45:2426 கண்டெடுக்கப்பட்ட பொருள்.

பாடம் : 1 கண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமை யாளர் அடையாளம் (சரியாகக்) கூறினால் கண்டெடுத்தவர் அதை அவரிடம் தந்து விட வேண்டும். 
2426. உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார். 
நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், ‘ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு’ என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும், ‘ஓராண்டுக் காலம் அதைப் பற்றி அறிவிப்புக் கொடு’ என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்) கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபி(ஸல்) அவர்கள், ‘அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதைப் பயன்படுத்திக் கொள்’ என்று கூறினார்கள். எனவே, நானே அதைப் பயன்படுத்திக் கொண்டேன். 
அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்) கூறினார்: 
அதன் பிறகு, நான் மக்காவில் வைத்து (இதை எனக்கு அறிவித்த) ஸலமா(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், ‘(நான் அறிவித்த ஹதீஸில்) நபி(ஸல்), அவர்கள், ‘மூன்று ஆண்டுகள் அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்களா, அல்லது ‘ஓராண்டுக்காலம் வரை மட்டும் அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்களா என்று நான் அறியமாட்டேன்’ (அதாவது ‘எனக்கு நினைவில்லை’) என்று கூறினார்கள். 
Book : 45