குங்குமம், விபூதி, முகத்துக்கு பூசும் மஞ்சள் ஆகியவற்றை விற்கலாமா?

கேள்வி :

குங்குமம், விபூதி, முகத்துக்கு பூசும் மஞ்சள் ஆகியவற்றை விற்கலாமா?

பதில் :

ஒரு பொருள், மார்க்கம் அனுமதித்த காரியங்களுக்கும், மார்க்கம் தடைசெய்த காரியங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் இருந்தால் அந்தப் பொருட்களை விற்பதில் எந்தக் குற்றமும் இல்லை.

உதாரணமாக கத்தி. இது மனிதனைக் கொலை செய்வதற்கும், காய்கறி வெட்டுவதற்கும் பயன்படுகிறது. மனிதனைக் கொலை செய்யப் பயன்படுகிறது என்பதற்காக அதை விற்கக்கூடாது என்று நாம் கூறமாட்டோம். ஏனெனில் காய்கறிகள் வெட்டவும் மற்றும் பல நல்ல காரியங்களுக்கும் கத்தி பயன்படுகிறது என்பதால் அதை விற்பனை செய்யலாம்.

இது போல் கடவுள் சிலைகள். இதை விற்பனை செய்யலாமா? என்றால் அது கூடாது. ஏனெனில் சிலைகள் மார்க்கம் அனுமதித்த வேறு பயன்பாட்டுக்கு உதவாது. எனவே இதை விற்பனை செய்யக்கூடாது.

இந்த விதியைக் கவனத்தில் கொண்டு குங்குமம், விபூதி, மஞ்சள் போன்றவற்றை விற்பனை செய்யலாமா? என்பதைக் காண்போம்.

குங்குமம் இந்துப் பெண்கள், கடவுளை வணங்கிய பின்னர் தங்கள் நெற்றியில் வைப்பதற்குப் பயன்படுகிறது. இது தவிர வேறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுவதாகத் தெரியவில்லை.

விபூதி என்பது இந்துக்கள் கடவுளை வணங்கிய பின்னர் நெற்றியில் வைப்பதற்கு பயன்படுகிறது. இது தவிர வேறு பயன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.

மஞ்சள் இந்துக்கள் மதச் சடங்களில் புனிதப் பொருட்களாக பயன்படுத்தினாலும் மருத்துவம், உணவு போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படுவதால் இதை விற்பனை செய்வதில் தவறில்லை.