58:3156 “ஜிஸ்யா“ காப்புவரி ஒப்பந்தமும்

பாடம் : 1 இஸ்லாமிய அரசின் பொறுப்பிலுள் ளவர்களுடன் ஜிஸ்யா’ எனும் காப்பு வரி ஒப்பந்தம் செய்து கொள்வதும், பகை நாட்டினருடன் குறித்த காலத்திற்குப் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதும். அல்லாஹ் கூறுகிறான்: வேதம் வழங்கப்பட்டவர்களில் எவர் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்தவற்றை தடுக்கப்பட்டவை’ என்று கருதாமலும் சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள்; அவர்கள் பணிந்து போய் (தமது) கையால் ஜிஸ்யா’ வரியைச் செலுத்தும் வரை. (9:29) மேலும், யூதர்கள், கிறிஸ்தவர்கள், மஜூஸிகள் (நெருப்பு வணங்கிகள்) மற்றும் முஸ்லிமல்லாதோரிடம் ஜிஸ்யா- காப்பு வரி வாங்கியது பற்றிய தகவல்களும். அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் நஜீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஷாம் நாட்டைச் சேர்ந்த(வேதம் கொடுக்கப்பட்ட)வர்கள் மீது நான்கு தீனார்களும், யமன் நாட்டவர் மீது ஒரு தீனாரும் (ஜிஸ்யா வரியாக) விதிக்கக் காரணமென்ன? என்று முஜாஹிது (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், அது (அவரவரது) வசதியைப் பொருத்து நிர்ணயிக்கப்பட்டது என்று பதிலளித்தார்கள். 
3156. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். 
நான் ஜாபிர் இப்னு ஸைத்(ரஹ்) அவர்களுடனும் அம்ர் இப்னு அவ்ஸ்(ரஹ்) அவர்களுடனும் அமர்ந்திருந்தேன். அப்போது (அவர்கள் கூறினார்கள்:) முஸ்அப் இப்னு ஸுபைர்(ரஹ்) பஸராவாசிகளுடன் ஹஜ் செய்த ஆண்டான ஹிஜ்ரீ 70-ம் ஆண்டில் அவ்விருவரிடமும் ஸம் ஸம் கிணற்றின் படிக்கட்டின் அருகே பஜாலா(ரஹ்) அறிவித்தார். 
நான் அஹ்னஃப் இப்னு கைஸ்(ரஹ்) அவர்களின் தந்தையின் சகோதரரான ஜஸ்உ இப்னு முஆவியாவுக்கு எழுத்தராக இருந்தேன். அப்போது உமர் இப்னு கத்தாப்(ரலி) இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு ‘திருமணம் புரிந்து கொள்ளக் கூடாத இரத்த உறவு தங்களிடையே இருந்தும் ஒருவரையொருவர் மணந்து கொண்டு மஜூஸிகளை (மண பந்தத்திலிருந்து) பிரித்து வையுங்கள்’ என்று உத்தரவிட்டு அவர்களின் கடிதம் ஒன்று எங்களுக்கு வந்தது. உமர்(ரலி) மஜூஸிகளிடமிருந்து ஜிஸ்யா வரி வசூலிக்கவில்லை. 
Book : 58