ஏகத்துவம் – ஜூலை 2010

தலையங்கம்

பரிகசிக்கப்படும் பால்குடிச் சட்டம்

சவூதிப் பெண்கள் நீண்ட நாட்களாக இதர வளைகுடா நாடுகளைப் போன்று கார் ஓட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அதற்கு அங்குள்ள ஆலிம்களில் ஒரு சாரார் கூடாது என்று மறுத்து வருகின்றனர். அது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

  1. ஹிஜாபைக் களைந்து விடும். கார் ஓட்டும் போது முகத்தைக் காட்ட வேண்டும். இது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் பிறப்பிடம் ஆகும்.
  2. பெண்களிடம் வெட்கம் எடுபட்டு விடும்.
  3. அடிக்கடி பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவர்.
  4. பெண்களிடம் பிடிவாதம் தலைதூக்கும். வீட்டை விட்டு அற்பக் காரணங்களுக்காகக் கூட வெளியேறி விடுவார்கள்.
  5. சிக்னல், பெட்ரோல் பங்க், சோதனைச் சாவடி போன்றவற்றில் நிற்பது, விபத்து, போக்குவரத்து விதி மீறலுக்காக காவல்துறையினரிடம் மாட்டுதல் போன்ற நிலை ஏற்படும்.
  6. சாலைகளில் நெருக்கடி மேலும் அதிகமாகும்.
  7. விலைவாசி உயர்வு, கடன் போன்ற சுமைகள் அதிகரிக்கும்.
  8. ஆண்களிடம் உள்ள நிதானம், தூர நோக்கு பெண்களிடம் இருக்காது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கும்.
  9. பெண்களின் குற்றங்கள் அதிகரிப்பதால் அவர்களைக் கண்காணிக்க பெண் காவல் துறை உருவாக்க வேண்டும். பெண் காவலர்களும் முகத்தைக் காட்டியாக வேண்டும்.
  10. பெண்களுக்கென்று கார் ஒர்க் ஷாப், வாடகைக் கார் மையம் போன்றவை அமைக்க வேண்டும். இதற்கென பணிப் பெண்களை நியமிக்க வேண்டும். பெண்கள் வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தால் குழப்பங்கள் தோன்ற ஆரம்பித்து விடும். மேற்கத்திய நாடுகளைப் போன்று வீட்டு நலம், குழந்தைகள் நலம் அனைத்தும் பாழாகி விடும்.
  11. கணவன் அல்லது பெற்றோர் இருக்கும் போதே தவறுகள் நடக்கின்றன. அதுவும் ஒழுக்கமிக்க பெண்களுக்கே இவ்வாறு நடக்கின்றது. ஒழுக்கக்கேடான பெண்ணாக இருந்து அவள் வெளியே புறப்பட்டால் அதைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
  12. தூரமான இடங்களில் கார் பழுதாகி விட்டால் பெண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
  13. ஒரு பெண், திருமணம் முடிக்கத் தடையான ஆண் துணையின்றி பயணம் மேற்கொள்வது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு எதிரானது.

இவை அனைத்தும் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கினால் ஏற்படும் குழப்பங்கள் என்று சவூதி மார்க்க அறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துக்களாகும்.

இதற்கு இவர்கள் தரும் தீர்வு, வெளிநாடுகளிலிருந்து ஓட்டுனர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும் என்பது தான்.

அவ்வாறு அமர்த்துகின்ற போது இதை விட அதிகமான பெரும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

அந்த டிரைவர்கள், பெண்களைத் தனியாகவே அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. சதாவும் நெருங்கிப் பழக வேண்டியுள்ளது. குடும்பத்தினர் அனைவருடனும் டிரைவர் சர்வ சாதாரணமாகக் கலக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வு என்ன?

அந்த டிரைவர்களுக்குத் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்து விட வேண்டும் என்று அண்மையில் ஒரு சவூதி மார்க்க அறிஞர் தீர்ப்பளித்திருக்கின்றார்.

சவூதியின் மூத்த அறிஞர்கள் குழு உறுப்பினரும் மன்னரின் ஆலோசகருமான ஷேக் அப்துல் முஹ்சின் பின் நாசர் அல் உபைக் கான் என்பவர் தான் இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

இதற்கு ஆதாரமாக முஸ்லிம் நூலில் இடம் பெறும் ஸாலிமுடைய ஹதீஸை உபைக் கான் கொண்டு வந்திருக்கிறார். (இந்த ஹதீஸ் குறித்த விளக்கத்தைத் தனிக் கட்டுரையில் காண்க!)

இப்படி ஒரு மார்க்கத் தீர்ப்பு வெளியான மாத்திரத்தில், சவூதியிலும் இதர இஸ்லாமிய நாடுகளிலும் இதற்குப் பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பி விட்டன.

இந்தப் பால்குடிச் சட்டம் பரிகாசத்திற்கும், பழிப்பிற்கும் உள்ளாகியிருக்கின்றது. இந்தச் சட்டம் கேள்விக்குரியதாகவும், கேலிக்குரியதாகவும் மாறியிருக்கின்றது.

பச்சை மழலைகளின் பசி உணர்வைத் தீர்க்கின்ற பால்குடிச் சட்டம், பருவ வயதை அடைந்தவரின் பாலுணர்வுக்குப் பாதை மாற்றப்படுகின்றது என்ற அபாயத்தைப் பாமர மக்கள் இன்று புரியத் துவங்கியிருக்கிறார்கள்.

தாடி வைத்த டிரைவர்கள், தாய்மார்களிடம் பால் கொடுக்குமாறு கேட்கும் கேலிச் சித்திரங்கள் இணைய தளங்களில் வெளியாகின்றன.

சவூதி மற்றும் அரபகத்திலுள்ள பெண்கள் கொதித்துப் போயுள்ளனர். இது தொடர்பாக கல்ஃப் நியூஸ் மற்றும் சில அரபு மொழிப் பத்திரிகைகளில் அப்பெண்கள் அளித்துள்ள பேட்டிகள் இதோ:

“இந்த மார்க்கத் தீர்ப்பு கிண்டலும் கேலிக்கூத்துமாகும். எங்கள் மார்பகங்களை வெளிநாட்டு ஓட்டுனர்களுக்கு அளிக்க வேண்டுமாம்; இது தான் எங்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பா?” என்று ஃபாத்திமா அஷ்ஷம்மாரி என்ற பெண் குமுறுகின்றார்.

தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு சவூதிப் பெண்மணி, “கார் ஓட்டுவதை இஸ்லாம் எனக்குத் தடை செய்து விட்டு, எனது மார்பகத்தை அந்நியரிடம் பகிர்ந்து கொள்வதற்கு மட்டும் அனுமதிக்கிறதோ?” என்று கேள்வி எழுப்புகின்றார்.

“எனக்குப் பிறந்த, வயதுக்கு வந்த என் சொந்தப் பிள்ளைகளுக்கு நான் பால் கொடுக்காத போது பிற நாட்டு ஆடவர்களுக்கு நான் பால் கொடுக்க வேண்டுமோ? இது என்ன பைத்தியக்காரத்தனம்?” என்று அவர் மேலும் கேட்கின்றார்.

“வீட்டில் பணி புரியும் பணிப் பெண்கள், எங்கள் கணவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு இந்த ஃபத்வா பொருந்துமா? இவ்வாறு பால் கொடுப்பதன் மூலம் அனைவருமே சகோதர, சகோதரிகளாக ஆகிவிடலாம் அல்லவா?” இது இன்னொரு பெண் எழுப்புகின்ற வித்தியாசமான கேள்வி!

ஒரு பெண் ஆசிரியையிடம் அவரது டிரைவர், “எனக்குப் பால் புகட்டுங்கள்’ என்று கேட்கின்றார். ஆசிரியை தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியதும், “நான் உங்கள் மகனாக விரும்புகிறேன்’ என்று அந்த ஓட்டுனர் பதிலளித்து சாமாளிக்கிறார்.

இவ்வாறு தன் மனைவி சந்தித்த ஒரு மோசமான அனுபவத்தை அவரது கணவர் ஹமீத் அலீ தெரிவிக்கின்றார்.

“தாய்மார்கள் ஓட்டுனர்களுக்குத் தங்கள் கணவன் முன்னிலையில் பாலூட்ட வேண்டுமா? அல்லது தனியாகப் பாலூட்ட வேண்டுமா? ஓட்டுனருக்குப் பாலூட்டும் போது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் கணவன் நுழைந்து விட்டால் கணவனின் கோரத் தாக்குதலிலிருந்து மனைவியை யார் காப்பாற்றுவார்?” என்று சவூதிப் பெண் எழுத்தாளர் ஒருவர் குத்தலாகக் கேள்விகளைத் தொடுக்கின்றார்.

06.06.2010 மற்றும் 20.06.2010 ஆகிய தேதிகளில் வெளியான அரபுப் பத்திரிகைகளில் மேற்கண்ட பேட்டிகள் வெளியாகியுள்ளன.

அந்த அளவுக்கு இந்த மார்க்கத் தீர்ப்பு படு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்தச் சமயத்தில் தான் ஸாலிமின் ஹதீஸ் பற்றிய பார்வைகள் கண்ணோட்டங்கள், கருத்தோட்டங்கள் வெளியாகத் துவங்கியுள்ளன. இந்தச் சட்டத்தை மனதளவில் ஏற்றுக் கொள்ள முடியாத சவூதி மார்க்க அறிஞர்கள், இந்த ஹதீஸ் அபூஹுதைபாவின் மனைவி ஸஹ்லாவுக்கு மட்டும் உரிய தனிச் சட்டம் என்று குறிப்பிடுகின்றனர்.

ஷைக் அப்துல்லாஹ் பின் பாஸ், ஷைக் ஸாலிஹ் பின் பவ்ஸான் போன்ற அறிஞர்கள் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இது தொடர்பாக மற்றொரு கருத்தும் வெளியாகியுள்ளது.

“ஸாலிமின் ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியிருக்கின்றது. எனினும், அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்த ஒவ்வொரு ஹதீசும் அதன் கருத்து சரியாக அமைந்தது என்று எடுத்துக் கொள்ள முடியாது”

இவ்வாறு சவூத் பின் அப்துல்லாஹ் அல் குனைஸான் என்ற அறிஞர் இந்த ஹதீஸ் பற்றித் தெரிவிக்கின்றார்.

இந்த நிலைப்பாட்டைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் கொண்டிருக்கின்றது. நம் மீது கொண்ட வெறுப்பு காரணமாக நமது நிலைப்பாட்டைக் குறை கூறும் ஸலபிகள், உமரிகள், மதனிகள் போன்றோர் அரபு நாட்டு மார்க்க அறிஞர்களின் இந்த நிலைப்பாட்டில் குறை காண்பார்களா? இந்த மார்க்க அறிஞர்களுடன் விவாதம் செய்வார்களா? இவர்களுக்கு எதிராக இணைய தளத்திலும், பத்திரிகைகளிலும், பிரச்சாரங்களிலும் போர்க்கொடி தூக்குவார்களா? ஒருபோதும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அரபு நாட்டு அறிஞர்கள்.

நாம் சொன்னால் தான் தப்பு. அரபு நாட்டுக்காரன் சொன்னால் தப்பில்லை என்பது தான் இவர்களது கொள்கை. இவர்கள் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் ஹதீஸின் கருத்து குர்ஆனுடன் மோதாமல் இருக்க வேண்டும் என்ற நமது நிலைப்பாட்டை அறிவித்ததால் தான் இந்த ஜமாஅத் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஹதீஸை மறுப்பவர்கள் என்ற முத்திரையும் இதன் மீது குத்தப்படுகின்றது. இதற்கெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் அஞ்சப் போவதில்லை.

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.

அல்குர்ஆன் 35:28

அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சும் இந்த ஜமாஅத் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஒரு போதும் அஞ்சாது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

பால்குடிச் சட்டம் குறித்த ஸாலிம் ஹதீஸ் தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே ஏகத்துவம் இதழில் வெளியான ஆய்வின் சுருக்கத்தை இந்தச் சமயத்தில் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் தனித் தலைப்பில் வாசகர்களின் பார்வைக்குத் தருகிறோம்.

பருவ வயதினருக்குப் பால் புகட்டுதல்

(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூ ஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன்என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூ ஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ அவருக்குப் பால் கொடுத்து விடுஎன்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் “அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே! அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு “அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 2878

சஹ்லா (ரலி), அவரது கணவர் அபூ ஹுதைஃபா மற்றும் வளர்ப்பு மகன் சாலிம் ஆகிய மூவரும் நெருக்கடியான ஒரே வீட்டில் இருப்பதாகவும் சஹ்லா அவர்கள் முறையாக ஆடை அணியாமல் இருக்கும் போது சாலிம் வரக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் சஹ்லா (ரலி) அவர்கள் முறையிட்டதாக வேறு அறிவிப்புக்களில் வந்துள்ளது.

“பால்குடி உறவு ஏற்படுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை; பருவ வயதை அடைந்த ஆணுக்கு ஒரு பெண் பால் புகட்டினாலும் அந்தப் பெண் அந்த ஆணுக்குத் தாயாக மாறி விடுவாள்’ என்ற கருத்தை இந்த ஹதீஸ் தருகிறது.

இந்த ஹதீஸ் குர்ஆனுக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரண்படுவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.

குர்ஆனுடன் முரண்படுகிறது

பால்குடிச் சட்டத்திற்கு, குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடத்தை எல்லையாக அல்லாஹ் நிர்ணயிக்கிறான். இந்த எல்லையைத் தாண்டிய ஒருவர் பால் குடிப்பதால் பால்குடி உறவு ஏற்படாது என்று பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.

  1. பாலூட்டுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். (அல்குர்ஆன் 2:233)

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர்ஆன் 31:14)

அவனை (மனிதனை) அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். (அல்குர்ஆன் 46:15)

மனிதனை மனித வடிவில் தாய் 6 மாதங்கள் சுமக்கிறாள். அவனுக்குப் பால் புகட்டியது 24 மாதங்கள். அதாவது இரு வருடம். இந்த 6 மாதத்தையும் 24 மாதத்தையும் சேர்த்து 30 மாதங்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

பால்குடியின் காலம் இரண்டு வருடங்கள் தான் என்று மேலுள்ள வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கும் போது, பருவ வயதை அடைந்த சாலிமிற்குப் பால் புகட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் எப்படிச் சொல்லியிருப்பார்கள்?

  1. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:30)

ஒரு ஆண் அன்னியப் பெண்ணைப் பார்ப்பதை இஸ்லாம் தடை செய்கிறது. ஆனால் இந்தச் சம்பவத்தில் சஹ்லா (ரலி) அவர்களிடத்தில் சாலிம் பால் குடித்ததாக வந்துள்ளது. பார்ப்பதைக் காட்டிலும் பெண்ணுடைய மறைவிடத்தில் ஆணுடைய வாய் உரசுவது என்பது பன்மடங்கு ஆபாசமானது; அபத்தமானது.

மொத்தத்தில் இஸ்லாமிய ஒழுக்க விதிகளைத் தகர்த்தெறியும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. இதற்குப் பிறகும் சாலிமுடைய சம்பவத்தை உண்மை என்று நம்பினால் மேற்கண்ட வசனம் கூறும் ஒழுங்கு முறையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிவகை செய்தார்கள் என்று நம்ப வேண்டிய நிலை வரும்.

இன்று உலகத்தில் எந்த மதத்தினரும் கடைப் பிடிக்காத ஓர் அற்புதமான வழிமுறையான பர்தாவை இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். பெண்கள் மார்பகத்தை மறைக்க வேண்டும் என்பது இறைக் கட்டளை.

வீட்டுக்கு அதிகமாக வருபவர்களுக்குப் பால் புகட்டி விட்டால் பர்தாவைப் பேண வேண்டிய அவசியம் இல்லை என்று இந்தச் சம்பவம் கூறுகிறது. பர்தா என்ற அழகிய நெறியை ஒழிப்பதற்கு இஸ்லாமிய எதிரிகளால் உருவாக்கப்பட்டதாகத் தான் இச்செய்தி இருக்க முடியும்.

தாயின் பிரிவைத் தாங்காமல் இருப்பதற்கு சாலிம் (ரலி) அவர்கள் ஒன்றும் பச்சிளங்குழந்தை இல்லை. ஆண்கள் விளங்கிக் கொள்ளும் விஷயங்களை விளங்கி, பருவ வயதை அடைந்து, திருமணம் முடித்தவர். இவரால் சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்லாமல் இருக்க முடியாதா?

குர்ஆன் கூறும் அனைத்து விதிகளையும் தளர்த்துவதற்கு அப்படியென்ன நிர்ப்பந்தம் சாலிம் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது? சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே ஒரு தனி வீட்டை உருவாக்கி முறையான அடிப்படையிலே வாழ்ந்திருக்கலாம் அல்லவா?

ஒரு பெண் நம்மிடத்தில் இது போன்ற பிரச்சனையைக் கொண்டு வந்தால் அப்பெண்ணிற்கு, பார்தாவைக் கடைப்பிடிக்கும் படி கூறுவோமே தவிர, ஒரு போதும் அந்த ஆணுக்குப் பால் புகட்டும் படி கூற மாட்டோம். நாம் கூட செய்யாத ஒரு மோசச் செயலை நபியவர்கள் செய்தார்கள் என்று கூறுவது நபி (ஸல்) அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவதாக உள்ளது.

  1. அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:5)

தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் சொந்தக் குழந்தையாக ஆக முடியாது. மாறாக அவர்களைக் கொள்கைச் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அந்நிய ஆணிடத்தில் பேண வேண்டிய வழிமுறைகளை வளர்ப்புப் பிள்ளைகளிடத்திலும் பேண வேண்டும். இக்கருத்தையே இந்த வசனம் கூறுகிறது.

ஆனால் சாலிமுடைய சம்பவம் குர்ஆனுடைய இந்த வசனத்திற்கு எதிராக வளர்ப்புப் பிள்ளையை சொந்தப் பிள்ளையாக மாற்றுவதற்கான தந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறது. அல்லாஹ்வுடைய சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு மாற்று வழியைச் சொல்லித் தருகிறது. இதனால் தான் சாலிமுடைய சம்பவத்தைச் சிலர் சுட்டிக் காட்டி, “ஹராமான ஒன்றை ஹலால் ஆக்குவதற்கான தந்திரங்களைச் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான்’ என்று கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்ததே தவிர குர்ஆனில் உள்ள சட்டங்களைத் தளர்த்துவதற்காக அவர்கள் ஒரு போதும் முயற்சித்ததே இல்லை. மேலுள்ள வசனத்தில் இறைவன் கற்றுத் தருகின்ற ஒழுங்கு முறையைச் சீர்குலைத்து அதற்கு மாற்றமான வேறொரு வழியை இச்சம்பவம் கற்றுத் தருவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

மகன் தாயிடத்தில் சாதாரணமாக வந்து செல்வதைப் போல் ஒரு அன்னிய ஆண், அன்னியப் பெண்ணிடம் வந்து போவதற்கான வழியை இந்த ஹதீஸ் கற்றுத் தருகிறது. குர்ஆனுக்கு எதிரான இந்த வழியை நாம் திறந்து விட்டால் இதுவே விபச்சாரம் பெருகுவதற்குக் காரணமாக அமைந்து விடும்.

பருவ வயதை அடைந்த ஆண், பெண்ணிடத்தில் பால் குடித்து விடுவதால் அப்பெண் மீது அவனுக்கோ, அல்லது அவன் மீது அப்பெண்ணுக்கோ ஆசை ஏற்படாது என்று அறிவுள்ளவர்கள் கூற மாட்டார்கள். இந்த வழி ஒழுக்கமுள்ள இளைஞர்களை விபச்சாரத்தின் பால் தள்ளுகின்ற மோசமான வழி.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் மோதுகிறது

மேலே நாம் எடுத்துக் காட்டிய பல்வேறு குர்ஆன் வசனங்களுடன் இந்த ஹதீஸ் மோதுவதுடன் மட்டுமல்ல! ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களுக்கும் முரணாக அமைந்துள்ளது.

பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் பால்குடி உறவு 2 வருடத்திற்குள் தான் ஏற்படும். அதற்குப் பிறகு குடித்தால் பால்குடி உறவு ஏற்படாது என்ற கருத்தைக் கூறுகின்றன.

  1. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறி விட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், “இவர் என் (பால்குடி) சகோதரர்என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில் பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளை பால் அருந்தியிருந்தால்) தான்என்று சொன்னார்கள். (நூல்: புகாரி 5102)

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பசியைப் போக்குவதற்குத் தாயின் பாலே உதவும். இவ்வயதைக் கடந்து விட்ட குழந்தைகள் பால் அல்லாத வேறு உணவுகளை உட்கொள்ளும் நிலையை அடைந்து விடுகின்றன. எனவே பசிக்காகப் பாலருந்தும் பருவம் இரண்டு வருடங்கள் தான்.

தன்னுடைய மனைவியின் அருகில் ஓர் ஆண் அமர்ந்திருப்பதைக் கண்டு நபி (ஸல்) அவர்கள் கோபமடைகிறார்கள். அவர் ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடிச் சகோதரர் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்ன போதும், “உங்கள் பால்குடிச் சகோதரர் யார் என்பதை ஆராய்ந்து பாருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தையைக் கவனிக்க வேண்டும்.

நாம் பால் குடித்த தாயிடம் ஒருவர் பால் குடித்து விடுவதால் அவர் நமது சகோதரனாக ஆகி விட முடியாது. அவர் எப்போது பால் குடித்தார்? இரண்டு  வருடத்திற்குள் அவர் குடித்தாரா? அல்லது அதற்குப் பிறகு குடித்தாரா? என்று உற்று நோக்க வேண்டும். இரண்டு வருடத்திற்குள் அவர் குடித்திருந்தால் அவர் நம் சகோதரர். இதற்குப் பிறகு அருந்தியிருந்தால், அல்லது ஒரு சில மிடறுகளைக் குடித்திருப்பதால் அவர் நமது பால்குடிச் சகோதரராக ஆக மாட்டார்.

இந்த வித்தியாசத்தைப் பார்க்காமல் பால் குடித்து விட்டார் என்பதற்காக அவரை நம் சகோதரர் என்று எண்ணி சகோதரனிடத்தில் நடந்து கொள்வதைப் போல் அவரிடத்தில் நடந்து கொள்ளக் கூடாது. இதையே நபி (ஸல்) அவர்கள் தனது மனைவிக்குக் கூறி எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் படி கூறுகிறார்கள்.

  1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பால் புகட்டுவது இரண்டு வருடத்திற்குள்ளாகத் தான் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),  நூல்: தாரகுத்னீ, பாகம்: 10, பக்: 152

  1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலேயே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (இவ்வாறு) பால் புகட்டுவது பால்குடிக் காலம் 2 வருடம் (முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி),  நூல்: திர்மிதி 1072

இரண்டு வருடத்திற்குள் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்பதை இந்த ஹதீஸ் வெளிப்படையாகத் தெரிவிக்கிறது.

மேற்குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் சாலிமுடைய சம்பவம் முரண்படுவதால் இந்தச் சம்பவம் உண்மையல்ல என்றே ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும்.

————————————————————————————————————————————————

பொருளியல்  தொடர்: 5

நபியவர்களின் வறுமை

பொருளாதாரம், இறை நினைவை விட்டும் திசை திருப்பக் கூடியதாக ஆகி விடக் கூடாது என்பதைக் கடந்த இதழில் கண்டோம். இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வறுமையான நிலையிலேயே தமது வாழ்நாளைக் கழித்துள்ளார்கள்.

நபிகள் நாயகத்துக்கு ஏற்பட்ட வறுமையைப் போன்று இன்று வரைக்கும் எவருக்கும் ஏற்படவில்லை. அப்படிப்பட்ட நிலையில் பல ஆண்டுகள் வாழந்தார்கள். நபிகள் நாயகம் சிறு வயதில் தாய் தந்தையை இழந்த  அனாதையாக இருந்தார்கள். அப்போது ஆடு மேய்த்து வாழ்க்கையை ஓட்டினார்கள். நபியாக ஆனதற்குப் பின் அவர்களை அல்லாஹ், தன்னிறைவு பெற்றவராக ஆக்கினான். இதைத் திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் கூறிக் காட்டுகின்றான்.

உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.

அல்குர்ஆன் 93:8

மக்காவில் வாழ்ந்த போது செல்வம் கையில் நன்றாகப் புழங்கியது. மதீனா வாழ்க்கையில் கடுமையான வறுமை ஏற்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட வறுமையைப் போன்று யாருக்கும் ஏற்படவில்லை. இதைப் பற்றி நபிகள் நாயகத்தின் மனைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்:

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், “என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம்; மீண்டும் பிறை பார்ப்போம்; பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம். அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாதுஎன்று கூறினார்கள். நான், “என் சிறிய அன்னையே!  நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்தினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இரு கருப்பான பொருள்கள்:  (ஒன்று) பேரீச்சம் பழம்; (மற்றொன்று) தண்ணீர். தவிர, அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக  அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்.) அவர்கள் (அவற்றி-ருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்என்று கூறினார்கள்

நூல்: புகாரி 2567

அல்லாஹ்வின் படைப்பில் மிகச் சிறந்த படைப்பான, அகிலத்தின் அருட்கொடை என்று நாம் போற்றுகின்ற, நம் உயிரினும் மோலாக மதிக்கின்ற நபி (ஸல்) அவர்களுக்கே வறுமையை அல்லாஹ் தந்துள்ளான். சுலைமான் நபிக்கு செல்வத்தை வழங்கியது போன்று, ஒரு சாம்ராஜ்யத்தின் தலைவரான இறுதித் தூதருக்கு அல்லாஹ் தரவில்லை. வறுமையில் உள்ளவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் அனைவரும் நபியை விட மிகப் பெரிய பணக்காரர்களாகவே இருக்கின்றோம். நபியவர்களுக்கு வந்த வறுமையைப் போன்று நமக்கு யாருக்கும் வரவில்லை.

பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட சிலரிடம் தான் குவிந்து கிடக்கின்றது; அல்லாஹ் நம்மைக் கஷ்டப்படுத்துகிறான் என்று நாம் நினைத்தால் நபியவர்களின் வாழ்க்கையை நினைக்க வேண்டும். அல்லாஹ் நம்மை ஏழையாக வைத்துள்ளான் என்று நினைத்தால் நம்மை விட ஏழையாக உள்ளவர்களைக் கவனிக்க வேண்டும்.

அவர்களின் நிலையை நாம் நினைத்தால் அவர்களை விட அல்லாஹ் நம்மை சிறப்பாக வைத்துள்ளான் என்பதை உணர்ந்து கொள்ளலாம். இப்படி நினைத்தால் நமது உள்ளத்திற்கு ஆறுதலாக இருக்கும். நம்மை விட மிக ஏழையான, சாம்ராஜ்யத்தின் தலைவரான இறுதித் தூதருடைய வாழ்க்கையில் இருந்த உடை, ஆடை, இருப்பிடம் ஆகியவைப் பற்றிய ஆதாரப்பூர்வமான செய்திகளை நாம் பார்த்தால் நமது கண்களில் கண்ணீர் வந்துவிடும். இந்த அளவுக்கு வறுமை இருந்தும் செம்மையாக வாழ்ந்துள்ளார்கள்.

நமக்கு வறுமை வந்தால் நம்மில் சிலர் தற்கொலை செய்து விடுகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் கடுமையான வறுமையில் இருந்துள்ளார்கள். அல்லாஹ் எதற்காக நபிக்கு வறுமையை உண்டாக்கினான் என்றால் சமுதாயத்திற்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வசதியை பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதருடைய வீட்டிலிருந்த உணவு வகைகள் எப்படி இருந்தது என்று நாம் பார்க்க வேண்டும்.

சல்லடை கிடையாது

நபி (ஸல்) அவர்கள் மாவு சலிக்கும் சல்லடையைக் கூட பயன்படுத்தியதில்லை. சல்லடை இருந்தால் மாவைத் தனியாகவும், உமியைத் தனியாகவும் பிரித்தெடுக்க முடியும். மாவைத் தனியாக பிரித்தெடுத்தால் தான் மன நிறைவாகவும் நிம்மதியாகவும் சாப்பிட முடியும். இல்லையென்றால் அதை சாப்பிடுவதற்குக் கஷ்டப்பட வேண்டும். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சல்லடை கூட இல்லாமல் தமது வாழ்க்கையைக் கழித்துள்ளார்கள். அப்படிப்பட்ட வறுமையில் வாழ்ந்துள்ளார்கள்.

அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நன்கு ச-த்து சுத்தம் செய்யப்பட்ட மாவில் தயாரிக்கப்பட்ட) வெள்ளை ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மை (இறைத்தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததி-ருந்து தமக்கு அவன் இறப்பை அளிக்கும் வரை (ச-த்து சுத்தமாக்கப்பட்ட மாவினாலான) வெள்ளை ரொட்டியைப் பார்த்ததேயில்லைஎன்று பதிலளித்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்ததுண்டா?” என்று கேட்டேன். அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மை (இறைத் தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததி-ருந்து தம்மை அவன் இறக்கச் செய்யும் வரை சல்லடையைக் கண்டதேயில்லைஎன்றார்கள். நான், “கோதுமையை நீங்கள் எப்படிச் சாப்பிட்டு வந்தீர்கள்? சலிக்காமலேயா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நாங்கள் கோதுமையை அரைத்து, (உமியை நீக்க) அதில் (வாயால்) ஊதுவோம். அதி-ருந்து (தவிடு, உமி போன்ற) பறப்பவை பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீர் கலந்து (ரொட்டி தயாரித்து) உண்போம்என்றார்கள்.

நூல்: புகாரி 5413

வயிறு நிறைய சாப்பிட்டதில்லை

ஒரு மனிதன் வயிறு நிரம்ப சாப்பிடுவான். அல்லது அரை வயிறாவது சாப்பிடுவான். ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வயிறு நிரம்பவோ அல்லது அரை வயிறோ கூட சாப்பிடதில்லை.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததி-ருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.

நூல்கள்: புகாரி 5416, 5374, முஸ்லிம் 5682

இப்படி ஒருவராவது நாம் இருக்கிறோமா? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆபிஸ் பின் ரபீஆ அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான், ஆயிஷா (ரலி) அவர்களிடம் “(ஈதுல் அள்ஹா பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், “மக்கள் (பஞ்சத்தால்) பசி பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில் தான் அவர்கள் அப்படி(த்தடை) செய்தார்கள். அப்போது  நபி (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதி உள்ளவர், ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக் காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதைச் சாப்பிட்டு வந்தோம்என்று பதிலளித்தார்கள். “உங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன வந்தது?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சிரித்து விட்டு, “முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களுடைய குடும்பத்தார் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கூட (கறிக்) குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லைஎன்று சொன்னார்கள்

நூல்: புகாரி 5423

நபியின் மனைவிகளிடமும் உணவில்லை

ஆட்சிக்கு தலைவரான, சாம்ராஜியத்திற்கு முதல்வரான, மனித குலத்திற்கு இறுதி தூதரான, அல்லாஹ்வின் தூதருடைய அனைத்து மனைவியர்களிடத்திலும் ஒரே நேரத்தில் உணவு இருந்தது கிடையாது. இந்த வறுமையிலும் கூட அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மார்க்கத்தில் உறுதியாக இருந்துள்ளார்கள். தமது மனைவிமார்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக செல்வங்களை தேடி மார்க்கத்தின் கட்டுப்பாடுகளை விட்டு விலகவில்லை.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “எனக்கு (கடுமையான பசி)த் துன்பம் ஏற்பட்டுள்ளதுஎன்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டுவரச் சொன்)னார்கள். அதற்கு அத்துணைவியார், “தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லைஎன்று பதிலளித்தார். பிறகு (தம் துணைவியரில்) மற்றொருவரிடம் ஆளனுப்பியபோது, அவரும் அதைப் போன்றே பதிலளித்தார். முடிவில் ஒவ்வொரு துணைவியரிடமிருந்தும் அதே பதிலே வந்தது. “இல்லை; தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லைஎன்றே கூறினர்.

நூல்: முஸ்லிம் 4175

ஒரே நாளில் இரண்டு வேளை சாப்பிட்டதில்லை

நாம் ஒரு நாளைக்கு இருவேளை உணவு சாப்பிடாமல் இருந்ததில்லை. ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இரண்டு வேளை சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரே நாளில் இரண்டு வேளை ரொட்டியும் ஆலிவ் எண்ணெயும் வயிறு நிரம்ப உண்ணாமலேயே இறந்தார்கள்.

நூல்: முஸ்லிம் 5691

மாதக் கணக்கில் அடுப்பு எரியாத நிலை

நமது காலத்தில் வாழக் கூடியவர்கள் வீட்டில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அடுப்பு பற்ற வைக்காமல் இருந்ததில்லை. யாருடைய வீட்டிலும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் அடுப்பு பற்ற வைக்காமல் இருக்க மாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில்  தொடர்ந்து மாதக் கணக்கில் அடுப்பு பற்ற வைக்காமல் இருந்துள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரான நாங்கள் அடுப்பு பற்றவைக்காமல் ஒரு மாதத்தைக் கழித்திருக்கிறோம். அப்போது பேரீச்சம் பழமும் தண்ணீருமே எங்கள் உணவாக இருந்தன.

நூல்: முஸ்லிம் 5688

உணவிற்காகப் பிரார்த்தனை

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்கு (பசியைத் தணிக்கத்) தேவையான அளவு உணவை வழங்குவாயாக!என்று பிரார்த்தித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 5680

எண்ணையில் பொறித்த இறைச்சியை சாப்பிடவில்லை

இந்த காலத்தில் வாழக்கூடிய நமது வீட்டில் சில நபர்கள் இறைச்சியில்லாமல் சாப்பிட மாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எண்ணையால் பொறித்த இறைச்சியைச் சாப்பிட்டதில்லை.

கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம் சென்று வருவோம். அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருப்பார். (ஒருநாள்) அனஸ் (ரலி) அவர்கள், “சாப்பிடுங்கள்! (ஆனால்,) நான் அறிந்த மட்டில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை மிருதுவான ரொட்டியைப் பார்த்ததில்லை. வெந்நீரால் முடி களையப்பட்டு தோலுடன் சமைக்கப்பட்ட (இளம்) ஆட்டை அவர்கள் தமது கண்ணாலும் ஒருபோதும் கண்டதில்லைஎன்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5421, 6457

அனஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதருடைய பணியாளராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப் பார்த்து கவலைப்படுகிறார்கள். அல்லாஹ்வின் தூதருக்கு அவரது பணியாளரான அனஸ் (ரலி) உணவு வழங்கியுள்ளார்கள். நமது காலத்தில் யாருக்காவது அவரது பணியாளர் உணவு வழங்கியுள்ளார் என்று சரித்திரம் உண்டா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் தீட்டப்படாத கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியையும் வாசனை நீங்கிய உருக்கப்பட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன்.  நபி (ஸல்) அவர்கள் தமது கவசத்தை மதீனாவில் உள்ள ஒரு யூதரிடம் அடைமானமாக வைத்து அவரிடமிருந்து தமது குடும்பத்தினருக்காகத் தீட்டப்படாத கோதுமையை வாங்கியிருந்தார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரிடம் தீட்டிய கோதுமையில் ஒரு ஸாஉ, மற்ற தானியத்தில் ஒரு ஸாஉ இருந்ததில்லை. அந்த நேரத்தில் நபியவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர்.

நூல்: புகாரி 2069, 2508

ஒரே உணவை 15 நாள் வைத்து சாப்பிடும் நிலை

நமது வீட்டில் எதாவது உணவு செய்தால் அதை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்துச் சாப்பிடுவோம். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் ஒரு உணவைப் பதினைந்து நாட்கள் வைத்து சாப்பிடுவார்கள்.

ஆபிஸ் பின் ரபீஆ அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், ஆயிஷா (ரலி) அவர்களிடம் “(ஈதுல் அள்ஹா பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச்சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், “மக்கள் (பஞ்சத்தால்) பசி பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில்தான் அவர்கள் அப்படி(த் தடை) செய்தார்கள். அப்போது  நபி (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதி உள்ளவர், ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பி னார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக் காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதைச் சாப்பிட்டு வந்தோம்என்று பதிலளித்தார்கள். “உங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன வந்தது?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சிரித்து விட்டு, “முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களுடைய குடும்பத்தார் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கூட (கறிக்) குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லைஎன்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 5423

இந்த வாழ்க்கையை நபியவர்கள் எப்படித் தான் வாழ்ந்தார்கள் என்று நாம் எண்ணிப் பார்த்தால் நமக்கு நமது வாழ்க்கை வறுமையாகத் தெரியாது.

எதுவுமே இல்லாத நிலை

நாம் வாழக் கூடிய சமுதாயத்தில் அடிமட்ட ஏழையை எடுத்துக் கொள்வோம். அவனது வீட்டில் ஏதாவது உணவிருக்கிறதா என்று கேட்டால் உணவுயில்லையென்று சொன்னாலும் மற்ற பொருட்கள் இருக்கும். ஆனால் நபியவர்களின் வீட்டில் பேரிச்சம் பழம் கூடக் கிடையாது.

உம்மு அத்திய்யா (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் (வீட்டிற்கு) சென்று “(உண்பதற்கு) ஏதேனும் உள்ளதா?” எனக் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), “நீங்கள் நுஸைபாவுக்கு தர்மமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பி வைத்துள்ளார். அதைத் தவிர வேறொன்றும் நம்மிடம் இல்லைஎன்றார். நபி (ஸல்) அவர்கள் “அப்படியெனில் அது தனது இடத்தை (அன்பளிப்பின் அந்தஸ்தை) அடைந்துவிட்டதுஎன்றார்கள்.

நூல்: புகாரி 1494

இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, “உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நாங்கள் “இல்லைஎன்றோம். “அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்து கொள்கிறேன்என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! நமக்கு “ஹைஸ்எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதுஎன்றோம். அதற்கு அவர்கள், “எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன்என்று கூறிவிட்டு, அதை (வாங்கி)ச் சாப்பிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 2125

நபியின் பசி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஒரு பகல்அல்லது “ஓர் இரவு‘ (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு, “பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இரு வரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்ததுஎன்று கூறி விட்டு, “எழுங்கள்என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.

அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், “வாழ்த்துகள்! வருகஎன்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டு வருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்என்று பதிலளித்தார்.

அப்போது அந்த அன்சாரி வந்து விட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லைஎன்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், “இதை உண்ணுங்கள்என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்என்று கூறினார்கள்.

அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 4143

வினிகரை குழம்பாகப் பயன்படுத்துதல்

அல்லாஹ்வுடைய தூதரின் வீட்டில் உண்ணுவதற்கு உணவு இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார்கள். அப்படி உணவு கிடைத்தாலும் குழம்பு இருக்காது அப்படி இருந்தாலும் புளியாகத் தான் இருக்கும். புளியை வைத்து அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ரொட்டியை சாப்பிட்டுள்ளார்கள். இப்படித் தான் தமது வாழ்க்கையைக் கழித்துள்ளார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது (தம்மருகே வருமாறு) என்னை நோக்கி சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டார்கள்.

பிறகு நாங்கள் இருவரும் நடந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரது அறை வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு எனக்கும் (உள்ளே வர) அனுமதியளித்தார்கள். நான் வீட்டாருக்காக இடப்பட்டிருந்த திரை வரை சென்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஏதேனும் உணவு உள்ளதா?” என்று கேட்டார்கள். வீட்டார், “ஆம்என்றனர். பிறகு மூன்று ரொட்டிகள் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரொட்டியை எடுத்துத் தமக்கு முன்னால் வைத்தார்கள்.

பிறகு மற்றொரு ரொட்டியை எடுத்து எனக்கு முன்னால் வைத்தார்கள். பிறகு மூன்றாவது ரொட்டியை எடுத்து அதை (இரண்டாக)ப் பிட்டு, ஒரு பாதியைத் தமக்கு முன்னாலும் மற்றொரு பாதியை எனக்கு முன்னாலும் வைத்தார்கள்.

பிறகு (தம் வீட்டாரிடம்), “குழம்பேதும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். வீட்டார், “இல்லை; சிறிதளவு காடியைத் தவிர வேறெதுவுமில்லைஎன்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதைக் கொண்டுவாருங்கள். குழம்புகளில் அருமையானது அதுவேஎன்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 4172

சாப்பிடுவதற்குப் பாத்திரம் கூட இல்லை

நமது வீட்டில் சாப்பிடுவதற்கு தட்டு இல்லாமல் இருந்ததில்லை. நம்மிடத்தில் சாப்பிடுவதற்குத் தட்டு இல்லையென்றால் வாழை இலையாவது நாம் பயன்படுத்துவோம். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் தட்டு இல்லாமல் தான் தமது வாழ்க்கையைக் கழித்துள்ளார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்து (உணவு) உண்டதை ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அவர்களுக்காக ஒருபோதும் மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதில்லை. மேலும், அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) ஒருபோதும் சாப்பிட்டதில்லை. இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்களிடம், “அப்படியென்றால், அவர்கள் எதில் அமர்ந்து உண்டுவந்தார்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “உணவு விரிப்பில்என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 5386, 5415

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

இலக்கில்லாத இயக்கங்கள் விளக்கமில்லாத தலைவர்கள்

சாதாரணமாக பஸ் அல்லது ரயிலில் ஏறிப் பயணம் செய்கின்ற ஒரு மனிதன் கூட ஓர் இலக்குடன் பயணம் செய்கின்றான். ஆனால் இன்று தமிழகத்தில் காளான்கள் போன்று தோன்றிப் பயணம் செய்கின்ற இயக்கங்களுக்கு ஓர் இலக்கு, ஒரு தூர நோக்கு, இலட்சியம் எதுவுமில்லாமல் பயணம் செய்கின்றனர்.

டமாக்ரடிக் பார்ட்டி, பாப்புலர் பிரண்ட், கேம்பஸ் பிரண்ட், டவுன்பஸ் பிரண்ட் என்று ஒரே சிந்தனை கொண்டவர்கள் இத்தனை பெயர்களில் இயங்கி வருகின்றனர். இவர்களின் இலக்கு என்ன? இலட்சியம் என்ன?

ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத் என்று இந்துத்துவ அமைப்பினர் பல்வேறு பெயர்களில் செயல்படுவது போன்று நாமும் செயல்பட வேண்டுமாம். இது ஓர் இலக்காகுமா? இலட்சியமாகுமா?

பஸ் பயணத்தில் பக்கத்து சீட்டில் ஒரு மிஸ்ஸை வைத்து பாலியல் விளையாட்டு விளையாடிய ஒருவரை தவ்ஹீத் ஜமாஅத் நீக்குகின்றது. இந்தப் பலான ஆசாமி தவ்ஹீது பெயரில் இயக்கம் ஆரம்பித்து அதற்குத் தலைவராகின்றார். இதுவெல்லாம் ஓர் இலக்கா? இந்த வெட்கக்கேடு எப்படி ஓர் இலட்சியமாகும்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி 6243, முஸ்லிம் 4801

நபி (ஸல்) அவர்கள் கடைசியாகக் குறிப்பிடுகின்ற அந்தப் பாவம் மட்டும் நடைபெறவில்லை. அது நடந்திருந்தால் மார்க்கத்தின் பார்வையில் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டிய குற்றவாளியாகியிருப்பார். ஆனால் மேற்படி பஸ் பயணத்தை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலத்தின்படி அது மட்டும் நடைபெறவில்லை.

இது தவிர உள்ள மானக்கேடுகள் அரங்கேறியிருக்கின்றன. இதை நினைத்து வெட்கமும் வேதனையும் பட்டு, பொது வாழ்வை விட்டு ஒதுங்க வேண்டிய ஆசாமி, தக்வா – இறையச்சம், மறுமை மன்றம் – மஹ்ஷர் விசாரணை என்று பேசித் திரிவது நயவஞ்சகத்திலும் கடைந்தெடுத்த நயவஞ்சகத்தனம்! நடிப்பிலும் உச்சக்கட்ட நடிப்பு!

இதோடு நின்றால் பரவாயில்லை! அன்னியப் பெண்ணுடன் அருகருகே அமர்ந்து, அதுவும் நள்ளிரவு நேரத்தில் சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்தால் என்ன தப்பு? என்று கேள்வி எழுப்பி பாவத்தை நியாயப்படுத்துவது இறை மறுப்பாளர்களின் குணமாகும்.

மக்கத்து இறை மறுப்பாளர்கள் அல்லாஹ்வைப் பற்றித் தெரியாமல் இல்லை.

பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)என்று (முஹம்மதே!) கேட்பீராக! “அல்லாஹ்வுக்கேஎன்று அவர்கள் கூறுவார்கள். “சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?” எனக் கேட்பீராக! “அல்லாஹ்வேஎன்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களா;?” என்று கேட்பீராக!

பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)என்று கேட்பீராக! “அல்லாஹ்வேஎன்று கூறுவார்கள். “எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 23:84-89

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களை காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

அல்குர்ஆன் 29:65

இத்தனைக்குப் பிறகும் மக்கா காஃபிர்கள், ஏன் நபி (ஸல்) அவர்களை எதிர்த்து நின்றார்கள்? அல்லாஹ்வே பதிலளிக்கின்றான்.

ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகானதாகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! “இன்று மனிதர்களில் உங்களை வெல்ல யாருமில்லை; நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன்எனவும் கூறினான். இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த போது பின் வாங்கினான். “உங்களை விட்டும் நான் விலகிக் கொண்டவன். நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்என்று கூறினான்.  (அல்குர்ஆன் 8:48)

மக்கா காஃபிர்களின் செயல்களை ஷைத்தான் அலங்கரித்துக் காட்டினான். தங்களது தீய செயல்களை, நல்ல செயல்களாகப் பார்ப்பது இறை மறுப்பாளர்களின் தனிக் கூறாகும்.

யாருக்கு அவனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாகக் கருதினானோ அவனா? (சொர்க்கவாசி?) அல்லாஹ், தான் நாடியோரை வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 35:8

இறை மறுப்பாளர்களின் இந்த இழிந்த பண்பையும், ஈனக் குணத்தையும் இவர்கள் பிரதிபலிப்பதால் தான் “பஸ்ஸில் பெண்ணோடு பயணம் செய்தால் என்ன?’ என்று இந்தப் பாவத்தை, விபச்சாரத்தை நியாயப்படுத்தும் கேள்வியை எழுப்புகின்றனர்.

எந்த ஒரு பெண்ணும் மஹ்ரம் துணை இல்லாமல் ஒரு பரீத் – அதாவது 12 மைல்- தூரத்துக்குப் பயணம் செய்யக் கூடாதுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: இப்னு குஸைமா, பைஹகீ, அபூதாவூத், ஹாகிம்

நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையெல்லாம் இவர்களுக்குக் கேலிக் கூத்தாகத் தெரிகின்றது. காரணம், ஷைத்தான் இவர்களது அமல்களை அலங்கரித்துக் காட்டுகின்றான். இதன்படி இவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் மனைவிமார்களை பலான ஆசாமியுடன் அல்லது பிற ஆடவருடன் பஸ்ஸில் அருகருகே அமர வைத்து அனுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

“உங்கள் மனைவிகளை நீங்கள் இப்படி அனுப்புவீர்களா?’ என்று நாம் கேட்கும் கேள்விக்கு, “இப்படிப் பயணம் செய்வது தப்பா?’ என்று இவர்கள் பதில் கூறினால் அதற்கு என்ன அர்த்தம்?

விளக்குமாற்றுக்குப் பட்டுக்குஞ்சம்

நாம் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், இந்த இயக்கங்களுக்கு ஏதாவது இலக்கு இருக்கின்றதா? மார்க்க விளக்கம் ஏதாவது இருக்கின்றதா? என்பதைத் தான். இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், உலக தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயர்கள் வேறு! விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுவது போல்!

இந்த ஆசாமியை ஒய்.கே. மேன்சன் என்று விமர்சித்து காறித் துப்பிய, கரியள்ளிப் பூசிய சில இயக்கத்தினர் இப்போது கட்டியணைத்து ஆரத் தழுவி, தாங்கள் ஏற்கனவே பூசிய கரியை தங்கள் மீதே பூசிக் கொள்கின்றனர். இவர்களுக்கு ஏதாவது இலக்கும், மார்க்க விளக்கமும் இருக்கின்றதா? என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

இது போன்ற இயக்கத்தினர் தான், பெண்கள் இட ஒதுக்கீட்டில் முஸ்லிம் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்கின்றனர். இதன் மூலம் தங்களுக்கு மார்க்க ஞானம் அறவே இல்லை என்பதை அப்படியே பகிரங்கமாகப் போட்டு உடைக்கின்றனர். இவர்களுக்குப் பின்னாலும் கொடி பிடிப்பதற்கும், கோஷம் போடவும் ஒரு கூட்டம் செல்கின்றது என்றால் இவர்கள் தனி மனித வழிபாடு செய்து, தவறான வழிகேட்டிற்குச் செல்கின்றனர் என்று தானே அர்த்தம்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், கல்வியை அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ள மாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டு வைக்காத போது மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கொடுப்பார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்: புகாரி 100

இந்த ஹதீஸ் இவர்களுக்குத் தான் நூற்றுக்கு நூறு பொருந்துவதைக் கவனியுங்கள்.

மைக்கைப் பிடித்துக் கத்தி விட்டால் போதும்; கை தட்டல், நாரே தக்பீர் போட்டு விட்டால் போதும். இவர்கள் மக்கள் தலைவராக, மார்க்க அறிஞராக ஆகி விடுகின்றனர். இதற்குச் சமீபத்திய எடுத்துக்காட்டு அண்மையில் நடந்த அழகுமுத்துக் கோனார் சிலை திறப்பு விழா!

இதில் கலந்து கொண்டு மேற்படி பலான ஆசாமி, “சிலைகள் முக்கியமல்ல! சிந்தனைகள் தான் முக்கியம்’ என்று முழக்கமிட்டு, அதைப் போஸ்டர் போட்டு தங்கள் புளங்காகிதத்தை வெளிப்படுத்தினார்.

இந்த ஆசாமிகள், தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வந்த மக்கள் வெள்ளத்தை இனி ஒரு போதும் காணப் போவதில்லை. அது போன்ற ஒழுக்கமிக்க மேடையின் வாடை கூட இவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை.

இவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் ஒருக்காலும் வரப் போவதில்லை. அதனால் “மேடை கிடைத்தால் போதும்; மார்க்கம் பார்க்கத் தேவையில்லை! மைக் கிடைத்தால் போதும்; மார்க்கக் கட்டளைகளைப் பேண வேண்டியதில்லை’ என்று கிளம்பி விடுகின்றனர்.

அதன் வெளிப்பாடு தான் இதுபோன்ற சிலை திறப்பு விழாக்களில் பிரவேசம்!

மேடையின் பின்னணியில் யாதவர்கள் கடவுள் என்று கொண்டாடும் கிருஷ்ணரின் படம். சாதாரண நாயகனின் படமல்ல! சர்வ வல்லமை படைத்த கிருஷ்ண பரமாத்மாவின் வானளாவிய வண்ணப்படம்.

எள்ளளவு ஈமான் இருந்தால் கூட இந்த மேடையை இதற்காக வேண்டியாவது புறக்கணிக்க வேண்டும். ஏன்? இதோ மார்க்கம் கூறுகின்றது:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உருவங்கள் வரையப்பட்ட திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதை நபி (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலில் நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான் “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்! நான் என்ன குற்றம் செய்தேன்?” என்று வினவினேன். நபி (ஸல்) அவர்கள் “இது என்ன திண்டு?” என்று கேட்டார்கள். “நீங்கள் இதன் மேல் அமர்வதற்காகவும் தலைக்கு வைத்துக் கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்!என்றேன். நபி (ஸல்) அவர்கள், “இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; “நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்!என்று அவர்களிடம் கூறப்படும். எந்த வீட்டில் உருவங்கள் இருக்கின்றனவோ அங்கே (அருளைச் சுமந்து வரும்) வானவர்கள் வர மாட்டார்கள்!எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 2105, 5181

படத்தைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பாதம் உள்ளே செல்ல மறுக்கின்றது. மேடை அகலத்திற்குப் பெரிய படம் அல்ல! தலையணை அளவிற்குச் சிறிய உருவப் படத்தைப் பார்த்துக் கூட நபி (ஸல்) அவர்கள் உள்ளே செல்ல மறுக்கிறார்கள்.

“நான் என்ன பாவம் செய்தேன்?’ என்று ஆயிஷா (ரலி) பதை பதைக்கின்றார்கள்; பதறுகின்றார்கள். மனைவியார் வீட்டில் இப்படியொரு சம்பவம் என்றால் மகளார் வீட்டில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்களிடம் செல்லவில்லை. (திரும்பிப் போய் விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் சொல்ல, “நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால் தான் திரும்பி வந்து விட்டேன்)என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்)என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர்களுக்குத் தேவையுள்ளதுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 2613

இங்கு நபி (ஸல்) அவர்கள் தமது அருமை மகள் ஃபாத்திமா வீட்டுக்குள் நுழையாமல் திரும்புகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் பார்த்து விட்டுத் திரும்பிய படம் சாதாரண படம் தான். ஆனால் இந்த மைக் வெறியாளர் உள்ளே நுழைந்து, மகிழ்ச்சிப் பெருக்கோடு அமர்ந்த மேடையில் அலங்கரித்து, ஆக்கிரமித்து நின்ற படம் கடவுள் படம். சாதாரண கப்ரு வணங்கி முஸ்லிம் கூட இது போன்று கடவுள் பின்னணி கொண்ட மேடையில் ஒரு போதும் அமர மாட்டார். ஆனால் இந்த விளம்பரப் பிரியர், மைக் வெறியர் தவ்ஹீது என்ற போர்வையில் போய் அமர்ந்திருக்கின்றார் என்றால் இவர்களுக்கு ஏதாவது இலக்கோ, மார்க்க விளக்கமோ இருக்கின்றதா? என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

போஸ் கொடுத்த பாஸ்

“வீரன் அழகு முத்துக் கோன் சிலை திறப்பு விழா’ என்று தமிழகமெங்கும் சுவர் விளம்பரங்கள், வின் டிவி மற்றும் சில தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் செய்து, முழுக்க முழுக்க இணை வைத்தலை அடிப்படையாகக் கொண்ட ஒரு விழாவில் கலந்து கொள்ளும் இந்தப் பேர்வழிக்கு, மேடையில் கடவுள் படங்கள் இருந்தால் என்ன? இவர் அந்த மேடையில் பங்கு பெறுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

இந்த பஸ் புகழ் பாஸ் தான், பத்திரிகைக்கு போஸ் கொடுத்ததாக வாதிடுகின்றார். இவரது வாதப்படி பத்திரிகைக்கு போஸ் கொடுத்ததாக வைத்துக் கொள்வோம். ரிமோட்டைத் தூக்கிக் கொண்டு, தேவநாதனை பத்திரிகையாளர்கள் நிற்கச் சொன்னது விளையாட்டுப் பொம்மையை இயக்குவதற்காகவா?

சிலை திறப்பிற்கு போட்டோக்கள் இல்லை. அதனால் தான் பத்திரிகையாளர்கள் போஸ் கொடுக்கச் சொல்கிறார்கள். எனவே நின்றது, போஸ் கொடுத்தது எல்லாமே சிலைக்காகத் தான். ஒட்டு மொத்தத்தில் நோக்கம் அனைத்துமே சிலை தான்.

அல்லாஹ்விடத்தில் நோக்கம் தான் முக்கியம். ஏனெனில் அவன் செயல்களைப் பார்ப்பதில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இரண்டு முஸ்லிம்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக் கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்என்று கூறுவதைக் கேட்டேன். உடனே நான் “அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவர் தம் சகாவைக் கொல்ல வேண்மென்று பேராசை கொண்டிருந்தார்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), நூல்: புகாரி 31

இங்கே எண்ணத்திற்குத் தான் முக்கியத்துவம். எனவே இவரது வாதம் சுத்த பசப்பு வாதமாகும்.

தேவனாக்கப்பட்ட தேவநாதன்

இதில் இன்னொரு கூத்து, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தேவநாதன் அங்கு கடவுளாகச் சித்தரிக்கப்பட்டது தான். “கிருஷ்ண பரமாத்மாவின் அவதாரம்’ என்று அந்த ஜாதி சங்கத்தின் பேச்சாளர்கள் புகழ்ந்த புகழாரங்கள் கேட்க சகிக்கவில்லை. இப்படிப்பட்ட மேடையில் எப்படி ஒரு முஸ்லிம் போய் அமர முடியும்? இது போன்ற மேடையில் ஏறுவது ஒருபுறமிருக்கட்டும். ஏறிட்டுப் பார்க்க முடியுமா?

ஒருவர் உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்து, அவர்களை முகத்திற்கு நேராகப் புகழ்ந்தார். “புகழ்பவர்களைச் சந்தித்தால் அவர்களது முகங்களில் மண்ணள்ளிப் போடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்என்று கூறியவாறு அவரது முகத்தில் மண்ணள்ளிப் போடலானார்கள்.

அறிவிப்பவர்: ஹம்மாம் பின் அல் ஹாரிஸ், நூல்: அஹ்மத் 22710

சாதாரண புகழ்ச்சிக்கு நபி (ஸல்) அவர்கள் மண்ணள்ளி வீசச் சொல்கிறார்கள். ஒரு தவ்ஹீதுவாதி என்றால் இது போன்ற மேடைகளுக்குப் போகக் கூடாது. அப்படியே போனாலும் இப்படித் தான் செய்ய வேண்டும். அதிலும் சாதாரண புகழ்ச்சிக்குத் தான் இந்த மருந்து, மாற்று! கடவுள் நிலையில் வைத்துப் புகழப்படும் புகழ்ச்சிக்கு நெருப்பை அள்ளித் தான் முகத்தில் வீச வேண்டும். ஏனெனில் இதற்குத் தண்டனை நரக நெருப்பு தான்.

இம்மாதிரியான காரணங்களால் தான் தவ்ஹீத் ஜமாஅத், பிற அமைப்பினருடன் மேடைகளைப் பகிர்வதைக் கட்டாயமாகத் தவிர்த்து, தனது தனித்தன்மையைக் காத்து வருகின்றது. இந்த மேடைப் பயில்வான்களுக்கு மார்க்கத்தில் எந்தக் கட்டுப்பாடும் கடிவாளமும் கிடையாது. அதனால் தான் இது போன்ற மேடைகளில் ஏறித் தங்கள் மொத்த மேதாவித்தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர். இதற்கு மார்க்கச் சாயம் பூசுவதால் தான் ஏகத்துவம் இதை இங்கு வெளுத்துக் கட்டும் வேலையில் இறங்கியுள்ளது.

யோகம் அடிக்க ஒரு யாகம்

தான் நடத்தும் இந்தச் சிலை திறப்பு விழா மற்றும் ஜாதிச் சங்க மாநாட்டில் பெரும் கூட்டம் கூட வேண்டும்; அப்படியொரு யோகம் அடிக்க வேண்டும் என்பதற்காக தேவநாதன் ஒரு யாகம் நடத்துகின்றார். அந்தத் தீ யாகத்தில் பழங்கள், தேங்காய், பூக்கள், நெய், உணவுப் பொருட்கள், பட்டாடைகள் போன்ற பொருட்கள் நெருப்பில் போட்டுக் கரியாக்கப்பட்டன. சாதாரண ஏழைகளின் வாழைப்பழம் முதல் பணக்காரர்களின் ஆப்பிள் பழம் வரை அத்தனையையும் தீ தனது நாக்கிற்குள் சுருட்டிக் கொண்டது.

அன்றாடம் பசித் தீயில் வாடுகின்ற பாட்டாளி வர்க்கம் பல கோடி பேர் இருக்கும் போது அவர்களுக்கு இந்தப் பழ வர்க்கங்களைப் படைத்திருந்தால் அது பயனுள்ளதாய் அமைந்திருக்கும். ஆனால் இந்தப் பணக்காரத் தலைவரோ கோடிக்கணக்கான உணவுப் பண்டங்களை பற்றி எரியும் பயங்கரத் தீயின் பசிக்குத் தீயாக்கியிருக்கிறார். இது அவரது டி.வி.யிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானது.

இந்தப் பைத்தியக்காரத்தனத்தைப் பார்த்த யாராவது இவரைத் தலைவர் என்று ஏற்றவும் போற்றவும் மனம் வருமா? ஆனால் இந்த மைக் வெறியரோ, அந்த ஜாதி சங்கத் தலைவரை ஆற்றல் தலைவன், அற்புதத் தலைவன், இவனைப் போல் ஒரு தலைவன் உண்டா? என்றெல்லாம் வாங்குகின்ற காசுக்காக தரங்கெட்டுப் புகழ்ந்து தள்ளுகிறார்.

இது போன்ற விரயத்தை வீரியத்துடன் கண்டித்திருக்க வேண்டும். அப்படிக் கண்டிக்க தெம்பு, திராணி இல்லையென்றால் இது போன்ற புகழாரத்தையாவது தவிர்த்திருக்க வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால், “தண்ணியடித்து விட்டு யாரும் இங்கு வரவேண்டாம் என்று இந்தத் தலைவன் சொல்லி விட்டான்’ என்று இந்த மைக் வெறியர் புகழ்ந்தது தான். இந்த ஆசாமி இப்படிப் பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில், மாநாட்டுப் பந்தலில் தங்கக் கம்பிகள் தண்ணியில் மிதந்து கொண்டிருந்தது வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதிலிருந்து இவர்களது இலட்சணத்தையும் இலக்கணங்களையும் சமுதாயம் புரிந்து கொள்ளலாம்.

தூண்டப்பட்ட ஜாதி வெறி

ஜாதி, மொழி, இன வேறுபாடுகளை குழி தோண்டிப் புதைக்க வந்த இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் எவரும் ஜாதியை ஆதரிக்க மாட்டார்கள்.

இந்து மதத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை முஸ்லிம்கள் ஆதரிப்பதுண்டு. அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதுண்டு. அது அவர்கள் இருக்கும் ஜாதிக்காக அல்ல! அவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதற்காகவும், மனிதர்கள் அனைவரும் ஓரினத்தைச் சேர்ந்தவர்களே என்பதை அவர்களுக்கு உணர்த்தி இஸ்லாத்தைப் போதிப்பதற்காகவுமே தலித்துகளுக்காக முஸ்லிம்கள் குரல் கொடுக்கின்றனர். மற்றபடி ஜாதி என்ற அடிப்படையில் கூட்டப்படும் எந்தவொரு கூட்டமும் இஸ்லாத்திற்கு எதிரானதே!

இனத்தை ஆதரித்து, குருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டு கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமேஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி)

நூல்: முஸ்லிம் 3440

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜாதி, இன வெறியை அறவே ஒழித்துக் கட்டுகிறார்கள். இனத்திற்காக, ஜாதிக்காகப் போராடுபவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவன் என்பதை இங்கு சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஜாதி வெறிக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை என்பது சாதாரண பாமர முஸ்லிம்களுக்கும் தெரிந்த உண்மை.

ஆனால் இந்த மைக் மகாதேவன்களுக்கு இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தில் நமக்கு மைக் கிடைக்கிறதா? என்பது தான் இவர்களுக்கு முக்கியம். அதனால் தான் முழுக்க முழுக்க ஜாதியை அடிப்படையாகக் கொண்ட, ஜாதி வெறியைத் தூண்டிப் பேசிய ஒரு மாநாட்டில் போய் கலந்து கொள்கின்றனர்.

“உன் ஜாதிக்காக நீ இட ஒதுக்கீடு கேட்டுப் போராடு’ என்று ஒவ்வொரு ஜாதிக்காரனிடமும் போய் சொல்வதற்கு இவர்களுக்கு எந்த மார்க்கம் அனுமதி வழங்கியது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

இதில் நானும் ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் தலைவன் என்று சொல்லிக் கொள்வது தான் வேடிக்கையும் வேதனையுமாகும்.

இட ஒதுக்கீடு கோரிக்கை

இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, யாதவர்களின் இட ஒதுக்கீட்டைப் பற்றிக் கண்டு கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அதைக் கண்டித்துப் பேசுகிறார். ஏனென்றால் யாதவர்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை மறைமுகமாகத் தமது சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டைப் பறித்து விடும் என்பதால்! அந்த அளவுக்கு கிருஷ்ணசாமி சுதாரிப்பாக இருக்கிறார். இங்குள்ள கூழ்முட்டைகளுக்கு அந்த அறிவும் இல்லை.

ஆளுக்கு ஆள் இட ஒதுக்கீடு என்று கேட்டால், அதுவும் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இட ஒதுக்கீடு அனுபவித்துக் கொண்டிருக்கும் சமுதாயங்கள் தனி இட ஒதுக்கீடு கேட்டுக் கிளம்பினால் அது நாம் போராடிப் பெற்ற 3.5 சதவிகிதத்திற்கு மறைமுக ஆபத்து! மத்தியில் நாம் பெறவிருக்கும் இட ஒதுக்கீட்டிற்கு வைக்கின்ற வேட்டு!

தேவநாதன் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையைக் கையில் எடுத்திருப்பது தனது அரசியல் ஆதாயத்திற்கு நாட்டுகின்ற அடிக்கல் என்பது இந்தப் பீரங்கிக்குப் புரியவில்லை. அல்லது புரிந்து கொண்டாலும் தனக்கு தேவநாதன் மூலம் டிவியில் கிடைக்கும் ஆதாயங்களுக்காக அதை நியாயப்படுத்துகிறார்.

தங்களது சுய நலனுக்காக சமுதாய நலன் எப்படிப் போனால் என்ன? என்பது தான் இந்த ஆசாமிகளின் எண்ணம். இவர்கள் எப்படி சமுதாய மானம் காக்கப் போகிறார்கள்? இவர்களுக்கு என்ன இலக்கு இருக்கின்றது? என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பட்டதாரியும் பண்டாரியும்

தேவநாதன் தனது துபை பயணத்தைப் பற்றி வின் டிவியில் பேசுகிறார். அப்போது துபையில் நூற்றுக்கணக்கான யாதவர்கள் தன்னை வந்து சந்தித்ததாகவும் அவர்கள் அனைவருமே பட்டதாரிகள் என்றும் கூறுகின்றார். அதாவது, யாதவ ஜாதியினர் அனைவரும் படித்து நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவரே ஒப்புக் கொள்கிறார்.

ஆனால் நமது முஸ்லிம் சமுதாய மக்களோ உணவு விடுதிகளில், வீட்டு வேலைகளில் 16 மணி நேரம் பணி புரியும் பண்டாரிகள், ஓட்டுனர்கள், இடையர்கள், வண்ணான்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், பாலைவன சாலைத் தொழிலாளர்கள், பாட்டாளிகள், பாரம் தூக்கும் சுமை தாங்கிகள். இவர்களுக்காக நாம் கண்ணீர் மட்டுமல்ல, செந்நீரும் வடிக்கிறோம். அந்த மக்களும் கண்ணீரும் செந்நீரும் வடிக்கிறார்கள்.

இந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்குக் கிடைக்கும் இட ஒதுக்கீட்டிற்கு வேட்டு வைக்கும் விதமாக, நல்ல நிலையில் இருக்கும் ஒரு ஜாதியினருக்காக இந்த ஆசாமி குரல் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? டிவியின் மூலம் கிடைக்கும் ஆதாயம் தான். தேவநாதன் போடும் பிச்சை தான் காரணம்.

இவர்களுக்கு எல்லாம் ஓர் இலட்சியம், இலக்கு உள்ளது என்று யாராவது சொல்ல முடியுமா? இவர்களுக்குப் பின்னால் செல்ல முடியுமா?

இந்த ஆனந்தாக்கள், பேராசிரியர்கள் எல்லாம், ஜனநாயகம் ஷிர்க் என்ற குருட்டு வாதத்தை வைத்த இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். அதை தாய்ச் சபையாக நினைப்பவர்கள்.

இந்த இயக்கத்திலிருந்து ஒருவித எதிர்பார்ப்புடன் ஏகத்துவத்திற்கு வந்தார்கள். அந்த எதிர்பார்ப்புக்கு ஏகத்துவம் இடம் தரவில்லை என்று தெரிந்தவுடன் தாங்கள் வந்த வழியே சென்று விட்டார்கள். இன்று அந்த இயக்கத்தின் மாநாடுகளில் போய் கலந்து கொண்டு மகிழ்கிறார்கள். தாய் வீட்டிற்கே வந்து விட்டோம் என்று தங்களது மகிழ்ச்சியை, நயவஞ்சகத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

இவர்களுக்கு என்று இம்மை, மறுமை பயணத்திற்காக ஓர் இலக்கு உண்டா? இலட்சியம் உண்டா? என்று சமுதாய மக்களே சிந்தியுங்கள்.

————————————————————————————————————————————————

தொடர்: 6

ஸிஹ்ர் – ஒரு விளக்கம்

நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 25:08)

மேற்கண்ட வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறுவோர் அநியாயக்காரர்கள் என்று நாம் வாதிட்டோம். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் மேற்கண்ட வசனத்துக்கு மாற்றமாக இருப்பதால் அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல எனவும் நாம் வாதிட்டிருந்தோம்.

அதை மறுக்கப் புகுந்த இஸ்மாயீல் ஸலபி மேற்கண்ட வசனத்தில் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதர் என்று சொல்லப்பட்டாலும் சூனியம் செய்யும் நபர் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று குர்ஆன் வசனத்துடன் விளையாடி இருக்கிறார்.

இது குறித்து அவர் எடுத்து வைக்கும் வாதம் இது தான்.

சூனியக்காரர் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்ட சூனியம் செய்யப்பட்டவர் என்ற பதம்:

அறபு மொழி வழக்கிலும் அல்குர்ஆனிய நடையிலும் செய்தவன் என்பதைச் செய்யப்பட்டவன் என்ற பதம் கொண்டு பயன்படுத்தும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

உதாரணமாக மூஸா (அலை) அவர்கள் ஒன்பது அத்தாட்சிகளைக் காட்டுகின்றார்கள். இது குறித்துக் குர்ஆன் கூறும் போது,

நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை வழங்கினோம். (தமது சமூகமாகிய) அவர்களிடம் அவர் வந்த போது (என்ன நிகழ்ந்தது? என நபியே!) நீர் இஸ்ராஈலின் சந்ததியினரிடம் கேட்டுப்பாரும். மூஸாவே! நிச்சயமாக சூனியம் செய்யப்பட்டவராக உம்மை நான் எண்ணுகிறேன் என்று பிர்அவ்ன் அவரிடம் கூறினான். (17:101)

என்று கூறுகின்றது. ஒன்பது அத்தாட்சிகளை-அற்புதங்களைக் காட்டிய பின் மூஸா நபியைப் பார்த்துச் சூனியக்காரன் எனக் கூறுவானா? சூனியம் செய்யப்பட்டவன் என்று கூறுவானா? என்று கேட்டால் சூனியக்காரன் என்று தான் கூறுவான் என்று யாரும் பதிலளிப்பர். சகோதரர் கூட அப்படித் தான் பதிலளிப்பார். அவர் அவரது தர்ஜமாவில் இதை எழுத்து மூலம் அளித்துமுள்ளார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது, இவர் சூனியம் செய்கிறார் என்று சில வேளை விமர்சனம் செய்தனர். (பக்: 1302)

எனவே, அற்புதம் செய்தவரைப் பார்த்து  சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறப்பட்டாலும் அதன் அர்த்தம்  சூனியம் செய்பவர் என்பது தான். இதை நான் எனது சொந்தக் கருத்தாகக் கூறவில்லை.

மூஸா நபி குறித்து மஸ்ஹூர்-சூனியம் செய்யப்பட்டவர் என்ற பதம் சூனியக்காரர் என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என அறபு மொழியை அறிந்த அல்குர்ஆன் விளக்கவுரையாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக,

பொருள்: (மூஸாவே உன்னை நான் சூனியம் செய்யப்பட்டவராகக் கருதுகிறேன்.) இந்தப் பதம், சூனியக்காரர் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அல்லாஹ் மிகவும் அறிந்தவன். (தப்ஸீர் இப்னு கதீர்)

அல் பராஉ அவர்களும், அபூ உபைதா அவர்களும் இதன் அர்த்தம் சூனியம்செய்யப்பட்டவர் என்பதல்ல, சூனியம் செய்பவர் என்பது தான் என்று கூறுகின்றனர்.

பொருள்: இன்னும் முஹம்மத் இப்னு ஜரீர் அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்பதன் அர்த்தம் சூனியக் கலை பற்றிய அறிவைப் பெற்றவர். நீ செய்யக்கூடிய இந்த அதிசய செயல்கள் எல்லாம் உனது சூனியத்தால் செய்கிறாய் என்பது இதன் அர்த்தம் என்கின்றார்கள். (சுருக்கம் தப்ஸீர் பகவி)

அல்குர்ஆன் விளக்கவுரையாளர்களின் கூற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அறபு மொழி வழக்கையாவது ஏற்றுக்கொள்வார்கள் என எண்ணுகின்றேன்.

அத்துடன் மூஸா நபி ஒன்பது அற்புதங்களைக் காட்டிய போது சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறியதாக ஒரு இடத்தில் வருகின்றது. மற்றொரு இடத்தில் தெளிவாகவே அத்தாட்சிகளைப் பார்த்த போது சூனியக்காரன் என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

(அனைவரும்) காணும் வகையில் அவர்களிடம் நமது அத்தாட்சிகள் வந்த போது, இது தெளிவான சூனியமே என்று அவர்கள் கூறினர்.

இன்னும், அவர்களது உள்ளங்கள் அவற்றை உறுதியாக நம்பியிருந்தும், அநியாயமாகவும் ஆணவத்துடனும் அவற்றை அவர்கள் மறுத்தனர். குழப்பம் விளைவித்தோரின் இறுதி முடிவு என்னவாயிற்று? என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (27:13-14)

அவர்கள் (இவர்) சூனியக்காரரும், பெரும் பொய்யருமாவார் எனக் கூறினர். (40:24)

இது போன்ற வாதங்களை முன்வைத்து சூனியம் செய்யப்பட்டவர் என்பது அதன் அர்த்தம் அல்ல சூனியக்காரர் என்பது தான் அதன் அர்த்தம் என்கின்றார்கள்.

இதற்கு மற்றுமொரு உதாரணத்தை இதே சூறாவில் காணலாம்.

குர்ஆனை நீர் ஓதினால் உமக்கும் மறுமையை நம்பிக்கை கொள்ளாதோருக்கும் இடையில், மறைக்கப்பட்ட ஒரு திரையை நாம் ஏற்படுத்தி விடுவோம். (17:45)

இந்த வசனத்தில் (மறைக்கப்பட்ட திரை) என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் (மறைக்கும் திரை) என்பதுதான் இதன் அர்த்தம் என அல்குர்ஆன் விளக்கவுரைகள் கூறுகின்றன. இதைப் பின்வரும் கூற்று உறுதி செய்கின்றது.

செய்யப்பட்டவன் என்ற பதம், செய்பவன் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படலாம் என்ற அறபு இலக்கண மரபுக்கு இவை ஆதாரமாக அமைகின்றன.

இவரது இந்த வாதமும் வழக்கம் போல் இவரது அரைகுறை அறிவுக்கு அத்தாட்சியாக விளங்குகிறது. இது அரபு மொழி இலக்கணம் பற்றிய வாதமாக இருப்பதால் இது குறித்து சற்று விரிவாகவே நாம் விளக்க வேண்டும்.

அரபு மொழியானாலும் வேறு எந்த மொழியானாலும் ஒவ்வொரு சொல்லுக்கும் நேரடிப் பொருள் இருக்கும். எது நேரடிப் பொருளாக உள்ளதோ அந்தப் பொருளில் தான் அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் மிக மிகச் சில நேரங்களில் ஒரு சொல்லுக்கு நேரடிப் பொருள் கொள்ள முடியாமல் இருக்கும். நேரடிப் பொருள் கொள்வது பொருத்தமற்றதாக ஆகி விடும். அது போன்ற சந்தர்ப்பங்களில் நேரடிப் பொருளைத் தவிர்த்து விட்டு மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். அவ்வாறு மாற்றுப் பொருள் கொடுக்கும் போது அதற்கான ஆதாரம் அந்த வாக்கியத்தில் ஒளிந்திருக்க வேண்டும்.

உதாரணமாக சிங்கம் என்ற சொல்லின் நேரடிப் பொருள் ஒரு குறிப்பிட்ட வன விலங்காகும். எந்த இடத்தில் சிங்கம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டாலும் அதற்கு சிங்கம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

“நான் மண்ணடியில் ஒரு சிங்கம் முழங்கியதைப் பார்த்தேன்’ என்று ஒருவன் கூறினால் அப்போது சிங்கம் என்று பொருள் கொடுக்க முடியாது. ஏனெனில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக மண்ணடி இருப்பதால் அங்கே சிங்கத்தைப் பார்த்திருக்க முடியாது. மேலும் சிங்கம் முழங்கவும் செய்யாது. இந்த இரண்டு காரணங்களும் வன விலங்கு என்ற அர்த்தத்தில் அவன் இதைக் கூறவில்லை என்பதையும் வீரமான ஒரு மனிதனைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறான் என்பதையும் நமக்குக் காட்டி விடுகிறது.

வனவிலங்கைக் குறிக்காது என்பதற்கு இதுபோன்ற ஆதாரம் இல்லா விட்டால் சிங்கம் என்ற சொல்லின் பொருள் குறிப்பிட்ட வனவிலங்கு தான்.

மேற்கண்ட வாக்கியத்தில் சிங்கம் என்பதற்கு வீரமான மனிதன் என்று பொருள் கொண்டதால் சிங்கம் என்று பயன்படுத்தப்பட்ட எல்லா இடங்களிலும் எவ்வித ஆதாரமும் இல்லாமல் மனிதன் என்று தான் பொருள் கொள்வேன் என்று ஒருவன் கூறினால் அவன் அறிவற்றவன் என்று நாம் கருதுவோம்.

ஆனால் நேரடிப் பொருள் கொள்வதற்கு ஆதாரம் தேவை இல்லை. நேரடிப் பொருளை விட்டு விட்டு வேறு பொருள் நாடினால் தான் அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டும்.

அது போல் ஒரு சொல்லுக்குப் பல வடிவமைப்புகள் இருக்கும். ஒவ்வொரு வடிவமைப்புக்கும் ஒரு பொருள் இருக்கும். இது போன்ற இடங்களில் அந்த வடிவமைப்புக்கு என்ன பொருளோ அதைத் தான் அச்சொல்லின் பொருளாகக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, அடித்தல் என்ற சொல் அடித்தான் என்ற வடிவம் பெறும் போது அது கடந்த காலத்தைக் குறிக்கும். அடிப்பான் என்று வேறு வடிவத்துக்கு மாறும் போது அது வருங்காலத்தைக் குறிக்கும். அடித்தவன் என்ற வடிவத்தில் இருந்தால் அடி கொடுத்தவனை அது குறிக்கும். அடிக்கப்பட்டவன் என்று கூறினால் அடி வாங்கியவனைக் குறிக்கும். ஒவ்வொரு வடிவத்தையும் ஒரு குறிப்பிட்ட பொருள் தருவதற்காகத் தான் அம்மொழி பேசுவோர் உருவாக்கியுள்ளனர்.

அடித்தான் என்ற சொல்லுக்கு நாளைக்கு அடிப்பான் என்று பொருள் கொள்ள முடியாது. அப்படி பொருள் கொண்டால் மொழியின் மூலம் தெளிவு கிடைப்பதற்குப் பதிலாக குழப்பம் தான் மிஞ்சும்.

ஆனாலும் சில நேரங்களில் அதன் நேரடிப் பொருள் கொள்ள முடியாமல் அந்த வாசக அமைப்பு தடையாக அமையும். அல்லது அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்ட விதம் சூழ்நிலை ஆகியவை நேரடிப் பொருள் கொள்வதற்கு தடையாக இருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில் மாற்றுப் பொருள் கொள்ளலாம். ஆனால் அதற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.

உலக அழிவு நாள் இனி மேல் தான் வரப் போகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் உலகம் அழிந்து விட்டது என்று குர்ஆன் கூறுகிறது. இதற்கு அழிந்து விட்டது என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் உலகம் அழிந்திருந்தால் இந்த வசனமே வந்திருக்காது. நம் கண் முன்னே உலகம் அழியவில்லை என்பது தெரிவதால் இனி அழியும் என்பது தான் இவ்வாறு கூறப்படுகிறது. நிச்சயம் நடந்து விடும் என்ற உறுதி இருந்தால் அது நடப்பதற்கு முன்பே நடந்து விட்டது என்று சொல்வது எல்லா மொழிகளிலும் உள்ளது தான்.

இரண்டு அணிகளுக்கிடையே ஒரு விளையாட்டுப் போட்டி நடக்கிறது. ஒரு அணியின் விளையாடும் திறன் படு மோசமாக இருக்கிறது. இன்னொரு அணி விளாசித் தள்ளுகிறது. ஆனால் விளையாட்டு முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். இந்த அணி வெற்றி பெற்று விட்டது என்று கூறுவோம். வெற்றி பெறும் என்பதைத் தான் வெற்றி பெற்று விட்டது என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறோம்.

இது போல் ஒரு சொல்லுக்கு நேரடி அர்த்தமே ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கும். ஆனாலும் அதனுடன் இணைக்கப்படும் சொல்லுக்கேற்ப அந்தச் சொல்லுக்குப் பொருள் கொள்வோம். ஒரு டாக்டர், “ஊசியை எடுத்து வா’ என்று தனது உதவியாளரிடம் கூறினால் உடலில் செலுத்துவதற்கான ஊசியைக் குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொள்கிறோம். ஒரு தையல் கடை முதலாளி, “ஊசியை எடுத்து வா’ என்று கூறினால் தைக்கும் ஊசி என்று பொருள் கொள்வோம்.

மடத் தலைவர் என்று கூறினால் முட்டாள் தலைவன் என்றும் பொருள் உண்டு. மடம் எனும் ஆசிரமத்தின் தலைவர் என்றும் பொருள் உண்டு. ஆயினும் பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்து, பொருத்தமான அர்த்தத்தைக் கண்டு கொள்கிறோம்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இஸ்மாயீல் ஸலபி வாதத்தைக் கவனிப்போம்.

சூனியம் செய்யப்பட்டவர் என்பதன் பொருள் அவருக்கு மற்றவர்கள் சூனியம் செய்து விட்டார்கள் என்பது தான். அந்த அந்தப் பொருளைத் தான் பொதுவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் அந்த வாக்கிய அமைப்பு அவ்வாறு பொருள் கொள்வதற்குத் தடையாக அமைந்து விட்டால் அப்போது வேறு வடிவத்துக்குரிய பொருளைக் கொடுக்கலாம் என்பது தான் அரபு மொழி மட்டுமின்றி அனைத்து உலக மொழிகளிலும் உள்ள பொதுவான விதி. இலக்கணம் தான் மொழிக்கு மொழி மாறுபடுமே தவிர இலக்கியம் பொதுவானது தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காஃபிர்கள் “சூனியம் செய்யப்பட்டவர்’ என்று கூறினார்கள் என்பது நேரடியான வாசகம். இதன் நேரடிப் பொருள் அவருக்கு யாரோ சூனியம் செய்து விட்டார்கள் என்பது தான். அவர் சூனியம் செய்து விட்டார் என்பது நேரடிப் பொருள் அல்ல.

“சூனியம் செய்யப்பட்டவர்’ என்ற சொல்லுக்கு “சூனியம் செய்தவர்’ மாற்றிப் பொருள் கொள்வதாக இருந்தால் நேரடிப் பொருள் கொள்வதற்குத் தடங்கல் இருக்க வேண்டும். நேரடிப் பொருள் கொடுப்பதற்குத் தடை இல்லாவிட்டால் நேரடிப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும். இந்த அறிவு தான் அவருக்கு இல்லை.

சிங்கம் ஒரு கழுதையை அடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது என்று சொன்னால் இந்த இடத்தில் மாவீரன் என்று தான் பொருள் செய்வேன் என்று இஸ்மாயீல் ஸலபி சொல்லாமல் சொல்கிறார். மண்ணடியில் சிங்கத்தைப் பார்த்தேன் எனும் போது மாவீரன் என்று பொருள் கொண்டதை இதற்கு ஆதாரமாகக் காட்டினால் இவரை என்னவென்பது?

நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர். (25:08)

இவ்வசனத்தில் சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கும் போது அந்த அர்த்தத்தை விட்டு விட்டு வேறு அர்த்தம் செய்ய என்ன அவசியம் ஏற்பட்டது?

குர்ஆனை ஆராயும் போது காஃபிர்கள் நபிகள் நாயகத்தை எப்படியெல்லாம் விமர்சித்தனர் என்று கூறப்பட்டுள்ளது. என்பதை அறியலாம். அதற்கு ஏற்பவே மேற்கண்ட வசனம் அமைந்துள்ளது.

அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான் என்று அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 15:6)

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெருமையடிப்போராக அவர்கள் இருந்தனர். பைத்தியக்காரக் கவிஞருக்காக நாங்கள் எங்கள் கடவுள்களை விட்டு விடுவோமா? என்று கேட்கின்றனர். அவ்வாறில்லை! அவர் உண்மையையே கொண்டு வந்துள்ளார். தூதர்களை உண்மைப்படுத்துகிறார்.  (அல்குர்ஆன் 37:35,36,37)

அறிவுரை அவர்களுக்கு எவ்வாறு (பயனளிக்கும்?) அவர்களிடம் தெளிவான தூதர் வந்துள்ளார். பின்னர் அவரை அவர்கள் அலட்சியம் செய்தனர். பிறரால் கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர் என்றும் கூறினர்.  (அல்குர்ஆன் 44:13,14)

இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் இது குறித்து பேசி வைத்துக் கொண்டார்களா? மாறாக அவர்கள் வரம்பு மீறிய கூட்டமாவர்.  (அல்குர்ஆன் 51:52,53)

எனவே (முஹம்மதே!) அறிவுரை கூறுவீராக! உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர்.  (அல்குர்ஆன் 52:29)

(முஹம்மதே!) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. உமக்கு முடிவுறாத கூலி உண்டு. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். உங்களில் யாருக்குப் பைத்தியம் என்று நீரும் பார்ப்பீர்! அவர்களும் பார்ப்பார்கள்.  (அல்குர்ஆன் 68:2-6)

(முஹம்மதே!) இந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏக இறைவனை) மறுப்போர் உம்மைத் தமது பார்வைகளால் வீழ்த்தப் பார்க்கின்றனர். இவர் பைத்தியக்காரர்என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 68:51)

உங்கள் தோழர் (முஹம்மது) பைத்தியக்காரர் அல்லர். (அல்குர்ஆன் 81:22)

மக்களை எச்சரிப்பீராகஎன்றும், “நம்பிக்கை கொண்டோருக்கு தாம் செய்த நற்செயல் (அதற்கான கூலி) தம் இறைவனிடம் உண்டு என நற்செய்தி கூறுவீராகஎன்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? “இவர் தேர்ந்த சூனியக்காரர்என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 10:2)

அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். இவர் பொய்யர்; சூனியக்காரர் என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர். (அல்குர்ஆன் 38:4)

காபிர்களின் மேற்கண்ட விமர்சனங்களைக் கவனித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து முரண்பட்ட இரண்டு நிலை காபிர்களிடம் இருந்ததை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனம் கவரும் பிரச்சாரத்தைக் கண்ட சில காபிர்கள் இவர் சூனியத்தின் மூலம் தான் கூறுவதை நம்புமாறு செய்து விடுகிறார் என்று நினைத்தார்கள். சூனியக்காரர் என்று கூறினார்கள்.

இன்னொரு புறம் மறுமை சொர்க்கம் போன்ற நம்பச் சிரமமானவைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதைக் காணும் போது இவர் நம்ப முடியாதவைகளை உளறுகிறார். எனவே இவர் மனம் பேதலித்துப் போன பைத்தியக்காரர் என்று கூறினார்கள்.

மற்றவர்களை மயக்கும் அளவுக்குத் திறன் படைத்தவர் என்பதும், தான் செய்வது என்னவென்று புரியாமல் உளறுபவர் என்பதும் முரண்பட்ட விமர்சனம் என்றாலும் இவ்விரு விமர்சனங்களையும் அவர்கள் செய்தனர் என்பதற்கு இவ்வசனங்கள் ஆதாரமாக உள்ளன.

பைத்தியக்காரராக இருப்பவர் சூனியக்காரராக இருக்க முடியாது. அடுத்தவரை மயக்கும் அளவுக்குச் சூனியம் செய்பவர் பைத்தியக்காரராக இருக்க முடியாது. ஆனாலும் சிலர் பைத்தியம் என்றனர். மற்றும் சிலர் சூனியக்காரர் என்று கூறினர் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

சூனியக்காரர் என்று மட்டும் அவர்கள் விமர்சிக்கவில்லை. அவருக்கே சூனியம் செய்யப்பட்டு விட்டது, அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று அவர்கள் விமர்சித்திருக்கும் போது சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லின் நேரடிப் பொருளைக் கைகழுவும் அவசியம் என்ன?

சூனியக்காரர் என்று மட்டும் தான் அவர்கள் சொன்னார்கள்; சூனியம் செய்யப்பட்டவர் என்று சொன்னதே இல்லை என்று வேறு வசனங்கள் கூறி இருந்தால் இந்த இடத்தில் சூனியம் செய்யப்பட்டவர் என்பதன் அர்த்தத்தை மாற்றலாம். அவ்வாறு இல்லாத போது சூனியம் செய்தவர் என்ற சொல்லுக்கு அதன் நேரடிப் பொருளையும் சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்கு அதன் நேரடிப் பொருளையும் கொடுப்பது தான் குர்ஆனை அணுகும் முறையாகும். அவ்வாறு இன்றி தனது தவறான கருத்துக்கு மரண அடியாக உள்ளது என்பதற்காக ஒரு சொல்லின் நேரடி அர்த்தத்தை மாற்றுவது அறிவு நாணயம் மிக்க செயலா? இவரைப் போன்றவர்களை நாம் எப்படி நம்புவது?

அடுத்ததாக சூனியக்காரர்களை மிஞ்சும் வகையில் எப்படி புரட்டுகிறார் என்று பாருங்கள்?

மூஸா நபி அவர்களைப் பற்றி சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் காட்டி அந்த வசனத்தில் சூனியம் செய்யப்பட்டவர் என்பது பொருந்தாது என்று வாதிடுகிறார்.

இப்ராஹீம் திருடியது உறுதியானதால் இஸ்மாயீலின் கையை வெட்டித் தான் ஆக வேண்டும் என்று ஒருவர் வாதிட்டால் அவரது நிலை என்ன? அந்த நிலையில் தான் இவரது மேற்கண்ட வாதம் அமைந்துள்ளது.

மூஸா நபி அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று ஃபிர்அவ்ன் கூறினான். அந்த இடத்தில் சூனியம் செய்பவர் என்ற அர்த்தம் தான் பொருந்தும் என்பது அவரது வாதம். நாம் கேட்கிறோம், மூஸா நபி தொடர்பாக பயன்படுத்தப்பட்ட வாசக அமைப்பு நேரடி அர்த்தம் செய்ய தடையாக இருக்கிறது என்ற காரணத்துக்காக சூனியம் செய்பவர் என்று பொருள் செய்தால் தடையாக இல்லாத அனைத்து வசனங்களிலும் அப்படித் தான் செய்வேன் என்பது தான் ஆய்வு செய்யும் இலட்சணமா?

ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டிய படி, “சிங்கம் ஒரு கழுதையை அடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது’ என்று சொன்னால் இந்த இடத்தில் மாவீரன் என்று தான் பொருள் செய்வேன் என்று இஸ்மாயீல் ஸலபி சொல்லாமல் சொல்கிறார். மண்ணடியில் சிங்கத்தைப் பார்த்தேன் எனும் போது மாவீரன் என்று பொருள் கொண்டதை ஆதாரமாகக் காட்டினால் இவரை என்னவென்பது? என்பதை மீண்டும் கேட்க விரும்புகிறோம்.

மூஸா நபி அவர்கள் அற்புதம் செய்யும் போது அதை விமர்சித்த ஃபிர்வ்ன் “சூனியம் செய்பவர்’ என்று தான் கூற முடியும். “சூனியம் செய்யப்பட்டவர்’ என்று கூற முடியாது. எனவே “சூனியம் செய்பவர்’ என்பதற்கு “சூனியம் செய்யப்பட்டவர்’ என்பது பொருள் என்று முடிவு செய்கிறார். இதன் படி இவர் வாதிப்பது என்றால் மூஸா நபி குறித்த மேற்கண்ட வசனத்துக்கு மட்டும் தான் அவ்வாறு பொருள் என்று முடிவு செய்யலாமே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்துப் பேசும் வேறு வசனத்துக்கும் அதே பொருளைக் கொடுப்பது என்ன நியாயம்?

மூஸா நபி குறித்த விஷயத்திலும் கள்ளத்தனம் செய்திருக்கிறார்.

என்று அவர் மேற்கோள் காட்டும் நூலில் இருக்கும் போது, அடிக்கோடிட்ட வார்த்தைகளை இருட்டடிப்புச் செய்து விட்டு, “இது தான் மரபு’ என்று சொல்கிறார்.

இதன் முழுமையான அர்த்தம் இது தான்.

“மூஸாவே! யாரோ உனக்கு சூனியம் செய்து விட்டனர் என்று ஃபிர்அவ்ன் கூறினான் என்பதே இதன் கருத்து’ என கலபி கூறுகிறார். “யாராலோ ஏமாற்றப்பட்டு விட்டார்’ என்று இப்னு அப்பாஸ் கூறுகிறார். “சத்தியத்திலிருந்து திசை திருப்பப்பட்டவர் என்ற பொருளில் அப்படிக் கூறினான்’ என்றும் பொருள் கொள்ளப்பட்டது.

இப்படிக் கூறிய பிறகு தான் ஸலபி சொல்வது போலவும் பொருள் கொள்ளலாம் என்று அந்த நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அதாவது மூஸா நபி தொடர்பான அந்த வசனத்தில் கூட சூனியம் செய்யப்பட்டவர் என்று நேரடிப் பொருள் கொள்வது தடை இல்லை என்பது அவர் எடுத்துக் காட்டிய மேற்கோளில் இருந்து புரியும் விஷயம்.

நாம் எவ்வளவு தான் ஆதாரத்தைக் காட்டினாலும் ஒரு ஆதாரமும் காட்டவில்லை என்று விவாதங்களில் எதிர் அணியினர் பொய்யாகக் கூறுவார்கள். அது போல் மூஸா நபி எவ்வளவு அற்புதம் செய்து காட்டிய போதும், “ஒன்றுமே செய்து காட்டாமல் அற்புதம் என்று உளறுகிறாய். எனவே உனக்குக் கிறுக்குத் தான் பிடித்துள்ளது’ என்று ஃபிர்அவ்ன் அதன் நேரடி அர்த்தத்தில் கூறுவது ஆச்சரியமானதல்ல.

மூஸா நபி குறித்த அந்த வசனத்தில் சூனியம் செய்யப்பட்டவர் என்ற பொருள் பொருந்தாது என்று வைத்துக் கொண்டாலும். அதற்கும் நபிகள் நாயகம் தொடர்பான 25:8 வசனத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

அதே நேரத்தில் மூஸா நபி விஷயத்தில் பயன்படுத்தப்பட்ட “சூனியம் செய்யப்பட்டவர்’ என்பதற்கு “சூனியம் செய்பவர்’ என்று தனக்குச் சாதகமான அர்த்தத்தை யாராவது செய்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்த இஸ்மாயில் ஸலபி, எந்த வசனம் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோமோ அந்த வசனத்துக்கு அரபு மொழி அறிந்த வல்லுனர்கள், விரிவுரையாளர்கள் என்ன பொருள் கூறியுள்ளனர் என்பது தெரிந்தும் இருட்டடிப்புச் செய்வது ஏன்?

“உம்மை சூனியக்காரர் என்றும், சூனியம் செய்யப்பட்டவர் என்றும், பைத்தியக்காரர் என்றும், பொய்யர் என்றும், புலவர் என்றும் கூறுவதைக் கவனிப்பீராக! இவை அனைத்துமே பொய்’ என்று இப்னு கஸீர் கூறுகிறார்.

அதாவது சூனியம் செய்யப்பட்டவர் என்று அதன் நேரடி பொருளிலேயே காபிர்கள் பயன்படுத்தினார்கள் என்று இப்னு கஸீர் கூறுவது ஏன் இவரது கண்ணுக்குத் தெரியவில்லை?

“உமக்குச் சூனியம் செய்யப்பட்டதால் உமக்கு அறிவு இல்லாமல் போய் விட்டது’ என்று முஜாஹித் கதாதா ஆகியோர் கூறுவதே நேரடியான கருத்தை ஒட்டி அமைந்துள்ளது எனவும் இப்னு கஸீர் கூறியுள்ளாரே! இவர் அரபு மொழிப் பண்டிதர் இல்லையா?

தப்ரீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்களே! அது இவரது கண்ணுக்குத் தெரியவில்லையா? அல்லது தெரிந்து இருட்டடிப்புச் செய்துள்ளாரா?

சூனியக்காரர் என்றும் அவர்கள் கூறினார்கள். சூனியம் செய்யப்பட்ட பைத்தியக்காரர் என்றும் கூறினார்கள் சூனியம் செய்யப்பட்டதால் அறிவு கெட்டு விட்டவர், நிதானத்தை இழந்தவர் என்றும் கூறினார்கள் என்று தபரி அவர்கள் கூறுவது அரபு மொழி மரபுக்கு ஏற்ப உள்ளதா? சம்பந்தமில்லாமல் உளறுவது அரபு மொழி மரபுக்கு ஏற்ப உள்ளதா?

இவர்கள் மதிக்கும் சவூதியின் பெரிய ஆலிம் ஒருவர், இஸ்மாயீல் ஸலபி கூறுவது பொய் என்கிறாரே! அதற்கு என்ன சொல்லப் போகிறார்?

இவர் வஹீ என்று கூறும் விஷயங்களில் சூனியம் செய்யப்பட்டு விட்டார். இவர் சொல்வது சூனியம் செய்யப்பட்டவனின் உளறல் போல் உள்ளது என்று காபிர்கள் விமர்சனம் செய்ததாக இப்னு உஸைமீன் அவர்கள் கூறுகிறாரே?

ஆக இவரது இந்த வாதத்திலும் அறிவு சார்ந்த விஷயம் இல்லை. அறியாமையின் திரட்டாகவே இது அமைந்துள்ளது.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக யார் கூறினாலும், எந்த நூலில் அது பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அது பொய் தான் என்பது நிரூபணமாகிறது.

அடுத்ததாக இவர் எடுத்து வைக்கும் வாதம் இதைத் தூக்கி அடிக்கும் வகையிலும் குர்ஆனை இழிவுபடுத்தும் வகையிலும் அமைந்துள்ளதை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

————————————————————————————————————————————————

காசு பணமா? கற்பு மானமா?

படிப்பதற்கு முன்…

சமுதாயத்தில் நடைபெறும் அவலங்களைச் சுட்டிக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இதில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையில் நடந்த நிகழ்வுகளாகும். சமுதாயத்தில் அனைத்துப் பெண்களும் இப்படித் தான் என்பது இதன் பொருளல்ல! மார்க்கத்தைப் பின்பற்றி, தங்கள் கற்பு நெறிகளைப் பாதுகாக்கும் பெண்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், சூழ்நிலை காரணமாக வழிதவறும் பெண்களைப் பற்றி எச்சரிப்பது மார்க்க அடிப்படையில் நமது கடமை என்பதற்காகவே இந்தக் கட்டுரை வெளியிடப்படுகின்றது.

காலம் காலமாக முஸ்லிம்கள் வெளிநாட்டில் போய் சம்பாதித்து வருகின்றனர். கடந்த காலத்தில் சிங்கப்பூர், மலேஷியா என்று பயணம் மேற்கொண்டனர். அப்படிப் பயணம் சென்றவர்கள் இரண்டாண்டுக்கு ஒரு முறை அல்லது ஓராண்டுக்கு ஒரு முறை வந்தாலும் ஆறு மாத காலம் விடுப்பில் வருவார்கள். இத்தகைய பயணங்களால் பெரும்பாலும் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை. அரபு நாட்டுப் பயணம் துவங்கியது தான் தாமதம். பிரச்சனைகள், மடை திறந்த வெள்ளமாய் சமுதாயத்தை நோக்கிப் பாய ஆரம்பித்து விட்டன.

வளைகுடாப் பயணம் மேற்கொள்வோருக்குப் பெரும்பாலும் இரண்டாண்டுகளுக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் அல்லது 40 நாட்கள் விடுமுறை தருகிறார்கள். சில கம்பெனிகளில் ஆண்டுக்கு ஒரு மாதம் விடுமுறை!

இவ்வளவு குறைந்த விடுமுறையில் வருகின்ற ஒருவர் திருமணம் முடித்து விட்டுச் செல்கின்றார். கணவனின் முகம் மனைவிக்கும், மனைவியின் முகம் கணவனுக்கும் நினைவில் நன்கு பதியாத இந்தக் குறைந்த அவகாசத்தில் மீண்டும் வெளிநாடு திரும்பி விடுகின்றார்.

அடுத்து அவர் ஊருக்குத் திரும்புவது இரண்டாண்டுகளுக்குப் பின்னர் தான். இதற்கிடையே இங்கே நடப்பது என்ன? அது தான் இரத்தத்தைக் கொதிக்க வைத்து இதயத்தை வெடிக்கச் செய்யும் அதிர்ச்சி நிகழ்வுகளாகும்.

குடும்பத்திலேயே குள்ள நரி

நம் நாட்டு வாழ்க்கை அமைப்பு முறை கூட்டுக் குடும்பமாகும். அண்ணன், தம்பிகள் எல்லோரும் ஒரே குடும்பமாக, ஒன்றாய் உண்டு ஒரே வீட்டில் வாழ்கின்றனர்.

அண்ணன் மனைவி தம்பியிடமோ, தம்பி மனைவி அண்ணனிடமோ பலியாகி விடுகின்றனர். கணவன் ஊரில் இருக்கும் போதே இந்த அபாயம் நடக்கின்றது எனும் போது கணவன் வெளிநாட்டில் இருந்தால் ஏற்படும் அபாயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கணவன் வீட்டிலே அல்லது மனைவியின் வீட்டிலே கூட இந்தப் பேராபத்தும் பெரு விபத்தும் நடைபெறுகின்றது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மக்களிடம் இஸ்லாம் அதன் தூய வடிவில் வந்து சேரவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: புகாரி 5232

தவ்ஹீத் ஜமாஅத் வந்து தான் இந்த ஹதீஸை தயவு தாட்சண்யமின்றி போட்டு உடைத்துச் சொல்கின்றது. மார்க்கம் சொல்கின்ற இந்தத் தடுப்பு அரண் கணவன் ஊரில் உலவிக் கொண்டிருக்கும் போதே உடைத்து நொறுக்கப்பட்டு விபத்தும் விபரீதமும் ஏற்படுகின்றது. கணவன் வெளிநாடு சென்று விடுகிறான் எனும் போது ஷைத்தான் முழுமையாகப் புகுந்து விளையாடி விடுகின்றான். இப்படிக் குடும்பத்தில் விளையாடும் குள்ள நரிக்கு இப்பெண்கள் பலியாவது ஒரு ரகம்.

வேலி தாண்டும் வெள்ளாடு

குடும்பத்தில் நடக்கும் இந்தக் குழப்பம் புகைந்து, பற்றி எரிந்து விவாகரத்தில் போய் முடிகின்றது. அண்ணன், தம்பிக்கு மத்தியில் மாறாப் பகை, தீராப் பழி ஏற்பட்டு விடுகின்றது.

குடும்பத்தைத் தாண்டிச் சென்று சில பெண்கள், வேலி தாண்டும் வெள்ளாடாகவும் ஆகி விடுகின்றனர். இந்தக் கட்டத்தில் இப்பெண்கள் இஸ்லாத்தை விட்டே ஓடி விடுகின்றனர். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

வட்டிக்காரன்

பொதுவாக நம்முடைய சமுதாயத்தின் பலவீனத்தைப் பிற சமுதாயத்தவர்கள் நன்கு தெரிந்தே வைத்திருக்கின்றனர். வெளிநாட்டுக்குச் செல்கின்றவர்களின் குடும்பங்களை நன்கு நோட்டமிட்டு இரையைப் பார்த்து வட்டமிடுகின்ற கழுகாக கணக்குப் போட்டு தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இதில் வட்டிக்கென்றே பெயர் பெற்ற ஒரு சமுதாயத்தினர் முதலிடம் வகிக்கின்றனர். இவர்களிடம் தான் நம்முடைய சமுதாய மக்கள் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு போய் வட்டிக்கு வாங்குகின்றனர். அதன் பின்னர் கணவன் பயணம் போய் விடுகின்றான். இங்கே இவனுடைய மனைவியிடம் வட்டிக்காரனின் புதிய பயணம் துவங்கி விடுகின்றது. கடனும் அடைத்தபாடில்லை. கள்ளத் தொடர்பும் முடிந்தபாடில்லை. இப்படியே கணவனுக்கு விவகாரம் தெரிய வர விவாகரத்தில் போய் முடிகின்றது.

பலி கொள்ளும் பால்காரன்

பொதுவாகவே பால்காரனின் பார்வைகள் பலான பலன் கிடைக்காதா என்ற ஏக்கப் பார்வைகள் தான். நெல்லை மாவட்டத்தில் ஓர் ஊரில் வெளிநாட்டில் இருக்கின்ற ஒருவரின் மனைவி பால்காரனிடம் வழிதவறுகின்றாள். 5 மணிக்குக் கொடுக்கும் வழக்கத்தை மாற்றி 7 மணிக்குப் பால் கொடுக்கின்றான்; பலனை அனுபவிக்கின்றான்.

மேய வருகின்ற மேஸ்திரி

இது பால்காரனின் பாலியல் விளையாட்டு என்றால் வீடு கட்டுவதற்குக் காண்டிராக்ட் எடுக்கின்ற கொத்தனார் மேஸ்திரியின் மேய்ச்சலை நினைத்தால் வயிறு எரிகின்றது.

இவனுக்கும் நமது சமுதாயப் பெண்களின் கற்பு கறிவேப்பிலையாகி விட்டது. இது போல் வீட்டிற்கு வருகின்ற பொற்கொல்லன், ஆசாரி என்று பட்டியலே நீள்கின்றது.

பிரச்சார ஆலிமின் விபச்சாரம்

சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் ஒரு பிரச்சார ஆலிமின் பெயர் முஜீபுர்ரஹ்மான். இவனுடைய காமக் களியாட்டத்தைப் பாருங்கள்.

வெளிநாட்டில் இருக்கும் ஒரு சகோதரருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஒரு விரிசல்! இந்தச் சிறிய இடைவெளியில் இந்த ஆபாச ஆலிம்சா, சமாதானம் செய்கிறேன் என்ற சந்தடி சாக்கில் நுழைந்து விடுகிறான்.

சில துஆக்கள் மூலம் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன் என்று சதி சரச வலையைப் பின்னுகிறான். ஆலிம் என்ற போர்வையில் கணவனிடம் பேசுகிறான். ஆலிம் என்றால் இந்தச் சமுதாயம் ஈமானையும் இழந்து விடும் அளவுக்கு நம்பும் அல்லவா? அது தான் இங்கு நடந்திருக்கின்றது. இவனும் அடிக்கடி வர ஆரம்பித்திருக்கிறான். போன் தொடர்பும் ஏற்பட்டுள்ளது. பிறகு விவகாரம் முற்றிப் போய் ஊர் முழுக்க நாற ஆரம்பித்திருக்கிறது.

கல்லூரி படிக்கின்ற வயது வந்த மகள், +2 படிக்கின்ற மகனுடன் அந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு ராஜபாளையம் என்ற ஊருக்கு வந்து விடுகின்றான். சைதை ஜமாஅத் கொந்தளித்துப் போய் ராஜபாளையம் வந்து, கையும் களவுமாகப் பிடித்து பிள்ளைகளைக் காப்பாற்றிச் செல்கின்றனர். மனைவி ராமநாதபுரத்தைச் சேர்ந்த வசதி படைத்த பெண். விவாகரத்துச் செய்யப்படுகின்றாள்.

வைப்புக்கு எதிராக வைஃப் போராட்டம்

விவகாரம் இத்துடன் நிற்கவில்லை. இந்த அயோக்கிய ஆலிம்சாவுக்கு ஆராம்பண்ணை என்ற இடத்தில் புரோகித வேலையும் கிடைக்கிறது. பொறுக்கிகளும் இமாமத் வேலை பார்க்கலாம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. “நான் இருக்கும் போதே இவளை எப்படி இழுத்து வரலாம்’ என்று இவனது மனைவி போராடுகின்றாள்.

அன்றாடம் தன்னை அலைக்கழிக்கின்ற மனைவியை திட்டமிட்டே இந்த ஷைத்தான் ஒரு ஆசாரியுடன் போகச் சொல்கிறான். அவள் ஆசாரியுடன் சுற்ற ஆரம்பிக்கின்றாள். பூங்கா, ஹோட்டல்கள் என அவ்விருவரும் பொழுதுபோக்க ஆரம்பிக்கின்றனர். இந்தச் சமயத்தில் சமுதாயத்தின் சில இளைஞர்களிடம் இந்தக் கள்ள ஜோடியினர் சிக்கிய போது தான் காமுக ஆலிம்சாவின் கரை படிந்த வரலாறு தெரிய வருகின்றது.

கணவனின் வீட்டில் கள்ளக் காதலன்

இன்னொரு கணவன் வெளிநாட்டில் காலா காலம் சம்பாதித்து அவற்றைத் தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளான். சம்பாதித்த பணத்தில் சொத்துக்களை வாங்கச் சொல்லியிருக்கிறான், மனைவியும் கணவன் வெளிநாட்டில் இருப்பதால் தனது பெயருக்கு வீடுகளை வாங்கியிருக்கிறாள்.

கணவன் அனுப்பிய பணத்தில் வாங்கிய வீட்டில் மின்வாரிய ஊழியர் ஒருவனை வாடகைக்கு வைத்துள்ளாள். அவனுடன் தொடர்பு ஏற்பட்டு, கணவன் ஊருக்கு வந்த சமயத்தில் நேரிலேயே அதைப் பார்த்து விட தற்போது விவாக ரத்தில் போய் முடிந்திருக்கிறது.

கணவனது பணத்தில் வாங்கிய நான்கு வீடுகள் மட்டுமின்றி, கணவனது பூர்வீக வீட்டிலும் இருந்து கொண்டு காலியாக மறுக்க தகராறு ஏற்பட்டு காவல்துறையில் வழக்கு பதிவாகியுள்ளது. இதில் வயதுக்கு வந்த மகன், தாயின் நடத்தை தெரிந்தே அவளுக்கு ஆதரவாக இருப்பது கொடுமையிலும் கொடுமை!

அப்பாவிக் கணவன் தனது வாழ்க்கையையும் இழந்து, சம்பாதித்த பொருளாதாரத்தையும் இழந்து, சொந்த வீட்டையும் இழந்து, தற்போது வழக்கிலும் சிக்கியுள்ளான்.

இன்னொருவர் வெளிநாட்டில் இருக்கும் போது அவரது மனைவி ஒரு மாற்று மதத்தவருடன் ஓடிப் போய் விட, வீட்டிலிருந்த அவளது ஒரு வயது கைக்குழந்தை தாயைப் பிரிந்த ஏக்கத்தில் மரணத்தைத் தழுவிய கொடுமையும் நடந்தேறியுள்ளது.

இதுவரை நீங்கள் பார்த்த பதிவுகள் நம்மை உணர்ச்சிப் பிழம்பாக ஆக்கியிருக்கும். நமது உடலில் ஓடுகின்ற உதிரம் மட்டுமல்ல! நம்முடைய மூச்சும் சூடாகின்றது.

ஆட்டோ, கார் ஓட்டுனர்கள், கண்டக்டர்கள், கணவன் அனுப்புகின்ற பணத்தைக் கை நீட்டி வாங்குவதற்காகச் செல்லும் வங்கியின் ஊழியர்கள் என நமது சமுதாயத்தின் கற்பு சூறையாடப்படுகின்றது.

இப்போது சிந்தியுங்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? வெளிநாட்டுப் பணம்! அதற்காக நமது பயணம்!

இந்தக் காசு பணத்திற்காகக் கற்பும் மானமும் காணாமல் போகின்றது. கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா? இதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் என்னென்ன?

  1. சமுதாய மானம் காற்றில் பறக்கின்றது.
  2. நல்ல பெண்களிடம் கூட விபச்சார சிந்தனை தோன்றி விடுகின்றது.
  3. பிற மதத்தவருடன் ஓடி இஸ்லாத்தை விட்டே வெளியேறி விடுதல்.
  4. வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்களின் பிள்ளைகளை மனைவி தான் வளர்க்கிறாள். தாயுடன் இருக்கும் அந்தக் குழந்தைகளின் நிலை என்ன? தாய் நல்லவளாக இருந்தால் பிள்ளைகளும் நல்லவர்களாக இருப்பார்கள். மேற்கண்ட சம்பவங்களில் பிள்ளைகள் தாய்க்கு ஆதரவாக இருந்ததை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் நம்முடைய தலைமுறையே தவறில் தொடருவதற்கு இந்த வெளிநாட்டுப் பயணம் காரணமாகி விடுகின்றது.

நாம் வெளிநாட்டில் இருந்தோம்; நமது மனைவி தவறி விட்டாள் என்று இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அல்லாஹ் அவ்வாறு எடுத்துக் கொள்ள மாட்டான். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தம் குடிமக்கள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மக(னான குடும்பத் தலைவ)னும் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியே! அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (-மனைவி-), தன் கணவரது வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாளர் தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 893, 2409

இந்த ஹதீஸின் அடிப்படையில் நமது மனைவி, மக்கள் தவறு செய்தாலும் அதற்குப் பொறுப்பான நாம் மறுமையில் மாட்டிக் கொள்வோம். அந்த விசாரணையிலிருந்து நாம் தப்ப முடியாது. அதிலும் மதம் மாறுதல் என்பது சாதாரண பாவம் கிடையாது.

நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை. (அல்குர்ஆன் 4:137)

இதற்கும் நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

அடுத்தது, நம்முடைய சந்ததிகள் கெடுவார்களானால் அதனால் ஏற்படும் தீமைகள், இறுதி நாள் வரை அதன் பங்கு நம்முடைய கணக்கில் சேர்ந்து கொண்டே இருக்கும்.

யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 1848

இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு முஸ்லிமுக்கு ரோஷம் வர வேண்டும்.

சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருப்பதைக் கண்டால், நான்கு சாட்சிகளைக் கொண்டு வரும்வரை நான் அவனைத் தொடக் கூடாதா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்என்றார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “இல்லை; தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நானாக இருந்தால், அதற்கு முன்பே வாளால் அவனை வெட்டிவிடுவேன்என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் தலைவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்! அவர் ரோஷக்காரர். ஆனால், நான் அவரை விட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னை விட ரோஷக்காரன்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 3000

இப்படி ஒரு ரோஷம் முஸ்லிம்களிடம் இருக்க வேண்டும்.

கண்ணியமும் மகிமையும் நிறைந்த அல்லாஹ், இறுதி நாளில் மூன்று பேர்களைப் பார்க்க மாட்டான். 1. தன் பெற்றோருக்கு மாறு செய்தவன். 2. ஆணைப் போல் காட்சியளிக்கும் பெண். 3. மனைவி விவகாரத்தில் ரோஷமில்லாதவன்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: பஸ்ஸார்

இந்த ரோஷத்தைத் தான் மார்க்கம் வலியுறுத்துகின்றது. மேற்கண்ட ஹதீஸ்களின் எச்சரிக்கையும், ரோஷமும் நமக்கு வந்து விட்டால், “கற்பை இழந்து விட்டுக் காசு பணம் தேவையில்லை; கற்புடன் கூழும் கஞ்சியும் போதும்’ என்ற முடிவுக்கு வந்து விடுவோம்.

சர்ச்சையாக்கப்படும் புர்கா

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய பிரான்ஸ் அரசு தடை விதிக்க உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் பெண்கள் தமது உடலை மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது. ஆடைகளைக் குறைக்கவும், உடலை மறைக்கவும் ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு உரிமை உள்ளது. பிரான்ஸிலும் இந்த உரிமை உண்டு. மக்களுக்கு உரிமை வழங்கப்படாத சர்வாதிகார நாடுகளில் தான் இது சாத்தியமாகும்.

முகம் மற்றும் முன் கை தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது.

பெண்கள் முகத்திரை அணிந்து கொண்டு தங்களின் அடையாளத்தை மறைத்துக் கொண்டு செல்வதைத் தடை செய்யப் போவதாகத் தான் பிரான்ஸ் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.

“முகத்திரை போட்டுக் கொள்வது மத அடையாளம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளதிலிருந்து, இஸ்லாத்தில் இது இல்லை என்ற கருத்தைத் தான் கூறியுள்ளார். முகத்திரை போட்டுக் கொண்டு தமது அடையாளங்களை மறைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியதிலிருந்து இதை அறியலாம்.

“முகம், முன் கைகள் தவிர மற்ற உறுப்புக்களை மறைத்துக் கொள்ள அனுமதி இல்லை’ என்று அவர் கூறியிருந்தால் அது இஸ்லாத்தின் மீதான தாக்குதல் என்று எடுத்துக் கொண்டு நாம் களமிறங்கிப் போராடியாக வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் இதை எதிர்க்காமல் இருப்பதே நல்லது.

ஏனெனில் முகத்திரை போட்டுக் கொள்ளுமாறு இஸ்லாம் பெண்களுக்குக் கட்டளையிடவில்லை.

இஸ்லாம் கூறாமல் மக்களாக உருவாக்கிக் கொண்ட இந்தப் பழக்கத்தினால் முஸ்லிம் சமுதாயத்துக்கு அதிகமதிகம் கேடுகள் ஏற்படுவதை பெரு நகரங்களில் வசிப்பவர்கள் அனுபவப்பூர்வமாக உணரலாம்.

பொதுவாகத் தன்னை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற காரணத்துக்காகவே மனிதன் ஒழுக்கமாக வாழ்கிறான். இறையச்சத்துடன் உள்ளவர்கள் இதில் விதிவிலக்கு.

தான் யார் என்று தெரியாவிட்டால் எந்தத் தவறு செய்வதற்கும் அது துணிவை அளித்து விடுகிறது. இது தான் யதார்த்தமான உண்மை. சொந்த ஊரில் நல்லவனாக இருப்பவன், தன்னை யாரும் அறிந்து கொள்ள முடியாத ஊரில் தவறுகள் செய்வதற்கும் அல்லது தவறுகள் செய்வதற்காக வெளியூர் செல்வதற்கும் இதுவே காரணம்.

ஒரு பெண் முகத்தை மறைத்துக் கொண்டால் அவள் யாரோடும் ஊர் சுற்றலாம். கணவனுடன் செல்கிறாள் என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள் என்று நினைக்க இது வழி வகுத்துள்ளது.

சென்னை போன்ற நகரங்களில் கல்லூரி மாணவிகளில் பலர் இப்படி முகம் மறைத்துச் செய்யும் அநியாயம் கொஞ்சமல்ல.

முஸ்லிமல்லாத பெண்களும் தங்களின் ஆண் நண்பர்களுடன் சுற்றும் போது முகத்திரை போட்டு தம்மை மறைத்துக் கொள்கின்றனர். கிழக்குக் கடற்கரை சாலையில் முகத்திரை போட்டு, கண்டபடி சுற்றும் இளவட்டங்களில் பாதிப் பேர் முஸ்லிம்கள் அல்லர் என்பதே உண்மை.

அது போல் வேசித் தொழில் செய்யும் முஸ்லிமல்லாத பெண்களும் போலீஸ் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக முகத்திரை அணிந்து ஆண்களுக்கு வலை வீசுவதை நாம் காணலாம்.

சமூக விரோதச் செயலில் ஈடுபடும் ஆண்கள் கூட முகத்திரை அணிந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதை நாம் காண முடிகிறது.

முகத்தைப் பெண்கள் மறைக்க வேண்டும் என்ற தவறான கொள்கை உடைய சிலர் தான் இதை எதிர்க்கிறார்களே தவிர பிரான்ஸின் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இதை எதிர்க்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதே சமயம், முகம், முன் கைகள் தவிர மற்ற பகுதிகளை பெண்கள் கட்டாயம் மறைத்தாக வேண்டும்.

இதற்கு எதிராக யாரேனும் பிரச்சாரம் செய்தாலோ, அல்லது சட்டம் இயற்றினாலோ அதை நாம் கண்டிப்பதுடன் அதற்குரிய விளக்கத்தையும் கொடுப்பது நமது கடமையாகும்.

ஹிஜாப் ஏன்?

பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ‘ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.

முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.

‘ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!’ என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.

‘ஹிஜாப்’ என்பது உண்மையில் பெண்களைக் கவுரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.

இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.

ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித் தனம்

ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.

‘ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்’ என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.

ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

பெண்களுக்குப் பாதுகாப்பு

இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.

ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.

ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.

ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.

இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.

பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று

ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.

ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.

பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்குவாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். ‘இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்’ என்றெல்லாம் கூறுகின்றனர்.

ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.

பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?

பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?

பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?

பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?

எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.

இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும்.

பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும் போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத் தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானது தான். அதை விட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் இந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.

ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.

முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லா விட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.

மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக் கூடிய நிலமையும் ஏற்படலாம்.

எனவே தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக் கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.

கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். இதனால் தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக் கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.

முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.

இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.

ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர் மாறாக நடப்பது தான் நமக்கு வியப்பாகவுள்ளது.

இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.

இறையச்சத்தைப் பாழாக்கும் பஸ் பயணங்கள்

நபி (ஸல்) அவர்கள் பயணத்தைத் துவங்கும் போது இறையச்சத்தைக் கோரி பிரார்த்தனை புரிவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை, “அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர்எனக் கூறுவார்கள். பின்னர் பின்வருமாறு கூறுவார்கள்:

ஸுப்ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க ஃபீ ஸஃபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸஃபரனா ஹாதா வத்வி அன்னா புஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி வல் கலீஃப(த்)து ஃபில் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸஃபரி வகாப தில் மன்ளரி வஸுயில் முன்கலபி ஃபில் மாலி வல் அஹ்லி

(பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)

நூல்: முஸ்லிம் 2392

இன்றைய பஸ் பயணங்கள் உண்மையில் இறையச்சமுள்ள ஆணையும் பெண்ணையும் நெளிய வைக்கின்றன. கொஞ்ச தூரப் பயணங்களின் போது விரச எண்ணத்தைத் தூண்டுகின்ற வீடியோ படங்கள், காமத்தைத் தாங்கிய பாடல் வரிகள் என நம்மை அல்லாஹ்வுடைய பயத்தை விட்டே விலகச் செய்து விடுகின்றன. இதில் நீண்ட தூரப் பயணத்தைக் குறிப்பிடவே தேவையில்லை.

டவுண் பஸ்கள் எப்போதுமே காலையில் பிதுங்கிப் பிதுங்கி நகரத்தில் கொண்டு வந்து மக்களைக் கொட்டுகின்றன. மாலையில் பிதுங்கப் பிதுங்கச் சென்று கிராமத்தில் வந்து மக்களைக் கொட்டுகின்றன. டவுன் பஸ்கள் என்றாலே சில சபலங்கள் உரசலுக்காகவே பயணம் மேற்கொள்கின்றனர்.

நடத்துனர்களின் நடத்தையும் நாரசமாகவே அமைகின்றன. இந்த உரசலுக்காகவே நடத்துனர் பணியில் சேர்ந்திருக்கலாமே என்று ஏக்கத்தில் மற்றவர்கள் பார்க்கின்றனர். எட்ட, கிட்ட பயணங்களில் நடத்துனரும், ஓட்டுனரும் அழகிய பெண்களை முன் இருக்கையில் வைத்துக் கொண்டு அழகைப் பருகிக் கொண்டே ஆனந்தப் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஆக மொத்தத்தில் ஒரு டவுண் பஸ் என்பது காம, காந்த அலைகளின் கந்தகப் பெட்டகமாகவே மிதந்து போகின்றது. இத்தகைய பஸ்களில் பயணம் மேற்கொள்ள இறையச்சமுள்ள ஆண்களே அஞ்சுகின்ற போது, பெண்கள் (எல்லா பெண்களும் அல்ல) கூனல் குறுகல் இன்றி, கூச்ச நாச்சமின்றி ஒய்யாரமாக பயணம் மேற்கொள்கின்றனர். எழுதுவதற்கு எழுதுகோல் கூசுகின்ற அளவுக்குத் தொடர்புகளின் பரிமாற்றத் தளங்களாகப் பேருந்துகள் அமைகின்றன. இது போன்ற பஸ் பயணங்களை கண்ணியமிக்க பெண்கள் தவிர்த்துக் கொள்வது தான் இறையச்சத்திற்கு உகந்ததாகும்.

இது போன்ற கட்டங்களில் கூட்ட நெரிசல் இல்லாத பேருந்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதற்கு முடியவில்லையெனில் கொஞ்சம் காசு பணம் போனால் பரவாயில்லை என்று ஆட்டோ அல்லது கார்களில் பயணம் செய்வது சிறந்ததாகும். அதே சமயம் ஆட்டோ அல்லது கார் ஓட்டுனரையும் நல்ல பண்புள்ள, ஒழுக்கமானவர்களாகத் தேர்வு செய்வது அவசியம்.