மனைவியை தாய் என்று சொல்லக்கூடாதா?

கேள்வி :

இறைவன் தன் திருமறையில் 58:3,4 வசனத்தில், தம் மனைவியரைத் தாய் என்று கூறிவிட்டால், தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன் ஓர் அடிமையை உரிமை விடுதல், அல்லது இரண்டு மாதங்கள் தொடர் நோன்பு அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவு வழங்குதல் போன்ற பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என்று கூறுகின்றான். தன் மனைவியை விளையாட்டிற்காக தாய் எனக் கூறினாலும் இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டுமா? விளக்கவும்.

ஏ.எல். காதர் ஷரீஃப், சென்னை – 81

பதில் :

உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறி விடுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. அவர்கள் வெறுக்கத்தக்க சொல்லையும், பொய்யையும் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன்.

திருக்குர்ஆன் 58:2

இந்த வசனத்தில் மனைவியை கோபத்தில் தாய் எனக் கூறுதல் என்ற சொற்றொடருக்கு அரபியில், ளிஹார் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ளிஹார் என்பது அன்றைய அறியாமைக் கால மக்களிடம் இருந்த ஒரு மூட நம்பிக்கையாகும். மனைவியரைப் பிடிக்காத போது உன்னை என் தாயைப் போல கருதி விட்டேன் எனக் கூறுவர். தாய் என்று சொல்லி விட்ட காரணத்தினால் மனைவியோடு குடும்ப வாழ்க்கை நடத்த மாட்டர்கள். இந்த அறியாமைக் கால பழக்கத்தைத் தான் அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கண்டிக்கின்றான்.

விளையாட்டிற்காகச் சொல்வதோ, அல்லது தமிழ் வழக்கத்தில் மனைவியை அழைக்கும் போது, அம்மா என்று அழைப்பதோ ளிஹார் அல்ல! இவ்வாறு கூறிவிட்டதற்காக பரிகாரங்கள் செய்யத் தேவையில்லை.

மாறாக, அறியாமைக் காலத்தில் இருந்தது போல் மனைவியின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக, அவளைத் தாய் என்று கூறி, அவளுடன் இல்லறத்தில் ஈடுபடாமல் ஒதுக்கி விட்டால் தான் மேற்கண்ட பரிகாரங்களைச் செய்ய வேண்டும். இதைத் தான் இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றன.