52:2638 சாட்சியங்கள்

பாடம் : 3 மறைந்திருந்து கேட்டவரின் சாட்சியம். இதை அம்ரு பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மேலும், அவர்கள், தீயவனான பொய்யனிடம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஷஅபீ (ரஹ்), இப்னு ஸீரீன் (ரஹ்), அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகியோர், (கண்ணால் பார்க்காமல் காதால்) கேட்டதை (மட்டும்) வைத்து சாட்சி சொல்லலாம். (அதுவும் ஏற்கப் படக் கூடியதே. சாட்சி சொல்பவர் வாக்குமூலம் தந்தவரை அவர் வாக்கு மூலம் தரும் போது கண்ணால் பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை) என்று கூறினர். ஒருவரைப் பார்க்காமலேயே அவரது வாக்குமூலத்தை மட்டும் கேட்டு விட்டு, நீதிபதியிடம் அதைப் பற்றி சாட்சியமளிக்க வருபவர், என்னை (சாட்சியாக அழைத்து வந்தவர்கள்) எதையும் பார்க்கச் செய்யவில்லை. நான் இன்னின்ன விதமாகச் செவியுற்றேன் என்று கூற வேண்டும். (அப்படிக் கூறினால் அது செல்லும்) என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். 
2638. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்களும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் இருந்த பேரீச்சந் தோட்டத்தை நாடிச் சென்றார்கள். (தோட்டத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நுழைந்தவுடன் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்ப்பதற்கு முன்பு, அவனிடமிருந்து (அவனுடைய சொற்களைக்) கேட்க உபாயம் செய்தவர்களாய், பேரீச்ச மரங்களுக்கிடையே தம்மை மறைத்து நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் தன் படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வைக்குள் (குறிகாரர்கள் முணு முணுப்பதைப் போல்) எதையோ முணு முணுத்தபடி படுத்துக் கொண்டிருந்தான். நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதை இப்னு ஸய்யாதின் தாய் பார்த்துவிட்டாள். அவள் தன் மகனை நோக்கி, ‘ஸாஃபியே! இதோ முஹம்மத் (வந்து கொண்டிருக்கிறார்)’ என்று கூறிவிட்டாள். உடனே, இப்னு ஸய்யாத் விழிப்படைந்து முணுமுணுப்பதை நிறுத்திவிட்டான். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவள் (இப்னு ஸய்யாதின் தாய்) அவனை (உஷார்படுத்தாமல்)விட்டுவிட்டிருந்தால் (தன் உண்மை நிலையை அவனே) அம்பலப்படுத்தி விட்டிருப்பான்’ என்று கூறினார்கள். 
Book : 52