ஏகத்துவம் – மார்ச் 2010

தலையங்கம்

மதம் பிளிறும் மராத்திய வெறி

இந்தியர்களை அடித்துத் தாக்கிக் கொலை செய்வது ஆஸ்திரேலியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதை இனவெறித் தாக்குதல் என்று குறிப்பிட்டு இந்திய அரசும், இந்திய ஊடகங்களும், பல்வேறுபட்ட அமைப்புகளும் இந்த அக்கிரமத்தைக் கண்டித்தன. இதனை நாம் வரவேற்கிறோம்.

அதே வேளையில், இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும் இந்த இனவெறியைக் கண்டிப்பதற்குத் தார்மீக உரிமை இருக்கின்றதா? என்ற ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகின்றோம். இவ்வாறு கேள்வி எழுப்புவதற்கு சில அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணங்கள் எவை?

இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் பாகிஸ்தான் பங்கெடுக்காதது குறித்து இந்தி நடிகர் ஷாரூக் கான் வருத்தம் தெரிவித்திருந்தார். இவர் ஒரு கடைந்தெடுத்த இறை மறுப்பாளர். பெயரளவில் தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக் கொள்வதால் ஷாரூக் கானை தேசத் துரோகி என்று சித்தரிக்கின்றான் பால் தாக்கரே!

பால் தாக்கரேயும் அவனது பரிவாரமும் ஷாரூக் கான் நடித்த, “மை நேம் இஸ் கான்’ என்ற படத்தை மும்பையில் திரையிட விட மாட்டோம் என்று கொக்கரித்தது. கானின் அந்தப் பேச்சில் எந்தத் துரோகமும் தொனிக்கவில்லை என்பதை இந்த நாடே அறிந்திருக்கின்றது.

பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு என்பதற்காகவோ, தான் ஒரு முஸ்லிம் என்ற எண்ணத்திலோ ஷாரூக் கான் வருந்தவில்லை. ஐ.பி.எல். சூதாட்டத்தில் இவர் ஒரு அணியின் உரிமையாளர் என்ற அடிப்படையில் பாகிஸ்தான் பங்கெடுக்காதது கானுக்கு நஷ்டம். அதற்காகத் தான் இந்த வருத்தம்.

ஆனால் பால் தாக்கரே இதை ஒரு விவகாரமாக்கி, ஷாரூக்கானுக்கு எதிராக துவேஷப் பிரச்சாரம் செய்வது இந்திய அரசியல் சட்டத்தின்படி கருத்துச் சுதந்திரத்தைப் பறித்தல் என்பது ஒரு புறமிருக்க, “மராட்டியம் மராட்டியருக்கே! அங்கே பிற மாநிலத்திலுள்ளவர்கள் வாழவும், பிழைக்கவும், சொத்துக்கள் வாங்கவும் உரிமையில்லை’ என்று முழங்கி தனி நாடு கோரிக்கையை முன்வைப்பவன் பால் தாக்கரே!

இது இந்திய அரசு மற்றும் ஊடகங்களின் பார்வையில் மாபெரும் தேசத் துரோகச் செயலாகும்.

ஏனெனில் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு மட்டும் தான் அந்த மாநிலம் என்று வாதிட ஆரம்பித்தால் நாடு துண்டு துண்டாகிச் சிதறி விடும். இந்த அடிப்படையில் இது தேச விரோதச் செயலாக இருந்தாலும் சிவசேனாவைப் பொறுத்த வரை இதை தேச பக்தி என்று கூறிக் கொள்கிறது.

சொந்த நாட்டிலேயே மராத்தி அல்லாத பிற மொழி பேசுவோர் மீது மராத்திய நவநிர்மாண் சேனாவின் வெறியர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு அடிப்படைக் காரணம் மராத்திய இனவெறி தான். இப்படி ஒரு இனவெறியைத் தன்னிடம் வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவின் இனவெறியை எப்படி இவர்கள் கண்டிக்க முடியும்?

இந்த இனவெறியைக் கண்டிப்பதற்கு ஒரே தகுதி, அருகதை, உரிமை இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் முஸ்லிம்களுக்கு மட்டுமே உள்ளது.

காரணம், இஸ்லாம் மட்டும் தான் இனவெறி, மொழி வெறி, குலவெறி, நாட்டு வெறி (இதற்கு மறு பெயர் தான் தேச பக்தி) அனைத்தையும் அறுத்தெறிந்து உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று முழங்குகின்றது; மனிதம் காக்கின்றது; சகோதரத்துவம் பேணுகின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

இஸ்லாத்தின் இந்தக் கொள்கை, இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டால் இங்குள்ள தீண்டாமை ஒரு நொடியில் ஒரேயடியாக மறையும்.

முல்லைப் பெரியாறு பிரச்சனை இல்லை! காவிரி நதி நீர் பிரச்சனை இல்லை! கிருஷ்ணா நதி நீர் பிரச்சனை இல்லை! மராத்திய இனவெறி இல்லை! தமிழ் இனவெறி இல்லை! ஆஸ்திரேலிய இனவெறி இல்லை!

உலகெங்கிலும் இனவெறி இருக்காது. வெள்ளையன், கருப்பன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இருக்காது. அமைதியே உலகின் எல்லை என்றாகி விடும். அதற்குத் தேவை உலகெங்கும் இஸ்லாமிய மயமாவதே!

————————————————————————————————————————————————

மதியாத ஆலயம் மிதியாதீர்

சேலம் மாவட்டம் கண்டாம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த திரவ்பதி கோயிலில் தலித்துக்கள் நுழைவதற்கு அனுமதிப்பதில்லை. இதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது நடந்தது 2007ல்!

அண்மையில் 30.09.2009 அன்று நாகை மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம்: வேதாரண்யம் அருகிலுள்ள செட்டிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தலித்துகளுக்கு நுழைவதற்கு அனுமதியில்லை.

இந்த அநீதியைக் கண்டித்து நாகை சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்த 300 பேர்களுடன் ஆலயத்துக்குள் பிரவேசிக்க முயன்றார். இறுதியில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விடுதலையானார்கள்.

மீண்டும் ஆலயப் பிரவேசம் செய்வேன்; ஆலயத்தில் நுழையும் வரை என் போராட்டம் ஓயாது என்று சட்டமன்ற உறுப்பினர் அறிவித்திருந்தார்.

ஆலயப் பிரவேசம் பிரச்சனைகளைப் பிரசவித்து விடக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு வருவாய் வட்டாட்சி அலுவலர் ராஜேந்திரன், தலித் மக்களை அழைத்துச் செல்ல முடிவு செய்து, அழைத்துச் சென்ற போது எதிர்ப்பாளர்கள் அவரையும் விட்டு வைக்கவில்லை. ஆர்.டி.ஓ. ராஜேந்திரன் தடுத்து நிறுத்தப்படுகின்றார். வணக்கப் பயணம் வன்முறைப் பயணமாக மாறியது.

இங்கு நாம் தலித் மக்களை நோக்கி அன்புடன் கேட்க விரும்புகின்ற ஒரு கேள்வி, மறுக்கின்ற ஆலயத்தில் மறுபடியும், மறுபடியும் நுழைய முயற்சி செய்வதில் என்ன பயன்? மதியாத வாசலை ஏன் மீண்டும் மீண்டும் மிதிக்க வேண்டும்?

இது தான் நாம் அவர்களிடம் முன்வைக்கின்ற கேள்வி. உங்களை மதித்து அழைக்கும் ஆலயத்தை நோக்கிப் பயணம் செய்ய வேண்டியது தானே!

பள்ளிவாசல்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. மனிதன் தன்மானம் மிக்கவன். அழையா விருந்தாளியாக, பிழையாகக் கூடப் பிற இடங்களுக்குச் செல்ல மாட்டான்.

அப்படிப்பட்ட மனிதனின் தன்மானத்தை மதிக்கும் வகையில் இந்தப் பள்ளிவாசல்கள், “தொழுகையை நோக்கி வாருங்கள்; வெற்றியை நோக்கி வாருங்கள்” என்று எழுப்புகின்ற பாங்கோசை மூலம், மனிதனை – தன் பக்தனை இறைவன் அழைக்கிறான்.

கட்டியணைக்கக் காத்திருக்கிறேன் என்று அழைக்கின்ற ஆலயத்தின் அன்பு அழைப்பை விட்டு விட்டு, எட்டி உதைக்கின்ற ஆலயத்தை நோக்கிப் பயணம் செய்யலாமா? இது தலித் மக்களிடம் நாம் முன்வைக்கின்ற கனிவான கேள்வி!

மணியடித்து மக்களை அழைக்கும் ஆலயங்கள் உண்டு. முரசு கொட்டி மக்களை அழைக்கும் ஆலயங்கள் உண்டு.

ஆனால் பாசப் பெருக்குடன், அன்பு இழையோட, பதமான வார்த்தைகளில் பக்தனை தன் பக்கம் அழைக்கின்ற அழகிய பாங்கு அழைப்பு முறை இஸ்லாமிய ஆலயங்களான பள்ளிவாசல்களில் மட்டுமே உண்டு.

ஒரு வேளை, இரு வேளை என்றில்லாமல் ஐவேளைகள் அழைக்கும் இந்த ஆலயங்களுக்கு வாருங்கள் என்று தலித் மக்களை அன்புடன் அழைக்கிறோம்.

உள்ளூர் பள்ளிகள் மட்டும் இம்மக்களை அன்பு கூர்ந்து அழைக்கவில்லை. உலக முஸ்லிம்களின் உன்னத உயர் பள்ளியான புனித மக்கா ஆலயமும் அவர்களை அழைக்கின்றது.

அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

அல்குர்ஆன் 3:96

தீண்டாமை தடுப்புச் சுவர்கள்

கோவை நகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்று ஜீவா நகர். இதற்கு அருகில் உள்ளது பெரியார் நகர். இந்த இரு பகுதிகளுக்கும் அருகில் உள்ள முக்கியமான காமராஜர் சாலை.

காமராஜர் சாலைக்கு பெரியார் நகரைச் சேர்ந்தவர்கள் வர வேண்டும் என்றால் ஜீவா நகர் வழியாக வருவது தான் சுருக்கமான பாதையாகும். இல்லாவிட்டால் சுற்றிக் கொண்டு சாலையை அடைய வேண்டும்.

இந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஜீவா நகரைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள மாநகராட்சி இடத்தில், ஒரு விநாயகர் கோவிலைக் கட்டினார்கள். பின்னர் அதற்கு அருகில் பெரியார் நகர் தலித் மக்கள் வர முடியாத அளவுக்கு 6 அடிக்கு 3 அடி என்ற கணக்கில் தடுப்புச் சுவரையும் கட்டி விட்டனர்.

இதனால் பெரியார் நகர் ஆதி திராவிடர் காலனியில் வசித்து வரும் 58 குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் ஜீவா நகர் வழியாக வர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தச் சுவரை இடிக்கக் கோரி பல விதங்களில் போராடி வந்தனர் பெரியார் நகர் மக்கள்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.உமாநாத்துக்கு தலித் மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவைப் பார்த்த ஆட்சித் தலைவர் அந்தச் சுவரை இடித்துத் தள்ளுமாறு மாநகராட்சி ஆணையர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அங்கு சென்று சம்பந்தப்பட்ட சுவரை இடித்துத் தள்ளினர். இதன் மூலம் பெரியார் நகர் தலித் மக்கள் ஜீவா நகர் வழியாக செல்ல இருந்து வந்த தடை விலகியது.

ஏற்கனவே மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் பல வருடங்களாக தலித் மக்களையும், இன்னொரு பிரிவு மக்களையும் பிரிக்கும் வகையில் இருந்து வந்த நீண்ட சுவரின் ஒரு பகுதியை சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் இடித்துத் தள்ளினர் என்பது நினைவிருக்கலாம்.

மதுரை உத்தமபுரம், கோவை ஜீவா நகர் சாதிய தடுப்புச் சுவர்களை, தீண்டாமை தடைக் கற்களை தகர்த்தெறிய, தலித் மக்கள் விடுதலையும் விமோசனமும் பெறுவதற்கு வழி ஆலயப் பிரவேசம் தான். அந்த ஆலயப் பிரவேசத்திற்குத் தான் தலித் மக்களை அழைக்கின்றோம்.

இதற்கு ஒரே நிபந்தனை, யாராலும் படைக்கப்படாத, யாராலும் பெறப்படாத, யாரையும் பெறாத, இணையில்லாத, உணவு – தாம்பத்திய உறவு என்ற தேவைகள் அற்ற அந்த ஒரே ஒரு இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். முஹம்மது நபியை அந்த ஒரே இறைவனின் தூதர் என்று நம்ப வேண்டும்.

இந்த ஒரு நிபந்தனை தான்! சாதிகள் பறந்து விடும்; சகோதரத்துவம் மலர்ந்து விடும்.

————————————————————————————————————————————————

ஏகத்துவமும் இணை கற்பித்தலும் தொடர்: 3

இணை கற்பித்தல் என்றால் என்ன?

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்

சென்ற இதழ்களில் ஏகத்துவத்தின் சிறப்புகளையும், இணை வைப்பதால் ஏற்படும் கெடுதிகளையும் விரிவாகப் பார்த்தோம்.

நாம் ஓரிறைக் கொள்கையை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால் அதன் எதிர்மறையான இணை வைத்தல் என்றால் என்ன? என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இன்றைக்கு அதிகமான இஸ்லாமிய இயக்கங்கள், இஸ்லாம் எதனை நிரந்தர நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று எச்சரிக்கிறதோ அப்படிப்பட்ட இணை கற்பித்தல் என்ற பாவத்தைப் பற்றி மிகப் பெரும் அறியாமையிலேயே வீழ்ந்து கிடக்கின்றார்கள். அவர்கள் இவ்வுலக வாழ்வின் இன்பத்திற்காக, முன்னேற்றத்திற்காகச் செய்கின்ற முயற்சிகளில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட இந்த மாபெரும் அநியாயத்தை அகற்றுவதற்காகவோ அல்லது அவர்கள் அதனை அறிந்து தவிர்ந்து வாழ்வதற்காகவோ செய்வது கிடையாது. இன்னும் சொல்லப் போனால்  தீனை நிலை நாட்டப் போகிறோம் என்று போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் கூட தீனின் அடிப்படையைத் தகர்க்கக்கூடிய இந்த இணை வைத்தல் என்கின்ற பாவத்தை அறியாதவர்களாகத் தான் உள்ளனர்.

திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எவையெல்லாம் இணை கற்பிக்கின்ற காரியங்கள் என்று நமக்கு எச்சரிக்கை செய்தார்களோ அவற்றை நாம் நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. அல்லாஹ் எந்த ஆற்றலையும் ஏற்படுத்தாத பொருட்களில், காரியங்களில், இடங்களில் நமக்குப் பலன் இருப்பதாக நம்புதல். அதாவது நமக்கு ஏற்படும் கஷ்டங்களை அவற்றால் நீக்கிவிட இயலும், நமக்கு நன்மைகளை அவை தந்து விடும் என்று நம்பிக்கை வைப்பது. இவ்வாறு ஒருவன் நம்பிக்கை வைத்தால் நிச்சயமாக அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டான்.
  2. அல்லாஹ்வை மறுப்பது அல்லது அல்லாஹ்வின் பண்புகள், பெயர்கள் மற்றும் ஆற்றல்களில் ஏதாவது ஒன்றை மறுப்பது அல்லது அல்லாஹ்வுடைய ஆற்றல்கள் பண்புகள் அவனுக்கு இருப்பதைப் போல் அல்லாஹ் அல்லாத பொருட்களுக்கோ, மற்றவர்களுக்கோ இருப்பதாக நம்புதல். மேலும் அல்லாஹ்வைப் பற்றி அவனும், அவனுடைய தூதரும் எத்தகைய விளக்கங்களை வழங்கியுள்ளார்களோ அதில் குர்ஆன், ஹதீஸ் துணையின்றி எவ்வித சுய விளக்கங்களையும் நாம் கூறுவது கூடாது. இவ்வாறு ஒருவன் செய்தால் நிச்சயமாக அவனும் அல்லாஹ்வை மறுத்தவனாவான்.
  3. இறைவனுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளில் ஏதாவது ஒன்றை இறைவனல்லாதவர்களுக்குச் செய்தால் அல்லது இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களில் ஏதாவது ஒன்றை அவனுக்காகச் செய்வதற்கு மறுத்தால் அவனும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவனாவான்.
  4. இறைவன் வஹீயாக இறக்கி வைத்த இறைச் சட்டங்களைத் தான் பின்பற்ற வேண்டும். ஒருவன் இறைவனுடைய வஹீயான இறைச் சட்டங்களை மறுத்தாலோ, அல்லது இறைவனல்லாத மற்றவர்களின் கருத்தையோ அல்லது மற்றவர்களால் உருவாக்கப்பட்டவற்றையோ, அல்லது தன்னுடைய மனோ இச்சையையோ மார்க்கமாகக் கருதினால் அவன் இறைவனுக்கு இணை கற்பித்தவனாவான். இறைவனல்லாதவர்களைக் கடவுளர்களாக வணங்கியவனாவான்.

நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் நடைபெறுகின்ற சில இணை கற்பிக்கின்ற காரியங்களில் மேற்கண்ட நான்கு வகையுமோ அல்லது அதிகமானவையோ நிறைந்து காணப்படும்.

உதாரணமாக சமாதி வழிபாட்டை எடுத்துக் கொள்வோம். அதில் சமாதி எனும் மண்சுவர் நமக்கு ஏற்படும் கஷ்டங்களைத் தடுத்துவிடும்; நமக்கு நன்மைகளைக் கொண்டு வந்து விடும் என்று சமாதி வழிபாடு செய்பவர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதன காரணமாகத் தான் சமாதிகளைச் சுற்றி வலம் வருகின்றனர். சமாதிகளையும், தர்ஹாவின் நிலைப்படிகளையும், மூலைகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர். சமாதியில் வழங்கப்படும் சந்தனத்தைக் கழுத்திலும் தலையிலும் பூசிக் கொள்கின்றனர். கொடிமரங்களைத் தொட்டு முத்தமிடுகின்றனர். சாம்பலும் சர்க்கரையும் கலந்து வழங்கப்படும் பொருளைப் புனிதமாகக் கருதுகின்றனர். இது நாம் வகைப்படுத்தியதில் முதலாவது வகையான இணை வைத்தலாகும்.

மறைவானவற்றை அறிதல், உள்ளத்தில் உள்ளவற்றை அறிதல், ஒரே நேரத்தில் பலர் பேசுவதை அறிதல் போன்ற இறைவனுக்கே மட்டும் உரித்தான பண்புகள் சமாதிகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் இருப்பதாக, சமாதி வழிபாடு செய்வோர் நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாகத் தான் “யா முஹ்யித்தீன் கவ்சுல் அஃலம்’ (முஹ்யித்தீனே! மகதத்தான இரட்சகரே!) என்றெல்லாம் அழைக்கின்றனர். இது நாம் வகைப்படுத்தியதில் இரண்டாவது வகையான இணை கற்பித்தலாகும். அதாவது இறைத் தன்மைகள் இறைவன் அல்லாதவர்களுக்கு இருப்பதாக நம்புதல்.

இறைவனுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளான பிரார்த்தனை செய்தல், அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல், ஸஜ்தாச் செய்தல் போன்ற பல வணக்கங்களைச் சமாதிகளுக்குச் செய்கின்றனர். இது நாம் வகைப்படுத்தியதில் மூன்றாவது வகையான இணை கற்பித்தல் ஆகும்.

மேலும் ஊர்வலம், சந்தனக்கூடு, கந்தூரி, உரூஸ் போன்றவற்றை உருவாக்கி அவற்றை மார்க்கமாகப் பின்பற்றுகின்றனர். இறைவனால் இறக்கப்பட்ட இறைச் சட்டமாகிய வஹீயில் இது போன்ற கட்டளைகள் கிடையாது. மொத்தத்தில் சமாதி வழிபாடு என்ற ஒன்றே இறைக் கட்டளைகளில் கிடையாது. இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. இது நாம் வகைப்படுத்தியதில் நான்காவது வகையான இணை கற்பித்தல் ஆகும்.

நாம் வகைப்படுத்திய நான்கு வகைகளையும் நாம் மிக விரிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பல வழிகெட்ட கொள்கைகள் ஒரு மனிதனிடம் புகுந்து விடும் போது ஓரிறைக் கொள்கையை அவன் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு கற்றுக் கொள்வதன் மூலமாகத் தான் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்ள முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் இவ்வாறு தான் உத்தரவிடுகிறான்.

வணக்கத்திற்குரிய கடவுள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதைக் கற்றுக் கொள்வீராக.

அல்குர்ஆன் 47:19

பின்வரும் வசனத்தில் இறைக் கட்டளைகளைக் கற்றுக் கொள்வதன் மூலமாகவும் படிப்பதன் மூலமாகவுமே உண்மையான இறையடியார்களாக, அதாவது ஏகத்துவவாதிகளாக ஆக முடியும் என்பதைத் திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் “அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக, “வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!” (என்றே கூறினர்)

அல்குர்ஆன் 3:79

நம்முடைய ஜமாஅத் சகோதரர்கள் இவற்றைத் தாமும் கற்றுக் கொள்வதோடு தர்பியா போன்ற பயிற்சி வகுப்புகளை நடத்தி பெரியவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் இவற்றைக் கற்றுக் கொடுப்பதற்கு நாம் முயற்சி, தியாகம் செய்ய வேண்டும்.

வழிகெட்ட இயக்கத்தினர்கள் தங்களுடைய வழிகேட்டைப் பல வழிகளிலும் புகுத்தி மறுமையில் நிரந்தர நரகத்திற்கு அழைத்துச் செல்லும் காலகட்டத்தில், மக்களை இதிலிருந்து பாதுகாப்பது, எச்சரிக்கை செய்வது நம்முடைய தலையாய கடமையாகும். நிச்சயமாக இந்தக் கொள்கையை அறிந்தவர்களைத் தவிர வேறு யாரும் இதற்காகத் தியாகம் செய்ய மாட்டார்கள்.

இனி நாம் இணை வைத்தலின் முதல் வகையை விரிவாகக் காண்போம்.

இறைவன் பலன் ஏற்படுத்தாத பொருட்கள், இடங்கள், செயல்கள் ஆகியவற்றில் பலன் இருப்பதாக நம்புதல்

அல்லாஹ் இவ்வுலகில் பல்வேறு பொருட்களைப் படைத்துள்ளான். ஒவ்வொன்றுக்கும் பல்வேறு தன்மைகளை வழங்கியுள்ளான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் என்ன தன்மையை வழங்கியுள்ளானோ அதை மீறிய சக்தி ஒரு பொருளுக்கு இருப்பதாக நம்பினால் நிச்சயமாக அது இணை கற்பிக்கின்ற காரியமாகும்.

உதாரணமாக எலுமிச்சையை எடுத்துக் கொள்வோம். இதன் மூலம் சர்பத் தயாரிக்கலாம்; எலுமிச்சையை ஊற வைத்து ஊறுகாய் தயாரிக்கலாம்; சமையலுக்குப் பயன்படுத்தலாம். இது போன்ற காரியங்களுக்காக ஒருவன் எலுமிச்சையைப் பயன்படுத்தினால் அது இணை கற்பித்தலாகாது. மாறாக ஒரு எலுமிச்சையை வாகனத்தின் முன்னால் கட்டித் தொங்க விட்டால் அது வாகனத்தையே காப்பாற்றும் என நம்புவது அதில் அல்லாஹ் என்ன பலனை ஏற்படுத்தவில்லையோ அதை இருப்பதாக நம்புவதாகும். இது இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயலாகும்.

இஸ்லாமிய ஓரிறைக் கொள்கைக்கு எதிரானது என உலக மக்கள் அனைவரும் விளங்கி வைத்துள்ள சிலை வழிபாடும் இவ்வகையான இணை வைத்தலைச் சார்ந்தது தான்.

சிலை வழிபாட்டில் நாம் வகைப்படுத்திய நான்கு வகையான இணை வைப்பும் நிறைந்துள்ளன என்றாலும் அதற்கு அடிப்படையான காரணம் இந்த முதல் வகையான இணை வைப்பு தான். அதாவது கற்களில் இல்லாத பலனை இருப்பதாக நம்புவது.

சிலை வழிபாட்டைத் தகர்த்த இஸ்லாம்

திருமறைக் குர்ஆன் சிலை வழிபாட்டை மிகக் கடுமையாக எதிர்க்கின்றது. பின்வரும் திருமறை வசனங்கள் இதைத் தெளிவாக விளக்குகிறது.

சிலைகள் எனும் அசுத்தத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 22:30

இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!. இறைவா! இவை மனிதர்களில் அதிகமானோரை வழி கெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறு செய்தால் நீ மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 14:35, 36

சிலைகளைக் கடவுள்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழி கேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன்என்று இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 6:90

இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம். அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்திடம் அவர்கள் வந்தனர். “மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!என்று கேட்டனர். “நீங்கள் அறிவு கெட்ட கூட்டமாகவே இருக்கின்றீர்கள்என்று அவர் கூறினார். அவர்கள் எதில் இருக்கிறார்களோ, அது அழியக் கூடியது. அவர்கள் செய்து வந்தவையும் வீணானது. “அல்லாஹ் அல்லாதோரையா உங்களுக்குக் கடவுளாகக் கற்பிப்பேன்? அவனே உங்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருக்கிறான்என்று (மூஸா) கூறினார்.

அல்குர்ஆன் 7:138-140

நபியவர்கள் அனுப்பப்பட்டதன் நோக்கமே சிலை வழிபாடுகளை ஒழிப்பதற்குத் தான்.

அல்லாஹ் என்னை (தனது செய்தியுடன்) அனுப்பி உள்ளான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் “என்னென்ன செய்திகளுடன் அனுப்பியுள்ளான்?” என்று கேட்டேன். அதற்கு “இரத்த உறவுகளைப் பேணி வாழ வேண்டும்; சிலை (வழிபாடு)களை ஒழிக்க வேண்டும்; இறைவன் ஒருவனே; அவனுக்கு இணையாக எதுவுமில்லை எனும் செய்திகளுடன் என்னை அனுப்பினான்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அபசா அஸ்ஸுலமீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1512

சிலைகள் ஏன் தடுக்கப்பட்டன?

கற்களை உருவங்களாக செதுக்கிய ஒரே காரணத்திற்காக மட்டும்  சிலைகளை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஏனென்றால் சுலைமான் நபிக்கு சிலைகள் வடிப்பதை அல்லாஹ் ஆகுமாக்கியிருந்தான். அது கலையழகிற்காகத் தானே தவிர வழிபாட்டிற்காக அல்ல.

அவர் விரும்பிய போர்க்கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன.

அல்குர்ஆன் 34:13

ஆனால் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய உம்மத்திற்கு எந்த ஒரு நோக்கத்திற்காகவும் சிலை வடிப்பதைத் தடை செய்து விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உருவம் வரைபவனைச் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி), நூல்: புகாரி 2086

உருவம் வரைதல் என்பது சிலை வடிப்பதையும், படங்கள் வரைவதையும் குறிக்கக் கூடிய வார்த்தையாகும்.

(பள்ளிக் கூட மாணவர்கள் படம் வரைவது, பாஸ்போர்ட் போன்ற அவசியத் தேவைகளுக்காக போட்டோ எடுப்பது இவற்றைப் பற்றி முந்தைய ஏகத்துவ இதழ்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக என்னை அனுப்பினார்களோ அந்தப் பணிக்காக உம்மை நான் அனுப்புகிறேன். எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ, நூல்: முஸ்லிம் 1764

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது மக்காவில் வைத்து “மது பானம், செத்தவை, பன்றி மற்றும் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்துள்ளனர்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 3223

சிலைகள் அறவே கூடாது என்று இறைவன் கட்டளையிட்டதற்குக் காரணம் கற்களில் இல்லாத சக்தியை இருப்பதாக நம்பிக்கை கொள்வது தான். இந்த நம்பிக்கை தான் அச்சிலைகளை வணக்கத்திற்குரியதாக மாற்றி விட்டது.

ஒரு கற்பாறையை வீட்டின் வாசற்படியாக்கினாலும் அதற்குக் கல்லின் தன்மை தான் இருக்கும். அதையே கற்சிலையாக்கினாலும் அதற்குக் கல்லின் தன்மை தான் இருக்கும். அதற்கு எத்தனை அபிஷேகங்கள் செய்தாலும் அதன் தன்மை மாறாது. ஆனால் சிலை வணங்கிகள் உருவமாகச் செதுக்கப்பட்ட கற்களில் இல்லாத தன்மையைக் கற்பனை செய்து இறைவனுடைய ஆற்றல்களெல்லாம் அதற்கு இருப்பதாக இட்டுக் கட்டுகின்றனர்.

திருக்குர்ஆன் சிலைகளைப் பற்றி பேசும் அதிகமான இடங்களில் இரண்டு வாதங்களை முன்வைக்கின்றது.

ஒன்று, அந்தச் சிலைகள் எந்தப் பயனையும் தராது.

இரண்டாவது, அவற்றால் எந்த இடையூறையும் செய்ய முடியாது.

பயனையும் இடையூறையும் செய்கின்ற ஆற்றல் சிலைகளுக்கு இருக்கிறது என்று நம்பிய காரணத்தினால் தான் அவர்கள் இறை மறுப்பாளர்களானார்கள். இணை வைப்பாளர்கள் ஆனார்கள்.

இதோ இறை வசனங்களைப் பாருங்கள்:

இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!என்றனர்.

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத் தீங்கும் தராதவற்றையும் வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)

அல்குர்ஆன் 21:62-67

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

அல்குர்ஆன் 29:16, 17

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?” என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 5:76

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றனர். (ஏக இறைவனை) மறுப்பவன் தனது இறைவனுக்கு எதிராக உதவுபவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 25:55

நன்மையோ, தீங்கோ செய்ய இயலாத கற்களிடம் அந்தச் சக்தி இருப்பதாக நம்பிய காரணத்தினால் சிலைகளை உடைக்குமாறும் அவ்வாறு நம்பிக்கை வைத்தவர்களை இறை மறுப்பாளர்கள் என்றும் திருமறை பேசுகின்றது.

கலையழகிற்காக ஒருவன் சிற்பங்களை வடித்தாலும் அறியாத சமுதாயத்தினர் அதை வணங்கப்படும் பொருளாக ஆக்கி விடலாம் என்பதால் தான் நபியவர்கள் உருவப் படங்களை வரைவதற்குக் கூடத் தடை விதித்தார்கள். விபச்சாரத்தைத் தடுக்கின்ற இஸ்லாம் விபச்சாரத்தைத் தூண்டும் சிறிய, பெரிய வாயில்கள் அனைத்தையும் அடைக்கின்றது. அதுபோல் நபியவர்கள் உருவ வழிபாட்டைத் தோற்றுவிக்கும் அனைத்து வாயில்களையும் அடைப்பதற்கு வழிகாட்டியுள்ளார்கள்.

சிலை வழிபாடு என்பதன் பொருள், உருவமாகச் செதுக்கப்பட்டவற்றிற்கு ஆற்றல் இருக்கிறது என்று நம்புவது மட்டுமல்ல. மாறாக எந்த ஒரு பொருளுக்கு இது போன்ற ஆற்றல் இருப்பதாக நம்பினாலும் அது சிலை வழிபாடு தான். இதற்கான ஆதாரங்களைக் காண்போம்.

சமாதி வழிபாடும் சிலை வழிபாடே!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வே  என்னுடைய கப்ரை வணங்கப்படும் சிலையாக்கி விடாதே. தங்களுடைய நபிமார்களின் சமாதிகளை வணக்கத்தலங்களாக எடுத்துக் கொண்ட சமுதாயத்தை அல்லாஹ் சபித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் 7054

நபியவர்கள் தன்னுடைய கப்ர், சிலையாக ஆகி விடக் கூடாது என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள். கப்ர் என்பது உருவமுடைய ஒன்றல்ல. பிறகு ஏன் நபியவர்கள் கப்ரை சிலையாகக் குறிப்பிட்டார்கள் என்பதை நாம் நன்றாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

உருவமாகச் செதுக்கப்பட்ட கற்சிலை நன்மையோ, தீங்கோ செய்ய முடியுமென்று நம்பிக்கை வைத்தவர்கள் இணை வைப்பாளர்கள் என்றால் கப்ர் என்ற மண்சுவர் நன்மையோ, தீங்கோ செய்ய முடியும் என்று நம்பிக்கை வைப்பவர்களும் இணை வைப்பாளர்களே.

இதன் காரணமாகத் தான் நபியவர்கள் சிலைகளோடு, உயர்த்தப்பட்ட கப்ருகளையும் இணைத்து அதனை தரைமட்டமாக்குமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.

அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1764

ஏதாவது ஒரு பொருளில் இறைவன் ஏற்படுத்தாத தன்மைகள் இருப்பதாகக் கருதி அதனால் நமக்கு நன்மைகளைக் கொண்டு வரவோ, தீமைகளைக் தடுக்கவோ இயலும் என்று ஒருவன் நம்பினால் அதுவும் சிலையாகத் தான் கருதப்படும். இதனை பின்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

சிலை வணக்கமும், கொடி மரமும் சமமே!

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். தாத்து அன்வாத் என்று அதற்குச் சொல்லப்படும்.

நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு தாத்து அன்வாத்து என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்என்று கூறினோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்என்று சொல்லி, “என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், “நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாக்கிதுல்லைசி (ரலீ)

நூல்: திர்மிதீ 2106, அஹ்மத் 20892

இலந்தை மரத்தின் கீழ் ஒருவன் நிழலுக்காகப் படுத்தால் அது இணை வைத்தலாகாது. ஏனென்றால் மரத்தின் மூலம் நிழல் பெறும் பாக்கியத்தை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். ஆனால் அதே மரத்தின் கீழ் தங்கினால் நமக்கு நல்லது நடக்கும் என்று இல்லாத ஒன்றை நம்பி அதன் கீழ் தங்குவதை, அதைப் புனிதப்படுத்துவதை நபியவர்கள் சிலை வணக்கத்திற்கு நிகராகக் குறிப்பிடுகிறார்கள்.

சிலுவையை உடைத்தெறிந்த இஸ்லாம்

சிலுவை என்பது கூட்டல் குறியீட்டைப் போன்று மரத்தாலோ அல்லது ஏதாவது ஒரு உலோகப் பொருளாலோ ஆன ஒன்று தான். ஆனால் கிறிஸ்தவர்கள் சிலுவையின் மூலம் நன்மை தீமை உண்டாக முடியும் என நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாகத் தான் நபியவர்கள் உருவச் சிலைகளை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தியது போல் சிலுவைகளையும் அப்புறப்படுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டு வைத்ததில்லை. 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 5952

சிலுவையை வணங்கியவர்கள் மறுமையில் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதை நபியவர்கள் குறிப்பிடும் சிலை வணக்கம் செய்தவர்களோடு இணைத்துத் தான் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாüல்) அழைப்பாளர் ஒருவர், “ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்என்று அழைப்பு விடுப்பார். அப்போது சிலுவை வணங்கிகள் தங்கள் சிலுவையுடனும், சிலை வணங்கிகள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டாளர்கள் தத்தமது கடவுள்களுடனும் செல்வார்கள். 

நூல்: புகாரி 7439

உருவமாக இல்லாத சிலுவையை நபியவர்கள் சிலையோடு இணைத்துக் கூறுதவற்குக் காரணம் சிலைகளுக்கு எப்படி இல்லாத ஆற்றலை இருப்பதாக நம்புகிறார்களோ அதுபோல் சிலுவைகளில் இல்லாத ஆற்றலை இருப்பதாக நம்புவதால் தான்.

தாயத்து, தகடுகள்

எல்லா சமுதாயங்களிலும் காணப்படுகின்ற ஓர் இணை வைப்புக் காரியம் தான் தாயத்து, தகடுகளை அணிதல். கரைத்துக் குடித்தல். வீட்டிலோ கடையிலோ கட்டித் தொங்க விடுதல். கல்லாப் பட்டறையில் இவற்றை வைத்தால் வியாபாரம் பெருகும், இலாபம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை வைத்தல் ஆகியவையாகும். இதில் இஸ்லாமிய சமுதாயமும் விதிவிலக்கல்ல.

நாம் உடலில் தொங்க விடும் ஒரு பொருளை தாயத்து என்கிறோம். ஆனால் அது மட்டும் தாயத்து அல்ல! மாறாக நமக்கு நன்மையைக் கொண்டு வரும், தீமையைத் தடுக்கும் என்ற நம்பிக்கையில் எந்த ஒரு பொருளைத் தொங்க விட்டாலும், மாட்டி வைத்தாலும், கட்டி வைத்தாலும் அது தாயத்தே ஆகும்.

இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் இது போன்ற இணை கற்பிக்கும் காரியங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

  • திருமணப் பந்தலில் குலையுடன் கூடிய வாழை மரங்களைக் கட்டி வைத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பிக்கை வைத்துள்ளனர்.
  • மஞ்சள் நிறமும், மஞ்சள் பைகளும் மங்களகரமானது என்று நம்பிக்கை வைத்துள்ளனர்.
  • ஆரத்தி எடுத்தால் அது கண் திருஷ்டியைப் போக்கி விடும்.
  • தாலி என்பதைக் கழுத்தில் தொங்க விடுவதால் பல்வேறு பலன்கள் ஏற்படும்.
  • மணமகன் மாலை மாட்டுவதால் பல நன்மைகள் ஏற்படும் என்ற நம்பிக்கை. மணமகன் அணிந்த மாலையில் கால்பட்டு விட்டால் கணவன் மனைவிக்கு ஆகாது; எனவே திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து அந்த மாலையை கால் படாதவாறு எங்காவது கிணற்றிலோ ஆற்றிலோ குளத்திலோ போட்டு விடுவார்கள்.
  • வீடு கட்டும் போது பூசணிக் காயையோ, சோளக்கொல்லை பொம்மையையோ தொங்கவிட்டால் அது வீட்டிற்கு வரும் ஆபத்துகளைத் தடுக்கும்.
  • வீட்டிற்கு மேல் கருப்பு வெள்ளை புள்ளிகள் போடப்பட்ட பானைகளை வைத்தால் அது கண் திருஷ்டியைத் தடுக்கும்.
  • வீட்டு வாசலில் சங்கு, சீனாக்காரம், சிப்பி போன்றவற்றைத் தொங்க விட்டால் அவை வீட்டிற்கு ஏற்படும் முஸீபத்துகளைத் தடுக்கும்.
  • புது வீடு கட்டுவதற்கு முன்னால் சேவலை அறுத்து அதன் இரத்தத்தைத் தெளித்தால் அது அந்த இடத்திலுள்ள பேய் பிசாசுகளை விரட்டி விடும்.
  • வீட்டிற்கு நிலை விடும் போது அதன் குழியில் காசு அல்லது பாலை ஊற்றினால் வீட்டிற்கு நல்லது என்ற நம்பிக்கை.
  • வீட்டின் அடுப்பங்கரை கிழக்குப் பகுதியில் இருந்தால் தான் வீட்டிற்கு நல்லது.
  • காசு வாங்கும் கல்லாப் பட்டறை மேற்கு அல்லது தெற்குத் திசையில் இருந்தால் தான் கடைக்கு நல்லது.
  • வீட்டிற்கு வாசற்படிகள் அமைக்கும் போது தெருவிலுள்ள முதல்படி இலாபம், இரண்டாவது படி நஷ்டம், மூன்றாவது படி லாபம், நான்காது படி நஷ்டம் என்ற வரிசைப் பிரகாரம் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் படி இலாபமாகத் தான் இருக்க வேண்டும். அது தான் வீட்டிற்கு நல்லது என நம்பிக்கை வைத்துள்ளனர்.
  • குழந்தையின் கன்னத்தில் வைக்கும் கருப்புப் பொட்டு குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டியைத் தடுத்து விடும்.
  • ரூபாய், வெற்றிலை அல்லது ஏதாவது ஒரு பொருளை நோய் ஏற்பட்டவரின் மீது நன்றாகச் சுற்றி வீதியில் போட்டு விடுவார்கள். இதற்குக் கழித்து வைத்தல் என்பார்கள். யார் அதைத் தாண்டுகிறார்களோ அவர்களுக்கு இந்த முஸீபத் சென்று விடும்.
  • தர்ஹாவிலுள்ள சந்தணம், கொடிமரம், எண்ணை, நெருப்பு, சர்க்கரை, யானை என அனைத்தும் நமக்கு நன்மையைத் தரும்.

இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமாகப் பல்வேறு நம்பிக்கைகள் நிறைந்து காணப்படுகின்றன.

இவ்வாறு நமக்கு நன்மையையோ தீமையையோ கொண்டு வருகின்ற ஆற்றல் ஒரு பொருளுக்கு இருப்பதாக நம்பினால் அது இணை கற்பிக்கின்ற காரியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்த நம்பிக்கை தாயத்தில் இருக்கின்ற காரணத்தினால் தான் நபியவர்கள் தாயத்து அணிவதை இறைவனுக்கு இணை கற்பித்தல் என்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: அஹ்மத் 16781

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியைத் தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்ற மாட்டான்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல் அஹ்மத் 16763

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. “இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்)என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “இதைக் கழற்றி விடு. இது உனக்குப் பலவீனத்தைத் தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), நூல்: அஹ்மத் 19149

இணை வைத்தலின் வகைகளைப் பற்றி நாம் இன்னும் விரிவாகக் காண்போம், இன்ஷா அல்லாஹ்!

————————————————————————————————————————————————

கடவுளைக் காக்கும் காவல்துறை

அவர்களின் கடவுள்களிடம் சென்று “சாப்பிட மாட்டீர்களா? ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்? உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார். பின்னர் அவற்றிடம் (நெருங்கிச்) சென்று பலமாக அடித்தார். அவர்கள் அவரை நோக்கி விரைந்து வந்தனர். நீங்கள் செதுக்கிக் கொண்டதை வணங்குகிறீர்களா? அல்லாஹ்வே உங்களையும், நீங்கள் செய்தவற்றையும் படைத்தான் என்றார்.

அல்குர்ஆன் 37:91-95

இந்தச் சிலைகளுக்குக் கடுகளவும் ஆற்றல் இல்லை. சாப்பிடக் கூட சக்தியில்லை. தன்னைத் தாக்குகின்றவனைத் தடுக்கவும், சப்தம் போடவும் சக்தியில்லாத இந்தச் சிலைகளை வணங்கலாமா? என்ற சிந்தனைப் பொறியை சீற்றமிகு இளைஞர் இப்ராஹீம் (அலை) அவர்கள் கிளப்பி விடுகின்றார்கள்.

இப்ராஹீம் நபியின் இந்தப் பகுத்தறிவு வாதத்தை எல்லாக் காலங்களிலும் நாம் மக்கள் முன் வைக்க முடியும்.

அண்மையில் பத்திரிகைகளில் வெளியான சிலை திருட்டு குறித்த செய்திகளையும் கோயில் ஊழியர்கள், பூசாரிகள் அடிக்கின்ற கொள்ளை மற்றும் கூத்துக்களைப் பற்றிய செய்திகளையும் பார்ப்போம்.

சென்னையில் போலீசார் அதிரடி வேட்டை- வெளிநாட்டுக்குக் கடத்த முயன்ற 9 சாமி சிலைகள் மீட்பு; 3 பேர் கைது

– என்று ஒரு செய்தி.

இதனையொட்டி பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த ஐ.ஜி. ராஜேந்திரன், “இந்த ஆண்டு இது வரை 25 திருட்டு சிலைகள் மீட்கப் பட்டுள்ளன” என்று புள்ளி விவரம் தந்துள்ளார்.

“ஏற்கனவே தமிழகத்திலிருந்து 6 கோடி ரூபாய் மதிப்புள்ள 26 சிலைகள் – அமெரிக்காவுக்கும், ஹாங்காங்குக்கும் கடத்திச் செல்லப்பட்டுள்ளன. இவற்றில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் திருடப்பட்ட 8 சிலைகளும் – அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜப் பெருமாள் கோவிலில் திருடப்பட்ட 18 சிலைகளும் அடங்கும்” இது ஐ.ஜி. ராஜேந்திரன் வழங்கும் கூடுதல் தகவலாகும்.

பூசாரியே சாமி சிலைகளைத் திருடியது பற்றிய செய்தியை பொருளாதாரக் குற்றப்பிரிவுக் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. திலகவதி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அவரது பேட்டியின் சில பகுதிகள் வருமாறு:-

தமிழகம் முழுவதும் கோவில்களில் திருட்டுப் போன கலைநயமிக்க புராதனமான சிலைகளை மீட்கும் பணியில் சிலை திருட்டு தடுப்பு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு இது வரை விலை மதிப்புடைய மரகதலிங்கம் உள்பட 33 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 53 கோடியே 85 லட்சமாகும். இதில் தொடர்புடைய 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா பரவாக்கரை என்ற கிராமத்தில் வெங்கடாஜலபதி திருக்கோவில் உள்ளது. இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்தக் கோவிலில் கடந்த ஜூலை மாதம் விலை மதிப்புள்ள சிலைகள் திருட்டுப் போய் விட்டன.

அருகில் உள்ள பூங்கொடி கிராமத்தில் இருக்கும் சிவன் கோவிலிலும் சிலைகள் திருட்டு போய் விட்டன. அந்த 2 கிராமங்களின் மக்களும் திருட்டுப்போன சிலைகளை மீட்டுத்தரும்படி கோரிக்கை வைத்தார்கள்.

அதன் பேரில், ஐ.ஜி.ராஜேந்திரன், துணை சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோருடைய நேரடி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், ஏட்டுகள் மதியழகன், சுப்புராஜ், இளங்கோவன், காவலர் ஆல்வின் ஆகியோர் அடங்கிய தனி போலீஸ் படையினர் இதற்காக களத்தில் இறக்கப்பட்டனர்.

தீவிர விசாரணையில், மேற்கண்ட 2 கோவிலிலும் திருடிய சிலைகளை விற்பதற்காக ஒரு கும்பல் சென்னைக்கு வருகிறார்கள் என்று எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிண்டி ரெயில் நிலையத்தில் அந்த கும்பல் சிலைகளை விற்பதற்கு வருவதாகவும் சொல்லப்பட்டது.

இதன் அடிப்படையில் தனிப் படைப் போலீசார் மாறு வேடத்தில் கிண்டி ரெயில் நிலையத்தில் கண்காணித்தனர். அப்போது 2 சாக்குப் பைகளை தோளில் போட்டு சுமந்தபடி 2 ஆசாமிகள் வந்தனர். அவர்களைப் பிடிக்க முற்பட்ட போது சாக்குப் பைகளைப் போட்டு விட்டு தப்பி ஓடப் பார்த்தனர். தனிப்படைப் போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையைத் திறந்து பார்த்த போது அதற்குள் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அனுமார், மாரியம்மன், சுப்பிரமணியர், தெய்வானை ஆகிய 7 ஐம்பொன் சிலைகள் இருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். சிலைகளை விற்பதற்காக வந்த மணிகண்டன் (வயது 29), மருதுபாண்டி (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான மணிகண்டன் பரவாக்கரை கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலில் பூசாரியாக வேலை பார்த்துள்ளார். பூசாரி தொழிலில் வருமானம் இல்லாததால் மாந்திரீக வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார். செய்வினை எடுப்பது, செய்வினை வைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு மக்களிடம் பணம் பறித்து வந்துள்ளார்.

மாந்திரீக தொழிலுக்கு மேற்கண்ட சிலைகளைப் பயன்படுத்துவது போல பொது மக்களை நம்ப வைத்துள்ளார். சிலைகளை மஞ்சள் துணியால் கட்டி அண்டாவுக்குள் வீடுகளுக்குள் போட்டு வைத்தால் கஷ்டம் நீங்கும் என்று பொதுமக்களிடம் கூறி ஏமாற்றி உள்ளார்.

அவ்வாறு சிலைகளை அண்டாவுக்குள் போடுவது போல் நடித்து திருடி விற்க முயற்சித்துள்ளார். பூசாரி வேடம் போட்டு தனது நண்பர்களான மருதுபாண்டி, சுதாகர், கலைச் செல்வன் ஆகியோருடன் சேர்ந்து சிலைகளைத் திருடியுள்ளார்.

சுதாகரையும், கலைச் செல்வனையும் தேடி வருகிறோம். மீட்கப்பட்ட சிலைகள் பரவாக்கரை வெங்கடாஜலபதி கோவிலிலும், பூங்கொடி கிராமத்தில் உள்ள சிவன் கோவிலிலும் திருடப்பட்டவை ஆகும். திருடப்பட்ட சிலைகளில் வள்ளி சிலை மட்டும் இன்னும் மீட்கப்படவில்லை. அந்தச் சிலையை எங்கு மறைந்து வைத்திருக்கிறார்கள் என்று விசாரணை நடந்து வருகிறது. மீட்கப்பட்ட சிலைகளை உரிய பூஜை செய்து கிராம மக்களிடம் ஒப்படைக்க உள்ளோம். – என்று தகவல் தெரிவித்திருக்கிறார் அவர்.

ஏழுமலையானுக்குக் காணிக்கை அளிக்கப்படும் தங்க நகைகள் – வைர மாலைகள் – தங்கக் கிரீடங்கள் – வைரக் கிரீடங்கள் எல்லாம் எப்படி சாமர்த்தியமாக களவாடப்படுகின்றன! கண்டு பிடிக்கப்பட்டால் – அது எப்படி சரி செய்யப்படுகிறது என்பது பற்றி ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது!

அதிலே கூட திருப்பதி கோயில் நகைகள் “திருட்டு’ என்று குறிப்பிடப்படவில்லை பல லட்சம் மதிப்புள்ள நகைகள் “மாயம்’ என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது! திருப்பதி கோயிலில் நகைகளைத் திருடுபவர்கள் – அல்லது மாயம் செய்பவர்கள் – பல லட்சக்கணக்கிலான மதிப்புள்ள நகைகளை “மாயம்’ செய்துவிட்டு – எப்படி சில நூறு ரூபாய்களை இழப்பீடாகச் செலுத்திவிட்டு தப்பி விடுகிறார்கள் என்பதை அந்தச் செய்தி விவரமாகத் தந்திருக்கிறது! “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நகைகள் மாயமானதாகக் கூறி, அவற்றுக்குக் குறைந்த அளவு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கு சில ஆயிரங்களே ஈடு கட்டியிருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. திருப்பதி ஏழுமலையானின் நகைகள் விவரம் குறித்துத் தகவல் தர வேண்டும் என்ற பொது நல வழக்கின் அடிப்படையில் தேவஸ்தானத்துக்கு ஐதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், தேவஸ்தான அதிகாரிகள், திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட எல்லா கோயில்களில் உள்ள நகைகள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். சுவாமி நகைகள் பாதுகாப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு வரையில் ஏழுமலையான் நகைகள், அர்ச்சகர்களின் பாதுகாப்பில் இருந்தன. அதன் பிறகு விஜிலென்ஸ் அதிகாரிகள், தனி கமிட்டி பொறுப்பாளர்கள் கண்காணிப்பில் நகை விவரங்கள் ஆண்டுதோறும் பதிவு செய்து வந்தனர்.

* விலை உயர்ந்த கோமேதக கற்கள், வைர கிரீடத்தில் இருந்து உதிர்ந்து மாயமாகி விட்டதாகக் கூறி அதற்குத் தேவஸ்தானம் சார்பில் ரூ.5 ஆயிரம் செலுத்தியுள்ளனர்.

* கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மேலும் ஒரு கோமேதக கல் மாயமாகி விட்டதாகக் கூறி அதற்கு ரூ.200 மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

* ரத்தினம் பதித்த தங்கச் சங்கிலியில் இருந்த கோமேதகக் கற்கள் உதிர்ந்துவிட்டதாகக் கூறி, ஒவ்வொன்றுக்கும் ரூ.50 வீதம் செலுத்தியுள்ளனர்.

* மற்றொரு கிரீடத்தில் இருந்த 5 வைரக் கற்கள் மாயமானதாகக் கூறி 50 ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

* இதே போல் 6 முத்துக்கள் உதிர்ந்து விட்டன எனத் தெரிவித்து ரூ.60 மட்டும் செலுத்தப்பட்டுள்ளது.

* மூலவருக்கு அணிவிக்கப்படும் வைர கிரீடத்தில் ஒரு வைரம் மாயமாகி விட்டதாகக் கூறி, அதற்கு ரூ.10 மட்டும் செலுத்தியுள்ளனர்.

* மேலும் 13 தங்க நகைகள் தொலைந்து போனதாகக் கூறி 23,850 ரூபாய் மட்டுமே ஈடுகட்டப்பட்டதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. மாயமானதாகக் கூறப்படும் இந்த 13 நகைகள் மட்டும் பல லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

* இவை தவிர 23 கிலோ எடையுள்ள 15 வெள்ளி பொருட்கள் காணாமல் போய் விட்டது என கணக்குக் காண்பித்துள்ளனர்.

* மேலும் 36 வெள்ளிப் பொருட்கள் உபயோகப்படுத்தாமல் வைத்திருந்ததால் அதன் எடை 411 கிராம் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மூலவரின் வைர கிரீடத்தில் இருந்த 2 தங்கத் தாமரைகள் மாயமானதாக ரூ.8 ஆயிரம் ஈடுகட்டியுள்ளனர்.

* கடந்த 2007 மார்ச் 16ஆம் தேதி 16 பவளம் பொறித்த டாலர் வைத்த தங்க செயினில் டாலர் மாயம் எனக் கூறி ரூ.10 மட்டுமே செலுத்தியுள்ளனர்.

* ரத்தினக் கற்கள் பதித்த சூரியன், சந்திரன் தங்க ஜடை பில்லைகள் மாயமானதாக ரூ.300 ஈடு கட்டியுள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுக்கு சில நூறு ரூபாய் அல்லது சில ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளனர்

இவ்வாறு அந்தச் செய்தி கூறுகின்றது.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமாகி விடுமாம் – 200 ரூபாய், 50 ரூபாய், 60 ரூபாய், 10 ரூபாய் என்று இழப்பீட்டுத் தொகை செலுத்துவார்களாம்! புனிதமானது என்று கூறப்படும் கோயிலில் நகைத் திருட்டு கூட – நகை மாயம் என்ற பெயரில் புனிதம் அடைந்து விடும் அதிசயம் அல்லது அருள்மிகு செய்தி இது!

திருப்பதி மகாத்மியம் இத்தோடு முடிந்து விடவில்லை. இன்னொரு செய்தி – அதுவும் திருப்பதி செய்தி. திருமலை திருப்பதி – தேவஸ்தானத்துக்கு உட்பட்ட திருப்பதியில் உள்ள கோதண்ட ராமசுவாமி கோயிலில் 1.6 கிலோ எடையுள்ள 2 தங்க மாலைகள் காணாமல் போயுள்ளது தெரிந்தது. (காணாமல் போகும் – மாயமாகும் – ஒரு போதும் அது திருட்டு என்று ஆகாது – அது தான் ஏழுமலையானின் சட்டச் சொற்கள்) கண்காணிப்பு அதிகாரிகள், கோயிலின் அர்ச்சகர் வெங்கட்ரமண தீட்சிதரிடம் விசாரிக்க முடிவு செய்தார்கள். இது தெரிந்ததும் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். மருத்துவமனையில் விஜிலென்ஸ் அதிகாரிகள், வெங்கட்ரமண தீட்சிதரிடம் விசாரித்தார்கள்.

வெங்கட்ரமண தீட்சிதர் மட்டும் “திருடினேன்’ என்றா வாக்குமூலம் கொடுப்பார்? திருப்பதி கோயிலின் அகராதியில் – “காணாமல் போகும்’, “மாயமாகுமே’ தவிர “திருட்டு’ப் போகுமா? “எனது மகள் திருமணச் செலவுகளுக்காக சுவாமியின் நகைகளை அடகு வைத்தேன்” என்றார் அவர்! “காணாமல் போய்விட்டது’, “மாயமாகி விட்டது’ என்று சொல்லியிருந்தால் அவரிடம் 50 ரூபாயோ 100 ரூபாயோ இழப்பீட்டுத் தொகை வாங்கிக் கொண்டு கணக்கை நேர் செய்து விட்டு விட்டிருப்பார்கள். அவர் அடகு வைத்தேன் – என்று சொன்னதாலோ என்னவோ அவரைக் கைது செய்து விட்டார்கள். அவருக்கு உடந்தையாக இருந்ததாக இரு செக்யூரிட்டி ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து விட்டார்கள். திருப்பதி கடையில் அடகு வைக்கப்பட்ட அந்த நகைகளை – சென்னையில் உள்ள ஓர் அடகுக் கடையிலிருந்து மீட்டு விட்டார்கள்!

இப்படிப்பட்ட செய்திகளைப் படிக்கும் திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களுக்கு என்ன தோன்றும்? திருப்பதி சென்று பக்த கோடிகள் நேர்த்திக் கடன் என்ற பேரால் மொட்டை அடித்துக் கொள்வதுண்டு – பட்டை நாமமும் தரித்துக் கொள்வதுண்டு! ஆனால்- பக்தர்கள் தந்த காணிக்கைப் பொருள்களை அபகரித்துக் கொண்டு பக்தர்களுக்கு இலவச மொட்டையும் – இலவச நாமமும் போடும் காரியங்களல்லவா திருப்பதியில் நடைபெறுகிறது! – என்று நினைப்பார்கள் பக்தர்கள் – ஆனால் – “இத்தனையையும் பார்த்துக் கொண்டு சகல சக்திகளும் படைத்த திருப்பதி ஏழுமலையான் சும்மா தானே இருக்கிறார். நகைகளை மாயமாக்கியவர்களை விஜிலென்ஸ் அதிகாரிகளும், போலீசாரும் தான் பிடிக்கிறார்களே தவிர – திருப்பதி வெங்கடாசலபதி – யாரையும் பிடித்ததாக – தண்டித்ததாக செய்தி எதுவும் வருவதில்லையே; ஏன்?” என்று எந்த ஒரு பக்தராவது நினைப்பாரா?

தம்மைக் காக்காதவை நம்மைக் காக்குமா?

திருட்டை விட்டுக் காக்க வேண்டிய தெய்வங்களே திருட்டுப் போகின்றன. களவைத் தடுத்து நிறுத்தி, பக்தனைக் காக்க வேண்டிய கடவுள்களே களவாடப்படுகின்றனர்; கடத்தப்படுகின்றனர். கடைசியில் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்படுகின்றனர். இப்படித் தம்மையே காக்க முடியாதவர்கள் நம்மை எப்படிக் காப்பார்கள் என்பது தான் இப்ராஹீம் நபியவர்கள் உலக மக்களுக்கு உணர்த்துகின்ற உன்னத, உயரிய பாடம்.

இதை மனிதர்கள் சிந்திப்பதில்லை. இஸ்லாம் இந்தச் சிந்தனையை மக்களுக்குத் தூண்டுகின்றது. அல்குர்ஆன் இந்தத் தெய்வங்களின் பலவீனத்தை எடுத்துக் கூறி மனிதனின் பகுத்தறிவைப் பட்டை தீட்டுகின்றது.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

அல்குர்ஆன் 22:73

ஓர் ஈயைப் படைப்பது ஒரு புறமிருக்கட்டும். அது பறித்துச் சென்ற, அதன் மயிர்க் கால்களில் ஒட்டியிருக்கின்ற அற்பப் பொருளை மீட்பதற்குக் கூட இந்தச் சிலைகளுக்குச் சக்தியில்லை என்று அதன் பலவீனத்தை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

இப்படி எந்தச் சக்தியும் இல்லாத இந்தக் கல் அல்லது மண் பாண்டம் நம்மை எப்படிக் காப்பாற்றும் என்ற சிந்தனை மனிதனுக்கு வேண்டும்.

பிறரால் கடத்தப்படும் போது தம்மையே காப்பாற்றிக் கொள்ளாத இந்தத் தெய்வங்கள் நம்மை எப்படிக் காப்பாற்றும் என்று மனிதன் சிந்திப்பதில்லை. மற்றவர்கள் சிந்திப்பது ஒருபுறமிருக்கட்டும். இந்தக் கடவுள்களை மீட்டுக் காப்பாற்றும் காவலர்களும் சிந்திப்பதில்லை. மத சார்பின்மையுடைய நாட்டில் தங்களுடைய காவல்துறை அலுவலகத்தில் இந்தக் கடவுள் சிலைகளை வைத்து, அவை தங்களைக் காப்பாற்றும் என்று இவர்கள் நம்புவது தான் வேடிக்கையான விஷயமாகும்.

அக்கடவுள்களுக்கு இவர்களே (இவ்வுலகில்) முதன்மைக் காவலர்களாக இருக்க அக்கடவுள்களோ இவர்களுக்கு உதவ இயலாது.

அல்குர்ஆன் 36:75

இந்த வசனம் கூறுவது போன்று இந்தச் சிலைகளுக்குத் தான் இவர்கள் பாதுகாப்புக் கொடுக்கும் நிலையில் உள்ளார்களே தவிர இவை எப்படி நம்மைப் பாதுகாக்கும் என்பதை யோசிப்பதில்லை.

இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிலைகளுக்கு இறைவன் சொல்கின்ற இந்த வாதங்கள் அனைத்தும் தர்ஹாக்களுக்கும் பொருந்தும். தர்ஹாக்களில் களவு போகும் போது, காவல்துறையைத் தான் தர்ஹா டிரஸ்டிகள் நாடுகின்றனர். கோயில் கொள்ளையை அதிலுள்ள கடவுள்கள் தடுத்து நிறுத்தாதது போல், தர்ஹாக்களில் நடைபெறும் கொள்ளையை, தர்ஹாக்களின் சொத்துக்களை பிறர் அபகரிப்பதை இந்த அவ்லியாக்கள் தடுத்து நிறுத்துவதில்லை.

பள்ளிவாசல்களில் மவ்லிது ஓதுவதை தவ்ஹீது ஜமாஅத்தினர் தடுத்து நிறுத்துவதால் காவல்துறையை அணுகி, அவர்களது பாதுகாப்புடன் சில இடங்களில் மவ்லிது ஓதுகின்றனர். உலகக் காவல்துறைத் தலைவராக (?) இவர்கள் கருதும் முஹ்யித்தீன் இருக்கும் போது எதற்காக இந்த லோக்கல் போலீஸை அணுக வேண்டும் என்பதை இவர்களும் சிந்திப்பதில்லை. இவர்களை ஆதரிக்கும் மக்களும் சிந்திப்பதில்லை.

இறந்து போன பிணங்களிடம் போய் தங்கள் கோரிக்கையைக் கேட்கும் ஜனங்கள் இதைச் சிந்திப்பார்களா?

————————————————————————————————————————————————

இஸ்லாம் கூறும் பொருளியல்

கே.எம். அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி.

பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர்

பொருளியல்

இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் இது வியாபாரிகளுக்குரியது, வணிகர்களுக்குரியது, பணக்காரர்களுக்குரியது என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. இது ஏழைகள், கூலித் தொழிலாளிகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் பொருளாதார ரீதியாக என்ன முடிவெடுக்க வேண்டும் என்று விளக்குவது தான் இந்தத் தலைப்பின் நோக்கம்.

உலகத்தில் பொருளாதாரத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, சிலர் செல்வங்களைத் திரட்டுவதால், வசதி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்வதால் ஆன்மீக நிலையில் உயர்ந்த நிலையை அடைய முடியாதென்று நினைக்கின்றார்கள். இறைவனுடைய திருப்தியையும் அன்பையும் பெற வேண்டுமென்றால் மறுமையில் மோட்சம் அடைய வேண்டுமென்றால் உலகத்திலுள்ள வசதி வாய்ப்புக்களை விட்டுவிட்டு காடே! செடியே! என்று செல்ல வேண்டும். அங்கு சென்று இலை தழைகளை சாப்பிட்டுக் கொண்டு இறைவனுக்காக வாழ வேணடும் அதுதான் உயர்ந்த நிலையென்று நினைக்கக் கூடியவர்களும் பல்வேறு மதங்களில் காணப்படுகின்றார்கள்.

காசு, பணங்களை வைத்திருக்கக் கூடியவர்களும் கூட இந்தத் துறவிகளைப் பற்றி “நாம் இவர்களுக்கு அடுத்துத் தான்; அவர்கள் தான் எங்களை விட உயர்ந்தவர்கள், மகான்கள், தியாகிகள்’ என்று நினைக்கின்றார்கள்.

எல்லா மதங்களிலும் காசு, பணம், சொத்து சுகங்களை விட்டு விலகினால் தான் மறுமையில் வெற்றி பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் மார்க்கத்தை அறியாத சூஃபியாக்களும் காட்டுக்குச் சென்று தவம் இருப்பது நல்லது; ஊர் உலகத்தை விட்டு ஒதுங்கியிருப்பது தான் சிறந்ததென்று நினைக்கின்றனர்

இரண்டாவது பிரிவினர், முழுக்க முழுக்க வாழ்வு என்பது  பொருளாதாரத்துக்காகத் தான் என நினைக்கின்றனர். மறுமை என்பது கிடையாது; நாம் இந்த உலகத்தில் எவ்வளவு வாழ முடியுமோ அவ்வளவு வாழ வேண்டும்; எவ்வளவு சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்க்க வேண்டும் என்று அதற்கு ஒரு நெறிமுறை வைக்காமல் பொருள் முதல் வாதம் என்ற அடிப்படையில் வாழ்கின்றனர். உலகமென்றால் பொருளாதாரம் தான். காசு தான் எல்லாம். காசு தான் கடவுள். காசு இருந்தால் கடவுள் செய்ய வேண்டிய வேலைகளையும் செய்ய முடியும் என்று நினைக்கக் கூடிய சிலரும் இருக்கின்றார்கள்.

காசு தான் எல்லாம் என்று ஒரு கருத்தும், காசே கூடாதென்று மற்றுமொரு கருத்தும் மக்களுக்கு மத்தியிலும், மதங்களுக்கு மத்தியிலும் காணப்படுகின்றது.

இஸ்லாம், காசு பணம் அறவே கூடாது என்று சொல்கிறதா? அல்லது அதற்கு வரம்புகளை வைத்திருக்கின்றதா? அல்லது அனைத்தையும் தர்மம் செய்ய வேண்டும் என்று சொல்கிறதா? அல்லது பிச்சைக்காரனைப் போன்று இருக்கச் சொல்கிறதா? இறைவனுக்காகக் காட்டுக்குச் சென்று துறவு மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறதா? என்று இஸ்லாத்தின் பொருளாதார நிலையைப் பார்ப்போம்.

இஸ்லாம் எந்தக் கொள்கையைச் சொன்னாலும் அதில் நடுநிலையைப் பேணுகின்றது. தவ்ஹீதை எடுத்துக் கொண்டால் அதுவும் நடுநிலை தான். கடவுள் இல்லை என்று சொல்லாமலும், காண்பவை எல்லாம் கடவுள் என்று சொல்லாமலும் இரண்டிற்கும் மத்தியில் கடவுள் ஒன்றே ஒன்று தான் என்று இஸ்லாம் கூறுகிறது. எந்த சட்டத்தைச் எடுத்துக் கெண்டாலும் அதில் இஸ்லாம் நடுநிலை பேணுவதைக் காண்கிறோம்.

குர்ஆன், ஹதீஸில் பொருளாதாரம்

இஸ்லாமிய மார்க்கத்தில்  பொருளாதாரம் இல்லையென்றால் ஒருவன் முஸ்லிமாக வாழ முடியாது என்று சொல்லக் கூடிய வகையில் எல்லாம் வணக்கங்களும் பொருளாதாரத்தைத் தொடர்பு படுத்தியே அமைந்துள்ளன.

  1. இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்று ஜகாத். இது கடமையாக இருப்பதால் பொருளாதாரம் இருந்தால் தான் இந்தக் கடமையைச் செய்ய முடியும். அப்படியானால் பொருளாதாரம் கூடாதென்றால் இந்தக் கடமையைச் செய்ய முடியாது. ஆகவே பொருளாதாரத்தை வைத்திருப்பது தவறு கிடையாது. காசு பணத்தைச் சம்பாதித்து அதில் கொடுக்க வேண்டியதை, கொடுக்க வேண்டியவருக்குக் கொடு என்று கூறுவதால் பொருளாதாரம் என்பது இஸ்லாத்தின் பிரிக்க முடியாத ஓர் அம்சமாக விளங்குகின்றது.
  2. இஸ்லாத்தின் மற்றொரு கடமை ஹஜ். இந்தக் கடமையை மக்கா மதீனாவிலுள்ளவர்கள் செய்வதாக இருந்தால் காசு பணம் தேவையில்லை. ஆனால் வெகு தொலைவில் வசிக்கக் கூடிய நாம் அங்கு செல்வதற்கு வசதி வாய்ப்புக்கள் தேவை.

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.

அல்குர்ஆன்  3:97

இந்த வசனத்தில் நம்முடைய செலவுகள் போக, அதாவது உணவு, உடை, குடும்பச் செலவு, குழந்தைகளுக்கான செலவு போக மீதமிருந்தால் ஹஜ் செய்வது கடமையென்று அல்லாஹ் குறிப்பிடுவதிலிருந்து பொருளாதாரம் தேவையென்று விளங்குகின்றது.

  1. தான தர்மம் செய்வதை இஸ்லாம் வலியுறுத்தியிருக்கின்றது. இதைச் செய்வதால் பல சிறப்புக்களை அடைய முடியும். மறுமை வெற்றியைக் கூட அடைய முடியுமென்று குர்ஆன், ஹதீஸில் அதிகமான இடங்களில் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, திருக்குர்ஆன் 2:261 வசனத்தில், ஒன்றை தர்மம் செய்தால் அதற்குப் பதிலாக 700 மடங்கு நன்மை கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன்  2:261

ஒன்றுக்கு 700 நன்மைகளைப் பெற்றுக் கொள்ள நினைத்தால் தர்மம் செய்ய வேண்டும். தர்மம் செய்ய பொருளாதாரத்தைத் திரட்ட வேண்டும். எனவே பொருளாதாரத்தைத் தேடுவது வெறுக்கத்தக்கது கிடையாது என்பது விளங்குகின்றது.

அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத் தோட்டம் இருமடங்காக அதன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழாவிட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

அல்குர்ஆன்  2:265

ஒன்றுக்கு 700 மடங்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று நினைத்து அந்த விதையைக் கடலிலோ, உப்பு மண்ணிலோ, வறண்டு போன நிலத்திலோ போட்டால் அது முளைக்காது. அப்படியானால் விதைக்கின்ற நிலமும் நன்றாக இருக்க வேண்டும். நல்ல காரியத்திற்குச் செலவு செய்தால், அது மேட்டுப்பாங்கான இடங்களில் விதைக்கப்பட்ட பயிர் முளைப்பதைப் போன்று இருக்கும். அதாவது ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் எப்பொழுதும் குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் இருப்பதால் அங்கு மழை பெய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அங்கு மழை பெய்தால் இரட்டிப்பாக விளையும். மற்ற இடங்களில் பயிர் முளைப்பதாக இருந்தால் மழை பெய்வது அவசியம். அதனால் தான் அல்லாஹ் நல்ல விஷயத்திற்குச் செலவிடும் பொருளாதாரத்தை, மேட்டுப்பாங்கான இடத்தில் பயிரிடுவதற்கு உதாரணம் காட்டுகிறான்

நரகத்திலிருந்து தப்பிக்க தர்மம் செய்ய வேண்டும்

கொளுந்து விட்டு எரியும் நெருப்பை உங்களுக்கு எச்சரிக்கிறேன். துர்பாக்கியசாலியைத் தவிர வேறு யாரும் அதில் கருக மாட்டார்கள்.  அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்தவன்.  இறையச்சமுடையவர் அதிலிருந்து விலக்கப்படுவார். அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர்.

அல்குர்ஆன் 92:14-18

தவறு செய்தவன் நரகப் படுகுழியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்க்கு ஒரு கேடயமாக தர்மம் அமைகின்றது என்பதை அல்லாஹ் கூறிக் காட்டுகின்றான். இதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் தமது வறுமையைப் பற்றி முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வழிப்பறி என்பது அரிதாக, வணிக ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்கா வரை காவலரின்றிச் செல்லும் போது மட்டுமே நடக்கும். ஆனால் வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்). நிச்சயமாக உங்களில் ஒருவர் தர்மத்தை எடுத்துக் கொண்டு அலைவார். அதை வாங்குவதற்கு எவனும் இருக்க மாட்டான். அந்நிலை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது. பிறகு உங்களிலொருவர் அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்பார். அவருக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையுமிருக்காது; மொழி பெயர்ப்பாளனும் இருக்க மாட்டான். அப்போது (அல்லாஹ்), “நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா?” எனக் கேட்க அவர் “ஆம்என்பார். பிறகு “உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்பவில்லையா?” எனக் கேட்டதும் அவர் “ஆம்என்று கூறி விட்டுத் தமது வலப் பக்கம் பார்ப்பார்; அங்கு நரகமே காட்சியளிக்கும். பின்னர் இடப் பக்கத்திலும் பார்ப்பார்; அங்கும் நரகமே காட்சியளிக்கும். எனவே பேரீச்சம்பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது அதுவும் கிடைக்கவில்லையெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 1413, 6563

ஒரு சிறு பொருளையாவது தர்மம் செய்து நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவதிலிருந்து, பொருளாதாரத்தைத் தேடுவது அவசியம் என்றும், அதை திரட்டுவது வெறுக்கத்தக்கதல்ல என்றும் விளங்குகின்றது.

தர்மத்தின் சிறப்பு

தர்மம் செய்வதால் அல்லாஹ்விடம் மிகப் பெரும் நன்மையை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

ஒரு மனிதர் கடிவாளமிடப்பட்ட ஓர் ஒட்டகத்தைக் கொண்டு வந்து, “இது அல்லாஹ்வின் பாதையில் (தர்மமாகும்)என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமக்கு மறுமை நாளில் இதற்குப் பகரமாக எழுநூறு ஒட்டகங்கள் கிடைக்கும். அவற்றில் ஒவ்வொன்றும் கடிவாளமிடப்பட்டதாக இருக்கும்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3845

தூய்மையான சம்பாத்தியத்திலிருந்து அற்பமான ஒரு பொருளை தர்மம் செய்தால் அல்லாஹ் அதை மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டு பன்மடங்காகப் பெருக்கி நன்மையை வழங்குகிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை – அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்துவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1410

அற்பமான மிகச் சிறிய பொருளாக இருந்தாலும் அதை அல்லாஹ் தனது வலது கையால் எடுத்து வளர்க்கின்றான் என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். நாம் செய்யும் தர்மத்தை இறைவன் மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்கிறான்.

அல்லாஹ் மகிழ்ச்சியடைகிறான்

ஓர் அடியான் வேணடுமானால் இன்னொரு அடியானை சிரிக்க வைக்கலாம். ஆனால் அகிலத்தைப் படைத்த ரப்புல் ஆலமீனை சிரிக்க வைக்க முடியுமா? அடியான் செய்யும் தர்மத்தைப் பார்த்து அல்லாஹ் மகிழ்ச்சியடைந்து சிரிக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கüடம் (விருந்தாüயாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவüப்பதற்காகத்) தம் மனைவிமார்கüடம் சொல்-யனுப்பினார்கள். அப்போது அவர்கள், “எங்கüடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லைஎன்று பதிலüத்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?” … அல்லது “இவருக்கு விருந்தüப்பவர் யார்?’ ‘… என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகüல் ஒருவர், “நான் (விருந்தüக்கிறேன்)என்று சொல்- அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விருந்தாüயைக் கண்ணியப்படுத்துஎன்று சொன்னார். அதற்கு அவருடைய மனைவி, “நம்மிடம் நம் குழந்தைகüன் உணவைத் தவிர வேறெதுவுமில்லைஎன்று சொன்னார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், “உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி(விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து)விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடுஎன்று சொன்னார். அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கை சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்து விட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாüயான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு  (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான் … அல்லது வியப்படைந்தான்என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ், “தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்என்னும் (59:9) வசனத்தை அருüனான்.

நூல்: புகாரி 3798

அர்ஷுடைய நிழல் கிடைக்கும்

நாம் அனைவரும் இறந்ததற்குப் பின்னால் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவோம். அன்றைய தினம் மறுமையில் விசாரணைக்காகக் காத்திருப்போம். அந்த ஒரு நாளின் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். (பார்க்க: அல்குர்ஆன் 70:4)

நம்முடைய தலைக்கு அருகாமையில் சூரியன் கொணடு வரப்படும். அன்றைய தினம் சூரியனுடைய உஷ்ணத்தை நம்மால் தாங்க முடியாது. அப்போது அல்லாஹ் அவனுடைய அர்ஷ் என்ற சிம்மாசனத்திற்குக் கீழ்  ஏழு கூட்டத்தினருக்கு நிழலைத் தருவான், அவனுடைய சிம்மாசனம் வானம் பூமியை உள்ளடக்கியிருக்கும் என்று அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறியிருக்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாüல் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:

  1. நீதி மிக்க ஆட்சியாளர்.
  2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
  3. பள்üவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.
  4. அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகி-ருந்து) பிரிந்து சென்ற இருவர்.
  5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும் “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்என்று கூறியவர்.
  6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.
  7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 660

மறுமை நாளில் அல்லாஹ்வுடைய அர்ஷைத் தவிர வேறு எந்த நிழலும் மனிதன் பெற்றுக் கொள்ள மாட்டான். வலது கையால் செய்த தர்மம் இடது கைக்குத் தெரியாமல், அதாவது மக்களுக்காக இல்லாமலும் பெருமைக்காக இல்லாமலும் அல்லாஹ்வுக்காக ரகசியமாகக் கொடுத்தவனுக்கு மாபெரும் நிழல் கிடைக்கும் என்று கூறுவதிலிருந்து தர்மம் செய்வது எவ்வளவு முக்கியமென்று விளங்குகின்றது.

நன்மைகளை அதிகமாகப் பெற முடியும்

ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்கüடம் வந்து, “செல்வச் சீமான்கள் உயர்வான பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்)கொண்டு போய் விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் தங்களது அதிகப்படியான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின்றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவளிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே)என்று கூறினர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட (செல்வர்)வர்களையும் நீங்கள் பிடித்துவிடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களை பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்கüடையே வாழ்கிறீர்களோ அவர்கüல் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படுத்தினால் தவிர! (அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்து-ல்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்என்று கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டோம். எங்கüல் சிலர் சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்து-ல்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூற வேண்டும்என்றனர். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி(ச் சென்று இதுபற்றி வினவி)னேன். நபியவர்கள், “சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்; அல்லாஹு மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவை கூறியதாக அமையும்என்று பதிலüத்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 843

காசு வைத்திருப்பவர்கள் தர்மம் செய்வதன் மூலம் ஏழைகளை விட அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்பதை ஏழைகள் புரிந்து வைத்துள்ளனர். இதன் காரணமாகத் தான் அவர்கள் நபியவர்களிடம் சென்று முறையிட்டனர் என்பதை நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.

தொடரும்.. இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

கட்டணமில்லாத கடவுள் தரிசனம்

கையில் ஓர் ஈட்டி! வாயை விட்டு வெளியே தொங்கும் இரத்தச் சிவப்பு நாக்கு! கழுத்தில் ஒரு கருநாகப் பாம்பு! “இது காவு கேட்கும் கடவுள்’ என்று பார்ப்பவர்கள் பயப்படும் வண்ணம் கடவுள் சிலைகளின் தோற்றம் அமைந்திருக்கின்றது. அதற்கேற்ப கடவுளுக்காக அவர்கள் உயிர்ப் பிராணிகளைப் பலி கொடுக்கின்றனர். உணவுப் பண்டங்களையும் படைக்கின்றனர்.

கடவுள் தரிசனம் என்றாலே பூஜை, புனஸ்காரம் செய்வதற்குக் கையில் பூ வாங்கிச் செல்ல வேண்டும்; பழம், பத்தி, சாம்பிராணி வாங்க வேண்டும்; சுடர் விளக்கேற்ற எண்ணெய் வாங்க வேண்டும்; சூடம் வாங்க வேண்டும். இத்தனையும் வாங்கினால் தான் கடவுள் சன்னதிக்குச் செல்ல முடியும்.

தர்ஹாக்களும் இதே நிலை தான். பத்தி, சந்தனம், சாம்பிராணி, சாய்புமார்களுக்குக் காணிக்கை என்று தர்ஹாக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

இப்படி, காவும் காணிக்கையும் கொடுத்தால் தான் கடவுள் தரிசனம் என்பது பக்தனின் தலையெழுத்தாகி விட்டது.

இந்த நவீன உலகில் எங்கும் கட்டணம், எதற்கும் கட்டணம் என்றாகி விட்டது. கடவுள் கொடுத்த அருட்கொடைகளில் தண்ணீர் மாபெரும் அருட்கொடை! அந்தத் தண்ணீரும், அதுவும் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடும் ஊர்களில் கூட காசு கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டு விட்டது.

கழிப்பறைக்குக் கட்டணம், குளிப்பறைக்கும் கட்டணம் என்று கட்டணம் செலுத்தி மனிதன் நிம்மதியை இழந்து விட்டான். ஊரில், உலகில் இழந்த நிம்மதியை கடவுள் ஆலயத்தில் பெறலாம் என்று வருபவன், கடவுளுக்கும் காணிக்கை, படைப்புகள் என்று காசு பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.

இதை விடக் கொடுமை, கடவுள் சன்னதியில் விதிக்கப்படும் கட்டணம் தான். இது தொடர்பாக முரசொலி பத்திரிகையில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதியை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

விலைவாசிகள் ஏறினால் வணிகர்களுக்குக் கொண்டாட்டம்; அரசியல் கட்சிகளுக்கும் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்த ஒரு பொன்னான வாய்ப்பு. ஆனால் பொதுமக்கள் பாடுதான் திண்டாட்டம்!

இந்தக் கஷ்ட நஷ்டங்களை – துன்ப துயரங்களை எல்லாம் யாரிடம் போய் முறையிடுவது? என்று தவிக்கும் சாதாரண மக்கள்- “கடவுள் இருக்கிறார்; காப்பாற்றுவார்” என்று நிம்மதி தேடி கோவிலுக்குப் போனால் – அங்கே கடை வியாபாரிகளே தேவலாம் – ஆலய வியாபாரத்தில் விலைவாசிகள் – விண்ணை நோக்கியல்ல – வைகுந்தம் – சிவலோகம் – பரலோகத்தையெல்லாம் தொடும் அளவுக்கு ஏறிக் கிடக்கின்றன என்பதை சபரி மலையிலிருந்து வெளிவந்துள்ள வழிபாட்டுக் கட்டண உயர்வுகள் நிரூபிப்பனவாக இருக்கின்றன.

பூஜை பொருட்களின் விலை அதிகரித்து விட்டன என்று கூறி வழிபாட்டுக் கட்டணத்தை உயர்த்த – கேரள தேவஸ்வம் போர்டு, உயர்நீதி மன்றத்தின் அனுமதி பெற்று பல்வேறு விதமான வழிபாட்டுக் கட்டணங்களையும் பல மடங்கு உயர்த்தி விட்டார்கள்.

சகஸ்ர கலச பூஜை வழிபாட்டுக் கட்டணம் இது வரையில் பத்தாயிரத்து ஒரு ரூபாயாக இருந்தது. இப்போது அது, 10,001லிருந்து 1 லட்சத்து 10,001 ரூபாயாக உயர்த்தப்பட்டு விட்டது.

படி பூஜை இதுவரையில் – ரூ. 9 ஆயிரம் கட்டணம். இனி மேல் அது – 31,001 ஆக றெக்கை கட்டிப் பறக்கும்!

லட்சார்ச்சனை இது வரை 1001 ரூபாயாக இருந்தது. இனி மேல் 50,001 ஆக உயரப் பறக்கும்!

கணபதிஹோமம் – முன்பு 61 ரூபாய்; இப்போது 301 ரூபாய்.

புஷ்பாபிஷேகம் – முன்பு 1000 ரூபாய்; இப்போது 10,101 ரூபாய்.

அஷ்டாபிஷேகம் – முன்பு 751 ரூபாய்; இப்போதோ – 3,401 ரூபாய்.

பகவதி சேவை – முன்பு 151 ரூபாய்; இப்போது 1,501 ரூபாய்.

வியாபாரிகளின் விலை உயர்வை – ஒரு போதும் இந்தக் கோயில் கட்டண உயர்வோடு ஒப்பிடவே முடியாது!

பூஜைப் பொருள்களின் விலை உயர்ந்து விட்டதால் வழிபாட்டுக் கட்டணத்தை உயர்த்தி விட்டோம் என்கிறார்கள்.

பூஜை பொருள்களான – பூவும், சந்தனமும், பாலும், நெய்யும், சூடமும், சாம்பிராணியும், தேங்காயும், இன்ன பிற பொருள்களும்

61 ரூபாயை 301 ரூபாயாகவும், 1000 ரூபாயை 10,101 ரூபாயாகவும் 751 ரூபாயை 3401 ரூபாயாகவும், 151 ரூபாயை 1501 ரூபாயாகவும்

– 10,001 ரூபாயை 1 லட்சத்து 10,001 ரூபாயாகவும்

– 9 ஆயிரம் ரூபாயை 31 ஆயிரத்து 1 ரூபாயாகவும்

– 1001 ரூபாயை 50,001 ரூபாயாகவும்

உயர்த்தும் அளவுக்கா உயர்ந்து விட்டன?

கொடுமை – கொடுமை என்று முறையிடக் கோவிலுக்குப் போனால் அங்கே அதை விடக் கொடுமை சிங்கு சிங்கென ஆடியதாம்!

– என்று பழமொழி சொல்வார்கள் பக்தகோடிகள். அது இப்படி எதார்த்த வாழ்க்கையில் பலித்துவிடும் என்று அவர்கள் எதிர்பார்த்திருப்பார்களா?

திருப்பதி கோவிலில் 100 ரூபாய், 200 ரூபாய் சிறப்பு தரிசனக் கட்டணங்களை ரத்துச் செய்துவிட்டு விரைவு தரிசனத்துக்கு 500 ரூபாய் கட்டணம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது! இப்படி 100 ரூபாய், 200 ரூபாய் கட்டணங்களை ஒழித்து விட்டு 500 ரூபாய் தான் என்று அறிவிக்கப்பட்டதை எந்த பக்தரும் எதிர்த்ததாகச் செய்தி இல்லை

இவை முரசொலி நாளிதழில் வெளியான கருத்துக்கள்.

முஸ்லிம்களின் பள்ளிவாசல்களைப் பாருங்கள். இந்தப் பள்ளிவாசல்களுக்கு பக்தர்கள் ஐந்து நேரம் படையெடுத்துச் செல்கின்றனர். பணம் படைத்தவர்களும் செல்கின்றனர். பாட்டாளி வர்க்கத்தினரும் செல்கின்றனர். அவர்கள் கடவுள் தரிசனத்திற்குத் தங்கள் சட்டைப் பையிலிருந்து சல்லிக் காசு கொடுப்பதில்லை. ஏன்? இந்தக் கட்டணங்களைச் செலுத்துவது யாருக்கு இயலும்? பணக்கார வர்க்கத்திற்கு மட்டும் தான் இயலும்.

இப்படித் தனது தரிசனத்தை பணக்கார வர்க்கத்திற்கு மட்டும் அளித்து விட்டு, பாட்டாளி வர்க்கத்திற்குப் பட்டை நாமம் சாத்தி, பக்தர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டும் கடவுள் ஒரு கடவுளா? நிச்சயமாகக் கடவுள் இல்லை.

இங்கே ஒரு கேள்வி எழலாம். பள்ளிவாசல்களில் மட்டும் உண்டியல் வைக்கப்பட்டுள்ளனவே, அவை ஏன்? அவை கடவுளுக்காக அல்ல! பள்ளிவாசல் பராமரிப்புக்காகவே! அதுவும் விரும்பியவர் வழங்கலாம் என்ற அடிப்படையில் தானே ஒழிய கட்டணமாக அல்ல!

நீங்கள் மட்டும் ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து, காவு கொடுத்து கடவுளுக்காகப் பலியிடுகிறீர்களே என்று கேட்கலாம். கடவுளுக்காக, கடவுளின் பெயரால் அறுக்கப்பட்டாலும் அவை அனைத்தும் ஏழைகளுக்காகப் பங்கிடப்படுகின்றன. இதைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாகவே குறிப்பிடுகின்றது.

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (அல்குர்ஆன் 22:37)

“அறுத்துப் பலியிடு’ என்று அல்லாஹ் சொன்னதும் அடியான் அறுத்துப் பலியிடுகிறான். ஏன்? அல்லாஹ்வுக்குப் பயந்ததால்! இந்தப் பயம் தான் எனக்குத் தேவை! பயன் ஏழைகளுக்கே! இந்தக் கட்டளைக்கு, எனக்குப் பயந்தது போன்று மற்ற கட்டளைகளுக்கும் நீ பயப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காகத் தான் இறைவன் அறுத்துப் பலியிடச் சொல்கின்றானே தவிர இறைவனுக்கு அதன் இரத்தமும், இறைச்சியும் தேவை என்பதற்காக அல்ல! காரணம் இஸ்லாம் கூறுகின்ற கடவுள், காவுகளோ காணிக்கைகளோ கேட்காத கடவுள்.

நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை. (அல்குர்ஆன் 51:57)

பணக்காரனுக்கு ஒரு தரிசனம், பரம ஏழைக்கு ஒரு தரிசனம்! அரசனுக்கு ஒரு தரிசனம், ஆண்டிக்கு ஒரு தரிசனம்! இதையெல்லாம் இஸ்லாம் தகர்த்தெறிகின்றது.

கோவிந்தக்குடியில் குடியரசுத் தலைவர்

உள்ளூர் பள்ளிவாசல்களில் ஐந்து நேர ஜமாஅத் தொழுகைக்கு வருபவர்களில் யார் முதலில் வருகின்றாரோ அவருக்கு முதல் வரிசையில் இடம் கிடைக்கும். பின்னால் வருபவருக்குப் பிந்தைய வரிசை தான். அவர் அப்பள்ளிவாசலின் தலைவராக இருக்கலாம். பஞ்சாயத்தின் தலைவராக இருக்கலாம். ஏன்? இந்த நாட்டின் ஜனாதிபதியாகக் கூட இருக்கலாம்.

நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலீ அஹ்மத் அவர்கள், தஞ்சை மாவட்டம் கோவிந்தக்குடி என்ற ஊரில் பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு வருகையளித்தார். குடியரசுத் தலைவர் என்ற காரணத்தால் அவருக்கு யாரும் முதல் வரிசையில் இடம் அளித்துவிடவில்லை. கிடைத்த வரிசையில் அவர் இடம் பிடித்து அமர்ந்து கொண்டார்.

உள்ளூர் பள்ளிவாசல்களில் மட்டும் இந்த நிலை கடைபிடிக்கப்படுவதில்லை. உலக மக்களின் பள்ளிவாசலான மக்காவிலுள்ள புனித கஅபாவுக்கும் இதே நிலை தான்.

மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 22:25)

கட்டண, காசு பண அடிப்படையில் மட்டுமல்ல! சாதிய, குல, நிற, இன, தேசிய, மொழி அடிப்படையில் மனிதனைக் கூறு போடாத, வேறுபாடு – பாகுபாடு காட்டாத, கட்டணமில்லாத இறையில்லத்திற்குள் அனைவரும் வாருங்கள் என்று இறுதி வேதமான திருக்குர்ஆன் அழைக்கின்றது. அந்த அழைப்பை இங்கே சமர்ப்பிக்கின்றோம்.

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

அல்குர்ஆன் 3:96, 97

————————————————————————————————————————————————

தொடர்: 2

ஸிஹ்ர் ஒரு விளக்கம்

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்பது குறித்து நாம் விரிவான விளக்கம் அளித்துப் பல கேள்விகளையும் கேட்டிருந்தோம். அதில் முதலாவதாக நாம் கேட்ட பால் குடி தொடர்பான ஹதீஸ் பற்றி இஸ்மாயீல் ஸலஃபி இது வரை வாய் திறக்கவில்லை. இதற்கு அவர் அளிக்கும் பதிலில் எல்லா முடிச்சுக்களும் அவிழ்ந்து விடும் என்பதால், “பதில் சொன்னால் மாட்டிக் கொள்வேன்’ என்ற (இலங்கை உமர் அலி) மனநிலையில் அவர் இருப்பது தெரிகிறது.

ஆயினும் நானும் பதில் சொன்னேன் என்று காட்டிக் கொள்வதற்காக மலகுல் மவ்த்தை மூஸா நபி கன்னத்தில் அறைந்த ஹதீஸ் குறித்து சில தமாஷான பதில்களைக் கூறியுள்ளார். நாம் கேட்ட அனைத்துக்கும் பதில் வந்த பின் மொத்தமாக ஒரே தொடரில் இன்ஷா அல்லாஹ் அதற்கான பதிலை வெளியிடுவோம்.

இப்போது ஸிஹ்ர் குறித்த ஆய்வை மட்டும் பார்ப்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மன நிலை பாதிக்கப்பட்டதை இஸ்மாயீல் ஸலபி வேறு வார்த்தை மூலம் ஒப்புக் கொண்டதை சென்ற தொடரில் நாம் நிரூபித்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலை பாதித்ததாக ஒரு ஹதீஸ் இருந்தால் அது ஒன்றே அந்த ஹதீஸை மறுக்கப் போதிய காரணமாகும் என்பதையும் இஸ்மாயீல் ஸலபியின் வார்த்தைகளைக் கொண்டே நிரூபித்தோம்.

அடுத்ததாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டிருந்தால் அதை எதிரிகள் விமர்சனம் செய்திருப்பார்களே? அப்படி எந்த விமர்சனமும் செய்யப்பட்டதாக ஆதாரம் இல்லாததால் நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறப்படுவது பொய் என்று திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் பின்வருமாறு நாம் விமர்சனம் செய்திருந்தோம்.

எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலை நாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள்.

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்; செய்ததைச் செய்யவில்லை என்கிறார்; செய்யாததைச் செய்தேன் என்கிறார்; இவர் கூறுவதை எப்படி நம்புவது? என்று விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவற விட்டிருக்க மாட்டார்கள்.

இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாத காலம் நீடித்த இந்தப் பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது.

மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். எனவே நபிகள் நாயகத்துக்கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்துப் பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களின் எதிரிகளில் ஒருவர் கூட இது பற்றி விமர்சனம் செய்ததாக எந்தச் சான்றும் இல்லை.

எனவே அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்படவில்லை என்பதற்கு நாம் எழுதிய காரணங்களில் இதுவும் ஒரு காரணமாகும்.

இதற்கு இஸ்மாயீல் ஸலஃபி பின்வருமாறு பதில் கூறுகிறார்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அதைக் காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள். அப்படி விமர்சனம் செய்ததாக எந்தத் தகவல்களும் இல்லை. எனவே, விமர்சனம் இல்லை என்பதே நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றது என்ற அடிப்படையில் சகோதரர் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுக்கின்றார்.

உள்ளதை வைத்து விமர்சனம் செய்வது தான் நியாயமான விமர்சனமாகும். ஆனால், அவர் இந்த வாதத்தை பல்வேறுபட்ட மிகைப்படுத்தல்கள் செய்து ஹதீஸில் கூறப்படாத செய்திகளை மேலதிகமாக இணைத்தே வலுப்படுத்த முனைகிறார்.

எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலை நாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். (பக்: 1298)

நபி (ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் மனைவியருடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே தாம்பத்திய உறவில் ஈடுபட்டதாக நபி (ஸல்) அவர்களுக்குப் போலி உணர்வு ஏற்பட்டது. 6 மாதம் அல்ல, 6 வருடம் இந்த நிலை ஏற்பட்டால் கூட இதை எதிரிகள் விமர்சனம் செய்ய மாட்டார்கள். விமர்சனம் செய்யவும் முடியாது. ஏனெனில், இது வெளி உலகுக்குத் தெரியும் சமாச்சாரமல்ல.

அவர்களுடனும், அவர்களது மனைவியருடனும் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினை இது! இதனை எப்படி எதிரிகள் விமர்சனம் செய்ய முடியும்? எனவே, சூனியம் செய்யப்பட்டிருந்தால் எதிரிகள் விமர்சனம் செய்திருப்பார்கள், விமர்சனம் செய்யாததினால் சூனியம் செய்யப்பட்டது என்பது பொய்யான தகவல் என அவர் வாதிடுவது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்று சிந்தித்துப் பாருங்கள்!

காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்களே! என்ற அர்த்தமற்ற – நியாயமற்ற – நபி (ஸல்) அவர்களுடைய சமூக வாழ்வில் சம்பந்தப்படாத சங்கதியை வைத்து, யூகம் செய்து, அந்த யூகத்தின் அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்பது எவ்வளவு தவறான அணுகுமுறை என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்!

அவர்களுக்கு இது குறித்த எவ்வித அறிவும் இல்லை. அவர்கள் வெறும் யூகத்தையே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக வெறும் யூகம் உண்மைக்கு எந்தப் பயனும் தராது. (53:28)

அவர்கள் வெறும் யூகத்தையும் தங்கள் மனம் விரும்புவதையுமே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக அவர்களது இரட்சகனிடமிருந்து நேர்வழி அவர்களிடம் வந்தே இருக்கின்றது. (53:23)

வெறும் யூகங்களைப் பின்பற்றுவது எந்த வகையிலும் சத்தியத்திற்கு துணை நிற்காது எனும் போது, யூகத்தின் அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுக்கும் இவரின் வாதத்தின் உண்மை நிலையை மக்கள் சிந்திக்க வேண்டும்.

மிகைப்படுத்தலும், இட்டுக்கட்டலும்:

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார், செய்ததைச் செய்யவில்லை என்கிறார், செய்யாததைச் செய்தேன் என்கிறார், இவர் கூறுவதை எப்படி நம்புவது? என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவற விட்டிருக்க மாட்டார்கள். (பக்: 1298)

ஹதீஸில் சொல்லப்படாத செய்திகளைத் தானாகக் கற்பனை பண்ணி, நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகவும், செய்ததைச் செய்யவில்லையென்றும் – செய்யாததைச் செய்ததாகவும் கூறியதாகச் சித்தரிக்க முனைகின்றார். நபி (ஸல்) அவர்கள் குறித்தல்லவா பேசுகின்றோம் என்ற அச்சமோ, கண்ணிய உணர்வோ கொஞ்சம் கூட இல்லாது ஹதீஸை விமர்சிக்கின்றோம் என்ற எண்ணம் துளி கூட இன்றி இவ்வாறு சொந்தக் கருத்தை ஹதீஸின் கருத்தாக முன் வைக்கலாமா?

இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாத காலம் நீடித்த இந்தப் பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது.

மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். எனவே நபிகள் நாயகத்துக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்து பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். (பக்: 1298)

இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக எண்ணியது எதிரிகளுக்கு அல்ல, நபித் தோழர்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை எனும் போது, எதிரிகளுக்குத் தெரிந்திருக்கும், அவர்கள் நிச்சயமாக விமர்சித்திருப்பார்கள் என்று கூறுவது அர்த்தமற்ற வாதமாகும். இந்தப் பந்தியிலும் இந்தப் பாதிப்பு நிச்சயமாக மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை என்ற யூகத்தையே அவர் முன்வைத்துள்ளார்.

5 வேளை அல்ல, 50 வேளை மக்களுக்குத் தொழுகையை நடத்தினாலும் அவருக்கு ஏற்பட்டதாக ஹதீஸ் கூறும் பாதிப்பு வெளி உலகுக்குத் தெரிவதற்கான வாய்ப்பே இல்லை எனும் போது, இவ்வாதம் அர்த்தமற்றுப் போகின்றது. இந்தப் பந்தியிலும் அவர் யூகத்தைத் தான் முன்வைக்கின்றார்.

6 மாதம் இந்தப் பாதிப்பு நீடித்தது என்ற அடிப்படையில்தான் இந்த வாதத்தையே வலுப்படுத்துகின்றார். ஆனால், சூனியம் 6 மாதம் நீடித்தது என்ற கால அளவு ஆதாரபூர்வமானதல்ல. எனவே, இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு என்ற அவரின் வாசகப்படியே அவரின் இந்த வாதம் அடிபட்டுப் போகின்றது.

எனவே, நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

பல யூகங்களை முன்வைத்து, சில மேலதிக கருத்துக்களையும் சேர்த்துக் கொண்டு இறுதி முடிவை மட்டும் திட்டவட்டமாகத் தெரிவித்து விடுகின்றார். பலவீனமான அறிவிப்பாளர்கள் பலர் ஒரு செய்தியைச் சொன்னாலும், அது பலவீனமானது தான் எனக் கூறும் இவர், பல யூகங்கள் சேர்ந்து திட்டவட்டமான உண்மை என்ற நிலையை அடையாது என்பதை அறியாதிருப்பது ஆச்சரியமாகவுள்ளது!

நல்லறிஞர்கள் ஏன் விமர்சனம் செய்யவில்லை:

எதிரிகள் விமர்சனம் செய்யாததற்கு நாம் விளக்கம் கூறி விட்டோம். இது நபி (ஸல்) அவர்களது குடும்ப விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனவே நபித்தோழர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே விமர்சித்திருக்க முடியாது என்பதே அந்த நியாயமான பதிலாகும்.

இந்தப் பதிலில் இஸ்மாயீல் ஸலஃபி என்ன கூறுகிறார்?

நபிகள் நாயகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு குடும்பப் பிரச்சனை தான். மனைவியுடன் கூடாமலே கூடியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்தது அவர்களின் மனைவிக்கு மட்டுமே தெரிந்த விஷயமாகும். எனவே எதிரிகளுக்கு இது தெரிய வழியில்லை எனும் போது அவர்கள் எப்படி விமர்சனம் செய்திருப்பார்கள்?

மக்களுக்குத் தெரியாது என்பது ஒரு செய்தி. நபிகள் நாயகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு மன நிலை சம்பந்தப்பட்டது அல்ல. குடும்பப் பிரச்சனை சம்பந்தப்பட்டது என்பது மற்றொரு செய்தி.

உண்மையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பாதிப்பு, உடலுறவில் ஈடுபடாமலே உடலுறவில் ஈடுபட்டதாகப் போலித் தோற்றம் மட்டும் தான் ஏற்பட்டதா? என்பதையும், இது மக்களுக்குத் தெரிந்திருந்ததா? என்பதையும் முடிவு செய்து விட்டால் இதில் தெளிவு கிடைத்து விடும்.

இது குறித்து வரும் அறிவிப்புகள் அனைத்தையும் திரட்டி ஆய்வு செய்யும் போது பொதுவான மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்று அந்த ஹதீஸ்கள் கூறுவதை உறுதி செய்ய முடிகிறது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூஸுரைக்’ குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் ஒரு நாள்’ அல்லது ஓரிரவு’ என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள். (நூல்: புகாரி, ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கம் எண்: 5763)

பிரமையூட்டப்பட்டார்கள் என்பதை விட பிரமையூட்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது தான் சரியான மொழிபெயர்ப்பாகும். அரபு மூலத்தில் கான என்ற சொல் இரண்டு இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்ததைக் குறிக்கும். எனவே செய்து கொண்டிருந்ததாக என்று தமிழாக்கம் செய்தது போல் பிரமையூட்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்று தான் தமிழ்ப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட ஹதீஸில் உடலுறவு கொள்ளாமல் உடலுறவு கொண்டதாக நபியவர்கள் நினைத்ததாகக் கூறப்படவில்லை. தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக அவர்களுக்கு பிரமை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. இது பொதுவாக அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டதாகத் தெளிவாகக் கூறுகிறது. உடலுறவு அல்லாத மற்ற விஷயங்களிலும் மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. அதுவும் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என்று இந்த அறிவிப்பு கூறுகிறது.

செய்யாததைச் செய்வதாக அடிக்கடி அவர்களுக்குத் தோன்றினால் அது குடும்பத்துப் பிரச்சனை அல்ல. குடும்பத்தாருக்கு மட்டுமே தெரிந்த விஷயம் அல்ல. எப்போதும் மக்களுடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருப்பவர்கள் என்பதால் இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

மற்றும் சில அறிவிப்புகளைப் பாருங்கள்!

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது. இறுதியில் ஒரு நாள் அவர்கள் என்னிடம் இருந்த போது அல்லாஹ்விடம் (உதவி கோரிப்) பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு என்னிடம், ஆயிஷா (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவளிக்கும் படி அல்லாஹ்விடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவளித்து விட்டான் என்று கூறினார்கள். (நூல்: புகாரி, ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கம் எண்: 5766)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. (நூல்: புகாரி, ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கம் எண்: 3175)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்…. (நூல்: புகாரி, ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கம் எண்: 3268)

இவை அனைத்தும் புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனைவிமாருடன் சேர்வது மட்டுமின்றி பொதுவாக அவர்கள் செய்யாததைச் செய்ததாக பிரமைக்கு உள்ளானார்கள் என்று ஹதீஸில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்புகள் எதையும் பார்க்காமல் நாம் இட்டுக்கட்டி மிகைப்படுத்திக் கூறுவதாக இஸ்மாயீல் ஸலபி கூறி இருப்பதைக் கவனியுங்கள்!

இப்போது அவர் மேலே பயன்படுத்தியுள்ள கடும் சொற்களை திரும்பிப் பாருங்கள்!

ஹதீஸில் சொல்லப்படாத செய்திகளைத் தானாகக் கற்பனை பண்ணி, நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகவும், செய்ததைச் செய்யவில்லையென்றும் – செய்யாததைச் செய்ததாகவும் கூறியதாகச் சித்தரிக்க முனைகின்றார். நபி (ஸல்) அவர்கள் குறித்தல்லவா பேசுகின்றோம் என்ற அச்சமோ, கண்ணிய உணர்வோ கொஞ்சம் கூட இல்லாது ஹதீஸை விமர்சிக்கின்றோம் என்ற எண்ணம் துளி கூட இன்றி இவ்வாறு சொந்தக் கருத்தை ஹதீஸின் கருத்தாக முன் வைக்கலாமா?

நாம் சித்தரிக்க முனைகிறோமா ஹதீஸ்களில் உள்ளதன் அடிப்படையில் விமர்சனம் செய்திருக்கிறோமா? இவர் எந்த அளவுக்கும் துணிந்து பொய் சொல்வார் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி பேசும் போது அச்சமோ, கண்ணிய உணர்வோ இல்லாமல் பேசுகிறோம் என்று கூறுகிறாரே இது யாருக்குப் பொருந்தும்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாததைச் செய்ததாகக் கூறினார்கள் அல்லது கருதினார்கள் என்ற செய்தி உண்மை என்று சாதிக்கும் இஸ்மாயில் ஸலபிக்கு இது பொருந்துமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாததைச் செய்ததாக வரும் செய்தி பொய் என்று நிராகரிக்கும் நமக்குப் பொருந்துமா? சிந்தித்துப் பாருங்கள். இவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து பேசுகிறோம் என்ற அச்சமோ, கண்ணிய உணர்வோ இல்லாததால் தானே நபிகள் நாயகம் அவர்களைத் தரம் தாழ்த்தும் கட்டுக்கதைக்கு வக்காலத்து வாங்குகிறார்.

நபிகள் நாயகத்தின் மனைவிகளுக்கு மட்டும் தான் இது தெரியும்; மக்களுக்குத் தெரியாது என்று இவர் வாதிடுவது தவறு என்பதற்கு மற்றொரு ஆதாரமும் உள்ளது.

மனிதர்கள் சூனியம் செய்யாமல் இது போன்ற பாதிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டிருந்தால் யாருக்கும் தெரியாது என்று கூறுவதை ஏற்கலாம். ஆனால் மேற்கண்ட ஹதீஸ்களில் லபீத் என்ற யூதன் சூனியம் செய்ததாகக் கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்காக அவன் சூனியம் செய்து, அது பாதிப்பையும் ஏற்படுத்தி இருக்கும் போது அதைப் பற்றி எதிரிகளிடம் அவன் சொல்லாமல் இருப்பானா? இவ்வாறு சூனியம் செய்வதற்கு அவனுக்கு ஒரு நோக்கமும் இல்லாமல் இருக்க முடியாது. நபிகள் நாயகத்தையே வீழ்த்தி வெற்றி கண்டு விட்டேன் என்று காட்டுவது போன்ற நோக்கத்துக்காகத் தான் இதை அவன் செய்திருக்க முடியும். வேறு எந்த நோக்கத்துக்காக அவன் செய்திருந்தாலும் அவன் மூலம் எதிரிகளுக்குப் பரவாமல் இருக்க முடியாது.

மக்களுக்கு இது தெரிந்த விஷயமாக இருந்தது என்பதற்கு இது மட்டுமின்றி மற்றொரு காரணமும் இருக்கிறது.

புஹாரி 5763வது ஹதீஸில் பின் வருமாறு கூறப்பட்டுள்ளது.

(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், “இந்த மனிதரின் நோய் என்ன?” என்று கேட்டார். அத்தோழர், “இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று சொல்ல, முதலாமவர், “இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?” என்று கேட்டார். தோழர், “லபீத் பின் அஃஸம் (எனும் யூதன்)” என்று பதிலளித்தார். அவர், “எதில் வைத்திருக்கிறான்?” என்று கேட்க, “சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்” என்று பதிலளித்தார். அவர், “அது எங்கே இருக்கிறது?” என்று கேட்க, மற்றவர், “(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) “தர்வான்’ எனும் கிணற்றில்” என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்து விட்டுத் திரும்பி) வந்து, “ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன” என்று சொன்னார்கள்.

சூனியம் எங்கே வைக்கப்பட்டது என்பது தெரிந்தவுடன் தம் தோழர்கள் சிலருடன் நபிகள் நாயகம் அவர்கள் புறப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருந்துள்ளது என்பதை இதில் இருந்தும் அறியலாம்

மக்களுக்கு இது தெரியாமல் குடும்பத்தில் நடந்த பிரச்சனை என்பதால் தான் எதிரிகள் விமர்சனம் செய்யவில்லை என்று இவர் கூறுகிறார். மக்களுக்கு இது தெரிந்த விஷயமாக இருந்தது என்று தான் ஹதீஸ்களில் கூறப்படுகிறது. குடும்பப் பிரச்சனை மட்டுமின்றி பொதுவாகவும் இந்த நிலை ஏற்பட்டது என்றும் ஹதீஸிலேயே கூறப்படுகிறது.

அப்படியானால் எதிரிகள் இதை விமர்சனம் செய்யாமல் இருந்திருப்பார்களா? என்ற நம்முடைய கேள்வி அதே ஜீவனுடன் நிற்கிறது. நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டு, செய்யாததை செய்ததாக அடிக்கடி மனக்குழப்பம் ஏற்பட்டிருந்தால் எதிரிகள் இதை எவ்வளவு அருமையாகப் பயன்படுத்தியிருப்பார்கள். ஒருவர் கூட இது பற்றி விமர்சிக்கவில்லை என்றால் சூனியம் வைக்கப்படவில்லை என்பது தான் காரணம். சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறுவது பொய் என்பது தான் காரணம்.

அடுத்து இஸ்மாயில் ஸலபி இன்னொரு ஆதாரத்தையும் மேலே எடுத்து வைக்கிறார்.

6 மாதம் இந்தப் பாதிப்பு நீடித்தது என்ற அடிப்படையில் தான் இந்த வாதத்தையே வலுப்படுத்துகின்றார். ஆனால், சூனியம் 6 மாதம் நீடித்தது என்ற கால அளவு ஆதாரபூர்வமானதல்ல. எனவே, இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு என்ற அவரின் வாசகப்படியே அவரின் இந்த வாதம் அடிபட்டுப் போகின்றது.

அதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆறு மாதம் பாதிப்பு ஏற்பட்டது என்பது ஆதாரப்பூர்வமானது அல்ல என்பதால் இரண்டு மூன்று நாட்களில் இந்தப் பாதிப்பு நீங்கி இருக்கலாம் என்கிறார். ஒருவரது வாதத்தை மறுத்து ஆய்வு செய்யும் இலட்சணத்தைப் பாருங்கள். விவாதத்தின் முக்கியமான அம்சத்தை உள்ளடக்கிய ஒரு ஹதீஸ் பலவீனமானது என்று போகிற போக்கில் ஒரு காரணத்தையும் கூறாமல் எழுதி விட்டுச் செல்கிறார்.

“ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள் உள்ள ஒரு ஹதீஸை மறுக்கக் கூடாது’ என்ற தலைப்பில் மறுப்பு எழுதும் போது, ஒரு ஹதீஸைத் தள்ளுபடி செய்வதாக இருந்தால் அதிலுள்ள அறிவிப்பாளர்கள் பற்றி விரிவாக விளக்கி இந்தக் காரணத்தால் இது பலவீனமானது என்று நிரூபிக்க வேண்டுமல்லவா? அவர் இதைத் தக்க காரணத்துடன் நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளார். அவர் காரணத்துடன் நிரூபித்த பின்பு தான் இந்த வாதத்தை எடுத்து வைக்க வேண்டும்.

இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

கேள்வி – பதில்

? தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகை இல்லை என்று ஹதீஸ் உள்ளது. இந்த ஹதீஸின் அடிப்படையில் இகாமத் சொல்லும் போது ஏற்கனவே சுன்னத் தொழுது கொண்டிருக்கும் ஒருவர் அந்தத் தொழுகையை முறித்து விட்டு, கடமையான தொழுகையில் போய் இணைந்து கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது சரியா?

முஹம்மது ஞானியார், திருநெல்வேலி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (அந்தத்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 1281)

இந்த ஹதீஸின் அடிப்படையில், இகாமத் சொல்லப்படும் போது, ஏற்கனவே சுன்னத் தொழுது கொண்டிருப்பவர் தனது தொழுகையை முறித்துக் கொண்டு கடமையான தொழுகையில் போய் இணைய வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. ஏனென்றால் தொழுகை என்றால் அதன் துவக்கம் தக்பீர்; அதன் முடிவு ஸலாம் கொடுத்தல் என்று நபி (ஸல்) அவர்கள் வரையறுத்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்குவார்கள்; “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்…என்று (குர்ஆன்) ஓத ஆரம்பிப்பார்கள். ருகூஉச் செய்யும்போது தலையை  உயர்த்தவுமாட்டார்கள்; ஒரேடியாகத் தாழ்த்தவுமாட்டார்கள். மாறாக, நடுநிலையாக வைத்திருப்பார்கள். ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினால் நிமிர்ந்து நிற்காமல் சஜ்தாவுக்குச் செல்லமாட்டார்கள். சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினால் நேராக நிமிர்ந்து உட்காராமல் (இரண்டாவது) சஜ்தாச் செய்யமாட்டார்கள். ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் “அத்தஹிய்யாத்ஓதுவார்கள். (அந்த அமர்வில்) இடது காலை விரித்து வைத்து, வலது காலை நட்டு வைப்பார்கள். மேலும், ஷைத்தான் உட்காருவதைப் போன்று உட்கார வேண்டாம் என்றும், மிருகங்கள் உட்காருவதைப் போன்று முழங் கைகளைத் தரையில் பரப்பி வைத்து உட்கார வேண்டாம் என்றும் தடை விதித்துவந்தார்கள். அவர்கள் சலாம் கூறியே தொழுகையை முடிப்பார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 857)

தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது)என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 56, 523 திர்மிதி 3, 221, இப்னு மாஜா 271, அஹ்மத் 957, 1019

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்நடைமுறைக்கு மாற்றமாக தொழுகையை இடையிலேயே முறிக்க வேண்டும் என்றால் அதற்குத் தெளிவான ஆதாரம் இருக்க வேண்டும். இகாமத் சொல்லப்பட்டால் வேறு தொழுகை இல்லை என்ற ஹதீஸ் அடிப்படையில், சுன்னத் தொழுது கொண்டிருப்பவர் அதைப் பாதியிலேயே விட்டு விட வேண்டும் என்று கூறினால் அது இந்த ஹதீசுக்கு முரணாக அமைந்து விடும். எனவே இதற்கு முரணில்லாத வகையில் தான் இகாமத் சம்பந்தப்பட்ட ஹதீஸை விளங்க வேண்டும்.

இகாமத் சொல்லப்பட்டு விட்டால் வேறு தொழுகை இல்லை என்றால், அதற்குப் பிறகு வேறு தொழுகையைத் துவங்கக் கூடாது என்று பொருள் கொண்டால் இரண்டு ஹதீஸ்களுக்கும் எவ்வித முரண்பாடும் ஏற்படாது.

அதாவது, இகாமத் சொல்லப்பட்ட பிறகு கடமையான தொழுகையைத் தொழாமல் சுன்னத் தொழ ஆரம்பிப்பதை இந்த ஹதீஸ் தடை செய்கின்றது. அதே சமயம் ஏற்கனவே தொழுது கொண்டிருப்பவர் தமது தொழுகையை நிறைவு செய்து ஸலாம் கூறி முடித்த பின்னர் கடமையான தொழுகையில் போய் இணைந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் கொண்டால் மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களையும் செயல்படுத்த முடியும்.

? எஸ்.பி. பட்டிணம் பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஜும்ஆ உரை நிகழ்த்துவது குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. லட்சக்கணக்கில் செலவு செய்து ஹஜ்ஜுக்குச் செல்லும் போது அதை விளம்பரப்படுத்தினால் நன்மை கிடைக்காது; பெருமையடிப்பதற்காக நரகம் தான் கிடைக்கும் என்பது நமது நிலைபாடு. அதை விடச் சாதாரண வணக்கமான ஜும்ஆ தொழுகை குறித்து விளம்பரம் செய்வது சரியான செயலா? விளக்கவும்.

ஏ. நிஸார் அஹ்மது, மங்கலம்பேட்டை

குறிப்பிட்ட பள்ளிவாசலில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஜும்ஆ நடைபெறப் போகின்றது; அந்த ஜும்ஆவில் உரை நிகழ்த்தப்படுவது குறித்து மக்களுக்கு அறிவிப்பதற்காகப் போஸ்டர் ஒட்டப்படுகின்றது. இதில் விளம்பர நோக்கமோ, பெருமையடிப்பதோ என்ன இருக்கின்றது? பிரச்சார நோக்கத்திற்காகச் செய்யப்படும் எந்த விளம்பரமும் பெருமையடிப்பதாகாது. அப்படிப் பார்த்தால் மார்க்கப் பிரச்சாரம் எதற்காகவும் விளம்பரம் செய்யக்கூடாது; போஸ்டர் ஒட்டக் கூடாது என்று கூற வேண்டி வரும்.

ஒரு குறிப்பிட்ட பிரச்சாரகர் ஜும்ஆ உரையாற்றுகின்றார் என்றோ, அல்லது ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உரை நிகழ்த்தப்படுகின்றது என்றோ மக்களுக்கு அறிவிப்பதன் மூலம் அந்த ஜும்ஆவில் நிகழ்த்தப்படும் பிரச்சாரம் அதிகமான மக்களைச் சென்றடையும் என்றால் அந்த அறிவிப்பும் ஒரு வகையில் அழைப்புப் பணி தான். அழைப்புப் பணியைப் பொறுத்த வரை மார்க்கத்தில் பொதுவான அனுமதி உள்ளது.

ஹஜ்ஜுக்குச் செல்பவர் தனது ஹஜ்ஜை விளம்பரம் செய்வதை இதனுடன் ஒப்பிடவே முடியாது. நான் இன்று ஜும்ஆ தொழப் போகிறேன் யாரேனும் விளம்பரம் செய்தால் இவ்வாறு ஒப்பிடுவதில் ஓர் அர்த்தமிருக்கும். ஏனெனில் அது முகஸ்துதி. பிறர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் வணக்கம் தான் முகஸ்துதியாகும்.

ஜும்ஆ பிரச்சாரத்தைப் பொறுத்த வரை அப்படி யாரும் விளம்பரம் செய்வதில்லை. இந்த அழைப்பாளர் பிரச்சாரம் செய்கிறார்; அதைக் கேட்டுப் பயன் பெறுங்கள் என்று கூறுகிறோம். இது முகஸ்துதி அல்ல; அறிவிப்பு தான். இவ்வாறு அறிவிப்பதில் வணக்கத்தை விளம்பரப்படுத்துவதோ, பெருமையடிப்பதோ இல்லை. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

————————————————————————————————————————————————

தாடி – ஓர் ஆய்வு

தாடி வைப்பது நபிவழி என்று மக்கள் பரவலாக அறிந்திருக்கிறார்கள். ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),  நூல்: புகாரி 5892

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கி)களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: முஸ்லிம் 435

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தாடியை வளர விடுங்கள் என்ற ஒரு உத்தரவை மட்டும் இடவில்லை. தாடியை வளர விடுவதன் மூலம் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் மாறு செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் இட்டிருக்கின்றார்கள்.

ஒருவர் தாடியை அகற்றிவிட்டால் அவர் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் ஒப்ப நடந்தவராவார். மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களுக்கு ஒப்ப நடப்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவுத் 3512

எனவே தாடி வைப்பது வலியுறுத்தப்பட்ட நபிவழி என்று இதன் மூலம் அறிய முடிகிறது. இந்த சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக நாம் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. நமது முயற்சியில்லாமல் தானாக வளரும் தாடியை அகற்றாமல் இருந்தாலே சுன்னத்தை நிறைவேற்றிய நன்மை நமக்கு கிடைக்கின்றது.

அது மட்டுமின்றி தாடியைப் பொறுத்த வரை அது நமது உடலின் ஓர் அங்கமாக இருக்கின்றது. நமது வாழ்நாள் முழுவதும் இந்த சுன்னத்தைத் தொடர்ந்து நிறைவேற்றும் பாக்கியம் இதன் மூலம் நமக்குக் கிடைக்கின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் தாடி வைக்க வேண்டும்.

தாடியை மழிப்பதும் ஒட்ட நறுக்குவதும்

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இணை வைப்பாளர்கள் அதாவது மஜூசிகள் (நெருப்பு வணங்கிகள்) தங்களது தாடிகளை மழித்து வந்தனர். இச்செயலை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மஜூசிகளைப் பற்றி கூறப்பட்ட போது, “மஜூசிகள் தங்களது மீசைகளை அதிகமாக வைக்கிறார்கள். தாடிகளை மழிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு மாறு செய்யுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: ஸஹீஹு இப்னி ஹிப்பான்

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வேதமுடையவர்கள் அதாவது யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்களது தாடிகளை (மழிக்காமல்) ஒட்ட வெட்டி வந்தனர். இவர்கள் தாடியை விட மீசையை அதிகமாக வளர்த்தார்கள். இதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதிர்ந்த வயதுடைய அன்சாரிகள் சிலரைக் கடந்து சென்றார்கள்.  அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அன்சாரி கூட்டத்தாரே! (உங்கள் தாடிகளை) சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள்என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! வேதமுடையவர்கள் முழுக்கால் சட்டை அணிகிறார்கள். வேட்டி அணிவதில்லைஎன்று நான் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் முழுக்கால் சட்டையும் வேட்டியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள்என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! வேதமுடையவர்கள் காலுறை அணிகிறார்கள். காலணி அணிவதில்லைஎன்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் காலுறையும் காலணியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள்என்று கூறினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள் மீசையை வளர விடுகிறார்கள்என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களது மீசைகளை நீங்கள் (ஒட்ட) கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி), நூல்: அஹ்மது 21252

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்; தாடிகளை வளர விடுங்கள்; மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 5892

இணை வைப்பாளர்கள் தங்களது மீசையை வளர விட்டு, தாடியை ஒட்ட நறுக்கி வந்தார்கள் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. தாடிகளை வளர விட வேண்டும்; மீசையை ஒட்ட நறுக்க வேண்டும் என்பதே நமக்கு இடப்பட்ட கட்டளை. இவ்வாறு செய்தால் தான் நாம் இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்ய முடியும்.

எனவே, தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளை தாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்ற காரணத்திற்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாடியை மழிப்பதற்கும் ஒட்ட வெட்டுவதற்கும் இடையில் வித்தியாசம் இருந்தாலும் இவ்விரு செயல்களால் தாடி அகற்றப்பட்டு தாடி வைக்கவில்லை என்ற தோற்றமே ஏற்படுகிறது. எனவே மார்க்கம் இவ்விரு செயல்களையும் தடை செய்கிறது.

தாடியை வெட்டுவதற்குத் தடையில்லை

நபி (ஸல்) அவர்கள் தாடியை மழிப்பதையும் அதை ஒட்ட வெட்டுவதையும் மட்டுமே தடை செய்துள்ளார்கள். தாடியை வெட்டவே கூடாது என்று தடை விதிக்கவில்லை.

ஒருவர் தாடியை ஒட்ட வெட்டாமல் சிறிது நீளமாக விட்டு வெட்டினால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை.

ஆனால் இன்றைக்கு இலங்கையைச் சார்ந்த சில அறிஞர்கள் தாடியை வெட்டவே கூடாது என்று கூறி வருகின்றனர். சில ஹதீஸ்களைத் தவறாகப் புரிந்து கொண்டே இவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 5893

மேற்கண்ட ஹதீஸில் தாடியை வளர விடுங்கள் என்று மொழி பெயர்த்துள்ள இடத்தில் அஉஃபூ என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது. சில அறிவிப்புகளில் அவ்ஃபூ, வஃப்பிரூ மற்றும் அர்கூ ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ன.

ஹதீஸில் கூறப்பட்டுள்ள அஉஃபூ, அவ்ஃபூ, வஃப்பிரூ மற்றும் அர்கூ ஆகிய வார்த்தைகளுக்கு தாடியை வெட்டவே கூடாது என அகராதியில் பொருள் இருப்பதாக, தாடியை வெட்டக் கூடாது என்று கூறுவோர் வாதிடுகிறார்கள்.

மீசையைக் குறைப்பது போன்று தாடியை குறைக்கக் கூடாது

இவர்கள் கூறுவது போல் இச்சொற்களுக்கு இந்த அர்த்தம் இருப்பதாக எந்த அரபி அகராதி நூலும் கூறவில்லை. மாறாக, தாடியை அதிகமாக வைக்க வேண்டும். மீசையைக் குறைப்பது போன்று குறைத்து விடக் கூடாது என்றே லிஸானுல் அரப் எனும் அரபு அகராதியில் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தாடியை “இஃபாசெய்யுமாறு உத்தரவிட்டதாக ஹதீஸில் உள்ளது. இஃபா என்றால் தாடியை அதிகமாக வைப்பதும் மீசையை குறைப்பதைப் போன்று குறைக்காமல் இருப்பதாகும்.

நூல்: லிஸானுல் அரப், பாகம்: 15, பக்கம்: 72

மேற்கண்ட வார்த்தைக்கு, தாடியை வெட்டக் கூடாது என்ற பொருளை லிஸானுல் அரப் ஆசிரியர் கூறவில்லை. மீசையைக் குறைப்பது போன்று தாடியை குறைக்கக் கூடாது என்றே கூறியுள்ளார்.

இந்த விளக்கத்தையே நாமும் கூறுகிறோம். மீசையை ஒட்ட வெட்டுவதைப் போன்று தாடியை ஒட்ட வெட்டக் கூடாது. இதை விடவும் கூடுதலாக தாடியை வைக்க வேண்டும் என்றே நாம் கூறுகிறோம்.

மேலும் (வளர விடுங்கள் என்ற அர்த்தத்தில்) தாடி தொடர்பான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள சொற்கள் வேறு சில ஹதீஸ்களில் வெட்டப்பட்ட தலை முடி விஷயத்தில் கூறப்பட்டிருக்கின்றது.

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் “இஹ்ராம்அணிந்தவர்களாக ஹுதைபிய்யாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களை (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) இணை வைப்பவர்கள் தடுத்து விட்டிருந்தனர். எனக்கு (காது சோணை வரை) நிறைய தலைமுடி இருந்தது.

நூல்: புகாரி 4191

மேற்கண்ட ஹதீஸில் நிறைய தலைமுடி என்று பொருள் செய்துள்ள இடத்தில் வஃப்ரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. தாடி விஷயத்தில் கூறப்பட்ட வஃப்பிரூ என்ற சொல்லும் வஃப்ரத் என்ற இச்சொல்லும் ஒரே வேர்ச் சொல்லிலிருந்து உருவானவை.

கஅப் (ரலி) அவர்களுக்கு நிறைய தலைமுடி இருந்தது எனக் கூறப்பட்டிருப்பதால் கஅப் (ரலி) அவர்கள் தலைமுடியை வெட்டவே இல்லை என்று விளங்க மாட்டோம். இதைப் போன்று தாடியை வளர விடுங்கள் என்றால் தாடியை வெட்டவே கூடாது என்று விளங்கி விடக் கூடாது.

அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர், காதின் சோனை வரை இருக்கும் அளவிற்குத் தம் தலை முடியிலிருந்து சிறிதளவை(க் கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.

நூல்: முஸ்லிம் 533

மேற்கண்ட ஹதீஸிலும் வஃப்ரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. காதின் சோனை வரை இருக்கும் அளவுக்கு கத்தரிக்கப்பட்ட முடிக்கு இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதிலிருந்து இந்த வார்த்தைக்கு முடியை வெட்டவே கூடாது என்ற பொருள் இருப்பதாக வாதிடுவது தவறு என்பது தெளிவாகிறது.

வேதமுடையவர்கள் மீசையை வெட்டவில்லையா?

அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே, வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள்; மீசைகளை வளர விடுகிறார்கள்என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களது மீசைகளை நீங்கள் கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள்என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மது 21252

மேற்கண்ட ஹதீஸில் வேதமுடையவர்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று பொருள் செய்துள்ள இடத்தில் யுவஃப்பிரூன என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேதமுடையவர்கள் தங்களது மீசையை வெட்டாமல் இருந்தார்கள் என்று நாம் புரிந்து கொள்ள மாட்டோம். ஒட்ட நறுக்காமல் கூடுதலாக வைத்திருந்தார்கள் என்றே புரிந்து கொள்வோம்.

நபி (ஸல்) அவர்கள் இதே சொல்லைப் பயன்படுத்தி, “உங்களது தாடிகளை வளர விடுங்கள்’ என்று கட்டளையிடுகிறார்கள். அப்படியானால் தாடியை ஒட்ட நறுக்கி விடாமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

தாடி தொடர்பான ஹதீஸில் வளர விடுங்கள் என்று பொருள் செய்துள்ள இடத்தில் அவ்ஃபூ என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்ஃபா என்ற வார்த்தை ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் தலைமுடியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்ஃபூ என்ற சொல்லும் அவ்ஃபா என்ற சொல்லும் ஒரே வேர்ச்சொல்லிலிருந்து உருவானவை. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து புரியலாம்.

அபூஜஅஃபர் (அல்பாக்கிர் முஹம்மத் பின் அலீ) அவர்கள் கூறுகிறார்கள்:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அருகில் நானும் என் தந்தை (அலீ பின் ஹுசைன்) அவர்களும் வேறு சிலரும் இருந்தோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கüடம் குüயல் பற்றிக் கேட்டோம். “ஒரு ஸாஉ தண்ணீர் போதும்என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், “அந்தத் தண்ணீர் எனக்குப் போதாதுஎன்றார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “உன்னை விட அதிக முடியுள்ளவரும் உன்னை விடச் சிறந்தவரு(மான அல்லாஹ்வின் தூதர் அவர்களு)க்கு அந்த அளவுத் தண்ணீர் போதுமானதாக இருந்ததுஎனக் கூறினார்கள். பிறகு ஒரே ஆடை அணிந்தவர்களாக எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள்.

நூல்: புகாரி 252

அதிக முடியுள்ளவர் என்று பொருள் செய்துள்ள இடத்தில் அவ்ஃபா என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு முடியை வெட்டாமல் இருத்தல் என்ற பொருள் இருக்குமேயானால் நபி (ஸல்) அவர்கள் தலைமுடியை வெட்டியதே இல்லை என்ற தவறான கருத்து ஏற்படும்.

ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தமது தலைமுடியை வெட்டியதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே இவ்வார்த்தைக்கு முடியை வெட்டாமல் இருத்தல் என்று பொருள் இருப்பதாக வாதிடுவது தவறு என்பதைச் சந்தேகமற உணரலாம்.

இறைவன் நாடினால் அடுத்த இதழில்…