72:5475 (உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்

பாடம் : 1 வேட்டைப் பிராணியின் மீது (அம்பு எய்யும் போது) அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்’) கூறுவது. உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் (சுலபமாக) அடையக்கூடிய வேட்டைப் பிராணிகளில் ஒன்றின் மூலம் அல்லாஹ் உங்களை நிச்சயமாகச் சோதிப்பான். (5:94)2 (இறைநம்பிக்கையாளர்களே!) உங்கள் மீது (தடைவிதித்துக்) கூறப்பட்டிருப்பவை தவிர மற்ற நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) அனுமதிக்கப்பட்டுள்ளன.(5:1) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (5:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்உகூத்’ (ஒப்பந்தங்கள்) எனும் சொல் அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) என்றும், தடை விதிக்கப்பட்டவை (ஹராம்) என்றும் அறியப்பட்டவற்றைக் குறிக்கும். (இதே வசனத்தில் இடம்பெற்றுள்ள) உங்கள் மீது (தடைவிதித்துக்) கூறப்பட்டவை’ என்பது பன்றியைக் குறிக்கும். (5:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா யஜ்ரிமன்னகும் ஷனஆனு கவ்மின்’ எனும் தொடருக்கு அந்த மக்கள் மீதுள்ள விரோதம் உங்களைத் தூண்டிவிட வேண்டாம்’ என்று பொருள். (5:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்முன்கனிக்கா எனும் சொல்லுக்குக் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டது’ என்று பொருள். அல்மவ்கூதா’ என்பது தடியால் பலமாக அடித்துக் கொல்லப்பட்டதைக் குறிக்கும். அல்முத்தரத்தியா’ என்பது மலையிலிருந்து விழுந்து செத்துப்போனதைக் குறிக்கும். அந்நத்தீஹா’ என்பது மற்ற விலங்குகளின் கொம்பால் குத்தப்பட்டு இறந்ததாகும். ஆனால், (இந்தப் பிராணிகளில்) இன்னும் தனது வாலையோ அல்லது கண்களையோ அசைத்துக் கொண்டு (குற்றுயிராக) இருக்கும் பிராணியை நீங்கள் கண்டால் அதை (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுத்து நீங்கள் சாப்பிடலாம். 
5475. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார் 
இறகு இல்லாத அம்பின் (‘மிஅராள்’) மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்து நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள். ‘பிராணி அம்பின் முனையால் கொல்லப்பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதைச் சாப்பிடாதீர்கள்)’ என்று பதிலளித்தார்கள். 
நான் அவர்களிடம் (பயிற்சியளிக்கப்பட்ட) நாய், வேட்டையாடிய பிராணி குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உங்களுக்காக அது கவ்விக்கொண்டு வருவதை நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் (வேட்டைப் பிராணியைக்) கவ்விப் பிடிப்பதும் (அதை முறைப்படி) அறுப்பதாகவே அமையும் ‘உங்களின் நாயுடன்’ அல்லது ‘உங்கள் நாய்களுடன்’ வேறோரு நாயையும் நீங்கள் கண்டு அந்த நாயும் உங்களின் நாயுடன் சேர்ந்து வேட்டைப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால் அதை உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொன்னது உங்களின் நாயை அனுப்பியபோதுதான் வேறொரு நாய்க்காக அல்ல’ என்று பதிலளித்தார்கள். 
Book : 72