ஏகத்துவம் – செப்டம்பர் 2007

தலையங்கம்

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்

திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமான ரமளானை முன்னிட்டு இவ்விதழ், திருக்குர்ஆன் சிறப்பு மலராக வெளியிடப்படுகிறது.

ஏற்கனவே 2003ஆம் ஆண்டு நவம்பர் இதழ் திருக்குர்ஆன் சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. அது முழுக்க முழுக்க திருக்குர்ஆன் கூறும் அறிவியலை மையமாக வைத்து எழுதப்பட்டது.

இந்த இதழ் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தலைப்பில் உருவாக்கப் பட்டுள்ளது.

திருக்குர்ஆன் சிறப்பிதழ் என்று கூறி விட்டு, இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தலைப்பில் எழுதுவது என்ன நியாயம்? என்று கேட்கலாம்.

முறையாக, திருக்குர்ஆன் ஓர் இயற்கை வேதம் என்று தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஆனால் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்று கூறினாலும், இறைத் தூதர் ஓர் இயற்கைத் தூதர் என்று கூறினாலும் அது குறிக்கப் போவது திருக்குர்ஆனைத் தான்.

ஏனெனில் இஸ்லாம் என்பது திருக்குர்ஆனின்  நேரடி வழிகாட்டல் ஆகும்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.

அல்குர்ஆன் 2:185

இறைத் தூதர் ஓர் இயற்கைத் தூதர் என்று சொன்னால் அதுவும் குர்ஆனையே குறிக்கும்.

(முஹம்மதே!) மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அல்குர்ஆன் 16:44

அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ் வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது.

அல்குர்ஆன் 16:64

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் விளக்கவுரை என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்து கின்றன. இந்த அடிப்படையில் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தலைப்பில் இந்தத் திருக்குர்ஆன் சிறப்பு மலர் தன் பயணத்தைத் தொடர்கிறது.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்று அறிந்திருக்கிறோம்; இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்று அறிந்திருக்கிறோம். அது என்ன? இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்? என்று கேட்கலாம்.

இன்று நாம் சுவாசிக்கின்ற காற்றில் கலந்திருக்கும் நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற வாயுக்கள் அனைத்தையும் சரியான விகிதாச்சாரத்தில் அல்லாஹ் அமைத்திருக்கின்றான்.

அது போன்று நமது உடல் சீராக இயங்குவதற்கு உடலில் இவ்வளவு கொழுப்புச் சத்து இருக்க வேண்டும்; இவ்வளவு இனிப்புச் சத்து இருக்க வேண்டும் என எல்லாமே ஒரு சரியான கணக்கின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விகிதாச்சாரத்தைத் தாண்டினால் உடல் கடுமையான நோய்களுக்கு இலக்காகின்றது. இதைத் தான் இயற்கை வகுத்த விதி என்கிறார்கள். இஸ்லாத்தின் அடிப்படையில் இது இறைவன் வகுத்த விதியாகும்.

இப்படியொரு இயற்கை விதியை வகுத்த அந்த நாயன்,  அதற்கேற்ப மனித சமுதாயம் வாழ்வதற்காக அளித்த விதிகள் தான் திருக்குர்ஆன்.

மார்க்கச் சட்டங்கள், மார்க்க விதிகள் என்பவை, ஏற்கனவே இந்த உலகம் இயங்குவதற்காக அல்லாஹ் வகுத்திருக்கின்ற இயற்கை விதிகளுக்கு ஏற்ப அமைந்தவை தான் என்ற கருத்தை விளக்கவே இந்தத் தலைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

உலகில் உள்ள அறிவியல் அறிஞர்கள் மட்டுமல்லாது நாத்திகர்கள் கூட ஒப்புக் கொள்ளும் விஷயம் அந்த இயற்கை விதிகள் தான். இயற்கை விதிகளை அனைவரும் நம்புகின்றார்கள்.

இவர்கள் நம்பும் அந்த இயற்கை விதிகளை வகுத்த அதே இறைவன் தான் இஸ்லாம் எனும் இந்த விதிகளையும் வகுத்திருக்கிறான் என்பதை உற்று நோக்கச் சொல்வது தான் இந்தத் தலைப்பின் நோக்கம்.

இதைத் தான் வல்ல அல்லாஹ்வும் தனது திருமறையில் கூறுகின்றான்.

உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக! இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றுதலும் இல்லை. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 30:30

இந்த இயற்கை மார்க்கத்தில் ஓர் இனிய உலா சென்று வருவோம்.

———————————————————————————————————————————————-

கத்னா ஓரு காப்பரண்

எல்லாம் வல்ல அல்லாஹ், இஸ்லாத்தை ஓர் இயற்கை மார்க்கம் என்று கூறுகிறான்.

கோடை காலத்தில் வெயில்; மழைக் காலத்தில் மழை என்று இவ்வுலகில் மாறி மாறி வரும் பருவ காலம், மழை பெய்ததும் பூமியில் பச்சைப் பசேல் என்ற புற்பூண்டுகளின் விளைச்சல், உயிரினங்களின் இனப் பெருக்கம், கரையைத் தொட்டு ஆடி மகிழும் கடல் அலைகள், வீசுகின்ற காற்று போன்ற இந்த அமைப்புகளை, அருள்மிகு ஆக்கங்களை இயற்கை என்று நாம் கூறுகிறோம்.

இந்த இயற்கை அமைப்பில்  உட்பட்டவன் தான் மனிதன். அவனுடைய உடலில் வளரும் தலை முடி, தாடி, மீசை மற்றும் இதர பகுதிகளில் வளரும் முடிகள், நகம் அனைத்துமே இயற்கைக்கு உட்பட்டது தான்.

மனித உடலில் அமைந்திருக்கும் இந்த இயற்கை அமைப்பைப் பராமரிப்பதும் ஓர் இயற்கையான அம்சம் தான். இதை உலகில் எந்த மார்க்கமும் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. காரணம், அந்த மார்க்கங்கள் இயற்கையானவையல்ல!

இஸ்லாம் தான் இயற்கை மார்க்கம். அதனால் தான் இயற்கை நெறிகளைக் கற்றுக் கொடுக்கிறது.

“இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்து கொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5891

ஹெச்.ஐ.வி. எய்ட்சும், இயற்கை கத்னாவும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய இயற்கையான இந்த ஐந்து அம்சங்களில் கத்னா எனும் விருத்த சேதனமும் ஒன்றாகும்.

இந்த கத்னா, இன்று எய்ட்ஸ் எனப்படும் ஹெச்.ஐ.வி. வைரஸை விட்டும் காக்கும் காப்பரணாகத் திகழ்கிறது.

22.07.07 அன்று பி.பி.சி. வெளியிட்ட செய்தி இதை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் தொடர்பாக உலகளவிலான மிகப் பெரிய மாநாடு விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆண்களுக்குச் செய்யப்படும் கத்னா (விருத்த சேதனம்) 60 சதவிகித அளவுக்கு எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்ற கண்டுபிடிப்பு உறுதியானது தான் என்பதைக் கூறும் ஆய்வறிக்கை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை 5000க்கும் மேற்பட்ட குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன என்று பி.பி.சி.யின் செய்தி தெரிவிக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் மிகக் குறைவு தான். ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் நீண்ட நாட்களாக அறியப்பட்ட உண்மையாகும்.

தென் ஆப்பிரிக்க ஆண்களில் 60 சதவிகிதம் பேரை ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயத்திலிருந்து கத்னா காக்கின்றது என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்பை அண்மையில் கென்யாவிலும், உகாண்டாவிலும் சேகரித்த ஆதாரம் உறுதி செய்கின்றது.

இவ்வாறு கத்னா ஒரு காவல் அரணாக அமைந்திருப்பதை அறிய முடிகின்றது என்று தனது செய்தியில் பி.பி.சி. தெரிவிக்கிறது.

இந்தக் காவல் அரணுக்கு கத்னா தான் காரணமா? அல்லது அவர்கள் குறைந்த அளவிலான பெண்களிடம் உடலுறவு கொள்வது தான் காரணமா? என்று தெரியவில்லை என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.

அதாவது முஸ்லிம்களிடம் உள்ள விபச்சாரத் தடை, பலதார மணம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றது.

கத்னா, விபச்சாரத் தடை, பலதார மணம் இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் அது இஸ்லாமிய மார்க்கத்தினால் ஏற்பட்ட கண்ணியம் தான்.

அமெரிக்காவின் “நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்திக் குறிப்பையும் இங்கே பார்ப்போம்.

ஹெச்.ஐ.வி. பாதிப்பை விட்டும் பாதியளவுக்கு கத்னா பாதுகாக்கிறது எனறு அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸின் செய்தியாளர் டொனால்டு ஜி. மெக்நெய்ல் குறிப்பிடுகிறார்.

சுரப்பிகளிலிருந்து சுரந்து வரும் உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித் தோல் பகுதியில் தேங்குகின்றன. ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வைரஸானது உடலுறவின் போது, ஏற்கனவே தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள் எளிதில் தொற்றிக் கொண்டு விடுகின்றது. அதனால் உடலுறவு கொண்ட அந்த ஆணும் ஹெச்.ஐ.வி. வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றான் என்று அந்தச் செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

இங்கு தான், இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்பதை அறிந்து நாம் வியப்பில் ஆழ்கிறோம். இதைத் தான் வல்ல அல்லாஹ்வும் தன் திருமறையில் 30:30 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

மேலே நாம் கண்ட அந்த ஹதீஸ் மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.

இன்று உலகில் பலர் தாடியை முழுமையாக மழித்து விட்டு மீசையை வைத்திருக்கின்றனர். அவர்களுடைய மீசை உண்மையில் வாயில் ஒரு வடிகட்டியைப் போல் அமைந்துள்ளது. அவர்கள் குடிக்கின்ற பானங்கள், சாப்பிடும் பண்டங்கள் அனைத்தும் மீசையில் பட்ட பின்னர் தான் உள்ளே செல்கின்றது.

சளி மற்றும் அசுத்தங்கள் தங்கி நிற்கும் இந்த மீசை வழியாக உணவுப் பொருட்கள் செல்வது சுகாதாரக் கேட்டை உருவாக்கும் என்பதால் இதைத் தடுக்கும் விதமாக, மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.

இது போன்று உடல் நாற்றத்திற்குக் காரணமாக அமையும் அக்குள் முடிகளையும், இன உறுப்பின் முடிகளையும் களையச் சொல்கிறது.

நகங்களின் இடுக்குகள் தான் கிருமிகள் அடைக்கலம் புகுமிடம் என்பதால் நகங்களையும் வெட்ட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.

இவற்றை வளர்ப்பது இயற்கையல்ல, களைவது தான் இயற்கை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகுக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்கள்.

———————————————————————————————————————————————-

பூமிக்கு உகந்தது புதைப்பதே!

ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. “நான் உன்னைக் கொல்வேன்” என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். “(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்” என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.

“என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால் உன்னைக் கொல்வதற் காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்டுபவனல்லன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன்”

“உன் பாவத்துடன், என் பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்” (எனவும் அவர் கூறினார்)

(இவ்வளவுக்குப் பிறகும்) தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே நஷ்டமடைந்தவனாக ஆகி விட்டான்.

தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. “அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்தி ருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே” எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.

அல்குர்ஆன் 5:27-31

அல்லாஹ் கூறும் இந்தச் சுவையான சம்பவம் உலகில் நடந்த முதல் கொலையை விவரிக்கும் அதே வேளையில், ஒருவர் இறந்து விட்டால் அவரைப் புதைக்க வேண்டும் என்ற முன் மாதிரியை அல்லாஹ்வின் இயற்கை வேதமான திருக்குர்ஆன் மனித குலத்திற்குக் கற்றுக் கொடுக்கின்றது.

உலகில் வாழும் 100 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்த நடைமுறையைத் தான் கையாள்கின்றனர். பூமியில் புதைக்கும் இந்த முறை தான் இயற்கைக்கு உகந்ததாகும்.

“இறந்த பின் சடலத்தை எரிப்பதற்குப் பதிலாக, சுற்றுப்புறச் சூழலுக்கு உதவும் விதத்தில் அதைப் பூமியில் ஒரு மரத்திற்கு அடியில் புதையுங்கள். மண்ணில் கலந்து சிதிலமாகும் உடல் அந்த மரத்திற்குச் சத்துக்களை வழங்கும். அந்த மரம் அதைப் பல ஆண்டுகளுக்கு, கார்பன் டை ஆக்ஸைடை உயிர் காக்கும் ஆக்ஸிஜனாக மாற்றித் தருகின்றது. (மனித இனம் மட்டுமல்ல! உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஆக்ஸிஜனை வழங்குவதும் விநியோகிப்பதும் தாவர இனம் தான்.) கார்பன் டை ஆக்ஸைடை, ஆக்ஸிஜனாக மாற்றித் தரும் இந்த அற்புதமான ஒரு செயலைச் செய்யாமல், இறந்த உடலைப் புதைக்காமல், கார்பன்டை ஆக்ஸைடை அதிகப்படுத்தி விடும் நெருப்புக்குள் நம்முடைய உடலை எரிய விடுவது வெட்கக் கேடாகும்” என்று கூறுகிறார், இனப்பெருக்க உயிரியல் துறை நிபுணர் பேராசிரியர் ரோஜர் ஹார்ட் என்பவர்.

ஆஸ்திரேலியாவில் 850 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஒரு சடலம் எரிக்கப்படுகிறது. சுமார் 90 நிமிடங்களுக்கு எரியும் இந்த நெருப்பினில் 50 கிலோ கார்பன்டை ஆக்ஸைட் வெளியாகின்றது. சடலத் துடன் எரிந்த எரிபொருள் மற்றும் மரக்கட்டைகள் மூலம் வெளியான கார்பன் டை ஆக்ஸைடின் மதிப்பு இந்தக் கணக்கில் சேர்க்கப் படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

சடலங்களை எரிப்பது பூமியைச் சுற்றி உள்ள பசுமைக் குடிலுக்கு மிகவும் ஊறு விளைவிக்கக் கூடிய காரியமாகும் என்று அவர் தெரிவிக்கிறார்.

ஒருவர் இறந்ததும் தன்னுடைய உடலை மண்ணோடு மண்ணாகக் கரையும் வகையில் தானம் செய்வது, அதாவது மண்ணில் அடக்கம் செய்வது வன வளத்தைக் காக்கும் சிறந்த பணியாகும் என்று அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

“Cremation unwise idea” says scientist “எரிப்பது புத்திசாலித் தனமான காரியமல்ல” விஞ்ஞானி சொல்கிறார் – என்ற தலைப்பில் மேற்கண்ட செய்திகள் ஹிந்து நாளேட்டில் 19.04.2007 அன்று வெளியான செய்தியாகும்.

இந்த விஞ்ஞானியின் கருத்தை இப்போது கொஞ்சம் அசை போடுவோம்.

உலகில் நூறு கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், அதை விட அதிகமான கிறித்தவர்கள் ஆகியோர் தங்கள் சடலங்களை எரிக்க ஆரம்பித்தால் ஏற்கனவே சூடாகிக் கொண்டிருக்கும் பூமியின் வெப்பத்தை அது அதிகரிக்கச் செய்து, உலகம் வெகு சீக்கிரத்தில் அழிந்து போய் விடும். ஆனால் திருக்குர்ஆனின் வழி காட்டுதலால் இறந்த மனிதர்களின் சடலங்கள் மண்ணில் புதைக்கப் படுகின்றன.

மண்ணில் கிடந்து சிதிலமாகும் இந்த உடல் மரத்திற்கு உரமாகி சத்துக்களை வழங்கும் என்று அந்த அறிவியல் அறிஞரின் கூற்று மேம்போக்கானதல்ல! அறிவியல் உண்மையாகும்.

வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன.

ஒரு தடவை மின் வெட்டி மறையும் போது, காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும், 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது.  இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது.

வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன!  இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது.

மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன.  அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றில் நைட்ரேட்டுகள் உருவாகின்றன.  கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது.  இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன.

இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றான்.

மனிதனுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது.  மனித உடலில் மட்டுமல்லாது மொத்த உயிரினங் களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில் கலந்து விடுகின்றது.  பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது.  இதற்குப் பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப்படுகின்றது.

மனிதனால் மரத்துக்குப் பயன்; மரத்தால் மனிதனுக்குப் பயன் என்று மனிதனுக்கும் மரத்திற்கும் உள்ள உறவை இது விளக்குகின்றது. இறந்த உடலை மண்ணில் புதைப்பதன் மூலம் தான் இந்தச் சுழற்சி சாத்தியமாகும். அவ்வாறு புதைப்பது தான் இயற்கையானதாகும். இதையே திருக்குர்ஆனின் பின்வரும் வசனம் குறிப்பிடுகின்றது.

இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப் படுத்துவோம்.

அல்குர்ஆன் 20:55

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப் படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

அல்குர்ஆன் 22:5

இந்த வசனங்களின் கருத்து அப்படியே அறிவியல் கண்டு பிடிப்புகளுடன் பொருந்திப் போவதை நாம் பார்க்க முடிகின்றது. மண்ணில் படைக்கப்பட்டவன் மண்ணிலேயே திருப்பப்படுகிறான் என்ற உண்மையையும் இந்த வசனங்கள் தத்ரூபமாக எடுத்துக் காட்டுகின்றன.

மனிதனை மண்ணில் புதைப்பது தான் இயற்கையானது என்பதை அல்லாஹ்வின் வசனங்களிலிருந்தும், அறிவியல் உண்மைகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

உலகம் இப்படித் தான் இயங்க வேண்டும் என்ற ஓர் இயற்கை விதியை அல்லாஹ் நிர்ணயித்து உள்ளான். அவனே அதைத் தனது வேதத்தின் மூலம் வழங்கி, இயற்கை விதியையும் வேத விதிகளையும் ஒத்துப் போகச் செய்கிறான். இங்கு இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கமாகத் திகழ்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்கிறோம்.

அத்துடன் நாம் இன்னொரு விளக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மங்கையும் கங்கையும்

மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம்; ஆனால் கங்கையே சூதகமானால் எங்கே போவது? என்று சொல்வார்கள். இமயத்தில் பிறந்த தூய்மையான பளிங்கு போன்ற பனி நீரைக் கொண்ட கங்கை நதி, இன்று எரிக்கப்பட்ட சடலங்களின் சாம்பல்களாலும், சாக்கடைகளாலும் களங்கப்படுகிறது. சடலத்தை எரிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மட்டுமல்ல! சுத்தமான தண்ணீரும் மாசுபட்டுப் போகின்றது.

கங்கை மட்டுமல்லாது இந்தியாவில் ஓடும் அத்தனை ஜீவ, பருவ நதிகளும் இப்படி மாசுபட்டு விட்டன.

நர சாம்பலால் நாறிப் போன தண்ணீர் தான் இன்று குடிநீராக, கோடான கோடி மக்களால் பருகப்படுகிறது. இதுவெல்லாம் ஏன்? இயற்கை மார்க்கமான, இறை மார்க்கமான இஸ்லாத்தை விட்டு விட்டு மனிதர்கள் தாங்களாக உருவாக்கிக் கொண்ட செயற்கை மார்க்கங்களை பின்பற்றுவதால் தான்.

இவற்றைச் சிந்தித்துப் பார்த்து, இஸ்லாத்தின் பக்கம் மக்கள் அனைவரும் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை!

———————————————————————————————————————————————-

அடக்கத்தலத்தின் ஆகாய விலை

“நகரத்தின் மத்தியிலா வீடு வாங்கப் போகிறீர்கள்? அங்கு சதுர அடிக்கு பத்தாயிரம் ரூபாய் ஆகுமே!’ என்று வீடு வாங்குபவர்களிடம் நாம் பேசிக் கொள்வோம். உயிருடன் உள்ளவர் தனக்காக வீடு வாங்கும் போது நாம் இவ்வாறு சொல்வோம். ஆனால் செத்தவருக்கு நிலம் தேடுவோரிடம் இப்படிச் சொன்னால் எப்படியிருக்கும்?

“இந்த மையவாடியிலா அடக்கம் செய்யப் போகிறீர்கள்? அங்கு ஒரு சதுர மீட்டர் நிலம் 7,800 யுவான்; அதாவது ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் 45 ஆயிரம் இந்திய ரூபாய்)’ என்று சீனாவில் உள்ளவர்கள் பேசிக் கொள்கின்றனர்.

இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. 03.04.2007 அன்று பி.பி.சி. வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் தான் கூறுகிறோம்.

மத்திய சீனாவின் ஹெனான் மாநிலம் செங்ஸாவ் என்ற இடத்தில் ஒரு சதுர மீட்டர் அடக்கத்தல இடம் 7,800 யுவான் ஆகும். இதே பகுதியில் குடியிருக்க வீடு வேண்டுமென்றால் ஒரு சதுர மீட்டர் 4,000 யுவான் மட்டுமே!

வீட்டுக்குச் செலவு செய்வதை விட இறந்தவரின் அடக்கத்தலத்திற்கு இரு மடங்கு செலவாகின்றது.

சமீபத்தில் சீனாவில் அடக்கத்தல விற்பனையில் உலகளாவிய வணிகம் உள்ளே நுழைந்து அவற்றின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து விட்டன. பொது மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி விட்டனர். அரசாங்கத்தினால் இதைத் தடை செய்யவும் முடியவில்லை. காரணம், இது தொடர்பாக 1997ல் இயற்றப்பட்ட சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளன என்று அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.

சீனா ஏன் இவ்வாறு அவதிக்குள்ளாக வேண்டும்?

கல்லறைகள் சந்திப்பு நாள் என்று ஒரு நினைவு நாளை ஏற்படுத்தி அந்நாளில் சீனர்கள் கல்லறைகளில் போய் குவிகின்றனர். இதற்காக இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் அவர்கள் கல்லறைகளை எழுப்புகின்றனர். அத்துடன் பொதுச் சொத்தாக இருக்க வேண்டிய அடக்கத்தலத்தை தங்கள் குடும்பச் சொத்தாக ஆக்கிக் கொள்கின்றனர். இதனால் தான் சீனர்கள் இந்தச் சீரழிவைச் சந்திக்கின்றனர்.

இறந்தவர்களை மண்ணில் அடக்கம் செய்து விட்டு அதன் மீது கல்லறைகளை, நினைவுச் சமாதிகளை கட்டாமல் இருந்தால் இப்படியொரு பிரச்சனையை சீனர்கள் எதிர் நோக்க வேண்டிய அவசியமில்லை. இந்த இயற்கை முறையைத் தாண்டிச் செல்வதால் இந்தச் சோதனையை சந்திக்கின்றனர்.

சீனர்கள் மட்டுமல்ல! கிறித்தவர் களும் கூட கல்லறை கட்டுவதால் இது போன்ற சோதனையை அனுபவிக்கின்றனர். சென்னை போன்ற பகுதிகளில் கிறித்தவர்களின் கல்லறைக்கு கிட்டத்தட்ட இதே நிலை தான் உள்ளது.

இங்கு தான் இஸ்லாம் என்ற இயற்கை மார்க்கம் இயற்கைக்கு இயைந்த ஓர் உத்தரவைத் தனது இறைத் தூதர் மூலம் பிறப்பிக்கின்றது.

“தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1609

கப்ரு பூசப்படுவதையும், அதன் மீது அமரப்படுவதையும், அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1610

இறைத் தூதரின் இந்த உத்தரவை முஸ்லிம்கள் உலகெங்கிலும் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

01.08.05 அன்று சவூதி மன்னர் ஃபஹத் மரணம் அடைந்தார். அவர் இறந்ததும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது.

இப்படிப்பட்ட ஒரு பணக்கார நாட்டு மன்னரின் அடக்கத்தலம் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய வகையில் அமைந்தது. ரியாதில் அல் அவ்து என்ற பொது மயானத்தில் ஆறடி நிலத்தில் ஆடம்பரமின்றி அடக்கம் செய்யப்பட்டார். அவரது சமாதி பல கோடிக்கணக்கான   பணச் செலவில் பளிங்கால் அமையவில்லை. இதற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த உத்தரவு தான்.

தரை மட்டத்திற்கு மேல் அடக்கத்தலத்தை உயர்த்தக் கூடாது என்றும், கப்ருகளைப் பூசக் கூடாது என்றும் அவர்கள் கூறி விட்டதால் முஸ்லிம்கள் தங்கள் அடக்கத் தலங்களை மண்ணோடு மண்ணாக ஆக்கிக் கொள்கின்றனர். (தர்ஹாக்கள் என்ற பெயரில் சமாதிகளின் மீது முஸ்லிம் பெயர் தாங்கிகள் கட்டடங்களைக் கட்டியிருப்பதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.)

இஸ்லாம் கற்றுத் தந்துள்ள இந்த இயற்கை முறையினால், எவ்வளவு பேர் இறந்தாலும் அடக்கத்தலத்திற்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது.

அடக்கத் தலத்திற்கு சதுர அடி கணக்கில் நிலம் வாங்குவது, விற்பது போன்ற நெருக்கடிகளையும் முஸ்லிம்கள் சந்திப்பதில்லை. இவ்வாறு அடக்கம் செய்வதால் பொருளாதார ரீதியிலும் பெரும் நன்மை கிடைக்கிறது.

———————————————————————————————————————————————-

மூளைக் காய்ச்சலுக்கு மூல காரணம்

12.09.2000 அன்று பி.பி.சி.யில் வெளியான ஒரு செய்தி: மூளைக் காய்ச்சலுக்கு உத்தர பிரதேசத்தில் 100 பேர் இறந்தனர். 400 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது அரசாங்கம் அறிவிக்கும் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைத் தாண்டும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நோய் இப்பகுதியில் 22 வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்டது என்றும், இதன் காரணமாக இது வரை 7000 பேர் இறந்திருக்கிறார்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மிக அதிகமாக இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதற்கு மூல காரணம் பன்றிகள் தான். இந்தப் பன்றிகளைக் கொல்ல வேண்டும். அரசியல் காரணங்களால் பன்றிகள் இன்னும் உலா வந்து கொண்டிருக்கின்றன என்றும் அந்தச் சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இவ்வாறு பி.பி.சி.யின் அந்தச் செய்தி கூறுகின்றது.

26.07.07 அன்று ஹிந்து நாளேட்டில் வெளியான செய்தி:

இந்த நோயின் தாக்குதலை விட்டும் காப்பதற்காக 11 மில்லியன் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. (முதலில் பன்றியிடமிருந்தும் பின்னர்) கொசுவின் மூலம் பரவும் இந்த வைரஸ் ஆசியா பசிபிக் பகுதியிலுள்ள 10,000 குழந்தைகளை ஒவ்வொரு வருடமும் பலி வாங்கியுள்ளது.

இத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு தப்பியுள்ளனர். ஆனால் அவர்களின் நரம்பு மண்டலங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இது “ஹிந்து’ தரும் தகவலாகும்.

1999ல் இந்நோய் மலேஷியாவில் ஏற்பட்டதும், அந்நாடு 64,000 பன்றிகளைக் கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது. மலேஷியாவில் இந்நோய் பரவத் தொடங்கியதும் மக்கள் கிராமம் கிராமமாக வெளியேற ஆரம்பித்து விட்டனர் என்று 19.03.1999 அன்று பி.பி.சி. குறிப்பிட்டுள்ளது.

அனுபவமும் அறிவியலும் உணர்த்தும் பாடம்

மூளைக் காய்ச்சல் ஏற்படுவதற்கு மூல காரணம் பன்றிகள் தான். அனுபவப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் இதை மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். சாக்கடையில் குளியல் நடத்தும் பன்றியிடம் உட்கார்ந்து இரத்தத்தை உறிஞ்சிய கொசு நம் வீட்டுக் குழந்தைகள் மீது வந்து உட்கார்ந்து விட்டால் போதும்; குழந்தைக்கு மூளைக் காய்ச்சல் வந்து விடும் என்று வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அளவுக்கு அறிவியல் ரீதியாக உணர்த்தப்படும் இந்நோய்க்குப் பெயர் ஜப்பானீஸ் என்ஸபலைடிஸ் என்பதாகும். இந்நோய் 1871ல் ஜப்பானில் அடையாளம் காணப்பட்டதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. என்ஸபலைடிஸ் என்றால் மூளையில் எரிச்சல் ஏற்பட்டு செயலிழப்பதாகும். இந்த நோயின் வைரஸ் ஃப்லாவிவிரிடியா என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இந்த வைரஸ் வந்து தங்கி வளர்வதும், வாழ்வதும் சாட்சாத் பன்றிகளிடம் தான். அவற்றிடமிருந்து கொசுக்கள் மனிதர்களிடம் அந்நோயைத் தொற்றச் செய்கின்றன.

உலகில் இஸ்லாம் தான் பன்றியின் இறைச்சியைத் தடை செய்கின்றது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:173

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.

அல்குர்ஆன் 5:3

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான்.

அல்குர்ஆன் 16:115

இந்த வசனங்கள் அனைத்தும் பன்றியின் இறைச்சியை உண்பதைத் தடை செய்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, “நிச்சயமாக மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்துள்ளனர்!” என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே அதைப் பற்றிக் கூறுங்கள்!” எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கூடாது! அது ஹராம்!” எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, “அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 2236

இதன் மூலம் பன்றியை விற்பனை செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மர்யமின் புதல்வர் (ஈசா) உங்களிடம் நேர்மையான நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை உடைப்பார்! பன்றியைக் கொல்வார்! காப்பு வரியை (ஜிஸ்யா) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2222

பன்றி என்பது கொல்லப்பட வேண்டிய பிராணி என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.

“நர்தஷீர் எனும் விளையாட்டை விளையாடுபவர் தனது கையை பன்றியின் இறைச்சியிலும், இரத்தத்திலும் தோய்த்தவர் போன்றவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: முஸ்லிம் 4194

பன்றியின் இறைச்சியிலும், இரத்தத்திலும் கை வைப்பது கூட அருவருக்கத்தக்க செயல் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

பன்றியினால் ஏற்படும் தீமை களை உணர்ந்து தான் இஸ்லாமிய மார்க்கம் இப்படியொரு கடுமையான நிலைபாட்டை எடுக்கின்றது. ஆனால் உலகம் பன்றியின் தீமையை உணர்ந்தபாடில்லை.

ஆந்திர மாநிலத்தில் 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் மூளைக் காய்ச்சல் நோய் தாக்கி 100 குழந்தைகள் இறந்தனர்; 500 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, உடனே பன்றி வளர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். அதற்கு அதிகாரிகள், “பத்து லட்சம் பேர் பன்றி வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுகின்றனர்; அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யுங்கள்” என்று பதிலளித்தனர்.

மக்களின் உயிருடன் விளையாடுகின்ற எந்த ஒரு தொழிலையும் ஒழித்துக் கட்டும் இயற்கை மார்க்கமான இஸ்லாமிய ஆட்சியின் அவசியத்தை இங்கு உணர வேண்டும்.

———————————————————————————————————————————————-

வேதத் தூதரின் வேதியியல் விளக்கம்

இரு கண்ணாடித் தொட்டிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டிலும் சம அளவில் கலக்கப்பட்ட சுண்ணாம்பு நீரை ஊற்றுங்கள். ஒரு தொட்டியில் சைக்கிள் டயருக்குக் காற்றடிக்கும் பம்பை வைத்து காற்றை ஊதுங்கள். இன்னொரு தொட்டியில் ஸ்ட்ரா மூலம் நீங்கள் காற்றை ஊதுங்கள். என்ன நடக்கின்றது? இரண்டு பாத்திரங்களில் உள்ள சுண்ணாம்பு நீரும் பால் நிறத்தில் மாறும். ஆனால் ஒரு வித்தியாசம் ஏற்படும்.

வாயினால் ஊதிய, அதாவது நமது மூச்சுக் காற்றுடன் கலந்த அந்தச் சுண்ணாம்பு நீர் மிக மிக விரைவாக பால் நிறத்தைப் பெறுகின்றது. ஆனால் நமது சுவாசக் குழாயில் செல்லாத வெளிக் காற்று கலந்த நீர் மெதுவாகவே பால் நிறத்தை அடையும்.

இதில் என்ன மர்மம் அடங்கியிருக்கின்றது? இதை இந்த வரைபடம் உங்களுக்கு விளக்கும்.

மனித இனம், மிருக இனம், தாவர இனம் போன்ற அத்தனை உயிரினமும் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியாது.

இந்த ஆக்ஸிஜனைப் பெறுவதற்காக நாம் வெளியிலிருந்து காற்றை உள்ளே இழுத்து உடனே வெளியே விடுகிறோம்.

நம்முடைய உடல் உயிரணுக்களால் அமைந்தது. ஒவ்வோர் உயிரணுவும் தனக்குரிய பணியைச் செய்து கொண்டிருக்கிறது. இந்த உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் தேவை. அந்த ஆக்ஸிஜன் தான் நாம் சாப்பிடும் உணவிலிருந்து நமக்குத் தேவையான சக்தியை உயிரணுக்கள் எடுப்பதற்கு உதவுகிறது.

இந்த ஆக்ஸிஜன் காற்று மூலமாக, நாசித் துவாரம் வழியாக நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நுரையீரலுக்கு வந்த இந்த ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு, உயிரணுக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறது. அந்த உயிரணுக்கள் ஆக்ஸிஜனைப் பெற்றுக் கொண்டு கெட்ட காற்றை, கார்பன் டை ஆக்ஸைடை வெளியே விடுகின்றது. இந்தக் கார்பன்டை ஆக்ஸைடு உடலுக்குள் தங்கினால் அது மிகப் பெரும் கேட்டை உருவாக்கி விடும்.

நாம் உடற்பயிற்சி செய்வதற்காக ஓடுகிறோம். அப்போது நம்முடைய உயிரணுக்கள் மிகக் கடுமையாக வேலை செய்கின்றன. அவற்றுக்கு அப்போது ஆக்ஸிஜன் அதிகமாகத் தேவைப்படுகிறது. இந்த ஆக்ஸிஜன் தேவைக்கு ஏற்ப இரத்த ஓட்டத்தின் வேகமும் அதிகரிக்கும்.

நாம் ஓடும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ நமது இருதயம் வேகமாக அடிக்கும்; அதன் துடிப்பு அதிகரிக்கும்; நமக்கு மூச்சிறைக்கும். ஏன்? இரத்த வேகத்திற்குத் தக்க இருதயம் செயல்பட்டாக வேண்டும் என்பதால் தான்.

இந்த மூச்சிறைப்பின் காரணமாக அதிகமான உடலிலிருந்து அதிகமான கார்பன்டை ஆக்ஸைடு வெளியாகின்றது. உடற்பயிற்சிகளின் போது நாம் அதிகமான ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறோம். அதிகமான கார்பன்டை ஆக்ஸைடை வெளியே விடுகிறோம். சாதாரண நேரத்தை விட இது போன்ற உடற்பயிற்சிகளின் போது அதிகமான ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு, அதற்குத் தக்க கார்பன்டை ஆக்ஸைடை வெளியே விடுகிறோம். வேகமாகச் செல்லும் வாகனத்திற்கு அதிக எரிபொருள் தேவைப்படுவது போல் நமது உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் என்ற எரிபொருள் தேவைப்படுகிறது.

நம்முடைய உடலில் உயிரணுக்கள் எவ்வாறு ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு, கார்பன்டை ஆக்ஸைடை வெளியே விடுகின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

இதை எப்போது கண்டு பிடித்தார்கள்?

ஸ்காட்லாண்ட்டின் இயற்பியல் மற்றும் வேதியியல் அறிஞர் ஜோசப் பிளாக்  (1728-1799) என்பவர் 1754ம் ஆண்டு கார்பன்டை ஆக்ஸைடை அடையாளம் கண்டார்.

ஜோசப் பிரிஸ்ட்லே (1733-1804) என்பவர் 1774ம் ஆண்டு ஆக்ஸிஜனைக் கண்டுபிடிக்கிறார்.

ஆக, ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடைப் பற்றிய விபரம் 18ம் நூற்றாண்டில் தான் மனித இனத்திற்குத் தெரிய வருகின்றது. இந்த விபரத்தை 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மத் (ஸல்) அவர்களால் எப்படிச் சொல்ல முடியும்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (எதையும்) பருகும் போது பாத்திரத்திற்குள் மூச்சு விட வேண்டாம்; கழிப்பிடம் சென்றால் பிறப்புறுப்பை வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூ கத்தாதா (ரலி)

நூல்: புகாரி 153

18ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு செய்தியை ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரால் எப்படிக் கூற முடிந்தது?

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த வேதியியல் கருத்தைக் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் ஓர் இறைத் தூதர் தான் என்பதை இதிலிருந்து நிரூபணமாகின்றது.

அதனால் தான் அவர்கள் கொண்டு வந்த திருக்குர்ஆன், அறிவியல் உலகை நோக்கி இன்றும் உயிரோட்டமான ஓர் அறைகூவலை விடுகின்றது.

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:23

நாம் இந்த ஆய்வை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்பதற்காக! அதனால் தான், பருகும் போது பாத்திரத்திற்குள் மூச்சு விட வேண்டாம் என்று இயற்கைக்கு எதிரான இந்தக் காரியத்தை இது தடுக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டவே இந்த ஆய்வுரை இங்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

———————————————————————————————————————————————-

வேலியே பயிரை மேயும் வேதனை

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கத்தோலிக்க திருச்சபை 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவுள்ளது. இந்த ஐநூறு பேரும் கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப் பட்டவர்கள். 660 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்குவதற்காக நீதிபதியின் ஒப்புதலுக்கு, திருச்சபை காத்திருக்கின்றது என்று வாதியின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்தச் செய்தி பி.பி.சி.யில் 15.07.2007 அன்று வெளியானது.

இது 2002ல் பாலியல் பலாத்கார ஊழல் வெடித்த பிறகு திருச்சபை செலுத்த வேண்டிய மிகப் பெரிய தொகையாகும்.

1950 முதல் அமெரிக்காவிலுள்ள டயோசீஸ் பாதிரிகளின் பாலியல் விவகாரத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட நஷ்ட ஈட்டுத் தொகை 2 பில்லியன் டாலர் ஆகும். இதில் கால் பகுதியை லாஸ் ஏஞ்சல்ஸ் திருச்சபை மட்டும் செலுத்தியுள்ளது.

73 வயது நிரம்பிய பால் ஷான்லே என்ற பாதிரியாரும், மற்றொரு பாதிரியும் வாட்டிகன் தலைமையகத்தால் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். நான்கு சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது தான் பால் ஷான்லே மீதான குற்றச்சாட்டு!

இது போன்று பெண்களிடம் நடந்த பாலியல் கொடுமைகளையும் பி.பி.சி.யின் இந்தச் செய்தித் தொகுப்பு பட்டியலிடுகின்றது.

பொதுவாக ஆண், பெண் இரு பாலருமே பால் உணர்வுடன் தான் படைக்கப்பட்டுள்ளனர். ஆண், பெண் இரு பாலர்களுக்கும் பசி, தாகம் ஏற்படுவது போலவே பருவ வயது வந்ததும் பாலியல் தேட்டமும் ஏற்படுகின்றது. இதற்கு ஒரு வடிகால் இல்லையென்றால், மறிக்கப்படும் ஆற்று வெள்ளம் பல வழிகளிலும் பாய்வது போன்று பாலியல் உணர்வு பொங்கி வழிய ஆரம்பித்து விடும்.

இது தான் திருச்சபை பாதிரியார்களின் பாலியல் ஊழல் மூலம் பளிச்சென்று வெளியே தெரிகிறது.

அதனால் தான் துறவு நிலையை மேற்கொள்ளக் கூடாது; அவ்வாறு மேற்கொள்பவர்கள் முஸ்லிம்களே கிடையாது என்று  முஹம்மத் (ஸல்) அவர்கள் பிரகடனப்படுத்தி விடுகிறார்கள். இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து கேட்டனர்.  அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள், நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது.

பிறகு, “முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே?” என்று சொல்-க் கொண்டனர்.

அவர்களில் ஒருவர், “நான் என்ன செய்யப் போகின்றேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகின்றேன்” என்றார்.

இன்னொருவர், “நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகின்றேன்” என்றார்.

மூன்றாம் நபர், “நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகின்றேன். ஒரு போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, “இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தானே! அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன்.  அல்லாஹ்வைப் பயந்து நடப்பவனாவேன்.  ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கின்றேன். விட்டு விடவும் செய்கின்றேன்.  தொழவும் செய்கின்றேன்.  உறங்கவும் செய்கின்றேன்.  மேலும் நான் பெண்களை மணம் முடித்தும் உள்ளேன்.  ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)

நூல்: புகாரி 5063

திருமணம் முடித்தவர்களே இன்றைய உலகில் வழி தவறும் போது திருமணம் முடிக்காதவர்களின் நிலையை நாம் சொல்லவும் வேண்டுமா? இது போன்ற காரணங்களால் தான் துறவறத்தைக் கடமையாக்கவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

பின்னர் அவர்களின் அடிச் சுவட்டில் நமது தூதர்களைத் தொடர்ந்து அனுப்பினோம். மர்யமின் மகன் ஈஸாவையும் (அவர்களைத்) தொடர்ந்து அனுப்பினோம். அவருக்கு இஞ்சீலைக் கொடுத்தோம். அவரைப் பின்பற்றியோரின் உள்ளங்களில் இரக்கத்தையும், அன்பையும் ஏற்படுத்தினோம். தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் கூலியைக் கொடுத்தோம். அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள்.

அல்குர்ஆன் 57:27

துறவறத்தை இறைவன் கடமையாக்கவில்லை. கிறித்தவர்கள் துறவறத்தைத் தங்களுக்குத் தாங்களே கடமையாக்கிக் கொண்டு, அதைச் சரிவரப் பேணவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அதாவது, துறவறம் என்பது இயற்கையை எதிர்த்து நிற்பது என்று கூறி அதை வெறுக்கிறது.

இஸ்லாத்தைப் போதிக்க வந்த இறைத்தூதர்கள் அனைவருக்கும் மனைவி, மக்களை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 13:38

திருக்குர்ஆன் என்ற இறை வேதம் மனிதனின் இயற்கைக்குத் தக்க திருமணத்தை முடிக்கச் சொல்கிறது. அதாவது, பாலியல் உணர்வுகளை உரிய வழியில், திருமணம் என்ற ஒப்பந்த அடிப்டையில் தீர்த்துக் கொள்ளச் செய்கிறது.

ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்ற ஓரினச் சேர்க்கையையும் இயற்கைக்கு மாற்றமான வெறுக்கத்தக்க நியதி என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

லூத்தையும் (அனுப்பினோம்). “நீங்கள் வெட்கக்கேடான செயலைச் செய்கிறீர்கள்! அகிலத்தாரில் உங்களுக்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை; சரியான வழியைத் துண்டித்து விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? உங்கள் சபையில் அந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கிறீர்களா?” என்று அவர் தமது சமுதாயத்துக்குக் கூறிய போது, “நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக” என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.

அல்குர்ஆன் 29:28, 29

இது போன்ற சீரழிவுக்கு உள்ளாக்கும் காரியத்தைச் செய்த ஒரு சமுதாயத்தையே இறைவன் அழித்து விட்டதாகக் கூறுகிறான்.

இவ்வாறு மனிதனை இயற்கையான இனிய வழியில் செல்லச் செய்வது இஸ்லாமிய வழியாகும். காரணம், அது இறைவன் வழங்கிய இயற்கை நெறியாகும்.

———————————————————————————————————————————————-

எய்ட்சுக்கு மருந்து இஸ்லாம் மட்டுமே!

“பதினைந்து வயதுக்கு உட்பட்ட 70,000 குழந்தைகள் ஹெச்.ஐ.வி. எனும் வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளார்கள்; அதாவது எய்ட்ஸ் எனும் கொடிய நோய்க்கு ஆளாகியுள்ளார்கள்”

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடந்த 25.08.07 அன்று இதை ராஜ்யசபாவில் அறிவித்தார்.

இந்தியாவில் மட்டுமல்ல! உலகெங்கும் உள்ள சிறு குழந்தைகள் இன்றைக்கு எய்ட்சுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். உலகில் ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட 38.6 மில்லியன் மக்களில் இந்தக் குழந்தைகளும் விதிவிலக்கல்ல!

இதில் வேதனை என்னவெனில் இந்தத் தீமை எப்படி ஏற்பட்டது என்பதை இந்த உலகம் இன்னும் உணராமல் இருப்பது தான். பாதுகாப்பான உடலுறவுக்குக் காண்டத்தை உபயோகியுங்கள் என்று வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்.

“பாதுகாப்பான உடலுறவுக்குத் திருமணமே சிறந்த வழி” என்று சொன்னால் அதன் மூலம் விபச்சாரம் தவிர்க்கப்படுவதுடன் எய்ட்ஸ் நோய் பரவுவதும் தடுக்கப்படும். இப்படி அறிவிப்பதை விட்டு விட்டு, பாதுகாப்பான உறவுக்கு காண்டத்தைப் பயன்படுத்துங்கள் என்று, அதாவது காண்டம் அணிந்து விபச்சாரம் செய்யுங்கள் என இன்று வரை அரசாங்கம் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட விளம்பரம் தொடர்ந்து கொண்டு போனால் எய்ட்ஸின் பாதிப்பும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

உலகில் உள்ள மனிதனை எந்த இயற்கை நியதியில் படைத்தானோ அந்த இறைவனின் நியதிப்படி நடக்காத வரை எய்ட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவுவதைத் தடுக்க முடியாது.

உலகில் உள்ள மார்க்கங்களில் இஸ்லாத்தைப் போன்று வேறு எந்த மதமும், விபச்சாரத்திற்குக் கடுமையான தண்டனையை விதிக்கவில்லை.

இஸ்லாமிய ஆட்சியில் மண முடிக்காத ஒரு ஆணோ அல்லது பெண்ணோ விபச்சாரம் செய்து விட்டால் அவருக்கு 100 கசையடிகள் கொடுத்து நாடு கடத்த வேண்டும்.

மணம் முடித்த ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவரைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்.

இது தான் விபச்சாரத்திற்கு இஸ்லாம் வழங்கும் தண்டனையாகும்.

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

அல்குர்ஆன் 24:2

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்த போது அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, “நான் விபச்சாரம் செய்து விட்டேன்” என்று சொன்னார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் அவரை விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக) நான்கு தடவை ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.

ஆகவே நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, “உனக்கு என்ன பைத்தியமா?” என்று கேட்டார்கள். பிறகு, “உனக்குத் திருமணம் ஆகி விட்டதா?” என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார்.

எனவே அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டு சென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அவர் மீது கற்கள் விழுந்த போது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். பாறைகள் நிறைந்த (அல்லாஹர்ரா எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டார்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 5270

உலகில் எய்ட்ஸ் ஏற்படுத்தும் பாதிப்புகளை உணர்ந்தவர்கள், சிந்தனையாளர்கள் அனைவரும், விபச்சாரத்திற்கு இத்தகைய தண்டனை வழங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்தச் சட்டத்தைத் தங்கள் நாடுகளில் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட முன்வைக்கின்றனர்.

இது போன்ற ஒரு சிறப்பான சட்டம் உலகெங்கும் நடைமுறையில் இருக்குமானால் இந்தக் கொடிய நோயை விட்டும் மக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.

விபச்சாரத்திற்கு இவ்வளவு கடுமையான தண்டனையை இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கும் அதே வேளையில் திருமணத்திற்குரிய வழிகளை மிகவும் எளிதாக்கி இருக்கின்றது.

அத்துடன் மனிதர்களின் பாலுணர்வுத் தேவையை, தேட்டத்தை உணர்ந்து அவர்களுக்குப் பலதார மணத்தையும் அனுமதிக்கின்றது.

பொதுவாக ஓர் ஆணுக்கு அவனுடைய பாலுணர்வுத் தேட்டம் ஒரு பெண் என்ற வட்டத்தில் நிற்பதில்லை. இரண்டு, மூன்று என்று அவனது தேட்டம் இருக்கும்.

மனிதனின் இயற்கை சுபாவத்தை உணர்ந்த இயற்கை மார்க்கமான இஸ்லாம், நான்கு பெண்களை ஒருவர் திருமணம் முடிக்கலாம் என்ற அனுமதியை வழங்குகின்றது.

உன்னுடைய தேவையை இந்த வரையறைக்குள் வைத்துக் கொள்! இந்த வரம்பைத் தாண்டாதே! எய்ட்ஸ் போன்ற கடுமையான நோய்களை வரவழைத்துக் கொள்ளாதே! என்று இந்த இயற்கை மார்க்கம் கூறுகின்றது.

அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.

அல்குர்ஆன் 4:3

உலகில் இஸ்லாமிய மார்க்கம், அதாவது இயற்கை மார்க்கம் மட்டும் மனிதனின் தேவையை அறிந்து, அதற்கான தீனியைக் கொடுத்து பசியைத் தணிக்கிறது.

அதையும் மீறி வேலி தாண்டினால் கடுமையாகத் தண்டிக்கிறது. எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் மனிதனைத் தாக்காமல் தடுத்துக் காக்கிறது.

———————————————————————————————————————————————-

பிளேக் நோய்க்குத் தீர்வு

1994ம் ஆண்டு சவூதி மற்றும் வளைகுடா நாடுகள் அனைத்தும் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்தை ரத்துச் செய்தன. இதற்குக் காரணம் என்ன? அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட பிளேக் நோய் தான்.

இந்த பிளேக் மற்றும் காலரா நோயினால் குஜராத் மாநிலம் பல்லாயிரக்கணக்கான பொருளாதார நஷ்டத்தைச் சந்தித்தது. மக்கள் அங்கிருந்து வேறு நகரங்களுக்குத் தப்பியோட ஆரம்பித்தனர். இவ்வாறு உலகில் ஏதேனும் ஓர் ஊரில் காலரா மற்றும் பிளேக் நோய் ஏற்படும் போது அவ்வூரிலுள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறலாமா? இதற்கு உலகில் எந்த ஒரு மதமோ, இஸமோ, சட்டமோ விடை சொல்லவில்லை. ஆனால் இயற்கை மார்க்கமான இஸ்லாம் தான் இதற்கு ஒரு தீர்வைச் சொல்கின்றது.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ஷாம் நாட்டிற்குப் போகலாமா? என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்துக் கருத்து கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவெடுத்தார்கள்.

அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்’ என்று சொல்ல நான் கேட்டேன்” என்று கூறினார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 5279

மேற்கண்ட ஹதீஸில் கூறப்படும் இந்த உத்தரவு பெரும் அறிவியல் கருத்தைத் தாங்கி நிற்கின்றது. ஓர் ஊரில் இது போன்ற நோய் ஏற்பட்டால் அவ்வூர் மக்கள் அங்கேயே தங்கி விட்டால் அந்நோய் அவ்வூருடன் நின்று விடும். வெளியே சென்றார்கள் என்றால் நோயும் வெளியூர்களில் பரவ ஆரம்பித்து விடும். அது போன்று வெளியூரிலுள்ளவர்களும் அந்த ஊருக்குச் செல்லாமல் இருந்தால் அதிலிருந்து பாதுகாப்புப் பெற முடியும். இதைத் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவிக்கின்றார்கள்.

இன்று உலக நாடுகள் இந்த முறையைத் தான் கையாள்கின்றன. பறவைக் காய்ச்சல் ஏற்பட்டு விட்டாலோ, நீல நாக்கு நோய் ஏற்பட்டு விட்டாலோ இந்த அடிப்படையில் தான் தடை செய்கிறார்கள்.

குஜராத் பிளேக் நோயின் போது இந்த முறையைப் பின்பற்றித் தான் வளைகுடா நாடுகள் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்தை நிறுத்தின.

அறிவியலில் வளர்ந்து விட்ட நாடுகள் கடைப்பிடிக்கும் இந்த முறையை, எழுதப்படிக்கத் தெரியாத ஒருவர் கூறுகின்றார் என்றால் நிச்சயம் அவர் தனது சொந்தக் கருத்தாக இதைக் கூறியிருக்க முடியாது. அனைத்தையும் அறிந்த இறைவனின் கருத்தாகத் தான் இது இருக்க முடியும். அவர் கொண்டு வந்த மார்க்கமும் மனித சிந்தனையில் உருவானது அல்ல. இறைவனால் வழங்கப்பட்ட இயற்கை மார்க்கம் தான் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

நோய் தீர்க்கும் தாய்ப்பால்

உலகத்தில் 4000 பாலூட்டி இனங்கள் இருப்பதாக இன்றைய அறிவியல் கூறுகின்றது. அந்தப் பாலூட்டி இனங்கள் அனைத்தும் தமக்குப் பிறந்த குட்டிகளுக்கு செயற்கைப் பால் புகட்டுவது கிடையாது. இயற்கையான தாய்ப்பாலைத் தான் புகட்டுகின்றன.

பசு தன் கன்றுக்கும், குதிரை, கழுதை, ஆடு போன்றவை தமது குட்டிகளுக்கும் பாலூட்டுவதை நாம் பார்க்க முடிகின்றது.

ஆனால் பாலூட்டி இனத்தில் உள்ள மனித இனம் தான் இந்த இயற்கை அருட்கொடைக்கு எதிராகச் செயல்படுகின்றது.

இதனால், தாய் தன்னுடைய உடலையும் கெடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தான் பெற்ற பிள்ளையின் உடல் நலத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகிறாள்.

———————————————————————————————————————————————-

ஆகாரம் அல்ல! அவ்டதம்!

ஒரு தாய் தனக்குச் சுரக்கும் பாலில் என்ன அடங்கியிருக்கிறது என்று தெரிந்திருந்தால் அதைக் குழந்தைக்குக் கொடுக்க ஒரு போதும் தயங்க மாட்டாள்; தவிர்க்க மாட்டாள்.

ஒரு குழந்தை பிறந்தவுடன் தாய் முதன் முதலில் கொடுக்க வேண்டியது தாய்ப்பால் தான். வேறெதையும் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது. வீட்டிலுள்ள வயதான பெண்மணிகள், நாட்டு மருந்து என்ற பெயரில் பிறந்த குழந்தைக்கு எதையேனும் புகட்டி விடுகின்றனர். இது மாபெரும் தவறாகும். முதன் முதலில் தாய்ப்பாலைத் தவிர வேறெதையும் கொடுக்கவே கூடாது.

குழந்தை பிறந்தவுடன் முதன் முதலில் சுரக்கும் அந்தத் தாய்ப்பால் வெறும் ஆகாரம் மட்டுமல்ல! அந்தக் குழந்தை வளர்ந்து, வாலிபமாகி, வயோதிகமடையும் வரை, ஆயுட்காலம் வரை காக்கும் அவ்டதம் (மருந்து) ஆகும்.

முதலில் சுரந்து வரும் பாலுக்கு சீம்பால் (Colostrum) என்று குறிப்பிடுவர். இதன் ஒவ்வொரு சொட்டும் நோய் எதிர்ப்பு மருந்தாகும். அதனால் இந்த சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்கத் தவறிவிடக் கூடாது. இந்தச் சீம்பால் சுவாசம், குடல் சம்பந்தமான நோய்களைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கியிருப்பது மட்டுமல்லாமல், அனைத்து நோய் எதிர்ப்பு சக்தி உயிரணுக்களும் இதில் அடங்கியிருக்கின்றன.

இந்தத் தாய்ப்பால் நூற்றுக்கும் மேற்பட்ட கலவையைக் கொண்டிருக்கின்றது. செயற்கைப் பால் ஒருபோதும் இந்தக் கலவைகளைப் பெற முடியவே முடியாது.

Lactoferrin என்ற ஒரு சேர்மானம் தாய்ப்பாலில் உள்ளது. இது, கிருமி நாசினிகள், காளான் நாசினிகள் போன்ற எதிர்ப்பு சக்தியுடன் கூடிய பல்முனை புரதச் சத்துக்களைக் கொண்டதாகும்.

மேலும் தாய்ப்பாலில் அடங்கியுள்ள Aminoacid, Cystine, Methionine, Taurine ஆகியவை மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு மிக மிக இன்றியமையாதவை.

மூளை வளர்ச்சிக்கு மிக மிக அவசியம் தாய்ப்பால் தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாணவர்களின் புத்திசாலித்தனத்தை மதிப்பீடு செய்வதற்காக, அறிவுத்திறன் அளவெண் சோதனை நடத்துவார்கள். இதில் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் 8 புள்ளிகள் குறைவாக இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்படி உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி அத்தனைக்கும் மூலாதாரமாக அமைவது தாய்ப்பால் தான்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு புரதச் சத்து, கனிமச் சத்து, துரித வளர்ச்சி, புத்திக் கூர்மை ஆகிய நன்மைகள் கிடைப்பதுடன், கேன்ஸர், ஆஸ்துமா, சுவாசம் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், காது புண், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கின்றது.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மருத்துவச் செலவுகள் இல்லை. அதாவது நோய்கள் தாக்கும் சாத்தியங்கள் குறைவு.

இது தவிர தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் இதனால் பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றன.

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  1. பிரசவத்தின் போது விரிந்த கருப்பை தாய்ப்பால் கொடுப்பதால் சுருங்குகிறது.
  2. பால் கொடுக்கும் தாய்க்கு 200 முதல் 500 வரை கலோரி வெளியேறுகிறது. சாதாரணமாக இந்தக் கலோரியை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றால் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்ட வேண்டும்.
  3. வாழ்க்கையில் 6 மாத காலம் தாய்ப்பால் கொடுத்த பெண்ணுக்கு மார்பகப் புற்று நோய் வருவதில்லை.
  4. பால் கொடுக்கும் காலத்தில் மாதவிலக்கு தள்ளிப் போகிறது.
  5. எல்லாவற்றுக்கும் மேலாக தாய், பிள்ளையின் பாசப் பிணைப்பு! தாய், தன் பிள்ளைக்குப் பால் கொடுக்கும் கட்டம் உண்மையில் உலகில் ஓர் உன்னத நிலையாகும்.

தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள் நீண்டு கொண்டே செல்கின்றன. அதனால் தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகளை இத்துடன் நிறுத்திக் கொண்டு, தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதால் ஏற்படும் தீமைகளைப் பார்ப்பபோம்.

தாய்ப்பால் கொடுக்காததால் ஏற்படும் தீமைகள்

  1. குழந்தைக்குப் பால் கொடுக்காத தாய்க்கு மார்பகப் புற்று நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
  2. பால் கொடுக்காவிட்டால் உதிரப் போக்கு அதிகமாகி உடலிலிருந்து இரும்புச் சத்து அதிகம் வெளியேறும்.
  3. தாயின் உடல் எடை அதிகரித்தல்.
  4. செயற்கைப் பால் கொடுக்கும் புட்டியிலும், ரப்பரிலும் கிருமிகள் சேர்வதால் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் ஏற்படுதல்.
  5. தாய்ப்பால் கொடுப்பதற்கென எந்தத் தயாரிப்பும் தேவையில்லை. ஆனால் பயணத்தில் இருக்கும் போது செயற்கைப் பால் தயாரிக்க முடியாததால் குழந்தைக்கு ஏற்படும் வேதனை.

இது போன்ற எண்ணற்ற தீமைகள் உள்ளன. எனவே ஒரு தாய் தனது நலத்தையும், தான் உயிரையே வைத்திருக்கும் குழந்தையின் நலத்தையும் கவனித்துக் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

இயற்கை வேதத்தின்   இனிய உத்தரவு

மனித இனம் இந்த இயற்கைச் செயலை மீறும் என்று மனித இயல்பைத் தெரிந்த எல்லாம் வல்ல இறைவன், தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என தனது திருமறை மூலம் உத்தரவிடுகின்றான்.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:233

உலகத்தில் எந்தச் சித்தாந்தமும், மதமும் காட்டாத வழிமுறையை மக்களுக்குத் திருக்குர்ஆன் காட்டுகிறது. காரணம் இது ஓர் இயற்கை வேதம் என்பதால் தான்.

எவ்வளவு காலம் பால் கொடுக்க வேண்டும் என்பதையும் இந்த இயற்கை வேதம் தெளிவுபடுத்தி விடுகின்றது. தாய்ப்பால் கொடுக்க முடியாத அன்னையருக்கு ஒரு மாற்று வழியையும் இந்தத் திருக்குர்ஆன் கற்றுத் தருகின்றது. அது தான் செவிலியர் முறை!

மனிதனுக்கு மனிதப் பால் தான் கொடுக்க வேண்டும். அதற்கு மாட்டுப் பாலோ அல்லது மாவுப் பாலோ மாற்றுப் பரிகாரமாகாது.

மாட்டுப் பால், கன்றுக் குட்டியின் கனமான குடலுக்குத் தான் பொருத்தம். மாவுப் பால் இரசாயனக் கலவைகளின் சங்கமம். இதை உட்கொண்ட எந்தக் குழந்தையும் வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு ஆட்படாமல் இருந்ததில்லை.

அதனால் மனிதனைப் படைத்த அந்த இறைவன் செவிலித் தாய் முறையை செயல்படுத்தச் சொல்கிறான். இன்று தாய்மார்கள், அல்லாஹ் கூறும் இந்த அரிய அறிவுரையைச் செயல்படுத்த முன்வருதில்லை.

தவ்ஹீது ஜமாஅத்திலுள்ள தாய்மார்கள் அல்லாஹ் கூறும் இந்த வழிமுறையைச் செயல்படுத்திக் காட்ட வேண்டும்.

பால் சுரக்கும் பெண்கள் இதை ஒரு தொழிலாகச் செய்வதன் மூலம் தங்களுக்கு ஒரு வருவாயை தேடிக் கொள்வதுடன், குழந்தைகளின் நலத்தையும் பாதுகாத்து நன்மைகளைப் பெறலாம்.

இயற்கை மார்க்கத்தின் இந்த இனிய வழிகாட்டலை இவ்வுலகில் அறிமுகப்படுத்தி இஸ்லாத்தின் மாண்பை மக்களுக்கு உணரச் செய்யலாம்.

———————————————————————————————————————————————-

பால் பே

உலகில் எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்; மறைந்திருக்கிறார்கள். அந்தத் தலைவர்களுடைய குடும்ப வாழ்க்கையிலோ அல்லது பொது வாழ்க்கையிலோ உள்ள அனைத்துச் செயல்பாடுகளும் பதிவாகவில்லை. ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு அம்சமும் பதியப்பட்டுள்ளது. காரணம், அவர்கள் அல்லாஹ்வின் தூதர்! அதுவும் இறுதித் தூதர் என்பதால் அவர்களுடைய எல்லா செயல்பாடுகளும் பதிவாகி விட்டன.

(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களை என் நெஞ்சின் மீது சாய்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அப்துர் ரஹ்மானிடம், அவர் பல் துலக்கும் ஈரமான (பேரீச்சங்)குச்சி இருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பார்வையை அவர் பக்கம் செலுத்த, நான் அந்தப் பல் துலக்கும் குச்சியை எடுத்து அதை (வாயில் வைத்து என் பற்களால் அதன் முனையை) மென்றேன். அதை உதறிப் பக்குவப்படுத்திய பின் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதனால் பல் துலக்கினார்கள்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விட அழகாகப் பல் துலக்கியதை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கி முடித்தவுடன் “தம் கையை’ அல்லது “தம் விரலை’ உயர்த்திப் பிறகு, “(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று மும்முறை பிரார்த்தித்தார்கள்.  பிறகு (தம் ஆயுளை) முடித்துக் கொண்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 4438

மரணப் படுக்கையின் போதும் அந்தத் தலைவர் பல் துலக்கும் பழக்கத்தை கைக்கொண்டிருந்தார்கள். அந்த அளவுக்கு அதில் ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள்.

“பல் துலக்குவது தொடர்பாக நான் உங்களுக்கு அதிகமாக வலிறுத்தியிருக்கின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 888

பல் துலக்குவதை மிகவும் வலியுறுத்தி இங்கு கூறுகின்றார்கள்.

எனது சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் அவர்களைப் பல் துலக்குமாறு கட்டளையிட்டிருப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 887

ஒவ்வொரு தொழுகையின் போதும், அதாவது ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து வேளையாவது தமது சமுதாயத்தினர் பல் துலக்க வேண்டும் என்பது அவர்களது ஆர்வம்; அவா!

இப்படி எந்த ஒரு தலைவரேனும் தம் சமுதாயத்திற்கு, பல் துலக்கலைப் பற்றிப் பாடம் நடத்தியுள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை! அப்படி நடத்த வேண்டிய அவசியமும் இல்லை! ஆனால் இந்தத் தலைவர் மட்டும் இப்படிப் பாடம் நடத்துகிறார்களே! அது ஏன்?

அவர்கள் இயற்கை மார்க்கத்தைப் போதிக்க வந்த இறைத்தூதர். அதனால் பால் நிறப் பற்களை சரியாகப் பராமரிக்கச் சொல்கிறார்கள்.

இன்று அறிவியல் சொல்கிறது: மனிதன் ஒரு நாளைக்கு, காலையில் எழுந்ததும், இரவில் படுக்கும் போதும், சாப்பிட்ட பிறகும் பல் துலக்க வேண்டும். ஏனெனில் மனிதன் சாப்பிட்ட உணவின் துகள்கள், குறிப்பாக இனிப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் பற்களில் ஒட்டிக் கொள்கின்றன. இவற்றிலிருந்து சில பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகள் வாழத் துவங்கி விடுகின்றன.

வாய்க்குள் ஆக்ஸிஜன் கிடைக்காத போது அவை அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம், பல் எனாமலில் இருக்கும் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸைக் கரைத்து விடுகின்றது. இதற்கு உங்ம்ண்ய்ங்ழ்ஹப்ண்ள்ஹற்ண்ர்ய் – கனிமச் சத்து அரிமானம் என்று பெயர். இது தான் பற்சிதைவுக்கு வழிவகுக்கின்றது.

நாவில் ஓடும் உமிழ் நீர் இதை ஓரளவுக்குச் சரி செய்கிறது. ஆனால் அதே சமயம் பாக்டீரியாக்கள் கொத்தாக பற்களில் படிமானத்தை ஏற்படுத்தி விட்டால் இந்த உமிழ் நீர் அதற்குள் ஊடுறுவ முடியாது. அப்போது பல்லைச் சிதைத்து வலியை ஏற்படுத்தும். அத்துடன் நிற்பதில்லை. நேரடியாக மூளையைப் பாதித்து விடுகின்றது. மனிதன் மரணத்தைத் தழுவ நேரிடுகின்றது.

இது பற்கள் மூலம் ஏற்படும் அதிகப்பட்ச பாதகம்!

வாய் துர்நாற்றம்

பல் இடுக்குகளில் மாட்டிக் கொண்ட உணவுத் துகள்களில் குடித்தனம் நடத்தும் நுண்ணுயிரிகள் தான் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதனால் நம்மிடம் பேசுவோர் முகத்தைத் திருப்பிக் கொள்ள நேரிடுகிறது.

அது மட்டுமின்றி ஈறுகள் தொற்று நோய்க்குள்ளாகி இரத்தம் கசியவும், சீழ் வழியவும் ஆரம்பித்து விடுகிறது. இந்நோய்க்கு பயோரிய்யா என்று பெயர். இது பற்களால் ஏற்படும் குறைந்த பட்ச பாதகமாகும்.

இதனால் தான் இயற்கை மார்க்கமான இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பல் துலக்குவதில் இவ்வளவு கவனம் எடுத்துள்ளார்கள். தமது சமுதாயத்தையும் இதில் கவனம் எடுக்கச் சொல்கிறார்.

———————————————————————————————————————————————-

இயற்கை வேதத்தின் இனிய பொருளாதாரம்

நாம் வாழ்கின்ற பூமியில் மேடு பள்ளங்கள் இருப்பது போலவே மனித வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள் இருக்கின்றன. ஆம்! ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கின்றது. இந்த ஏற்றத்தாழ்வு இயற்கையானது. மனித இனத்தின் செயல்பாட்டுக்காக இறைவன் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறான். இதை எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறுகின்றான்.

உமது இறைவனின் அருட்கொடையை அவர்கள் தான் பங்கிடுகிறார்களா? இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் வாழ்க்கையை நாமே பங்கிடுகிறோம். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பணியாளராக ஆக்குவதற்காகச் சிலரை விட சிலரின் தகுதிகளை உயர்த்தினோம். அவர்கள் திரட்டுவதை விட உமது இறைவனின் அருள் சிறந்தது.

அல்குர்ஆன் 43:32

செத்துப் போன செங்கொடி சித்தாந்தம்

இப்படி ஓர் ஏற்றத்தாழ்வு இல்லையெனில் மனித வாழ்க்கை ஸ்தம்பித்து விடும். இந்த இயற்கை நியதிக்கு எதிராகக் கிளம்பியது தான் செங்கொடி சித்தாந்தம், அதாவது கம்யூனிஸக் கொள்கை!

கிறித்தவர்கள் தங்களுடைய வேதத்தில் கைவரிசை காட்டியதால் அது கலப்படத்திற்கு உள்ளானது. அந்தக் கலப்பட, கரை பட்ட வேதத்தை பாதிரிகள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி மக்களை ஏமாற்றியதுடன் மக்களின் சொத்துக்களைச் சூறையாடினர்.

மதப் பாதிரிமார்கள் ஒரு பக்கம் மக்களைச் சுரண்டினர். மறு பக்கத்தில் பணக்காரர்கள் மக்களைக் கொத்தடிமைகளாக நடத்தினர். இதில் நிலவும் சுரண்டலை ஒழிப்பதற்குப் பதிலாக, பணக்காரர்களை ஒழிக்கப் பாடுபட்டதால் கம்யூனிஸ சித்தாந்தம் பெரும் தோல்வியைத் தழுவியது. வெகு சீக்கிரத்திலேயே ரஷ்யாவிலும், சீனாவிலும் சாவைத் தழுவியது.

இஸ்லாமிய மார்க்கம் ஓர் இயற்கை மார்க்கம். ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியவன் அந்த இயற்கை விதியின் நாயனான எல்லாம் வல்ல அல்லாஹ் அல்லவா? அதனால் தான் ஏழை, செல்வந்தர் இரு சாராருக்கும் மத்தியில் ஓர் இணைப்புப் பாலத்தை ஏற்படுத்துகிறான். இதன் மூலம் சுரண்டலைத் தடுக்கிறான். மூன்று விதமான வழிகளில் இவ்வாறு சுரண்டலைத் தடுக்கிறான்.

  1. கட்டாய தர்மம் (ஜகாத்)
  2. விரும்பி வழங்கும் தர்மம்
  3. கடன் வழங்குதல்

“இஸ்லாமிய மார்க்கம் ஏழைகளின் மார்க்கம், அந்த ஏழைகளுக்கு எதுவுமில்லாமல் பணக்காரர்கள் மட்டும் பொருளாதாரத்தை அனுபவிக்க நினைத்தால் அந்தப் பொருளாதாரத்தை இறைவன் அழித்து விடுவான்’ என்று திருக்குர்ஆன் அருளப்படத் துவங்கிய, ஆரம்ப காலத்திலேயே மக்களின் உள்ளங்களில் பதியச் செய்து விடுகின்றது.

தோட்டத்தைத் துடைத்தெடுத்த சோதனை

அந்தத் தோட்டத்துக்குரியோரை சோதித்தது போல் இவர்களையும் நாம் சோதித்தோம். “காலையில் அதை அறுவடை செய்வோம்” என்று அவர்கள் சத்தியம் செய்து கூறினர்.

இறைவன் நாடினால் (அறுவடை செய்வோம்) என்று அவர்கள் கூறவில்லை.

எனவே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது உமது இறைவனிடமிருந்து சுற்றி வளைக்கக் கூடியது அ(த்தோட்டத்)தைச் சுற்றி வளைத்தது.

அது காரிருள் போல் ஆனது.

“நீங்கள் அறுவடை செய்வதாக இருந்தால் உங்கள் விளை நிலத்துக்குச் செல்லுங்கள்! இன்று உங்களிடம் எந்த ஏழையும் நுழைந்து விட வேண்டாம்” என்று அவர்கள் குறைந்த சப்தத்தில் பேசிக் கொண்டே காலையில் ஒருவரை ஒருவர் அழைக்கலானார்கள்.

தடுக்க ஆற்றலுடையோராகவே அவர்கள் சென்றார்கள்.

அழிக்கப்பட்ட அ(த்தோட்டத்)தை கண்ட போது நாம் வழி மாறி (வேறு இடம்) வந்து விட்டோம் என்றனர்.

இல்லை! நாம் (அனைத்தையும்) இழந்து விட்டோம்.

அவர்களில் நடுநிலையாக நடந்து கொண்டவர் “நீங்கள் இறைவனைத் துதித்திருக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?” என்று கேட்டார்.

“எங்கள் இறைவன் தூயவன். நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்” என்றனர்.

அவர்களில் ஒருவர் மற்றவரிடம் குறை கூறியோராக முன்னோக்கினார்கள்.

“எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே! நாங்கள் வரம்பு மீறி விட்டோமே!” என்றனர்.

“இதை விடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாக்கித் தரக் கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள்” (என்றும் கூறினர்.)

இப்படித் தான் (நமது) வேதனை இருக்கும். மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?

அல்குர்ஆன் 68:17-33

ஒரு குருணை அளவு கூட ஏழைகளுக்குப் போய் விடக் கூடாது என்று குறியாக இருந்த அவர்களது விளைச்சலை ஒரு நொடியில் ஓய்த்துக் கட்டி விடுகிறான்.

கஞ்சன் காரூன் வரலாறு

காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். “மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்” என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!

அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்).

“என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது” என்று அவன் கூறினான். “இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்” என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.

தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். “காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப் பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்” என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர்.

“உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது” என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினர்.

அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.

“அந்தோ! தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும் வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்காவிட்டால் நம்மையும் பூமியில் புதையச் செய்திருப்பான். அந்தோ! (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்” என்று முதல் நாள் அவனது நிலைமைக்கு ஆசைப்பட்டோர் அன்று காலையில் கூறலானார்கள்.

பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர் களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.

அல்குர்ஆன் 28:76-83

ஏழைகளுக்குத் தர்மம் கொடுக்காதவர்களையும் அவர்களது சொத்துக்களையும் இந்தப் பூபாகத்தில் கூட வைத்திருக்க மாட்டேன் என்று பூமியில் புதையச் செய்து விடுகிறான்.

இவ்வாறு ஏழைகள் மீது அல்லாஹ் வைத்திருக்கும் மதிப்பையும் மரியாதையையும், குர்ஆன் இறங்கிய ஆரம்ப கால கட்டத்திலேயே நன்கு உணர்த்தி விட்டான்.

இவ்வாறு உணர்த்தி விட்டு, ஜகாத், தர்மம், கடன் போன்ற மூன்று வித தர்மங்களை முஸ்லிம்களிடம் அறிமுகப் படுத்துகிறான். அந்த மூன்று வித தர்மங்களை இப்போது பார்ப்போம்.

  1. கட்டாய தர்மம் (ஜகாத்)

செல்வந்தர்கள் தங்களிடமுள்ள பொருளாதாரத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஜந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 8

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக ஜகாத் என்ற கட்டாய தர்மம் அமைந்துள்ளதை நபி (ஸல்) அவர்கள் இங்கு குறிப்பிடுகிறார்கள்.

பணம், தங்கம், வெள்ளி, கால்நடைகள், விளைச்சல்கள் ஆகியவற்றில் மார்க்கம் நிர்ணயித்துள்ள விகிதப்படி ஸகாத் என்ற ஏழை வரி கொடுத்தாக வேண்டும். ஸகாத் தொடர்பான கட்டளைகள் திருக்குர்ஆனில் பல இடங்களில் காணப்படுகின்றன.

அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள். மறுமையையும் மறுப்பவர்கள்.

அல்குர்ஆன் 41:7

இந்த வசனத்தின்படி ஸகாத் கொடுக்காதவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் ஆவர்.

  1. விரும்பி வழங்கும் தர்மங்கள்

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

அல்குர்ஆன் 2:177

நன்மையை அடைய வேண்டுமா? இறைவனின் அன்பைப் பெற வேண்டுமா? அதற்குத் திருக்குர்ஆன் கூறும் வழி இதோ:

நீங்கள் விரும்புவதை (நல் வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

அல்குர்ஆன் 3:92

இதற்கு விளக்கமாகப் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.

அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது: அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ)க்கு எதிரில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அஙகுள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.

“நீங்கள் விரும்புவதை (நல் வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள்” என்ற (3:92) இறை வசனம் இறங்கியதும், அபூதல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, “நீங்கள் விரும்புவதை (நல் வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள்” எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் எனது மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே, அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்.

நபி(ஸல்) அவர்கள், “ஆஹா! இது அதிக லாபம் தரக் கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக் கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகின்றேன்” எனக் கூறினார்கள்.

அதற்கு அபூ தல்ஹா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்!” எனக் கூறி விட்டு, அத்தோட்டத்தைத் தமது நெருங்கிய உறவினருக்கும் தமது தந்தையுடன் பிறந்த சகோதரரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார்.

நூல்: புகாரி 1461

தர்மத்தை உறவினர்களுக்கு வழங்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இப்படி ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்தினரைக் கவனிக்க ஆரம்பித்து விட்டால் யாசகத்தின் வாசலை அடைத்து விடலாம். இவ்வாறு தாமாக முன் வந்து செய்யும் தர்மத்தையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

  1. கடன் வழங்குதல்

செல்வந்தர்கள், ஏழைகளுக்கு வழங்கும் உதவிகளில் மிகவும் முக்கியமானது கடன் உதவியாகும். இவ்வாறு கடன் கொடுத்து உதவுவதற்குக் குறுக்கே வந்து நிற்பது வட்டி! இந்த சுயநலச் சிந்தனை, சுரண்டல் நிந்தனையை இறைவன் மிக வன்மையாகக் கண்டிக்கிறான். ஏழைகளுக்குக் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்குபவர்களுக்கு நிரந்தர நரகம் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கின்றது.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 2:275

இவ்வாறு வட்டியை இஸ்லாம் வேரறுத்து எறிகின்றது. மீறி ஈடுபடுவோருக்கு நிரந்தர நரகத்தைத் தருகின்றது. அதே வேளையில் வட்டியின் மூலம் லாபத்தைக் கண்டு பழகி விட்ட மனிதனுக்கு, வட்டியில்லாமல் கடன் வழங்கினால் அதற்காக மறுமையில் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  சுட்டிக் காட்டுகின்றார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் (ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும், (கடன் வாங்கி) சிரமப்படுபவருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் செவிமடுத்தேனே! (இரண்டில் எது சரி?)” என புரைதா (ரலி) கேட்டார்கள். அதற்கு, “கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இருமடங்கு தர்மம் செய்த கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.    

அறிவிப்பவர்: சுலைமான் பின் புரைதா (ரலி)

நூல்: அஹ்மத்

“யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மது பின் அல்குரளி

நூல்: அஹ்மத்

இவ்வாறு ஓர் அழகிய பொருளாதாரத் திட்டத்தை வழங்கி ஏற்றத்தாழ்வுகளை அகற்றுகின்றது.

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லையேல் மனித வாழ்க்கையே ஸ்தம்பித்து விடும்.

ஆனால் அதே சமயம், இந்தப் பாகுபாட்டின் காரணமாக ஏழைகள் பட்டினியால் சாக வேண்டும்; பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாக வேண்டும் என்று விட்டு விடவில்லை.

மனிதனைப் படைத்த இறைவனிடமிருந்து வந்த இயற்கை மார்க்கம் என்பதால் இஸ்லாம் இப்படியொரு பொருளாதாரத் திட்டத்தை அமைத்து அனைவரும் வாழ வழி வகை செய்கின்றது.

———————————————————————————————————————————————-

குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்கள்

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்

இன்றைய உலகில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல வகையான தவறுகள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவை குறைந்த பாடில்லை.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தவறு செய்வதைத் தூண்டக் கூடிய காரணிகள் ஒழிக்கப்படாமல் இருப்பது, இரண்டு, தவறு செய்தவனுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படாமலிருப்பது.

ஆபாசப் படங்களைத் திரையிடுவதற்கும், ஆபாசப் பத்திரிகைகள் வெளிவருவதற்கும், ஆபாசமாக உடையணிவதற்கும் அனுமதி வழங்கப்பட்ட நாட்டில் விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதனை ஒழிக்க முடியாது. ஏனென்றால் விபச்சாரத்திற்கு அடிப்படையே ஆபாசம் தான். இவற்றை இல்லாமல் ஆக்கினால் தான் இந்தத் தீமையை சட்டங்களால் கட்டுப்படுத்த முடியும்.

மது அருந்துவதும், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதும், புகை பிடிப்பதும் உடல் நலத்திற்குத் தீங்கானது என்பதை உணர்ந்த நம்முடைய நாட்டிலே மது பாட்டில்களின் மீது, “குடி குடியைக் கெடுக்கும்’ என்றும் பீடிக் கட்டுகளில் மண்டை ஓட்டுப் படங்களை போடுவதன் மூலமும், பதினாறு வயதிற்குக் குறைந்தோர் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என விளம்பரம் செய்வதன் மூலமும் இவற்றை விட்டும் மக்களைப் பாதுகாத்து விடலாம் என நினைக்கின்றனர்.

ஆனால் இவற்றைக் கடைகளில் வைத்து வியாபாரம் செய்வதற்கு அனுமதியளித்த பிறகு இவற்றை விட்டும் மக்களைப் பாதுகாக்க விளம்பரம் செய்வது ஒரு பொருளை சாக்கடைக்குள் வைத்துக் கொண்டே அதன் நாற்றத்தைப் போக்க முயல்வதைப் போன்றதாகும்.

இரண்டாவது காரணம், குற்றங்களுக்குத் தகுந்த தண்டனைகள் வழங்கப்படாமல் இருப்பதாகும். இதனால் தவறு செய்பவன் மென்மேலும் தவறு செய்யத் தூண்டப்படுகிறான்.

மேலும் மனிதச் சட்டங்களில் குற்றங்களைச் செய்து விட்டுத் தப்பிப்பதற்குப் பல ஓட்டைகள் உள்ளன. இதன் காரணமாக, பல நிரபராதிகள் தண்டிக்கப்படுகின்றனர். பல குற்றவாளிகள் தண்டனை யிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.

படைத்த இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே தவறுகளைத் தூண்டக் கூடிய காரணிகளை அடியோடு ஒழிப்பதுடன் தவறுகளுக்குத் தகுந்த தண்டனைகளையும் வழங்குகிறது.

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமானமற்றவை என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம்.

ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.

குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப் பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.

கொலைக் குற்றம் செய்த ஒருவனுக்கு மரண தண்டனை வழங்குவதால், கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்து விடப் போவதில்லை; கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வரப் போவதில்லை; பொருளாதாரம் சம்பந்தப்பட்ட, திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறி போனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப் பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.

இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலி-ருந்து விளங்கலாம். அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதன் காரணம் என்ன?

  1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதி-லிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.
  2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.
  3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். அவன் மன நிறைவு அடைய வேண்டும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.

குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச் சாலைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன, குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.

ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களை குறைக்க இயலவில்லை.

அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச் சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப் படுத்தவே வழி வகுக்கின்றன.

குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்?

திருட்டு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை, இன்ன பிற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ, சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப் படுகின்றது. பெரும்பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.

சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விடச் சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.

நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் தரப்படுகின்றது. உயர் தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச் சாலைகளுக்குள்ளேயே செய்து தரப்படுகின்றன.

இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதில் வேதனையான அம்சம் என்னவென்றால், எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழிக்கிறானோ, அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

பெயரளவிலான இந்தத் தண்டனையால் ஒரு பயனும் ஏற்படாது; ஏற்படவில்லை.

53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!

15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது!

என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 53 தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதவில்லை.

சிறைச்சாலைகளில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால், நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்குக் கஷ்டப் படுவானேன்? ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச்சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே என்று எண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.

மேலும் குற்றவாளிகள் ஒருவரை ஒருவர் சிறைச்சாலைகளில் சந்தித்துக் கொள்வதற்கும், கூட்டாகத் திட்டமிடவும் வாய்ப்புக் கிடைப்பதால் மேலும் பெரிய அளவில் குற்றம் செய்வதற்குப் புதுப்புது யுக்திகளை வகுக்கின்றனர். சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக் கழகங்களாகத் திகழ்வதை அனைவரும் அறிவர்.

ஆண்டுதோறும் குற்றவாளிகள் பெருகி வருகின்றார்கள்; குற்றங்கள் பெருகுகின்றன; குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணம் பாழாக்கப்படுகின்றது. மனிதாபிமான (?) சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.

பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மனநிறைவு அடைவானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

திருட்டுக் கொடுத்தவனிடம் போய், திருடியவனை என்ன செய்யலாம் என்று கேட்டால் ஆறு மாதம் சோறு போடலாம் எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய், கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் பதினான்கு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும் என்று கூறுவானா? தலையைச் சீவ வேண்டும் என்பானா?

கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப் பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப் படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப் படுவதில்லை.

இஸ்லாமோ இதைக் கவனத்தில் கொள்கிறது. இஸ்லாம் கூறும் குற்றவியல் சட்டங்களைப் பற்றிப் பார்ப்போம்.

கொலைக் குற்றம்  மற்றும் தாக்குதல்களுக்குண்டான தண்டனைகள்

ஒருவன் பத்துப் பேரை கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையை கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.

அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றாவாளியை மன்னித்து விட்டால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். அல்லது குற்றவாளியிடம் நஷ்ட ஈட்டைக் கோரிப் பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான்.

அது போலவே கொல்லப் பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.

அதாவது உலக நாடுகள் ஜனாதிபதிக்கு வழங்கிய அதிகாரத்தை, பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப் பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (நஷ்ட ஈடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.

அல்குர்ஆன் 2:178, 179

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 5:45

அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை, தக்க காரணமின்றி செய்யாதீர்கள்! அநியாயமாகக் கொல்லப்பட்டோரின் பொறுப்பாளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் உதவி செய்யப்பட்டவராவார்

அல்குர்ஆன் 17:33

கொலை செய்தனுக்கு அரசாங்கம் மரண தண்டனை விதித்தால், கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள். சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது.

பாதிக்கப்பட்டவன் மன நிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப் பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.

கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையி-லிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்? “கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது; தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது’ என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப் பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக உள்ளது எனலாம்.

குழப்பம் செய்பவர்கள்

கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்கு உரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.

அல்குர்ஆன் 5:33

தவறுதலாகக் கொலை செய்தல்

நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு நஷ்ட ஈடு ஒப்படைக்கப்பட வேண்டும். அவர் உங்களுக்கு எதிராகவுள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவர், உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரது குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கி, நம்பிக்கை கொண்ட அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதில் எதுவும்) கிடைக்காதோர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) அல்லாஹ்வின் மன்னிப்பாகும். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:92

ஒருவன் தவறுதலாக இன்னொருவனைக் கொன்று விட்டால் அதற்கான நஷ்ட ஈடு அளிக்கப்பட வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது. நஷ்ட ஈட்டின் அளவு திருக்குர்ஆனில் கூறப்படவில்லை.

ஆயினும் தவறுதலாக ஒருவர் இன்னொருவரைக் கொன்று விட்டால் நூறு ஒட்டகங்கள், அல்லது இரு நூறு மாடுகள், அல்லது இரண்டாயிரம் ஆடுகள் நஷ்ட ஈடாக அளிக்கப்பட வேண்டுமென்றும், இந்த நஷ்ட ஈடு கொலை செய்தவனின் அனைத்து வாரிசுகளிடமிருந்தும் கூட்டாக வசூலிக்கப்பட வேண்டுமென்றும், வசூலிக்கப்படும் நஷ்ட ஈட்டை கொல்லப்பட்டவனின் வாரிசுகள் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டப்படி பிரித்துக் கொள்ள வேண்டுமென்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

திருட்டுக் குற்றம்

திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 5:38

திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது.

இப்படிக் கையை வெட்டினால் அவன் தொடர்ந்து திருட மாட்டான்; திருடவும் முடியாது.

மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டான் என்பது ஒரு நன்மை.

முதன் முதலாகத் திருட எண்ணுபவனும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.

கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைப் பறி கொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.

“இவர்கள் இங்கே இருக்கிறார்களா?” என்று திருடர்களின் புகைப்படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாளமாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.

தண்டனைகள் வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி குற்றவாளியை வருடக்கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப் பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கின்றது. சிறைக் கூடங்களை ஒழித்து விட்டு இஸ்லாம் பரிந்துரைக்கின்ற தண்டனைகளை அமுல்படுத்தினால் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அவசியம் இராது.

“பாவம்! கையை வெட்டுகின்றீர்களே!” என்று பரிதாபப் படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகின்றனர்.

மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்தை வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தைப் பறித்துக் கொள்கிறான். அந்த அயோக்கியனால் பணத்தை மட்டுமின்றி தன் மனைவியின் உயிரையும் பறி கொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?

நேர்மையையும், ஒழுக்கத்தையும் விரும்பக் கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத் தெருவில் நிற்பதைப் பார்த்து பரிதாபப்படாமல், அவனை நடுத் தெருவில் நிறுத்தியவனைப் பார்த்து பரிதாபப்படுகிறார்கள்.

இப்படியே கையை வெட்டிக் கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி விடுமே என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

நிச்சயமாக கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. ஒரே ஒரு திருடனின் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது. வெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை நிச்சயம் பெருகாது.

விபச்சாரக் குற்றம்

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்!  நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில்  ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

அல்குர்ஆன் 22:2

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கான தண்டனையை இரு வகைகளாகப் பிரித்துள்ளனர்.

திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்வார்களானால் அவர்களுக்கு மரண தண்டனையும், திருமணம் ஆகாதவர்கள் விபச்சாரம் செய்தால் நூறு கசையடி என்ற தண்டனையும் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

புகாரி – 2649, 2696, 2725, 6633, 6828, 6836, 6843, 6860, 7195, 7260, 2315, 5270, 5272, 6812, 6815, 6820, 6824, 6826, 6829 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களிலும், மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான ஹதீஸ் நூல்களிலும் இதற்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன.

இது போன்ற தண்டனைகளை நிறைவேற்றும் போது மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக நிறைவேற்றுவதை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் தண்டனை வழங்குவதற்கான நோக்கம் அதைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பது தான். எனவே மக்கள் முன்னிலையில் இது போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால் தான் தண்டனை வழங்கப்படுவதன் நோக்கத்தை எட்ட முடியும் என்பதால் “மக்கள் பார்த்துக் கொண்டிருக்கட்டும்’ என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுதல்

பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளை மட்டும் மக்கள் சர்வ சாதாரணமாக நம்பி விடுகின்றனர். பெண்களுடன் ஆண்களைத் தொடர்புபடுத்திக் கூறும் செய்திகளையும் ஆர்வமுடன் செவிமடுத்து அதை நம்பவும் செய்கின்றனர்.

“இருக்கும்! இருக்கும்!” என்று கூறி அதை ஆமோதிக்கின்றனர். இதனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலமே சூன்யமாகி விடுவதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. தங்கள் மகளைப் பற்றியோ, சகோதரிகள் பற்றியோ மற்றவர்கள் இப்படிப் பேசினால் அவர்கள் அதை ரசிப்பார்களா?

செய்தி ஊடகங்களும் பெண்களின் ஒழுக்கம் குறித்து ஆராயாமல் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால் இஸ்லாம் மட்டும் பெண்களின் கற்பொழுக்கம் பற்றி அவதூறு பேசுவதைக் கடுமையான குற்றமாகக் கருதுகின்றது. ஒரு பெண் மீது அவதூறு சுமத்துவது என்றால் குறைந்த பட்சம் நான்கு நேரடி சாட்சிகள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது

நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் பெண்களின் கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்தினால், அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் கூட குற்றம் சுமத்தியவர் களுக்கு எண்பது சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.

அல்குர்ஆன் 24:4

இதற்கு நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள்.

அல்குர்ஆன் 24:13

இஸ்லாம் வழங்கிய சட்டங்கள் தான் மனித சமுதாயத்திற்கு பாதுகாப்பானது என்பதை மேற்கண்ட வசனங்கள் நமக்கு தெளிவாக விளக்குகின்றன.

இவ்வுலக அமைதிக்கு இறைச்சட்டமே!

உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய் விட்டன. மக்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ? என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமியத் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன்வர வேண்டும்.

குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்தி, கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால், உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.

திருடனைப் பிடித்தவுடன் அவன் கையை வெட்டி விட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்பி வந்து விடுமா? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.

இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் எத்தனையோ பேர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இழந்த மூன்றாண்டுகளைத் திருப்பிக் கொடுக்க இயலுமா என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? என்பதைச் சிந்தித்தால் இப்படிக் கேட்க மாட்டார்கள்.

மேலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது.

மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைச் சுமத்தினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர் களுக்கு 80 கசையடி வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது.

இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்களின்றி சில குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப்படவே முடியாது என்பது தான் உண்மை.

———————————————————————————————————————————————-

இறைப் பாதையும் சிறைப் பயணமும்

எம். ஷம்சுல்லுஹா

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை மக்களிடத்தில் போதிக்கும் போது, இறை மறுப்பாளர்கள் மூன்று விதமான சதித் திட்டங்களைத் தீட்டினர்.

(முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ (ஏக இறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.

அல்குர்ஆன் 8:30

இந்த வசனத்தில் இறை மறுப்பாளர்கள் செய்யும் மூன்று விதமான சூழ்ச்சிகளையும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கிறான்.

சிறை பிடித்தல், நாடு கடத்தல், கொலை செய்தல் ஆகியவை தான் அந்தச் சூழ்ச்சிகள்.

இது முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மட்டுமல்ல! இந்த உலகில் அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள் அனைவருக்கும் எதிராக இந்தச் சூழ்ச்சிகள் செய்யப்பட்டன.

இறைத் தூதர்கள் மட்டுமல்ல! ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்பவர்கள், சத்தியக் கருத்தை மக்களுக்கு மத்தியில் எடுத்துரைப்பவர்கள் அனைவரும் இந்தச் சூழ்ச்சிகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்காகத் தான் திருக்குர்ஆனில் இந்தச் சம்பவங்களை அல்லாஹ் நமக்கு எடுத்துக் காட்டுகின்றான்.

ஓர் அரசியின் அந்தப்புர, அந்தரங்கக் காதலராக இருக்க மறுத்த யூசுப் நபியவர்கள் சிறைவாசத்தை அனுபவித்தார்கள். அவர்கள் அனுபவித்த அந்தச் சிறைவாசத்தை என்னால் கூட அனுபவிக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் கூறுகிறார்கள்.

சத்தியத்தைச் சொல்லக் கூடியவர்கள் தங்களுடைய வாழ்க்கையில், அந்த இறைப் பாதையில் சிறைப் பயணத்தைச் சந்தித்தே ஆக வேண்டும்.

உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

அல்குர்ஆன் 3:120

எதிரிகள் கேவலமாகச் சித்தரிக்கும் போது நம்முடைய கொள்கைச் சகோதரர்களும், “இது நமக்குப் பின்னடைவு தானே!’ என்று நினைக்கத் தலைப்படுகின்றனர்.

இங்கு தான் நாம் ஏகத்துவத்தைப் பற்றி முழுமையாகப் புரியாமல் இருக்கிறோமோ என்ற ஐயம் ஏற்படுகின்றது.

நூஹ் (அலை) அவர்கள் முதல் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை ஏகத்துவப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எல்லோருமே துரத்தித் தான் அடிக்கப்பட்டார்கள். திருக்குர்ஆன் கூறும் நபிமார்களின் வரலாறு களிலிருந்து இதைத் தெளிவாக விளங்கலாம். நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் சென்ற வரலாற்றிலிருந்தும் இதை அறிய முடியும்.

ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்குப் பதிலளிக்கவில்லை.

ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். கர்னுஸ் ஸஆலிப் என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது.

நான் கூர்ந்து கவனித்த போது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, “உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள்.

உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து, எனக்கு சலாம் சொல்லி விட்டுப் பிறகு, “முஹம்மதே! நீஙகள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)” என்று கூறினார்.

உடனே, “(வேண்டாம்) ஆயினும் இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குவோரை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே அவர்களைத் தண்டிக்க வேண்டாம்)” என்று சொன்னேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3231

நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் சென்று விட்டுத் திரும்பி வந்தது யாருக்குக் கேவலமாகத் தெரிந்தது? மக்கா காஃபிர்களுக்கு! இப்போது நம்முடைய இந்தப் பயணம் யாருக்குக் கேவலமாகத் தெரிகின்றது? கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள். மக்கத்துக் காஃபிர்களின் சிந்தனைகளில் இவர்கள் ஒத்திருக்கின்றார்கள். அதனால் தான் இது கேவலமாகத் தெரிகின்றது.

ஆனால் இந்தப் பயணம் நமக்குக் கேவலமாகத் தெரியக் கூடாது. மாறாக நாம் மகிழ்ச்சியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கிருபையால் நபிமார்களுக்குக் கிடைத்த அந்த ரிஸல்ட், விளைவு நமக்குக் கிடைப்பதன் மூலம், நாம் தான் அந்தப் பணியை உத்வேகத்துடன் செய்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணி மகிழ வேண்டும்.

மூன்று விதமான சதிகளை நபிமார்கள் சந்தித்தார்கள் என்று மேலே கண்டோம். ஏகத்துவவாதிகளான நாமும் இந்த விளைவுகளைச் சந்திப்பதற்காகத் தயாராகிக் கொள்ள வேண்டும். அப்படித் தயாரானால் தான் நாம் தவ்ஹீதுவாதிகள்.

அதிகப்பட்சமாக நமது உயிரையும் இந்தக் கொள்கைக்காக விடுவோம் என்ற நிலையை எடுத்துக் கொண்டோம் என்றால் மற்ற இரண்டு சதிகளும் நமக்குப் பெரிதாகத் தெரியாது.

ஒன்று, நாடு கடத்தல் அல்லது ஊர் நீக்கம் செய்தல். மற்றொன்று சிறைவாசம். எதிரிகள் நம் உயிரையும் எடுப்பார்கள் என்று நாம் தயாராக இருந்தால் இந்த இரண்டும் நமக்குச் சர்வ சாதாரணமாகி விடும்.

இதற்கு மூஸா (அலை) அவர்களின் வாழ்க்கையில் சிறந்த எடுத்துக்காட்டு உள்ளது.

நான் தான் உங்களின் மகத்தான இறைவன் என்று கூறிக் கொண்டிருந்த ஃபிர்அவ்னிடம் ஏகத்துவத்தை எடுத்துரைக்குமாறு மூஸா, ஹாரூன் ஆகிய இருவரையும் அல்லாஹ் அனுப்பி வைக்கிறான்.

நீரும், உமது சகோதரரும் எனது சான்றுகளுடன் செல்லுங்கள்! என்னை நினைப்பதில் சோர்வடையாதீர்கள்!

இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்! அவன் வரம்பு மீறி விட்டான்.

“அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது அஞ்சலாம்” (என்றும் கூறினான்.)

“எங்கள் இறைவா! அவன் எங்களுக்குத் தீங்கிழைப்பான்; அல்லது அவன் எங்கள் மீது வரம்பு மீறுவான்; என அஞ்சுகிறோம்” என்று இருவரும் கூறினர்.

“அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்” என்று அவன் கூறினான்.

இருவரும் அவனிடம் சென்று “நாங்கள் உனது இறைவனின் தூதர்கள். எனவே இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி விடு! அவர்களைத் துன்புறுத்தாதே! உனது இறைவனிடமிருந்து உன்னிடம் சான்றைக் கொண்டு வந்துள்ளோம். நேர் வழியைப் பின்பற்றியோர் மீது நிம்மதி உண்டாகட்டும். பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவருக்கு வேதனை உண்டு என எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறுங்கள்!

“மூஸாவே! உங்களிருவரின் இறைவன் யார்?” என்று அவன் கேட்டான்.

“ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்” என்று அவர் கூறினார்.

“முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?” என்று அவன் கேட்டான்.

“அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்” என்று அவர் கூறினார்.

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினோம்.

உண்ணுங்கள்! உங்கள் கால்நடைகளை மேய விடுங்கள்! அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.

அவனுக்கு (ஃபிர்அவ்னுக்கு) நமது சான்றுகள் அனைத்தையும் காட்டினோம். அவன் பொய்யெனக் கருதி மறுத்து விட்டான்.

“மூஸாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை வெளியேற்ற எங்களிடம் வந்துள்ளீரா?” என்று அவன் கேட்டான்.

அல்குர்ஆன் 20:42-57

மூஸா, ஹாரூனுக்குப் பதிலடி கொடுப்பதற்காக ஃபிர்அவன் நாள் குறிக்கிறான்.

அந்தக் குறிப்பிட்ட தினத்தில் நடக்கும் ஆச்சரியமான சம்பவம் இதோ:

“இது போன்ற ஒரு சூனியத்தை நாமும் உம்மிடம் செய்து காட்டுவோம். எமக்கும் உமக்குமிடையே (போட்டி நடத்திட) பொதுவான இடத்தில் ஒரு நேரத்தை நிர்ணயிப்பீராக! அதை நாமும் நீரூம் மீறாதிருப்போம்” (என்றும் கூறினான்.)

“பண்டிகை நாளே உங்களுக்குரிய நேரம். முற்பகலில் மக்கள் ஒன்று திரட்டப்படட்டும்” என்று அவர் கூறினார்.

ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று தனது சூழ்ச்சியை ஒருமுகப் படுத்தினான். பின்னர் வந்தான்.

“உங்களுக்குக் கேடு தான் ஏற்படும். அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள்! அவன் உங்களை வேதனையால் அழிப்பான். இட்டுக்கட்டியவன் நஷ்டமடைந்து விட்டான்” என்று அவர்களிடம் மூஸா கூறினார்.

அவர்கள் தமக்கிடையே விவாதம் செய்தனர். அதை இரகசியமாகச் செய்தனர்.

“இவ்விருவரும் சூனியக்காரர்கள். தமது சூனியத்தின் மூலம் உங்களை உங்களது பூமியிலிருந்து வெளியேற்ற எண்ணுகின்றனர். சிறந்த உங்கள் வழி முறையை அழிக்கவும் நினைக்கின்றனர்” எனக் கூறினர்.

“உங்கள் சூழ்ச்சியை ஒருமுகப்படுத்துங்கள்! பின்னர் அணிவகுத்து வாருங்கள்! போட்டியில் வெல்பவரே இன்றைய தினம் வெற்றி பெற்றவர்” (என்றனர்)

“மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.

“இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்.

“அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர்” என்று கூறினோம்.

“உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்.)

உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்” என்றனர்.

“நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்” என்று அவன் கூறினான்.

“எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்” என்றனர்.

“எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்திச் செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப்பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்” (என்றும் கூறினர்.)

அல்குர்ஆன் 20:58-73

உலக வரலாற்றில் சொற்ப நேரத்தில் ஈமான் கொண்டு, சொற்ப நேரத்தில் வீர மரணம் அடைந்த சுவனவாதிகள் இந்த மந்திரவாதிகள் தான்.

அதனால் தான் இந்த வரலாற்றைத் திருக்குர்ஆனில் திரும்பத் திரும்ப, பல இடங்களில் இறைவன் கூறிக் காட்டுகின்றான்.

இந்த மந்திரவாதிகள் போன்று ஈமானியச் சுடரை நாமும் பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டால் ஊர் நீக்கம், சிறைவாசம் என்பதெல்லாம் நமக்குக் கொசு தான். இது தான் ஏகத்துவம் உங்களுக்கு முன் வைக்கின்ற கோரிக்கையாகும்.