72:5476 (உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்


பாடம் : 2 இறகு இல்லாத அம்பினால் (மிஅராள்’) வேட்டையாடப்பட்ட பிராணி. களிமண் குண்டு, அல்லது ஈயக்குண்டு (அல்புந்துகா’) மூலம் (வேட்டையாடிக்) கொல்லப்பட்ட பிராணி குறித்து இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் போது அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது (மவ்கூதா’)போன்றே (விலக்கப்பட்டது) ஆகும் என்று குறிப்பிட்டார்கள். இந்தக் குண்டினால் கொல்லப்பட்ட பிராணியை உண்பதை சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்),காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்), முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்), இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்),அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) மற்றும் ஹஸன் அல்பஸரீ (ரஹ்) ஆகியோர் வெறுத்துள்ளனர். ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் சிற்றூர்களிலும் நகரங்களிலும் இந்தக் குண்டை எறி(ந்து வேட்டையாடு)வதை விரும்பவில்லை. (மனித நடமாட்டமில்லாத) மற்ற இடங்களில் அதை உபயோகிப்பதை அவர்கள் தவறாகக் கருதவில்லை. 

5476. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார் 
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் இறகு இல்லாத அம்பு (‘மிஅராள்’ மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அதன் முனையால் (அந்தப் பிராணியை) நீங்கள் தாக்கியிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கிக் கொன்றிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது(போல்)தான். எனவே, (அதைச்) சாப்பிடாதீர்கள்’ என்று கூறினார்கள். 
நான், ‘என்னுடைய நாயை (வேட்டைக்காக) அவிழ்த்துவிட்டேன். (அது வேட்டையாடியக் கொண்டு வருவதை நான் சாப்பிடலாமா)?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அந்த நாளை அவிழ்த்துவிட்டிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டு வருவதை) நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று பதிலளித்தார்கள். 
நான், ‘அந்த நாய் வேட்டைப் பிராணியைத் தின்றிருந்தால்…?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அப்படியென்றால், அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அது உங்களுக்காக அதைக் கொண்டு வரவில்லை; தனக்காகவே கவ்விப் பிடித்திருக்கிறது’ என்று பதிலளித்தார்கள். 
‘நான் என்னுடைய நாயை அனுப்புகிறேன். (வேட்டையாடித் திரும்பி வரும்போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன் என்றால்… (இப்போது என்ன செய்வது? அது வேட்டையாடி வந்த பிராணியை நான் உண்ணலாமா?)’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியது உங்களின் நாய்க்காகத்தான்; மற்றொரு நாய்க்கு நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை’ என்று பதிலளித்தார்கள். 
Book : 72