உப்பு பரிமாற்றம் செய்தல்

கேள்வி :

உறவினர்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்படும் போது ஒருவர் மண்ணை வாரி இறைத்து விடுகின்றார். பிறகு அவர்களுக்குள் உப்பு பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள். இது சரியா?

பதில் :

உறவினர்களுக்குள் சண்டை ஏற்பட்டு விட்டால் அந்த உறவுடன் மீண்டும் இணைந்து வாழ்வதை இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகின்றது.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ الْأَعْمَشِ وَالْحَسَنِ بْنِ عَمْرٍو وَفِطْرٍ عَنْ مُجَاهِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ سُفْيَانُ لَمْ يَرْفَعْهُ الْأَعْمَشُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَفَعَهُ حَسَنٌ وَفِطْرٌ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنْ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا

‘பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 5991

இது போன்ற ஏராளமான செய்திகள் உறவைப் பேணி வாழ்வது குறித்து வந்துள்ளன. ஆனால் சண்டை ஏற்படும் போது மண்ணை வாரி இறைப்பதும், பின்பு உப்பு பரிமாறிக் கொள்வதும் மாற்று மதக் கலாச்சாரமாகும். இதற்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதியில்லை. எனவே மண்ணை வாரி இறைத்தல், உப்புப் பரிமாற்றம் போன்ற காரியங்களை முஸ்லிம்கள் ஒரு போதும் செய்யக் கூடாது.