ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும்?

கேள்வி :

சிலர் பேச்சுகளை முடிக்கும் போதும் ஜஸாக்கல்லாஹூ கைர் என்கிறார்களே? அதன் அர்த்தம் என்ன? அப்படிச் சொல்லலாமா?

காதிர்

பதில் :

ஜஸாகல்லாஹு கைரா என்ற அரபு வாசகத்திற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக என்பது பொருள்.

ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்வாறு கூறலாம். இவ்வாறு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

1958 حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ بِمَكَّةَ وَإِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ قَالَا حَدَّثَنَا الْأَحْوَصُ بْنُ جَوَّابٍ عَنْ سُعَيْرِ بْنِ الْخِمْسِ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَقَالَ لِفَاعِلِهِ جَزَاكَ اللَّهُ خَيْرًا فَقَدْ أَبْلَغَ فِي الثَّنَاءِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ جَيِّدٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أُسَامَةَ بْنِ زَيْدٍ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ رواه الترمذي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருவர் தனக்கு நல்லது செய்யப்படும் போது அதைச் செய்தவரிடத்தில் ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் கூறினால் அவர் நிறைவாகப் புகழ்ந்தவராகி விடுவார்.

அறிவிப்பவர் : உசாமா பின் ஸைத் (ரலி)

நூல் : திர்மிதீ

25108 فَمَرَّ الْأَعْرَابِيُّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالِسٌ فِي أَصْحَابِهِ فَقَالَ جَزَاكَ اللَّهُ خَيْرًا فَقَدْ أَوْفَيْتَ وَأَطْيَبْتَ قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُولَئِكَ خِيَارُ عِبَادِ اللَّهِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُوفُونَ الْمُطِيبُونَ رواه أحمد

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள். நபியவர்கள் தான் பேசியபடி பழங்களைக் கிராமவாசியிடம் அழகிய முறையில் ஒப்படைத்தார்கள். அந்தக் கிராமவாசி தனக்குரியதை பெற்றுக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கடந்து சென்ற போது ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக) நீங்கள் (பேசிய படி) அழகிய முறையில் நிறைவேற்றி விட்டீர்கள் என்று கூறினார். (ஹதீஸின் கருத்து)

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : அஹ்மது

பேச்சை முடிக்கும் போதும், எழுத்தை முடிக்கும் போதும் இதைக் கூற வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. மாறாக பிறருக்கு நன்றி தெரிவிக்கும் சந்தர்ப்பங்களில் இவ்வாறு கூறுவது நபிவழியாகும்.