைக் கேட்ட தாமார், முத்திரை மோதிரத்தையும், இடை வாரையும், கைக்கோலையும் அனுப்பி வைக்கிறாள். விலை மாதுக்குப் பின்னால் உள்ள விஷமி யார் என்பதை இந்த மூன்று பொருட்களும் தெரிவித்து விட்டன. தீப்பிழம்பாகக் கொதித்தவர் பனிப் பாறையாக உறைந்து போகின்றார்.

ஏசுவின் தலைமுறைப் பட்டியலில் யூதா

இந்த யூதா தான் இயேசுவின் தலைமுறைப் பட்டியலில் இடம் பெறுகின்றார். இதன் மூலம் யூதாவையும், தாமாரையும் கிறித்தவ நற்செய்தி எழுத்தாளர்கள் என்றென்றும் வாழ வைத்திருக்கின்றார்கள். இது மிகவும் வெட்கக் கேடும் வேதனையுமாகும்.

இதில் நாம் எழுப்பக் கூடிய கேள்வி இது தான்.

இறை வேதத்தின் நோக்கங்கள் என்று திமொத்தேயு 3:16 கூறுகின்ற நான்கு நோக்கங்களில் எந்த நோக்கத்தின் கீழ் இந்தச் சம்பவம் வருகின்றது?

மகனுடைய மனைவியுடன் விபச்சாரம் செய்த யூதாவின் ஈனச் செயலை எந்த நோக்கத்தின் கீழ் சேர்ப்பது?

யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம்.

மத்தேயு 1:3

ஏசுவின் தலைமுறைப் பட்டியலைக் கூறும் இந்த வசனத்தின்படி இவர்கள் கடவுளின் வேதத்தில் புகழப்படுகின்றார்கள். கடவுள் பெற்ற (?) ஒரே ஒரு மகனான ஏசுவின் பாட்டி, பாட்டனார் என்ற பாக்கியத்தை இவர்கள் பெற்றிருக்கின்றார்கள். ஏசுவின் தலைமுறைப் பட்டியலில் இடம் பெறுவது சாதாரண காரியமல்ல!

ஒழுக்கமே உன் விலை என்ன என்று கேட்ட யூதாவுக்குக் கடவுளின் ஆசீர்வாதம்!

யூதாவின் மகன் ஏர் தப்பு செய்தார் என்பதற்காக அவர் கடவுளால் கொல்லப்படுகின்றார். அவரது மற்றொரு மகன் ஓனான், விந்தைத் தரையில் சிந்தியதற்காகக் கடவுளால் தண்டிக்கப்படுகின்றார்.

ஆனால் தந்திரமாக சதி செய்து விபச்சாரியாக வந்து மாமனாரின் விந்தைக் கருவில் ஏந்திய தாமாருக்குக் கடவுளின் தண்டனை இல்லை.

விலை மாது என்று நினைத்து அவளுடன் விபச்சாரம் செய்த யூதாவுக்கும் கடவுளின் தண்டனை இல்லை.

வேதத்தின் நான்கு நோக்கங்கள் என்ன ஆயிற்று? உங்கள் வீட்டு வாசல் கதவுகளைத் தட்டும் நற்செய்தியாளர்களிடம் விடை கேளுங்கள். சரியான விடை அளித்து விட்டால் தகுந்த சன்மானம் வழங்குங்கள்.

தடை செய்யப்பட வேண்டிய ஒரு நூல்

THE MOST DANGEROUS BOOK (the Bible) ON EARTH, KEEP IT UNDER LOCK AND KEY.

“இந்தப் புவியில் மிக மிக அபாயகரமான நூல் இது (பைபிள்). இதனை உள்ளே வைத்துப் பூட்டி சாவியைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று ஜார்ஜ் பெர்னாட் ஷா மிகச் சரியாகவே சொல்லியிருக்கின்றார்.

குழந்தைக்கு பைபிள் கதைகளைச் சொல்லிக் காட்டுவது, பாலியல் ஒழுக்கத்தை விவாதத்திற்கு உட்படுத்தும். அனைத்து வாய்ப்புகளையும் திறந்து விடும்.

தகாதவற்றைக் களையப்படாத பைபிள், தணிக்கைக் குழுவினரின் தரச் சான்றிதழில் ஆபாசச் சான்றிதழ் வழங்குவதற்குத் தகுதியானதாகும்.

இவ்வாறு The Plain Truth – 1977 என்ற நூல் கூறுகின்றது.

இந்த ஆபாசக் களஞ்சியத்தை இறை வேதம் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஏற்றுக் கொண்டால், தந்தை வீட்டிலிருக்கும் போது மகன் தன் மனைவியை தனியாக விட்டு விட்டுச் செல்ல முடியாது.

எனவே ஒழுக்கத்தைப் போதிக்கின்ற உண்மையான இறை வேதமான திருக்குர்ஆனை நோக்கி வாரீர் என கிறித்தவ சமுதாயத்தை அழைக்கிறோம்.

————————————————————————————————————————————————

நகைப்பிற்குரிய வாக்குமூலம்

“இன்றைக்கு நாம் படிக்கும் இந்த பைபிள் பற்பல பிரதி எடுப்பவர்களின் கைவண்ணமாகும். அவர்கள் பல்வேறு எடுத்துக் காட்டுகளில் தங்கள் மொழி பெயர்ப்புப் பணியை மிகத் துல்லியமாகச் செய்திருக்கிறார்கள். ஆனால் பிரதி எடுப்பவர்கள் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்!”

அருளப்பட்ட இறைச் செய்தியின் மூலத்திலிருந்து நகல் எடுக்கும் போது மனிதத் தன்மை உள்ளே நுழைந்து விடுகின்றது. இன்று வரை மூல மொழியில் உள்ள ஆயிரக்கணக்கான நகல்கள் சரியான பிரதிகள் அல்ல!

இதன் விளைவு இரண்டு பிரதிகளில் ஒன்றுடன் ஒன்று ஒத்ததாக இல்லை.

கிறித்தவர்களுடைய கிரேக்க வேத நூல்களின் மூலம் அழிக்கப்பட்டது என்பது ஆதாரப்பூர்வமான தெளிவான விஷயமாகும்.

இந்த வாக்குமூலங்கள் அனைத்தும் Seventh Day Adventist Church என்ற கிறித்தவ அமைப்பின் அறிஞர்கள் தங்கள் பைபிளின் முன்னுரையில் தெரிவித்த கருத்துக்களாகும். இப்போது அந்த முன்னுரை நீக்கப்பட்டு விட்டது என்பது தனி விஷயம்.

மூல வேதம் அழிந்து விட்டது என்று அவர்களே நகைப்பிற்குரிய வாக்குமூலத்தைத் தருகின்றனர். மூலமே அழிந்து போய் விட்டது. இந்த ஆக்கத்தில் இதற்கு மொழியாக்கம் வேறு! இதுவெல்லாம் இறை வேதமா?

“நீதிமன்றங்களில் ஒரு சாட்சி உண்மை சொல்கிறார் என்று நினைத்துத் தான் அவரது சாட்சியத்தை ஏற்கிறோம். அவர் மீது சந்தேகப்படாத வரை அல்லது அவர் பொய்யர் என்று நிரூபணம் ஆகாத வரை அவருடைய சாட்சியத்தை மறுக்க மாட்டோம். பைபிளுக்கு இது போன்ற ஒரு வாய்ப்பை வழங்கி அது கூறுகின்ற செய்தியை சற்று நிதானத்துடன் கேட்போம்”

இவ்வாறு சொல்வது யார்?

டாக்டர் கிரஹாம் ஸ்க்ராஜ்ஜி, பைபிள் இறை வேதமா? என்ற தனது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.

அஹ்மத் தீதாத் குறிப்பிடுகின்றார்: டாக்டர் கிரஹாம் ஸ்க்ராஜ்ஜியின் கோரிக்கை நியாயமானது தான்! அவர் சொல்வதைத் தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

பைபிள் தன்னைப் பற்றி என்ன சொல்கின்றது என்று பார்ப்போம்.

ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகிய ஐந்து நூற்களில் 700 வாக்குமூலங்கள் உள்ளன.

அவை தெளிவாகவே “இந்தப் புத்தகங்களின் ஆசிரியர்கள் கடவுள் இல்லை. ஏன்? இந்த நூற்களை எழுதியதாகக் கருதப்படும் தூதர் மூஸாவுக்கும் இதற்குமே எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று தெரிவிக்கின்றன.

கீழே வரும் இந்த வசனங்களைப் பாருங்கள்.

மோசே ஆண்டவரிடம், “சீனாய் மலை மேல் மக்கள் ஏறி வர மாட்டார்கள். ஏனெனில், “மலைக்கு எல்லை அமைத்து அதைப் புனிதப்படுத்து” என்று கூறி நீர் எங்களை எச்சரித்துள்ளீர்” என்றார்.

யாத்திராகமம் 19:23

ஆண்டவர் அவரை நோக்கி, “நீ கீழே இறங்கிச் சென்று ஆரோனுடன் மேலேறி வா. குருக்களும் மக்களும் ஆண்டவரிடம் வருவதற்காக எல்லை மீற வேண்டாம்; இல்லையெனில் ஆண்டவர் அவர்களை அழித்தொழிப்பார்” என்றார்.

யாத்திராகமம் 19:24

ஆண்டவர் மோசேயை நோக்கி, “இறங்கிச் செல். மக்கள் ஆண்டவரைப் பார்க்க விரும்பி எல்லை மீறி வராதபடியும், அவ்வாறு வந்து பலர் சாகாதபடியும் அவர்களை எச்சரிக்கை செய்.

யாத்திராகமம் 19:21

ஆண்டவர் மோசேயிடம், “இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக்கொண்டு மக்கள் முன் செல்; நைல் நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ.”

யாத்திராகமம் 17:5

ஆண்டவர் மோசேயிடம் கூறியது;

லேவியராகமம் 27:1

இவையெல்லாம் கடவுளுடைய வார்த்தையுமில்லை! கடவுளின் தூதர் மோசேயின் வார்த்தையுமில்லை என்று நன்கு தெளிவாகத் தெரிவிக்கின்றன. யாரோ சொல்லக் கேட்டு ஒரு மூன்றாம் நபர் எழுதியதைத் தான் இவை சுட்டிக் காட்டுகின்றன.

மூஸாவின் இறப்புச் செய்தி

பைபிள் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களை மூஸா தான் எழுதினார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. ஆனால் பின்வரும் செய்தியைப் பார்த்தால் நிச்சயமாக இது மூஸா (மோசே) எழுதியதல்ல என்பதை யாரும் விளங்கிக் கொள்ளலாம்.

எனவே, ஆண்டவர் கூறியபடியே, அவர் தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார்.

மோவாபு நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் அவர் அவரை அடக்கம் செய்தார். ஆனால் இன்றுவரை எந்த மனிதருக்கும் அவரது கல்லறை இருக்குமிடம் தெரியாது.

மோசே இறக்கும் போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கினதுமில்லை; அவரது வலிமை குறைந்ததுமில்லை.

மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் மக்கள் மோசேக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர். மோசேக்காக இஸ்ரயேல் மக்கள் அழுது துக்கம் கொண்டாடின நாள்கள் நிறைவுற்றன.

நூனின் மகனாகிய யோசுவாவின் மேல் மோசே தம் கைகளை வைத்ததால், அவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப் பெற்றிருந்தார். இஸ்ரயேல் மக்கள் யோசுவாவுக்குச் செவிகொடுத்து, மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி நடந்தார்கள்.

ஆண்டவர் நேருக்குநேர் சந்திக்க மோசேயைப்போல், இறைவாக்கினர் வேறெவரும் இஸ்ரயேலில் இதுகாறும் எழுந்ததில்லை.

உபாகமம் 34:5-10

மோஸே இந்த ஆகமங்களை எழுதியிருந்தால், தான் மரணிக்கும் முன்பே மோஸே தனக்குத் தானே இறப்பு செய்தி எழுதுவாரா? எனவே நிச்சயமாக இது இறை வேதமோ அல்லது இறைத் தூதர் மூஸா எழுதியதோ இல்லை என்பது நிரூபணமாகின்றது.

யாரோ ஒரு அனாமதேயம் எழுதியதைத் தான் மோஸே எழுதியது என்று கிறித்தவர்கள் நம்புகின்றனர் என்பதில் சந்தேகமில்லை.

————————————————————————————————————————————————

தடுமாறும் தலைமுறைப் பட்டியல்

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அழிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.

யோவான் 3:16

பைபிளின் இந்த வசனத்தின்படி, ஏசு கடவுள் பெற்ற பிள்ளை! ஒரு பக்கம் ஏசுவைக் கடவுளின் குமாரர் என்று சொல்லி விட்டு, மறுபக்கம் ஜோசப்பின் குமாரர் என்று குறிப்பிடுகின்றனர். ஏசு தான் கடவுளின் ஒரே பிள்ளை ஆயிற்றே! அவருக்கு ஏன் ஜோசப் என்ற தந்தை? தலைமுறை? என்று கேட்டால் அதற்கு அவர்கள் சொல்கின்ற பதில்:

தன்னுடைய மகனுக்கு இது போன்ற தந்தைகளை, தலைமுறைகளைக் கொடுப்பதைக் கூட அவர் ஏளனமாக நினைப்பதில்லை என்ற அளவுக்குப் பாவிகளைக் கர்த்தர் நேசிக்கிறார்.

இது தான் அவர்கள் கூறுகின்ற குருட்டுத்தனமான பதில்!

பைபிள் மனிதக் கை பட்டது தான்; ஆனால் புனிதமானது.

பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒருவர் தான்.

ஏசு கடவுளின் குமாரர்; அதே சமயம் அவர் ஜோசப்பின் குமாரர்.

இப்படி இவர்களது நீதிமன்றத்தில் ஒருவர் பேசினால் பைத்தியம் என்று சம்பந்தப்பட்டவரைத் தள்ளி விடுவார்கள். ஆனால் இவர்களது வேதம் என்று வருகின்ற போது இதைப் புத்திசாலித்தனம் என்று மெச்சிக் கொள்கிறார்கள்.

இவ்விஷயத்தில் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான்; வேறு யாருமில்லை என்று சொல்லி விடலாம்.

ஜோசப்பின் குமாரர் என்று இவர்கள் கூறும் ஏசுவின் தலைமுறைப் பட்டியலிலாவது முரண்பாடு இல்லாமல் இருக்கின்றதா என்றால் அதிலும் முரண்பாடு தான்.

மத்தேயுக்கு ஒரு தலைமுறைப் பட்டியலை அறிவித்த கடவுள், லூக்காவுக்கு வேறொரு தலைமுறைப் பட்டியலை அளித்திருக்கின்றார். இவ்விருவரில் யார் பொய் சொல்கிறார்? அல்லது இவ்விருவரும் சொல்வது பொய்யா? இருவரும் பொய் கூறுகின்றனர் என்பது தான் முஸ்லிம்களின் நிலைப்பாடு! காரணம் ஏசுவை தந்தையின்றிப் பிறந்தவர் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

“இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை ஏற்படும்?” என்று அவர் கேட்டார். “தான் நாடியதை அல்லாஹ் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியம் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் “ஆகு’ என்பான். உடனே அது ஆகி விடும்” என்று (இறைவன்) கூறினான்.

அல்குர்ஆன் 3:47

ஆனால் இவர்களோ, ஏசுவை கடவுளின் குமாரர் என்று கூறிக் கொண்டு இன்னொரு பக்கம் ஜோசப்பின் குமாரர் என்று சொல்கின்றனர். அதன் அடிப்படையில் வம்சாவழிப் பட்டியலையும் தருகின்றனர். அந்தப் பட்டியல் இது தான்.

தாவீது

  1. சாலமோன்
  2. ரெகொபெயாம்
  3. அபியா
  4. ஆஸா
  5. யோசபாத்
  6. யோராம்
  7. உசியா
  8. யோதாம்
  9. ஆகாஸ்
  10. எசேக்கியா
  11. மனாசே
  12. ஆமோன்
  13. யோசிய
  14. எகோனியா
  15. சலாத்தியேல்
  16. சொரொபாபேல்
  17. அபியூத்
  18. எலியாக்கீம்
  19. ஆஸோர்
  20. சாதோக்கு
  21. ஆகீம்
  22. எலியூத்
  23. எலெயாஸார்
  24. மாத்தான்
  25. யாக்கோபு
  26. யோசேப்பு

ஏசு

இது தான் மத்தேயு தரும் ஏசுவின் தலைமுறைப் பட்டியல். மத்தேயு 1:6-16 வசனங்களில் இந்தப் பட்டியல் இடம்பெறுகின்றது.

இப்போது லூக்கா தரும் பட்டியலைப் பார்ப்போம்..

தாவீது

  1. நாத்தான்
  2. மாத்தாத்தா
  3. மயினான்
  4. மெலெயா
  5. எலியாக்கீம்
  6. யோனான்
  7. யோசேப்பு
  8. யூதா
  9. சிமியோன்
  10. லேவி
  11. மாத்தாத்
  12. யோரீம்
  13. எலியேசர்
  14. யோசே
  15. ஏர்
  16. எல்மோதாம்
  17. கோசாம்
  18. அத்தி
  19. மெல்கி
  20. நேரி
  21. சலாத்தியேல்
  22. சொரொபாபேல்
  23. ரேஸா
  24. யோவன்னா
  25. யூதா
  26. யோசேப்பு
  27. சேமேய்
  28. மத்தாத்தியா
  29. மாகாத்
  30. நங்காய்
  31. எஸ்லி
  32. நாகூம்
  33. ஆமோஸ்
  34. மத்தாத்தியா
  35. யோசேப்பு
  36. யன்னா
  37. மெல்கி
  38. லேவி
  39. மாத்தாத்
  40. ஏலி
  41. யோசேப்பு

ஏசு

இது லூக்கா தரும் ஏசுவின் தலைமுறைப் பட்டியல். லூக்கா 3:23-31 வசனங்களில் இந்தப் பட்டியல் கூறப்பட்டுள்ளது.

தாவூத் மூலம் சுலைமான் வழியாகத் தோன்றியவர் ஏசு என்று மத்தேயு சொல்கின்றார்.

ஆனால் லூக்காவோ, தாவூத் மூலம் நாத்தான் வழியாகத் தோன்றியவர் ஈஸா என்று சொல்கின்றார். இவர்களில் யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்?

கிறித்தவ நற்செய்தியாளர்கள் தான் இதற்கு முடிவு சொல்ல வேண்டும்.

தாவூதிலிருந்து 27வது தலைமுறையில் ஏசு தோன்றியதாக மத்தேயு கூறுகின்றார்.

தாவூதிலிருந்து 42வது தலைமுறையில் ஏசு தோன்றியதாக லூக்கா சொல்கின்றார். இவ்விரு பட்டியலில் பொதுவாக இடம்பெற்றவர் ஜோசப் தான். இதைத் தவிர இவ்விரண்டில் எந்த ஒற்றுமையும் இல்லை.

இந்தத் தலைமுறைப் பட்டியலில் தாவூதில் துவங்கி ஏசு வரை குறிப்பிட்டுள்ளோம். மத்தேயு தனது பட்டியலை தாவூதுக்கு முன்னால் ஆபிரஹாமிலிருந்து துவக்குகின்றார்.

ஆபிரஹாமிலிருந்து தாவூத் வரையுள்ள தலைமுறைப் பட்டியலில் யூதாவும் ஒருவர். இவர் ஒரு விபச்சார ஆசாமி என்று பைபிள் கூறுகின்றது.

(பார்க்க: ஆதியாகமம் 38வது அத்தியாயம் – இது குறித்து “இறை வேதத்தின் நோக்கங்கள்” என்ற தனித் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது.)

யூதாவும், அவர் தமது மருமகள் தாமாரிடம் விபச்சாரம் செய்து பெற்ற பாரேசும் இந்தத் தலைமுறைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வேசித்தனத்தால் பிறந்தவன், அவனது பத்தாம் தலைமுறை வரைக்கும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது.

அம்மோனியரும் மோவாபியரும், அவர்களது பத்தாம் தலைமுறைவரைக்கும், அவர்களைச் சார்ந்த எவரும் எக்காலத்திலும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையக்கூடாது.

உபகாமம் 23:2, 3

விபச்சார சந்ததியில் தோன்றியவர்கள் கர்த்தரின் சபைக்கு வரக் கூடாது என்று பைபிளின் இந்த வசனம் கூறுகின்றது. ஆனால் ஏசுவின் தலைமுறையிலேயே விபச்சார சந்ததியான பாரேஸ் இருப்பதாக பைபிளின் மற்றொரு பகுதியில் மத்தேயுவும் லூக்காவும் கூறுகின்றனர்.

இப்படித் தனக்குத் தானே பைபிள் முரண்படலாமா?

முரண்படத் தான் செய்யும். காரணம், அது இறை வார்த்தையல்ல! மனித வார்த்தை! அதனால் அதில் கண்டிப்பாக முரண்பாடு இருந்தே தீரும். அவ்வாறு முரண்பாடு இருப்பது தான் பைபிளின் சிறப்பம்சமே! அதைத் தான் நீங்கள் இங்கே பார்க்கின்றீர்கள். இது எப்படி இறை வேதமாக இருக்க முடியும் என்று சிந்தியுங்கள்.

————————————————————————————————————————————————

ஆங்கிலத்தில் வரும் அக்கார்டிங் டூ

சாதாரண ஆங்கிலம் படித்தவர்களுக்குக் கூட According Toஎன்றால் என்ன என்று புரியும். பத்திரிகைகளில் பத்திக்குப் பத்தி இந்த வார்த்தை இடம் பெறும்.

நமது நிருபர் அளித்த தகவலின்படி, முதல்வரின் உதவியாளர் தெரிவித்தபடி, கல்வி இயக்குனரின் அறிவிப்புப்படி என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.

சேலத்தில் நடைபெற்ற கலவரத்தில் 10 பேர் பலி என்று மாவட்ட ஆட்சித் தலைவரை மேற்கோள் காட்டி, பத்திரிகையில் செய்தி வெளியிட்டிருந்தால் நாம் என்ன விளங்கிக் கொள்வோம்? தனக்குக் கிடைத்த தகவலை, தனக்கு வந்த விபரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருக்கின்றார் என்று தான் விளங்குவோம்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்த அந்தச் செய்தி சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். ஒருவேளை நீதிமன்றத்தில் இந்த அறிவிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்து, நீங்கள் தவறான தகவலைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று நீதிபதி கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு அந்த மாவட்ட ஆட்சித் தலைவர், எனக்கு வந்த தகவலைத் தெரிவித்தேன். அந்தச் செய்தி பற்றிய முழு உண்மை தெரியாது என்று ஒன்றிரண்டு நிமிடங்களில் பதில் சொல்லி விட்டுப் போய் விடுவார்.

According to  என்பதன் மதிப்பும் மரியாதையும் இவ்வளவு தான்.

தன்னைத் தானே இறைவேதம் என்று சொல்லிக் கொள்ளும் பைபிளுக்கு வாருங்கள்.

The Gospel according to Mark, The Gospel Accord to Luke, மாற்கு அறிவிக்கின்ற படி நற்செய்தி, லூக்கா அறிவிக்கின்ற நற்செய்தியின் பிரகாரம் என்பது தான் இதன் பொருள்.

ஏன் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்? கிறித்தவ உலகம் தங்களிடம் மூல பைபிள் தொடர்பான 4,000 பிரதிகள் இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்கின்றது. இந்த 4,000 பிரதிகளில் ஒன்றில் கூட லூக்கா தான் எழுதினார், அல்லது மாத்யூ தான் எழுதினார் என்று இவர்கள் சொல்கின்ற ஆசிரியரின் கையொப்பம் இல்லை. அதனால் தான் According Toஎன்ற வழிமுறையைக் கையாள்கிறார்கள்.

மேலே நாம் கொடுத்த உதாரணத்தில் உள்ளதைப் போன்று ஒரு வாதத்திற்கு லூக்காவைக் கேட்டால், எனக்குத் தெரியாது என்று எளிதில் சொல்லி விட்டுப் போய் விடுவார். இப்படி அனாமதேயங்கள் சொன்னதைக் கடவுளின் வார்த்தை என்று எப்படி நம்ப முடியும்?

ஆங்கிலத்தில் இந்த ஒரு குறைந்தபட்ச நியாயத்தையாவது கடைப்பிடித்தார்கள். தமிழில் “மார்க் எழுதின சுவிஷேசம்’, லூக்கா எழுதின சுவிஷேசம்’ என்று இவர்களையே ஆசிரியர்களாக்கி விடுகின்றனர். ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் கடைப்பிடித்த அந்த நியாயத்தை தமிழில் கடைப்பிடிக்கத் தவறி விட்டார்கள். ஆங்கிலத்திலும் தற்போது வெளியாகியுள்ள பைபிளின் சர்வதேச புதிய பதிப்பு (New International) வெளியீட்டில் According Toஎன்ற வார்த்தையை நீக்கி விட்டார்கள் என்பது தனி விஷயம்.

இவர்கள் இவ்வாறு நீக்கியதற்குக் காரணம், மாற்கு, மத்தேயு ஆகியோர் தான் இந்த ஏடுகளின் நேரடி ஆசிரியர்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

கள்ள மத்தேயுவும் நல்ல மத்தேயுவும்

ஏசுவுக்கு மத்தேயு என்ற சீடர் ஒருவர் இருந்தார். அவர் தான் மத்தேயு என்ற புத்தகத்திற்கு ஆசிரியர் என்று கிறித்தவ உலகம் கருதுகின்றது. ஆனால் சீடரான அந்த மத்தேயுவும், சுவிஷேசம் எழுதிய இந்த மத்தேயுவும் ஒன்றா என்பதைப் பின்வரும் வசனத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.

இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

மத்தேயு 9:9

மத்தேயு எழுதியிருந்தால் இந்த வசனம் எப்படி அமைந்திருக்க வேண்டும் தெரியுமா?

சுங்கச்சாவடியில் உட்கார்ந்த மத்தேயுவாகிய என்னைக் கண்டு, தன்னைப் பின் தொடர்ந்து வா என்று ஏசு சொன்னார். நான் அவருக்குப் பின் சென்றேன்.

இப்படித் தான் மத்தேயுவின் வாசகம் அமைந்திருக்க வேண்டும்.

ஆனால் இதற்கு மாற்றமாக, “சுங்கச்சாவடியில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்பவரைக் கண்டு, எனக்குப் பின் வா என்று ஏசு சொன்னார். அவர் எழுந்து அவருக்குப் பின் சென்றார்” என்று பைபிள் கூறுகின்றது.

ஏசுவின் சீடர் மத்தேயு எழுதிய நூலாக இருந்தால், அவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது, “மத்தேயு என்பவர்’ என்று படர்க்கையாகக் கூற மாட்டார். தன்னிலையாகத் தான் கூறுவார். எனவே பைபிளில் உள்ள மத்தேயு என்ற நூல், ஏசுவின் சீடர் மத்தேயு எழுதியதல்ல என்பது தெளிவாகின்றது.

ஜே.பி. ஃபிலிப்ஸின் கண்டுபிடிப்பு

பைபிளில் வரும் மத்தேயு எனும் ஆகமத்தை, ஏசுவின் சீடர் மத்தேயு எழுதவில்லை. இது வேறு மத்தேயு என்று இங்கிலாந்தின் பிரபலமான ஆங்கிலகன் திருச்சபையின் ஊழியர் ஜே.பி. ஃபிலிப்ஸ் தெரிவிக்கின்றார்.

“ஆரம்ப காலச் செய்திகள் இந்த நற்செய்தியை தூதர் மத்தேயு எழுதியதாகத் தெரிவிக்கின்றன. ஆனால் நவீன கால அறிஞர்கள் பெரும்பாலும் இந்தக் கருத்தை மறுத்து விட்டனர். நாம் நம்முடைய வசதிக்காக இதன் ஆசிரியர் மத்தேயு என்று சொல்லிக் கொள்கிறோம்.

அதாவது மத்தேயு, மாற்கு, லூக்கா என்று நாம் பெயர் வைக்கவில்லை என்றால் திரும்ப முதல் ஆகமம் என்று ஆரம்பிக்க வேண்டியிருக்கும். இந்த வசதிக்காகத் தான் நாம் மத்தேயு, மாற்கு, லூக்கா என்று பெயர் வைத்துக் கொள்கிறோம்.

இவ்வாறு ஜே.பி. ஃபிலிப்ஸ் தெரிவிக்கின்றார்.

மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுவதாவது:

“ஆசிரியர் மத்தேயு தெளிவாக சில செய்தி மூலங்களிலிருந்து தனது நற்செய்தியை எடுத்திருக்கின்றார். அவை வாய்வழியாக வந்த செய்திகளின் தொகுப்பாகும். அவர் மாற்கின் நற்செய்தி நூலைத் தாராளமாகப் பயன்படுத்தியிருக்கிறார்”

அதாவது மாற்கின் நூலிலிருந்து மத்தேயு காப்பியடித்திருக்கின்றார் என்று ஜே.பி. ஃபிலிப்ஸ் தெரிவிக்கின்றார். இவ்வாறு கருத்து தெரிவிக்கின்ற ஃபிலிப்ஸ் சாதாரண ஆள் அல்ல! பைபிளைப் பற்றி நன்கு ஆய்வு செய்த மேன்மை மிகு அறிஞர்! பைபிளின் மூலப் பிரதிகளான கிரேக்க கையெழுத்துப் பிரதிகளிலும் தனது பார்வையைச் செலுத்தியவர். அவர் தான் மத்தேயுவைப் பற்றி இவ்வளவும் தெரிவிக்கின்றார்.

ஏசுவுடன் இருக்கும் போது கண்ட அனுபவங்களை, நிகழ்வுகளை தானே நேரடியாக எழுதுவதை மத்தேயு விரும்புவாரா? அல்லது தனது மக்களை ஏசு கடிந்து கொண்டிருந்த காலத்தில் 10 வயது சிறுவனாக இருந்த மாற்கின் நூலிலிருந்து காப்பியடிப்பாரா? நிச்சயமாக அவர் அவ்வாறு செய்ய மாட்டார். எனவே ஏசுவின் சீடரான அந்த மத்தேயு நல்ல மத்தேயு! இந்த ஆகமத்தை எழுதியுள்ள மத்தேயு கள்ள மத்தேயு ஆவார்.

ஃபிலிப்ஸின் கண்டுபிடிப்பை இப்போது கத்தோலிக்க பைபிளின் மத்தேயு நூல் துவக்கத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதை இப்போது பார்ப்போம்.

இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்துதர் மத்தேயு முதன் முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருத்தூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட, நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதை விட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்க வேண்டும் எனக் கொள்வதே சிறப்பு.

மத்தேயு முன்னுரை

மத்தேயு தான் இப்படி என்றால் லூக்காவைப் பாருங்கள்.

மாண்புமிகு தியோபிலுக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்படுகிறது; நல்ல கிரேக்க மொழிநடையில் அமைந்துள்ளது. தம் காலத்துத் திருச்சபையின் போதனையையும் பணியையும் பற்றி அறிவிக்கும் நோக்கத்தோடு ஆசிரியர் இந்நூலைப் படைத்துள்ளார். இயேசுவைப் பற்றிப் பிற நூல் இதற்கு முன் எழுதப்பட்டிருந்தாலும் முறையாகவும் முழுமையாகவும் வரலாற்றுப் பின்ணணியோடும் யாவற்றையும் உறுதிபடுத்தும் வகையில் இந்நூலை இவர் எழுதுகிறார் (லூக்1:1-4). பிற இனத்தவருக்கென்றே எழுதுவதால் எபிரேயர் சொல்லாட்சி இந்நூலில் தவிர்க்கப்படுகிறது.

எருசலேம் நகரம் தீத்துவால் அழிக்கப்பட்ட போது நிகழ்ந்தவை இந்நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மாற்கு நற்செய்தி நூலில் காணப்படும் எருசலேம் கோவில் பற்றிய தானியேல் மறைபொருள் வெளிப்பாட்டு இலக்கியச் செய்தி எருசலேம் நகர அழிவைப் பற்றிய செய்தியாக மாற்றப்படுகிறது (லூக் 21:5, 20; 13:35). எனவே இந்நூல் கி.பி 70-க்கு பின் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் அந்தியோக்கியா, உரோமை போன்ற ஏதேனும் ஒரு நகரிலிருந்து இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம்.

லூக்காவின் முன்னுரை

மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்;

தொடக்க முதல் நேரில் கண்டும் இறை வார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.

அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,

அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.

லூக்கா 1:1-4

இது இறைவனிமிருந்து வந்த செய்தி என்பதற்கு ஏதாவது முகாந்திரம் இருக்கின்றதா என்று பாருங்கள்.

லூக்கா, தனக்கு நல்லதாய் தோன்றுவதை மன்னருக்கு எழுதுகின்றார். அவ்வளவு தான்! இது எப்படி வேத நூலாக ஆக முடியும் என்பதை கிறித்தவ சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.

அனாமதேய ஆகமங்கள்

காப்பியடிக்கப்பட்ட செய்திகளும், கண்டதையும், கேட்டதையும் பதிவு செய்த போலி ஆசிரியர்களின் வாக்குமூலத்தையும் நாம் பார்த்தோம்.

பைபிளில் இடம் பெறுகின்ற ஆகமங்களுக்கு அல்லது புத்தகங்களுக்கு ஆசிரியர்களே இல்லை. சாதாரண நூல்களுக்காவது ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் வேத நூல்கள் என்று சொல்லப்படுகின்ற புத்தகங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை, அல்லது ஆசிரியர்கள் என்று சொல்லப்படுபவர்களும் அனாமதேயங்களாக இருக்கிறார்கள்.

பைபிளில் இடம் பெற்றுள்ள ஆகமங்களின் ஆசிரியர் விபரங்களை பைபிளிலிருந்தே எடுத்துக் காட்டுகிறோம்.

ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம் , எண்ணாகமம், உபாகமம் ஆகிய ஐந்து நூற்களும் மூஸா எழுதியது

யோசுவா – பெரும் பகுதிகள் யோசுவா இயற்றியவை

நீதிபதிகள் ஆகமம் – சாமுவேலாக இருக்கலாம்

ரூத்து – உறுதியாகத் தெரியவில்லை

சாமுவேல் முதல் நூல் – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை

சாமுவேல் இரண்டாம் நூல் – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை

ராஜாக்கள் முதல் நூல் – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை

ராஜாக்கள் இரண்டாம் நூல் – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை

நாளாகமம் முதல் நூல் – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை; எஸ்ராவால் சேகரிக்கப்பட்டு இயற்றப்பட்டிருக்கலாம்

நாளாகமம் இரண்டாம் நூல் – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை; எஸ்ராவால் சேகரிக்கப்பட்டு இயற்றப்பட்டிருக்கலாம்

எஸ்ரா – எஸ்ராவால் எழுதப்பட்டு இயற்றப்பட்டிருக்கலாம்

எஸ்தர் – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை

யோபு  – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை

சங்கீதங்கள்  – முதன்மையாக தாவூதும், தொடர்ந்து மற்ற எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர்

சங்கத் திருவுரை ஆகமம்  – சந்தேகத்திற்குரியது; ஆனால் பொதுவாக சாலமன் எழுதியதாகக் குறிப்பிடப்படுகின்றது

எசாயா  – முக்கியமாக எசாயா எழுதியது. இதன் பகுதிகள் மற்றவர்களால் எழுதப்பட்டிருக்கலாம்

யோனா  – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை

அபக்கூக்கு  – ஆசிரியர் பிறந்த இடமோ பிறந்த காலமோ தெரியவில்லை

இந்த விபரங்கள் Collins வெளியீடான R.S.V. 1971 பைபிளின் பக்கம் 12-17ல் இடம் பெற்றுள்ளன.

அனாமதேயங்கள், அடையாளமே தெரியாதவர்களின் வார்த்தை ஜாலங்களை, வர்ணனைகளை இறைவனின் வேதம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இவற்றை வேதம் என்று நம்பி பரலோக ராஜ்ய வாழ்வைப் பாழாக்கலாமா என்று ஒவ்வொரு கிறித்தவரும் சிந்தித்து, உண்மை இறை வேதமான திருக்குர்ஆனின் பக்கம் வாருங்கள் என்று அன்பாய் அழைக்கிறோம்.

————————————————————————————————————————————————

அல்லாஹ்வின் பெயரை நீக்கிய ஆசிரியர் குழு

Scofield Reference Bible – ஸ்காஃபீல்ட் பைபிள் விபரக் குறிப்பு!

இந்த பைபிளில் ELAH என்ற வார்த்தையை  ALAH அதாவது ஒரு ALLAH என்பதில் ஒரு L-ஐ நீக்கி விட்டு வாசிப்பது என்று அதன் ஆசிரியர் குழு முடிவு செய்கின்றது. இந்த ஆசிரியர் குழு எட்டு பேர்களைக் கொண்டது. இக்குழுவின் தலைவர் ரெவரென்ட் சி.ஐ. ஸ்காஃபீல்ட் டி.டி. ஆவார்.

“கடவுளின் பெயர் அல்லாஹ் என்று இவர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர். அதை அப்படியே வாசிப்பதை விட்டு விட்டு ஒரு L-ஐ நீக்கி விட்டு வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்”

இவ்வாறு அஹ்மத் தீதாத் அவர்கள் தன்னுடைய சொற்பொழிவுகளில் குறிப்பிட்டது தான் தாமதம். அடுத்து வெளியான பதிப்பில் ALAH என்ற வார்த்தையை கச்சிதமாக, கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அப்படியே தூக்கி விட்டனர். பழைய ஏற்பாட்டின் முதல் புத்ககமான ஆதியாகமத்தில் தான் இந்த அநியாயம் நடந்தேறியுள்ளது.

கருத்துத் திருட்டு

தென்னாப்பிரிக்கா, கேப்டவுணில் நடந்த ஒரு கருத்தரங்கின் போது அஹ்மத் தீதாத், மக்களிடம் பைபிளின் ஏசாயா புத்தகத்தில் 37வது அத்தியாயத்தை எடுக்கச் சொல்கின்றார். மக்கள் அந்த அத்தியாயத்தை எடுக்கின்றனர். இப்போது தீதாத் அந்த அத்தியாயத்தை வாசிக்கின்றார்.

இடையிடையே, “நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஏசாயா 37வது அத்தியாயம் தானே!” என்று உறுதி செய்து கொள்கின்றார். மக்களும் ஆம் என்று ஆமோதிக்கின்றனர்.

அத்தியாயத்தின் முதல் வசனம் முதல் கடைசி வசனம் வரை வாசித்து நிறைவு செய்கின்றார்.

ஏசாயா 37

 1 ராஜாவாகிய எசேக்கியா அதைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்துக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,

2 அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.

3 இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை.

4 ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனைசெய்வார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.

 5 இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.

6 அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.

7 இதோ, அவன் ஒரு செய்தியைக்கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

 8 அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின் மேல் யுத்தம் பண்ணுகிறதைக் கண்டான்.

 9 அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

10 நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படு வதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த வொட்டாதே.

11 இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ?

12 என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

13 ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார்.

14 எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

15 கர்த்தரை நோக்கி: 16 சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

17 கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும்.

18 கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

19 அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்.

20 இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

 21 அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியா வுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை  நோக்கி விண்ணப்பம் பண்ணினாயே.

22 அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.

23 யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.

24 உன் ஊழியக்காரரைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்……..

38 அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்துக்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.

அஹ்மத் தீதாத் அதை வாசித்து நிறைவு செய்தவுடன் “நான் இது வரை வாசித்தது ஏசாயா 37வது அதிகாரம் அல்ல! ராஜாக்கள் இரண்டாம் நூல், 19வது அதிகாரம்” என்று சொல்லி அதைக் கருத்தரங்கத் தலைவரிடம் அறிவிக்கச் செய்கின்றார்.

2 ராஜாக்கள் 19

1 ராஜாவாகிய எசேக்கியா அதைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,

2 அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்துக்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.

3 இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைபேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலனில்லை.

4 ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனைசெய்வார்; ஆகையால் இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.

 5 இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.

6 அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.

7 இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

 8 அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின் மேல் யுத்தம் பண்ணுகிறதைக் கண்டான்.

 9 இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

10 நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படு வதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த ஒட்டாதே.

11 இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ    தப்புவாயோ?

12 என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும் ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

13 ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயிம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே? என்று சொல்லுங்கள் என்றான்.

14 எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

15 கர்த்தரை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

16 கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லி யனுப்பின வார்த்தைகளைக் கேளும்.

17 கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

18 அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய் தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவை களை நிர்த்தூளியாக்கினார்கள்.

19 இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

 20 அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா எசேக்கியா வுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபின்நிமித்தம் நீ என்னை நோக்கிப் பண்ணின விண்ணப்பத்தைக் கேட்டேன்.

21 அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.

22 யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாயல்லவோ உன் கண்களை மேட்டிமையாக ஏறெடுத்தாய்?

23 உன் ஸ்தானாபதிகளைக் கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரி விருட்சங்களையும் நான் வெட்டி, அதின் கடையாந்தரத் தாபரமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்……….

37 அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.

அவ்வளவு தான்! அரங்கத்திலிருந்த கிறித்தவ மக்களுக்கு ஒரே அதிர்ச்சி! ஆச்சரியம்! பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன், மற்றொரு மாணவனைக் காப்பியடித்து தேர்வு எழுதினால் காப்பிடியடித்த மாணவனை மொத்தப் பள்ளிக் கூடமும் இழிவாகப் பார்க்கும்; அவன் தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்படுவான். தண்டனையும் வழங்கப்படுவான்.

பைபிளிலும் இது தான் நடந்திருக்கின்றது. இந்தக் கருத்துத் திருட்டை அஹ்மத் தீதாத் அவர்கள் அம்பலப்படுத்தியவுடன் பைபிளைப் படித்துப் பார்த்த கிறித்தவ மக்களிடம் ஒரு வாட்டம் ஏற்பட்டு விட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த ஆசிரியர், எந்த ஆசிரியரைக் காப்பியடித்தார் என்றே தெரியவில்லை.

காப்பியடிக்கும் கடவுள்?

இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால், ஏசாயா நூலை யார் எழுதினார் என்று கேட்டால் கிறித்தவர்கள் தரும் பதில்: இதை முக்கியமாக எழுதியவர் ஏசாயா, இதன் பகுதியை மற்றவர்கள் எழுதினார்கள் என்று கூறுகின்றனர்.

பைபிள் என்ற வேதம் கடவுளுக்குரியதாம்! அதில் இடம் பெற்றிருக்கும் ஏசாயா புத்தகத்திற்கு ஆசிரியர்கள் ஏசாயாவும் இன்னும் சிலருமாம். இதற்குப் பெயர் இறை வேதம் என்றால் அது வெட்கக் கேடு தான்.

எல்லாவற்றிற்கும் மேலான வெட்கக் கேடு, ராஜாக்கள் இரண்டாம் நூல் என்பது புறம்போக்குப் புத்தகம் என்பது தான். இதற்கு ஆசிரியரே இல்லை. இதன் ஆசிரியர் ஓர் அனாமதேயம் என்று பைபிளின் மறு திருத்தம் செய்யப்பட்ட தரமிகு பதிப்பின் 32 ஆசிரியர்களைக் கொண்ட அறிஞர் குழு தெளிவாகவே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றது.

(புனித பைபிளில் ஆசிரியர் இல்லாத அனாமதேயப் புத்தகங்கள் எத்தனை என்பதை இதே இதழில் “ஆங்கிலத்தில் வரும் அக்கார்டிங் டூ’ என்ற தனிக் கட்டுரையில் காண்க!)

இப்போது மீண்டும் தென்னாப்பிரிக்காவின் அரங்கிற்கு வருவோம்.

கேப்டவுண் பல்கலைக் கழகத்தின் தத்துவவியல் துறை தலைமைப் பேராசிரியர் கம்ப்ஸ்டை என்பவர், இது தொடர்பான கேள்வி நேரத்தின் போது பின்வருமாறு கூறினார்:

“வார்த்தைக்கு வார்த்தையான இறை அறிவிப்பைக் கொண்டது தான் பைபிள் என்று கிறித்தவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை”

மறு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மனிதக் கைகள் விளையாடிய ஒரு கற்பனை ஊற்று என்று குறிப்பிடுகின்றார்.

இல்லையெனில் இந்தக் கருத்துத் திருட்டை நடத்தியது கர்த்தர் என்றாகி விடும். அல்லது மறந்து போய் இரண்டாவதாக இப்படி ஓர் அத்தியாயத்தை இறைவன் இறக்கினான் என்றாகி விடும்.

இதில் கேலிக் கூத்து என்னவென்றால், பைபிளின் ஒவ்வொரு புள்ளியும், அரைப் புள்ளி, கால் புள்ளி அனைத்துமே இறை வாக்கு என்று இவர்கள் சொல்வது தான். கேப்பையில் நெய் வடிகின்றது; கோப்பையைத் தூக்கிக் கொண்டு வாருங்கள் என்று கிறித்தவ அறிஞர்கள் கூறுவது தான் வேடிக்கை!

“மூடி பைபிள் இன்ஸ்ட்டியூட்’ பொறுப்பாளர் டாக்டர் கிரஹாம் ஸ்கிராஜ்ஜி என்பவர் “பைபிள் இறை வேதமா?’ என்ற தன்னுடைய நூலில் டாக்டர் ஜோசப் பார்க்கர் என்பவரை மேற்கோள் காட்டிக் கூறுவதாவது:

“பைபிள் என்ன ஓர் அழகான நூல்! இதில் தான் எத்தனை எத்தனை விதமான செய்தி அடக்கங்கள்! அனைத்துப் பக்கங்களையும் அறிமுகமில்லாத பெயர்கள் அலங்கரித்துக் காட்சியளிக்கின்றன. நீதி நாளில் (மறுமையில்) நடைபெறும் அபாயங்களை, அதி பயங்கர நிகழ்வுகளைக் காட்டிலும் தலைமுறைகளின் கொடிவழிப் பட்டியல்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றன. வெற்றி எங்கே என்று விடை காணும் முன் இரவு விடிந்து விடுகின்றது. அரை குறைப் பிரசவத்திலேயே சம்பவம் முடிந்து விடுகின்றது. இந்நூலுக்கு நிகரான வேறு நூல் எது?”

பைபிள் மனித வேதம் தான்; எனினும் புனித இறை வேதம் என்று வாதிடுபவர் டாக்டர் கிரஹாம் ஸ்க்ராஜ்ஜி!

இவர் தான் பைபிளைப் பற்றிய இந்த மேற்கோளைக் கூறுகின்றார். அழகிய வார்த்தை நடையில் அமைந்த ஜோசபின் கருத்து பாராட்டுப் பத்திரமல்ல! இறைவன் மீது சுமத்துகின்ற அவதூறுக் குற்றச்சாட்டாகும். கிறித்தவர்கள் இதை ஒரு பாராட்டாக எடுத்துக் கொள்வது உண்மையில் பரிதாபம் தான். என்ன செய்வது?

இவர்கள் எங்கே கருத்துத் திருட்டுக்களைப் பற்றிக் கவலைப்படப் போகிறார்கள்? பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் காப்பியடிக்கும் கலை கோலோச்சி நிற்கின்றது. கொடி கட்டிப் பறக்கின்றது. இதில் புராட்டஸ்டண்டுகளுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே வேறுபாடுகள் இல்லை.

கருத்துத் திருட்டுக்கள் அடங்கிய பைபிள் இறை வேதமா? என்று சிந்தியுங்கள்.

————————————————————————————————————————————————

பைபிளில் ஐம்பதாயிரம் பிழைகள்

ஓர் இளைஞர் பைபிளை, அதில் தவறே இருக்காது என்று எண்ணி வாங்கினார்.

ஒருநாள் “லுக்’ என்ற பழைய மாத இதழைப் பார்த்துக் கொண்டிருக்கையில், “பைபிளைப் பற்றிய உண்மை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை அவரது பார்வையில் பட்டது.

“புராட்டஸ்டண்ட், கத்தோலிக்கர்கள் படிக்கின்ற புதிய ஏற்பாட்டின் இரண்டு மொழியாக்கங்களில் குறைந்தது 20,000 பிழைகள் உள்ளன என்று 1720ஆம் ஆண்டு வாக்கில் ஓர் ஆங்கில அதிகாரக் குழுமம் மதிப்பிட்டுள்ளது. புது மாணவர்கள் சுமார் 50,000 பிழைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளனர்” என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்தார். பைபிளின் மீது அவர் கொண்டிருந்த நம்பகத்தன்மை ஆட்டம் கண்டது.

பல்லாயிரக்கணக்கான மிக மோசமான குறைபாடுகள், மூலத்திற்கு ஒத்திராத பிழையான ஆக்கங்கள் பைபிளில் இடம் பெற்றிருக்கும் போது அது எப்படி நம்பகமான இறை வேதமாக இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்புகின்றார்.

இந்தச் செய்தி 1957ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி “அவேக்” என்ற பத்திரிகையில் வெளியாகியிருந்தது. இந்தச் செய்தியைப் பின்னணியாகக் கொண்டு பின்வரும் விளக்கத்திற்கு வாருங்கள்.

‘Jehovah’s Witness’ – “ஜெஹோவாவின் சாட்சியாளர்கள்’ என்று கிறித்தவர்களின் ஒரு வகையினர் உண்டு. இவர்கள் கிறித்தவர்களின் முக்கடவுள் கொள்கையை மிகக் கடுமையாக எதிர்ப்பவர்கள். மேற்கண்ட செய்தி இடம் பெற்ற அந்த மாத இதழ் அவர்களது வெளியீடு தான்.

இந்தச் சாட்சியாளர்களில் ஒருவர் அதிகாலை நேரத்தில் அஹ்மத் தீதாதின் வீட்டிற்கு வருகின்றார். முகமனுக்குப் பிறகு அவரிடம் தீதாத், இந்தப் பத்திரிகையின் பிரதியைக் கொடுக்கின்றார்.

தீதாத்: இது உங்களுடைய மாத இதழ் தானே?

சாட்சியாளர்: ஆம்!

தீதாத்: பைபிளில் 50,000 பிழைகள் இருப்பதாக இந்த மாத இதழ் சொல்கிறதே! அது உண்மையா?

சாட்சியாளர் (ஆச்சரியத்துடன்): என்னது?

தீதாத்: பைபிளில் 50,000 பிழைகள் உள்ளன என்று இது சொல்கின்றது.

சாட்சியாளர்: இது எங்கிருந்து உங்களுக்குக் கிடைத்தது?

(இந்நிகழ்ச்சி நடப்பதற்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மாத இதழ்! இது வெளியான நேரத்தில் அந்தச் சாட்சியாளர் குழந்தையாக இருந்திருப்பார்.)

தீதாத்: இந்தப் போலிப் பேச்சை விட்டு கேட்ட விஷயத்திற்குப் பதிலளியுங்கள்.

சாட்சியாளர்: நான் அதைப் பார்க்கலாமா?

தீதாத்: தாராளமாக!

(கிறித்தவர்களில் ஜெஹோவா சாட்சியாளர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். இது போன்று எங்காவது மாட்டும் போது வாய் திறக்கக் கூடாது என்பது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சி! புனித ஆவி (?) அவரிடம் தோன்றி பதில் அளிக்கும் வரை அவர் காத்திருக்க வேண்டும்.)

தீதாத் அவரையே கூர்ந்து கவனிக்கின்றார். புனித ஆவி (அதாவது ஜிப்ரீல்) தோன்றி நொடிப் பொழுதில் செய்தி அருளப்பட்டவர் போன்று பதிலளிக்கத் தயாராகின்றார்.

சாட்சியாளர்: இதில் உள்ள பெரும்பான்மையான பிழைகள் களையப்பட்டு விட்டன என்று இந்தக் கட்டுரை தெரிவிக்கின்றதே!

தீதாத்: பெரும்பான்மையான பிழைகள் என்றால் 50,000? 5000? 500? 50? ஐம்பது பிழைகள் இருந்தால் கூட கடவுளுக்குப் பிழைகள் ஏற்பட்டு விட்டன என்று தானே அர்த்தம்?

சாட்சியாளர்: (மயான அமைதி! மவ்னம்!)

இதன் பின்னர் சாட்சியாளர் மவுனத்தைக் கலைத்து விட்டு, வருத்தம் தெரிவிக்கின்றார். மூத்த அழைப்பாளரை இதற்குப் பதில் தெரிவிக்க அழைத்து வருகின்றேன் என்று இடத்தைக் காலி செய்கின்றார்; காணாமலே போகின்றார்.

இவ்வளவு குறைகளையும் கோளாறுகளையும் கையில் வைத்துக் கொண்டு, கூப்பாடு போட்டு மக்களை, அதிலும் குறிப்பாக மாசு மருவற்ற குர்ஆன் வேதத்தைக் கொண்ட முஸ்லிம்களை பைபிளின் பக்கம் அழைப்பது கேலிக் கூத்தாகும்.

எனவே முஸ்லிம்களை நோக்கிப் படையெடுத்து வரும் கிறித்தவச் செய்தியாளர்களுக்கு பைபிளில் மழையெனப் பொழிந்திருக்கும் பிழைகளை, வளர்ந்து நிற்கும் களைகளை எடுத்துக் காட்டுங்கள். இனிமேல் திரும்ப எப்படி வருகிறார்கள் என்று பார்ப்போம்.